மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டும் தொழில்கள்! - 3

‘ஏன்டா, எருமைச் சாணிய மூஞ்சியில அப்புன மாதிரியே திரியுற’ என்ற காமெடி தமிழ்நாட்டில் ரொம்பவே பிரபலமானது... இதனை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது நாட்டு மாட்டின் சாணத்தைப் பயன்படுத்தி, முக அழகுப் பவுடர், பல்பொடி, எண்ணெய், ஷாம்பூ முதல் பாத்திரம் துலக்கும் பவுடர் வரை 12 பொருள்களைத் தயாரிக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து, தன் குடும்பத்துடன் சேர்ந்து நாட்டு மாட்டுச் சாணத்தை மதிப்புக் கூட்டி 12-க்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரித்து வருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய பண்ணைக்கு ஒரு நேரடி விசிட் அடித்தோம். மதிப்புக் கூட்டல் பொருள்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புரவிமுத்து குடும்பத்தினர், மதிப்புக் கூட்டல் பற்றிய தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டனர்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03

கோவர்ஷினி அர்க்

“நாட்டுப்பசு மாட்டின் கோமியத்திலிருந்து தயாரிக்கப் படுகிறது. இரண்டு லிட்டர் மாட்டுக் கோமியத்தை 750 மி.லி முதல் அரை லிட்டர் வரை  வருமளவுக்குக் காய்ச்ச வேண்டும். மற்றபடி இதில் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. அதிக நாள்களுக்கு இது கெடாமலும் இருக்கும். இது சர்வரோக நிவாரணியாகச் செயல்பட்டுச் சளி முதல் கேன்சர் வரையிலான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்தமருந்துகளில் பயன்படுத்தப்படும் மூன்று தாது உப்புக்களும் மாட்டின் கோமூத்திரம் அடங்கியுள்ளது என்பது ஐதீகம். இதற்கான விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது. கோயம்புத்தூர், ஹைதராபாத், பெங்களூரு எனப் பல நகரங்களிலிருந்தும் ஆர்டர் வந்துகொண்டிருக்கிறது. இதற்கான முதலீடு என்பதும் மிகக் குறைவுதான். ஒரே முதலீடு நாட்டு மாடுகளும்,அவற்றுக்கு உணவும்தான். லிட்டர் 300 ரூபாய்.

குளியல் பொடி

நாட்டுப் பசுஞ்சாண விபூதி, வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்கு மற்றும் மூலிகை கலப்புகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்கு ஆகியவற்றை வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவற்றுடன் மூலிகைக் கலப்பையும், நாட்டுப் பசுஞ்சாண விபூதியையும் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர், பாக்கெட் செய்து கொள்ளலாம். இது நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். சருமத்துக்குப் பொலிவு தரும். உடல் முழுவதும் தேய்த்துக்குளிக்கலாம். கிலோ 300 ரூபாய்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03



சோப்

நாட்டுப் பசு எரு, முல்தானிமிட்டி, கற்றாழை, வேப்பிலை மற்றும் மூலிகைக் கலப்புகள் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கற்றாழை, வேப்பிலை ஆகியவற்றைக் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், முல்தானிமிட்டி, நாட்டுப் பசு எரு, மூலிகைக் கலப்புகளைச் சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டுப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு, இதற்கென உள்ள அச்சு தயாரிக்கும் இயந்திரத்தில் வைத்து சோப்புக்கட்டிகளைத் தயார் செய்துகொள்ளலாம். முகத்திற்குச் சருமப்பொலிவைக் கொடுக்கும். தோல் வியாதிகளைப் போக்கும். எல்லா சருமத்திற்கும் ஏற்றது. 70 கிராம் சோப்பு 40 ரூபாய்.

முக அழகு பவுடர்

குளியல் பொடியில் சேர்க்கப்படும் கிச்சலிக் கிழங்கைத் தவிர்த்து, நாட்டுப் பசுஞ்சாண விபூதி, வெட்டிவேர் மற்றும் மூலிகைக் கலப்புகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. காயவைத்த வெட்டிவேருடன் மூலிகைக் கலப்பையும், நாட்டுப் பசுஞ்சாண விபூதியையும் சேர்த்து அரைக்க வேண்டும். எடுத்துக்கொள்ளும் மூலப்பொருள்கள் அனைத்தும் சம அளவில் இருக்க வேண்டும். முக அழகு பவுடரைக் குளிர்ந்த நீரில் சேர்த்துச் சந்தனம்போல் கரைத்து முகத்தில் பூசி, பதினைந்து நிமிடங்கள் கழித்தபின் வெந்நீரில் முகம் கழுவ, கரும் புள்ளிகள், தேமல், முகப்பரு, எண்ணெய் பசை நீங்கி இளமைப் பொலிவுடன் முகம் வசீகரம் தரும்.  70 கிராம் பொடி 40 ரூபாய்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03

தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்

நாட்டுப் பசும்பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மூலிகைக் கலப்புகளைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். மூலிகை கலப்புகள் இருப்பதால் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். முடிவளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். இளநரையைத் தடுத்து தலைமுடியை மென்மையாக்கும். இதற்கும் வரவேற்பு நன்றாக இருக்கிறது. 100 மி.லி 125 ரூபாய்

கோவர்ஷினி ஷாம்பு

நாட்டுபசு மாட்டின் கோமூத்திரம் மற்றும் மூலிகைக் கலப்புகளைச் சம அளவில் எடுத்துக் கொண்டு காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதிக்கும் நிலையில் இறக்கிவிடலாம். இது பொடுகினைப் போக்கும். ஈறு மற்றும் பேன்களை முற்றிலுமாக அகற்றும். வேர்க்கால்களை உறுதிப்படுத்தி முடியை மென்மையாகும். 180 மி.லி 125 ரூபாய்.

பல்பொடி

நாட்டுப் பசுமாட்டின் சாண வரட்டி சாம்பல், நாயுருவிச் செடி மற்றும் மூலிகைக் கலப்புகள் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக அரைத்து பாக்கெட் செய்துகொள்ளலாம். 70 கிராம் பல்பொடி 45 ரூபாய்.

சாம்பிராணி

நாட்டுப் பசுமாட்டின் பசுஞ்சாணப் பொடி, பச்சரிசி, குங்கிலியம், சிறிதளவு நெய் மற்றும் மூலிகை கலப்புகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 18 சாம்பிராணித் துண்டுகள் 35 ரூபாய்.

கொசுவிரட்டி

நாட்டுப்பசுமாட்டின் பசுஞ்சாண பொடி, வேம்பு, துளசி, தும்பை மற்றும் மூலிகைக் கலப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. 18 கொசுவர்த்தித் துண்டுகள் 35 ரூபாய்.

மாலிஷ் ஆயில்

நாட்டுப் பசு மாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பாகு, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் மூலிகைக் கலப்புகள்கொண்டு கலந்து காய்ச்சித் தயாரிக்கப்படுகிறது. இது வலி நிவாரணியாகவும் செயல்படும். மேலும், இரத்தக் கட்டு மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றைப் போக்க வல்லது. மாலிஷ் ஆயில் 100 மி.லி 120 ரூபாய்.

பாத்திரம் துலக்கும் பவுடர்

நாட்டு மாட்டுப் பசுஞ்சாண விபூதி, இலுப்பைத் தூள், எலுமிச்சை தோல் பொடி மற்றும் மூலிகைக் கலப்புப் பொடி ஆகியவற்றைக் கலந்து பாத்திரம் துலக்கும் பவுடர் தயாரிக்கப் படுகிறது. இது பாத்திரங்களைச் சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. பக்க விளைவுகள் அற்றது. பவுடர் கிலோ 100 ரூபாய்.

விபூதி

விபூதி முழுவதுமாக நாட்டுப்பசு மாட்டின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்டுப் பசு மாட்டுச் சாணத்தை வெயிலில் காயவைத்து வறட்டியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கென தயார் செய்யப்பட்ட பிரத்யேக அடுப்பில் அரை அடி உயரம் அடுக்க வேண்டும். அதன் பின்னர் நெல் பதர்களை(கருக்கா) ஒரு அடி உயரம் அடுக்க வேண்டும். இவை இரண்டையும் ஐந்து அடுக்குகள் வரை அமைக்க வேண்டும். மொத்தமாக ஐந்தடி உயரம் வரை இருக்கும். அதன் பின்னர் அடுப்பின் நான்கு பக்கமும் பற்ற வைக்க வேண்டும். முழுவதுமாக எரிந்து ஐந்து முதல் 10 நாள்கள் வரை வைத்து பவுடரை எடுக்கலாம். கிலோ 300 ரூபாய்.”

(மதிப்புக் கூடும்)

துரை நாகராஜன்

படங்கள்: நா.ராஜமுருகன்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03

முதலீடும், சந்தை வாய்ப்பும்!

“மா
ட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டு பொருள்களையெல்லாம் தடையில்லாமல் தயாரிப்பதற்குத்  தேவையான முதலீடுகளையும், சந்தை வாய்ப்புகளையும் சொல்கிறார்கள் புரவிமுத்து குடும்பத்தினர். “இந்தப் தொழிலில் ஈடுபட 15- 20 நாட்டு மாடுகளாவது தேவையாக இருக்கும். மூன்றிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வரைக்கும் இருந்தால் மூலிகைகளை நாமே வளர்த்து, பொருள்களின் தயாரிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.  

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - சாணம்... சக்சஸ் பிசினஸ்! - 03

இதுபோக அடுப்பு, அச்சு மெஷின்களுக்கு என இரண்டு லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். ஒரு நாட்டு மாட்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் வைத்தாலே 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை. நிலம் வாங்கும் செலவு தனி. மொத்தமாக 13 லட்சம் வரைக்கும் செலவாகும்.

மேற்கண்ட 12 பொருள்களைத் தவிர, பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி ஆகியவற்றையும் தயார்செய்து விற்பனை செய்கிறேன். செலவுபோக 15 சதவிகிதம் வருமானமாகக் கிடைக்கும்.

விளம்பரங்கள், சமூக வலைத் தளங்கள் மூலமாகத்தான் விற்பனை செய்கிறோம். ஒருமுறை வாங்கிக் கொண்டு சென்ற நபர்,  அடுத்தவர் களிடம் பொருள்கள் குறித்து எடுத்துச் சொல்வதால் விற்பனை அதிகமாகிறது. குறிப்பாக, பொருள்களின்் தரம் அதிகமாக உள்ளதால் சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.”