
சிறுகதை: மாதவன் ஓவியங்கள்: செந்தில்
விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின் போன்தான் அழைத்தது. எடுத்தார்.
``யாரு?’’
``எப்போ?’’
``சரி இந்தா வரேன்.’’
போன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்” என்று பெருமூச்சு விட்டார்.
``ஐயோ! எப்போ?’’ பதறினாள் அம்மா.
``காலைல மூணு மணிக்காம். வேட்டியை எடு, கிளம்பணும்.’’
வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை. மார்கழி மாதக் குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் ஐயர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர். பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்தவர் ஞானம் ஐயர். அதனால், அவரைக் கணவர் என்ற வார்த்தையில் மட்டும் சுருக்கிவிட முடியாது.
`குட்டி ஐயர்’ என்று அவரை ஊரில் சொல்வதற்குக் காரணம் அவருடைய உயரம்தான். எங்கள் வீட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தால் அவரின் கால் தரையில் படாது. எனக்கு நினைவு தெரிந்து நாலு, ஐந்து முறைதான் அவரை சட்டையுடன் பார்த்திருப்பேன். அவர் துண்டைத் தோளில் போட்டிருக்கும்போது மார்பு எலும்புகள் வரி வரியாய்த் தெரியும். எப்போதும் சவரம் செய்து, வகிடு எடுத்துச் சீவி, திருத்தமாக இருப்பார். சதுரமா, உருண்டையா என்று எளிதில் முடிவுக்கு வரமுடியாத முகம். நெற்றியில் தவழும் வெள்ளி முடிகள் காற்றில் ஆடும்போது வெள்ளைக்கோடிட்டிருக்கும் விபூதி தெரியும். எப்போதும் சிரிப்பு, எல்லாவற்றுக்கும் சிரிப்பு. கவலை ரேகைகளை அவரின் முகத்தில் பார்க்கவே முடியாது. ஊரில் யார் வீட்டு விசேஷத்திலும் ஐயரைப் பார்க்கலாம். ஓமகுண்டத்தின் புகை மூட்டத்திற்குள் `சிவ சிவ’ என்று எழுதப்பட்டிருக்கும் காவி வேட்டியும் `நமோ நாராயணா’ போட்ட துண்டுமாக நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

அம்மாதான் நெஞ்சில் அடித்தவாறு ஐயரின் வீட்டிற்குள் ஓடினாள். வீட்டின் மையப்பகுதியில் பார்வதி அம்மா சலனமின்றிப் படுத்திருந்தாள். மாலைகளுக்கு மத்தியில் மஞ்சள் பூசிய முகம் ஓரளவுக்குத்தான் தெரிந்தது. உள்ளே போய் ஒருமுறை பார்த்துவிட்டு அப்பா வெளியே வந்தார். வீட்டின் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஞானம் ஐயர் எங்களைப் பார்த்து மெதுவாகத் தலையை அசைத்தார். அப்பா அவரின் அருகில் போய் உட்கார்ந்தார். மூலையில் உள்ள கிணற்றையும், துளசி மாடத்தையும் வெறித்துக்கொண்டிருந்தார் ஐயர். தாங்க முடியாத மௌனம் நிலவியது. ஐயர் அப்பாவைப் பார்த்து ``எல்லாம் முடிஞ்சது மாப்ள” என்றார்.
பார்வதி அம்மாளைக் குளிப்பாட்ட வெளியே தூக்கி வந்தார்கள். “பாத்து பாத்து” என்று ஞானம் ஐயர் கத்தினார். வீட்டின் முற்றத்தில் பார்வதி அம்மாளைக் கிடத்தினார்கள். அதற்குள் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த அவசரக் கொட்டகையில் வாடகை சேர்கள் வந்திறங்கியிருந்தன.
``மார்கழி மாசம் செத்திருக்கு பார்வதி, கண்டிப்பா சொர்க்கத்துக்குத்தான் போவா” என்றது ஏதோ கிழவியின் குரல்.
``எட்டு வருஷமா படுத்தபடுக்கையா கிடந்த பார்வதிக்கு மூத்திரமும் பீயும் அள்ளிக்கொட்டுன புண்ணியத்துக்கு ஞானமும்தான் போவாரு” என்றது இன்னொரு குரல். தண்டோராவுக்குச் சொல்லி ஆளனுப்பி, பாடைக்கு முன்பணம் கொடுத்துவிட்டு உள்ளே வந்த அப்பா சேர்களைப் பரப்பிக்கொண்டிருந்த என்னிடம் “எத்தனை சேர் வந்திருக்கு?” என்றார்.
``நூறு’’ என்றேன்
``ஞானம் எங்க?’’ என்றார்.
பார்வதி அம்மாளின் பின்னால் உட்கார்ந்திருந்தவரைச் சுட்டிக்காட்டினேன். ``தூக்குறது எத்தன மணிக்கு வச்சுக்கலாம்? சோதா கிளம்பிட்டானா?’’
``இப்போதான் போன் போட்டேன். வந்திட்டிருக்கானாம்’’ என்றார் ஐயர்.
மணிகண்டன் என்கிற சோதா, ஐயரின் ஒரே மகன். என்னைவிட ஆறு வயது பெரியவன். நல்ல நிறம். அபாரமாய்ப் படிப்பான். ஸ்கூலில் எல்லா டீச்சர்களுக்கும் செல்லப்பிள்ளை. நல்லா கணக்கு போடுவான். பெரிய பெரிய ஆங்கில வார்த்தையெல்லாம் சாதாரணமாகப் பேசுவான். உதாரணமாக, நான் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால், ``வாடா ரெடிகுலஸ்” என்பான். அதன் அர்த்தம் புரியும்வரை அதுதான் என் பட்டப்பெயராக இருந்தது தெருவில். ``ரெடிகுலஸ் இங்க வா’’, ``ரெடிகுலஸ் கடைக்குப் போ’’. ``ஐயா எடிகுலசு, அந்த வெத்தலப் பொட்டிய எடு”ன்னு பக்கத்து வீட்டு தங்கம் பாட்டி சொல்லும்போது புல்லரித்துப்போய் நின்றிருக்கிறேன், அர்த்தம் புரியாமல்.
அவன் அதிகபட்சமாக உடலை வருத்தி விளையாடும் விளையாட்டு கோலிக்குண்டாகத்தான் இருக்கும். எப்போதாவது கிரிக்கெட் விளையாட வருவான். நேரடியாக பேட்டிங் டீமில் சேர்ந்துகொள்வான். பேட்டிங் செய்துவிட்டு, ``அவுட் சைடு ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப் போடு’’, ``ஸ்லிப் வச்சுக்கோ” என்று ஃபீல்டிங்குக்கு ஐடியா கொடுத்துவிட்டுப் போய்விடுவான். திருவிழாக்கடைகளில் விற்கும் பாட்டுப் புத்தகங்களிலிருந்து, `தியோசோபிகல் சொசைட்டியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்று என் மூளைக்கு எட்டாத புத்தகங்கள் வரை அவன் படிக்கும்போது அவனையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பேன். கோபமாய் வரும், ஒருவேளை பொறாமையாகக்கூட இருந்திருக்கலாம்.
அந்தநேரம் சோதா பனிரெண்டாவதில் நான்கு இலக்கத்தில் மதிப்பெண் எடுத்து அரசுக் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஞானம் ஐயர் தன் மகனின் வாசிப்பைப்பற்றிப் பெருமையாய்ப் பேசுவார். ``எப்படி அண்ணா நீ மட்டும் நல்லா படிக்கிற?” என்று கேட்டால், வாயில் ஆட்காட்டி விரல் வைத்து ``உஷ்... ரகசியம்” என்பான். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள அவன் பின்னாலேயே அலைந்தேன். கடைசியில் சம்மதித்தான் ரகசியத்தைச் சொல்வதாக. ஆனால் ‘ஒரு நிபந்தனை’ என்றான்.
அது அவ்வளவு கஷ்டமானது என்று ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஆனால், சோதா தேன் தடவிய நாக்குக்குச் சொந்தக்காரன். எதையும் ஒத்துக்கொள்ள வைக்கும் சூட்சுமம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனுக்குக் காரியம் ஆகவேண்டுமானால், எதுவும் செய்வான். ஆனால், முதலில் ஆசையைத்தான் தூண்டுவான்.
``நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டனா உங்க அப்பாகிட்ட என்ன வாங்கித்தரச் சொல்லுவ?” என்று கேட்டான்.
``சைக்கிள், இல்ல கிரிக்கெட் பேட், இல்ல வீடியோ கேம் செட்தான் கேட்பேன்’’ என்றேன்.
``மூணையுமே கேளுடா, கண்டிப்பா உங்கப்பா வங்கித் தருவார். ஏன்னா, நீதான் இதுவரை ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்ததே இல்லையே” என்று சிரித்தான்.
நெஞ்சுக்குள் சுருக்கென்றாலும் அதுதான் உண்மை.
``எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய், உன் ஃபர்ஸ்ட் ரேங்க்குக்கு நான் பொறுப்பு’’ என்றான்.
``அப்படி என்ன பிரமாதமான வேலை?’’
``நீ ஓகேனு சொல்லு, அப்புறம் சொல்றேன்.’’
வாழ்க்கையின் முதல் ஃபர்ஸ்ட் ரேங்க் மயக்கத்தில் இருந்ததால், “நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகச் சொன்னாலும் போறேண்ணா” என்றேன்.
“அவ்வளவு பெரிய வேலையெல்லாம் இல்ல, ஒரு பொருளை நான் சொல்ற இடத்திலிருந்து எடுத்து வரணும்” என்று சொல்ல, எனக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. ``எங்க வீட்டுக்கு நைட் 8 மணிக்கு வா, விவரமாய்ச் சொல்றேன். இது யாருக்கும் தெரியக் கூடாது” என்று மெதுவாய், அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னான்.
அவன் போனபிறகு நான் பாத்ரூமிற்கு ஓடினேன். ``உனக்கு எதுக்குடா ஃபர்ஸ்ட் ரேங்க்? முட்டாள், சோதா பேச்சைக் கேக்காதே’’ என்று பாத்ரூம் கண்ணாடி சொல்லியது. மாணவர்களின் கரவொலிக்கு மத்தியில் நடந்து சென்று ரேங்க் கார்டை ஆசிரியரிடம் வாங்கி, ``பெஸ்ட் ஆஃப் லக் டாப்பர்” என்ற சொற்கள் என் செவிப்பறைகளில் விழுந்தாகவேண்டும் என்ற பிடிவாதம் ஒருபுறம் என்னை கடிகாரத்தைக் கண்கொட்டாமல் பார்க்கவைத்தது. நொடிமுள்ளின் ஒவ்வொரு சுழற்சிக்கும் சைக்கிளும், வீடியோ கேம் செட்டும் தோன்றி மறைந்தன. சில சமயம் கிரிக்கெட் பேட், அதுவும் பாச்சா வைத்திருக்கிற அதே பிரிட்டானியா பேட் சிவப்பு லேபிள், கடிகாரத்தின் கண்ணாடியில் பளபளத்தது. கடைசியில் ஆசைதான் ஜெயித்தது.
ஆர்வமா, பயமா என்று பெயரிட முடியாத உணர்வுடன் என் வீட்டை விட்டுக் கிளம்பினேன். ``சோதாகிட்ட டவுட் கேட்டுட்டு வரேன்மா” என்று கொல்லையில் இருந்த அம்மாவிடம் கத்திச் சொல்லிவிட்டு, அவளுக்குக் கேட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டேன்.
முற்றத்தில் ஐயர் உட்கார்ந்துகொண்டு அரைகுயர் நோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார். எதிரில் உட்கார்ந்திருந்தவர் ஐயரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஜாதக விவகாரம் எனத் தோன்றியது. அவர்கள் வீட்டு டைகர் என்னைப் பார்த்து சம்பிரதாயத்துக்கு ஒரு `லொள்’ளிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டது. வால் மட்டும் எதற்கோ துடித்துக்கொண்டிருந்தது. பாவம், பொங்கலும் புளியோதரையும் மட்டுமே சாப்பிடும் பிராணி.
``வாடா மாப்ள!’’ (அது என்ன கணக்கோ தெரியல. ஐயருக்கு நானும் மாப்பிள்ளைதான். என் அப்பாவும் மாப்பிள்ளைதான். கிராமங்களில் ஜாதிகள் உறவுகளைத் தீர்மானிப்பதில்லை) ``என்ன இருட்டுக்குள்ள வர்ற, அப்பா எதாவது சொல்லிவிட்டாரா?’’
``இல்ல, அண்ணாவப் பார்க்க வந்தேன்” மாமா.
``உள்ளதான் இருக்கான் போ” என்று திறந்திருந்த கதவைச் சுட்டிக்காட்டினார். கதவின் காலடியில் அகல்விளக்கு எண்ணெய்க்காகக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தது.
``வாடா ரெடிகுலஸ்... பரவால்லயே கரெக்டா வந்துட்டியே” என்று அறையின் மூலையில் நாற்காலியின் மீது அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த சோதா அழைத்தான். நான் ``ஆமாம்” என்பதுபோல சமாளித்துச் சிரித்தேன். “வந்து என் பக்கத்தில் உட்கார்” என்று தன் இடது கையால் நாற்காலியை இரண்டு தட்டு தட்டினான். என் படபடப்பு அதிகமானது. டேபிளின் மீது திறந்திருந்த மை வாசத்தையும் பக்கத்து அறையிலிருந்து வரும் பார்வதி அம்மாளின் சோக இருமலையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்த என்னை, ``என்னடா ஒரு மாதிரியா இருக்க” என்ற சோதாவின் குரல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தது.
``ஒண்ணுமில்லையே!’’
``சரி , நான் சொன்னதப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’’
``பயமா இருக்குண்ணா, அதான் வேண்டாம்னு...’’
``என்னது, வேண்டாமா?’’ என்று கோபமாய்க் கேட்டான்.
``அப்போ நீ டியுஷன் போறேன்னு சொல்லிட்டு கிரிக்கெட் விளையாடப் போறதையெல்லாம் உங்கப்பாகிட்ட சொல்லிடவேண்டியதுதான்.’’ அவனது அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டான். என் பயத்தை வைத்தே என்னைப் பகடையாக மாற்ற முயன்றான்.
``வேண்டாம்ணா, திருடுறது பாவம்!’’
``திருடுறதா யாருடா சொன்னா? உபயோகமில்லாமல் சும்மா இருக்கிற பொருளை நாம பயன்படுத்துறதுல என்ன தப்புங்குற?’’
``இல்லைதான். . .”
``பயப்படாம நான் சொல்றதைக் கவனமா கேளு” என்று, நான் உள்ளே வந்த வாசலையும், பார்வதி அம்மாளின் இருமல் சத்தத்தையும் கவனித்துவிட்டு மெதுவாய்ப் பேச ஆரம்பித்தான். ``உனக்கு நம்ம ஊர் லைப்ரரி தெரியும்ல?”
``ம் தெரியுமே’’
``சமத்துப் பையன்” என்று கன்னத்தைக் கிள்ளிவிட்டு, ``அங்க போய் ஒரு புத்தகத்தை எடுத்துட்டு வரணும் அவ்ளோதான்” என்றான். என் மூளை ஞானம் வீட்டில் பாத்ரூம் எங்கே இருக்கும் என்று நினைவுகளில் படிந்திருந்த வீட்டின் `புளூ பிரின்ட்டை’ அலசியது.
``நிறைய பேர் இருப்பாங்களே, கஷ்டமாச்சே?!’’
``ஒருத்தர் ரெண்டுபேர்தான்டா இருப்பாங்க. ஈஸிதான்.’’
``அப்புறம் என்ன, நீயே போய் எடுத்துக்கிட்டு வரலாம்ல?’’
``உனக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் வேணுமா, வேண்டாமா? உனக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்டா, பயப்படாம பண்ணு.’’

``பயமில்ல...’’
“அதானே, பயம்னா பைசாக்கு எவ்வளவுனு கேக்குற ஆள் ஆச்சே நீ” என்று சிரித்தான். அந்தச் சிரிப்பில் என்னை ஒப்புக்கொள்ளவைத்துவிட்ட பெருமிதம் தெரிந்தது. அது உண்மைதான். நான் தயாராகிவிட்டேன்.
`‘புது சைக்கிள் வந்தவுடன் எனக்கு ஒரு ரவுண்டு கொடுக்கணும் பாலா. இனிமே கிரிக்கெட் விளையாட சைக்கிளிலேயே போலாம். உன் அப்பாகிட்ட கேட்டு நல்ல பேட் வாங்கிக்கோ . நான் உனக்கு கவர் டிரைவ் ஆட கத்துத்தர்றேன். பாச்சாகிட்டகூட ஒரு பேட் இருக்கில்ல?” என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். அவனுக்கு என் ஆசைகள் முழுவதுமாய்த் தெரிந்திருந்தது.
குசுகுசு குரலில், ``வர்ற சனிக்கிழமைதான் சரியான நாள், லைப்ரரி இன்சார்ஜ் சாப்பிடக் கிளம்புறப்போ, படிச்சிட்டு இருக்கவங்களையெல்லாம் கிளம்பச் சொல்லுவாங்க. அதுதான் டைம், நீ தூக்கிடு.”
``ம்’’ என்று நேர்க்கோட்டில் தலையை அசைத்தேன்.
``புத்தகத்தை எப்படி வெளில எடுத்திட்டு வருவ?’’
``முதுகுக்குப் பின்னாடி வச்சு மறைச்சுக் கொண்டுவர்றேன்.’’
``சுத்தம். கவனமா பாரு” என்று டேபிளின் மீதிருந்த புத்தகத்தைக் கையிலெடுத்து எழுந்து நின்றான். சட்டையைத் தூக்கி வயிற்றில் சுருட்டியிருந்த வேட்டிக்குள் பாதிப் புத்தகத்தை மறைத்து, சட்டையைக் கீழே இறக்கி விட்டான். உள்ளே புத்தகம் இருப்பதற்கான அடையாளம் சுத்தமாகத் தெரியவில்லை. இது அவனது அனுபவ அறிவாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.
``நல்லாப் பாத்துகிட்டியா, ஒண்ணும் குழப்பம் இல்லையே?’’
``இல்ல. நீங்க ஏற்கெனவே இப்படிப் பண்ணியிருக்கீங்களா?’’
வேட்டிக்குள் இருந்த புத்தகத்தை வெளியே எடுத்து மூலையில் நின்றுகொண்டிருந்த அலமாரியின் கதவைத்திறந்து உள்ளே வைத்தான்.
``எவ்வளவு புத்தகம்?!’’
கதவைச் சாத்திவிட்டு, ``என்ன கேட்ட?” என்றான்.
``இல்ல இதுக்கு முன்னாடி இப்படி. . .’’
``ச்சீய் ச்சீய், இல்லவே இல்ல’’ என்றான். அது பொய் என்று என் உள்மனது சொல்லியது. மணி ஒன்பதாகியிருந்தது. ``நான் வீட்டுக்குக் கிளம்புறேண்ணா, அந்தப் புத்தகம் பேரு சொல்லவே இல்லையே?’’
``இப்பவாவது கேட்டியே, `வாடிவாசல்’. இன்னிக்கு வியாழன், இன்னும் ஒரு நாள் இருக்கு சனிக்கிழமைக்கு’’ என்று தலையைக் கோதி விட்டான். சோதாவைப் பார்க்கக் கொள்ளைக்கூட்டத் தலைவனாய்த் தெரிந்தான். கதவினருகே இருந்த விளக்கு காற்றுக்கு இரையாகியிருந்தது.
``கிளம்பிட்டியா மாப்ள?” என்றார் ஐயர்.
``ஆமா மாமா.’’
``ரோட்ல ஓரமா போகணும், சரியா?’’
``சரி மாமா.’’
டைகர் `உர்ர்ர்’ என்பதோடு நிறுத்திக்கொண்டது. ஐயர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். வீட்டைக் கடக்கும்போது ``நேரங்காலம் நன்னா இல்லையேடா அம்பி” என்பது மட்டும் தெளிவாய்க் கேட்டது. அன்றிரவு என்னால் கண்ணை மூடக்கூட முடியவில்லை. அதையும் மீறி மூடினால் வாடிவாசல், கைத்தட்டல்கள், டாப்பர், சைக்கிள்... இப்படி ஒவ்வொரு கண்ணியாகச் சேர்ந்து அது ஒரு சங்கிலித்தொடராக மாறியிருந்தது.
மறுநாள் பள்ளியிலும் இதே நிழலாட்டங்கள். கணக்கு வகுப்பில் ஃபார்முலா பழனியப்பன், `உருளையின் கன அளவு’ கேட்டது, நான் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு நின்றது, அவர் குச்சியால் என் ட்ரவுசரில் உள்ள புழுதியைப் பறக்கவிட்டது எல்லாம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மற்ற நாளாக இருந்திருந்தால் அன்றிரவு குப்புறப்படுத்துத்தான் தூங்கவேண்டும். என் கண்ணெதிரே ராட்டினம் சுற்றுவது போல் இருந்தது. ராட்டினத்தில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் சைக்கிளாக, வாடிவாசலாக, கிரிக்கெட் பேட்டாகச் சுற்றியது. ஆனால், ராட்டினத்தின் மையப்புள்ளி ஃபர்ஸ்ட் ரேங்காக இருந்தது. ஆனால், சோதாவுக்கோ அது அஞ்ஞாடியாகத்தான் இருந்திருக்கும்.
மற்றொரு சிவராத்திரியைச் சந்தித்த பின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சனிக்கிழமை வந்தது. குளிக்கும்போது அரைஞாண் கயிற்றை ஒரு முறை இழுத்துப் பார்த்துக்கொண்டேன். வலுவாகத்தான் இருந்தது. நூலகத்துக்குள் நான் நுழையும்போது அவ்வளவு கூட்டமில்லை. வலது பக்கமும் இடது பக்கமும் போடப்பட்டிருந்த, இரும்புச்சட்டங்களால் ஆன அலமாரிகளில் புத்தகங்கள் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் புத்தகங்களின் இடைவெளி வழியே பின்னால் இருக்கும் வெள்ளைச்சுவர் தெரிந்தது. இந்த இடைவெளியெல்லாம் சோதாவின் கைங்கர்யம் என்று தோன்றியது. அஞ்ஞாடியைத் தேடுவதற்குப் போதுமான சூரியவெளிச்சம் உள்ளே இருந்தது. நூலகத்தின் பொறுப்பாளர் நடுவே உட்கார்ந்திருந்தாள். எனக்கு அவளை நன்றாகத் தெரியும். ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். அவளின் பின்னால் இருந்த சுவரில் புத்தகத்தைப் பற்றிய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. சோதா விதிமுறைகளைத் தெளிவாகச் சொல்லியிருந்தான். நூலகத்திற்குள் நுழைந்தவுடன் வலது பக்க அலமாரியில் ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு அலமாரியை எதிர்நோக்கி உட்கார்ந்துகொள்ள வேண்டும். இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் விதிமுறை.
அடுத்து, கையிலிருக்கும் புத்தகத்தைப் படிப்பதுபோல் எதிரே நிற்கும் அலமாரியில் `அந்த’ புத்தகத்தைத் தேடவேண்டும். காணவில்லையென்றால் பொறுமையாக எழுந்து அடுத்த அலமாரியில் தேட வேண்டும். யாரிடமும் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசக்கூடாது .கண்டுபிடித்த பின்னர் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பின் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இது விதிமுறை இரண்டு.
முதல் இரண்டையும் சரியாகச் செய்துவிட்டேன். வலது பக்க அலமாரியில் இருந்த புத்தகங்களில் என் தேடுதல் வேட்டையைக் கண்களால் ஆரம்பித்தேன். அதோ அந்த மூலையில்... .அதுதானா. . . அதுவேதான். நாஞ்சில்நாடனுக்கும், வையாபுரிப்பிள்ளைக்கும் நடுவே! மண்டைக்குள் ராட்டினம், கைத்தட்டல்கள், சைக்கிள். பொறுப்பாளரைத் திரும்பிப் பார்த்தேன். மும்முரமாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். காத்திருந்தே. . . . . . . . . ன்.
இறுதியாக அந்த நிமிடம் வந்தது. வெளியில் யாரோ மாலதி என்று அழைக்க அவள் எழுந்து போனாள். (ஆம் அவள் பெயர் மாலதிதான். ‘வாடிவாசல்’ அவசரத்தில் மறந்துவிட்டேன். மன்னிக்கவும்!) இப்போது அறையினுள்ளே நான் மட்டும்... கண்ணெதிரே புத்தகம். மெதுவாக எழுந்து அலமாரியின் அருகே சென்றேன். கை படபடத்தது. ஊர்த் தலைவரின் உபய மின்விசிறியால் கூட என் வியர்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளால் அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்தேன். கனமாக இருந்தது. பெயர் சரிதானா என்று தெளிவு செய்த பின்னர், மண்டைக்குள் சோதா ``தூக்கிடு’’ என்று உச்சஸ்தாயியில் கத்தினான். நான் வேகமாகப் புத்தகத்தை அடிவயிற்றினுள் செருகிக்கொண்டிருக்கும்போதுதான் அலமாரியின் அப்பால் இருந்த மாலதியின் ஜோடிக்கண்கள் கனல் பறக்க என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். கையும் களவுமாக, இல்லை, வயிறும் களவுமாக மாட்டிக்கொண்டேன். தொண்டை அடைத்தது. அழுகை வரும்போலிருந்தது. தொண்டைக்குள் பம்பரம் சுற்றியது.
எனக்கு நேராய் வந்து நின்று, ``எத்தனை நாளாய் இந்தத் திருட்டு வேல?’’ என்றாள்.
``இதுதான் ஃபர்ஸ்ட் டைம்” என்று மூளைக்குள் உதயமான வார்த்தைகள் வாயை வந்தடையவில்லை.
“நட, உங்க வீட்டுக்குப் போலாம்” என்றாள்.
``அக்கா ப்ளீஸ்க்கா வேண்டாம்க்கா. . .’’

``இத இப்படியே விட்டா தப்பாகிடும். வா உங்க அப்பாகிட்ட சொல்றேன்” என்றதும் அண்டசராசரமும் அஸ்தமித்துவிட்டது.
பரவாயில்லை, நான் பயந்ததுபோல் அடி விழவில்லை என்ற எண்ணம் அலையாகத் தோன்றும்போது கன்னத்தில் `பளார்’ என்று அறை விழுந்தது. கன்னத்தில் தீப்பிடித்ததுபோல் இருந்தது. நிலைதடுமாறி சுதாரிப்பதற்குள் அடுத்த கன்னத்திற்கும் தீப்பரவியது. ``இவன இப்படியே விட்டா இன்னும் திருடுவான்” என்ற சோதாவின் குரல், மயங்குவதற்கு முன் தெளிவாய்க் கேட்டது.
தெளிந்து உட்காரும்போது சோதாவும் மாலதியும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். மாலதிதான் குடிக்கத் தண்ணீர் தந்தாள். ``இப்படியா அடிக்கிறது? இங்க பாரு செவந்து போச்சு கன்னம்” என்று பச்சாதாபப்பட்டாள்.
``இவன் பண்ண காரியத்துக்கு...’’ என்று பற்களை நறநறவென்று கடித்தான் அந்த உத்தமன்.
என் கன்னத்தைத் தடவிக்கொண்டே, ``இனிமே இப்படிப் பண்ணக்கூடாது சரியா” என்று மாலதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``வாடா போலாம் உங்க வீட்டுக்கு’’ என்று என் கையைப் பிடித்துத் தரதரவென அவன் வீட்டிற்கு இழுத்துச் சென்றான்.
``கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிட்டியே ராஸ்கல்!’’
``அடுத்த தடவை ஒழுங்கா பண்ணிடுறேண்ணா’’
``தொர, நீங்க பண்ணதே போதும். போய்டு!’’
``அந்த ஃபர்ஸ்ட் ரேங்க் ட்ரிக் . . .’’
``பல்லப்பேத்துடுவேன் போய்டு. . .’’
அதன் பிறகு சோதாவிடம் அவ்வளவாக பேசவேயில்லை. என் ராட்டினம் சுக்குநூறாக உடைந்துபோனது. முதல் ரேங்க்கைச் சந்திக்காமலேயே நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருப்பதாக ஐயர் சொன்னார். கடைசியாக சோதாவை அவன் கல்யாணத்தில் பார்த்தது. மீசையை எல்லாம் வழித்துக்கொண்டு வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். அதன் பின், இதோ காரைவிட்டு இறங்கி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருகிறானே இப்போதுதான் பார்க்கிறேன்.
நாலடி தூரத்தில் அவன் மனைவி நடந்து வந்தாள். எல்லோரையும் பார்த்து மெதுவாகத் தலையை ஆட்டினான். கண்ணாடிப்பெட்டிக்குள் கிடத்தியிருந்த பார்வதி அம்மாளைத் தரிசித்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றுகொண்டான். குழந்தை காரணம் புரியாமல் அழுதுகொண்டிருந்தது. ஐயர் கண்ணாடிக் குடுவையின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். மரணம் ஜனித்த வீடுகளில் நேரமும் மரணித்துவிடுகிறது. அம்மாளின் கடைசி ஊர்வலத்தில் , வஸ்துக்களின் துணையோடு சிலர் ஆடிக்கொண்டிருந்தனர். சோதா கயிற்றில் கட்டப்பட்டிருந்த மண்பானையைத் தூக்கிக்கொண்டு முன்னால் சென்றுகொண்டிருந்தான். சலனம் இல்லா விழிகளோடு ஐயர் நடந்து வந்தார். எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது மணி பத்தாகிவிட்டது.
ஐந்தாம் நாளே காரியம் வைத்திருந்தார் ஐயர். வெகுசிலரே வந்திருந்தனர். நானும் அப்பாவும் சென்றபோது புகை சமாச்சாரங்கள் முடிவடைந்திருந்தன. வெளியே போடப்பட்டிருந்த வாடகை சேர்களில் சோதாவும் அவன் மனைவியும் இருந்தார்கள். எங்களைப் பார்த்தவுடன் ஐயர், அப்பாவிடம் வந்து ஏதோ சொன்னார்.
சோதாவிற்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்துகொண்டே, ``ஏன்டா சோதா, உங்க அப்பாவையும் கூட்டிட்டுப் போயிடு பெங்களூருக்கு. ஏன் சொல்றேன்னா, இங்க ஒத்தையா கெடக்குறதுக்கு உன்கூட இருந்தா கொஞ்சம் சந்தோஷமாய் இருப்பாரு பாரு” என்றார் அப்பா.
ஐயரை முறைத்துவிட்டு, பின் அப்பாவிடம் திரும்பி, ``அது சரியா வராது. வாடகை வீடு. எங்க மூணு பேருக்கே சிரமமா இருக்கு. அதோட, இவர் அங்க வந்து என்ன பண்ணப்போறார்? பேசாம இங்கயே இருக்கட்டும். அங்க அவருக்கும் கஷ்டம், எங்களுக்கும் கஷ்டம்” என்றான் கடுப்பாக. ``அதான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்னு சொல்றேன்ல, அப்புறம் என்னவாம் இவருக்கு?’’
``எவ்வளவு?’’
``2000.’’
``போதுமா?’’
``ஏன்? ஒரு ஆளுக்குத் தாராளம்!’’

அந்தச்சத்தம்... ஐயோ! அப்பா பல்லைக்கடிக்கிறார். சோதாவின் பின்னால் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அப்பாவைப் பார்த்து இடவலமாகத் தலையை ஆட்டினார் ஐயர்.
மண் தரையில் சோதாவின் மகன் விளையாடிக்கொண்டிருந்ததை அவன் கால் இடறிக் கீழே விழுந்து வீலிடும் வரை யாரும் கவனிக்கவில்லை. சோதாவும் அவன் மனைவியும் குழந்தையைத் தூக்க ஓடினார்கள். ஞானம் ஐயர் மெதுவாக அப்பாவிடம் வந்து, ``வேணாம் விட்ருங்கோ மாப்ள’’ என்றார் மெதுவாக. அவரின் குரல் உடைந்திருந்தது. ஞானம் ஐயருக்கும் அழுகை வருமா? துண்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
குழந்தையின் உதடெல்லாம் மண். தலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டிக்கொண்டே, “சே ஹலோ டு தெம்” என்றான் சோதா, குழந்தையைப் பார்த்து.
“ஹலோ” என்று அழகாய் வாயைச் சுழித்தது குழந்தை.
அதன் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே, ``உம் பேரு என்ன?” என்றார் அப்பா.
``அபினவ்.’’
``ஸ்கூல்ல சேர்த்திட்டியாடா சோதா?’’
``என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... செகண்ட் ஸ்டாண்டர்டு போறான்.’’
``நல்லா படிக்கணும் அபினவ், சரியா?’’ என்றார் அப்பா.
குழந்தையை சோதாவிடமிருந்து வாங்கிக்கொண்டே அவன் மனைவி, ``படிப்பில அப்படியே அவங்க அப்பா மாதிரி, எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான்’’ என்றாள்.
சோதா பெருமையாய்ச் சிரித்தான்.