மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தித்திக்கும் லாபம் தரும் தேன்! - 12

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 12

ணவுப் பொருள்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள் தேன். உலகில், தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலர். அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேனும்,  கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேனும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தன.

பில்லியன் டாலர் அளவுக்குப் பணப் பரிமாற்றம் செய்யக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த தொழில், இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமே தட்டுப்பாடுதான்!

தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் அதிக மரியாதை இருக்கும். இதைச் சரியாகப் புரிந்துகொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர, தேனில் மதிப்புக் கூட்டல் பொருள்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் நாம்  பேசினோம்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தித்திக்கும் லாபம் தரும் தேன்! - 12

“கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் தேன் எடுத்து விற்பனை செய்துவருகிறேன். தேனில் அடை தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவத்தி என மதிப்புக் கூட்டல் செய்து வருகிறேன். தேனை மட்டும் மக்களுக்குக் கொடுத்தால் லாபம் குறைவாகத்தான் இருக்கும் என்பதுதான் அதற்கு முக்கியமான காரணம். சுத்தமான ஒரு கிலோ தேன் 550 ரூபாய்க்கு விற்பனை யானால், தேன் நெல்லியைக் கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தித்திக்கும் லாபம் தரும் தேன்! - 12


சந்தையில் தேனுக்கு டிமாண்ட் அதிகம். ஆனால், சந்தையில் கிடைக்கும் தேன்கள்  போலியான தாகத்தான் இருக்கிறது. எங்களிடம் விசாரிக்கும் வாடிக்கையாளர் களும், ‘மற்றவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நீங்கள் தேன் கொடுக்கக் கூடாது’ என்று கேட் பார்கள். அவர்கள் கேட்பதுபோல தேன் கொடுத்தால் அது முழுமையான தேனாக இருக்காது. இத்தாலிய தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்கலாம். நாட்டுத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்க முடியாது. காரணம்,  இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ தேனுக்கு, எடுப்பது முதல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது வரை அதிகமாகச் செலவாகிறது. மக்கள், குறைந்த விலைக்குக் கேட்கும்போதுதான் கலப்படமும் சந்தையில் அதிகமாகிறது.

இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது வெறும் ஆயிரம் ரூபாயில் தான் ஆரம்பித்தேன். இன்று என்னிடம் இருப்பதுபோல பண்ணை அமைக்க 5 கோடி ரூபாய் தேவைப்படும். ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டால், அதனை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டுமே தவிர, இது போதும் என்று எப்போதுமே நின்றுவிடக்கூடாது. அதேபோல, தொழில்நுட்பங்களுக்கேற்ப தொழிலையும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பத்து இந்தியத் தேன் பெட்டிகளை வைத்தால், ஒரு விவசாயி வருடத்திற்குக் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். பத்து  பெட்டியில் இருந்து வருடத்திற்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் விலை 550 ரூபாய். இதுமூலமாக 55 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருடத்திற்குப் பத்து கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தின் விலை 2,000 ரூபாய். அது மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - தித்திக்கும் லாபம் தரும் தேன்! - 12

இவை அனைத்துமே பொதுவாக, தேனீ வளர்ப்பாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம்தான். எனக்கு இந்தத் தொழிலில் செலவுபோக, மாதம் இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அடை தேன் கிலோ 1,200 ரூபாய்க்கும், சர்க்கரை நெல்லி கிலோ 350 ரூபாய்க்கும், மெழுகுவத்தி 500 ரூபாய்க்கும், தேன் நெல்லி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், இத்தாலி தேன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன்.

வருமானம், சீஸனைப் பொறுத்து மாறுபடும். ஆனால், கிடைக்கும் தேன் கெட்டுப்போகாது. அதே சமயம் நிச்சயமாகச் சுவை மாறும். அதனால், மதிப்புக் கூட்டி விற்பனை செய்துவிடுவது உடனடி லாபம் தரும். இதுதவிர, மதிப்புக் கூட்டல் தொழிலில் நாம் உற்பத்தி செய்யும் பொருள் மக்களுக்கு அத்தியாவசியமான பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் எப்போதுமே பொருள்கள் நமக்கு நிறைவான வருமானத்தைக் கொடுக்கும். ஒரேயொரு பொருளை மட்டுமே நம்பி எப்போதும் வியாபாரத்தில் இறங்கக் கூடாது. எங்கள் பண்ணையில் தேனீப் பெட்டிகள், தேனீக்கள் விற்பனை செய்தும் வருகிறோம். ஒரு தொழிலில் முழுமையாக இறங்கினால், அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் தொழிலில் சறுக்காமல் சாதிக்க முடியும்.

மதிப்புக் கூட்டல் தொழிலில் முக்கியம் தரம். என் விளம்பரதாரர்கள், என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான். அந்த அளவிற்கு என் தேன் பொருள்களின் தரம் இருக்கும்.

எந்தத் தொழிலிலும் போட்டி இருப்பது ஆரோக்கியமே. ஆனால், ஒரு பொருளில் போட்டி இருப்பது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. வெறும் தேனை விற்கும்போது  கிடைத்த வாடிக்கையாளர்களைவிடத் தேனை மதிப்புக் கூட்டல் செய்து அதன்மூலம் கிடைத்த பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களிலும் எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்திருக் கிறார்கள்” என்றார்.

தேனை மதிப்புக் கூட்டல் செய்து பொருள்களைத் தயாரித்து வரும் இவர், விவசாயிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்தும் உதவி வருகிறார். தேனிலும் மதிப்புக் கூட்டல் தொழில் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இவர் நல்ல உதாரணம்.

(மதிப்புக் கூடும்)

துரை. நாகராஜன்
படங்கள்:  ரமேஷ் கந்தசாமி

சுத்தமான தேன் எது?

“எதிர்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். உண்மையான தேன் பண்ணைகள் என்று சொல்லிக்கொண்டு அதிகமான தேன் பண்ணைகள் போலியாக இயங்கி வருகின்றன. நாங்கள் கொடுக்கும் தரமான தேனினால் வாடிக்கையாளர்கள் அதிகமாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளி மார்கெட்டில் தேன் 350 ரூபாய்க்கு விலைபோனாலும், மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள். மேல் நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன், வருடம் முழுவதும் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன், வருடம் முழுவதும் கிடைக்கும். சீஸனில் கிடைக்கும் தேனின் அளவு குறையுமே தவிர, முழுமையாக நின்றுவிடாது. இதுதவிர, நாட்டுத் தேனில்தான் சத்துக்களும் அதிகமாக இருக்கும். சுத்தமான தேன், அதிக கெட்டித் தன்மையுடன் இருக்காது. எப்போதுமே நீர்மத் தன்மையுடன்தான் காணப்படும்” என்றார் தண்டாயுதபாணி.