
கம்பேரிஸன் கோவாலு!
‘குடிக்கிற தண்ணிகூடக் கெட்டுப் போச்சுங்க’, ‘நூறு கோடி ரூபாய் அபராதம் வாங்குங்க’, ‘ஆலையை மூடுங்க’ என ஸ்டெர்லைட் பற்றி என்ன சொன்னாலும் குஸ்கா சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் கும்பகர்ணன்போல கம்மென இருக்கிறது தமிழக அரசு. ‘இவ்வளவு அமைதி வேண்டாம், வழக்கம்போல நியாயமான சில காரணங்களைச் சொல்லித் தப்பித்துவிடுங்கள்’ என்ற வேண்டுகோளுடன் காரணங்களையும் லிஸ்ட் போட்டிருக்கிறேன்.

தூத்துக்குடி, சென்னையிலிருந்து 600 கி.மீ தூரத்திலிருக்கிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு முக்கியக் காரணமே இந்தத் டிஸ்டன்ஸ்தான். ‘பல நூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் இருப்பதால், எந்தவொரு முடிவையும் ஒரே இரவில் எடுத்து அமல்படுத்த முடியாது. ஃபைல்களை கூரியர்மூலம் அனுப்பவே நான்கு நாள்களாகும்’ என அறிக்கை விடலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள். அவற்றில் நான்கு, அ.தி.மு.க வசம் இருப்பதுதான் பிரச்னை. இந்த நான்கு பேரும் அ.தி.மு.க-வா, அ.ம.மு.க-வா, எம்.ஜி.ஆர் ஜெ.தி.மு.க-வா என்பதைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ‘‘யார் யார் எந்தெந்த டீம் என முடிவானவுடன் ஆலை குறித்துப் பேசப்படும்’’ என்று சொல்லிவிடலாம்.
‘‘கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு கெயில்; நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மீத்தேன் திட்டம்; தேனிக்கு நியூட்ரினோ என்ற மாவட்டவாரியான மக்கள்’நல’த் திட்டக் கொள்கை அடிப்படையில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இருக்கிறது. அதை மூடமுடியாது’’ என ஓப்பனாகச் சொல்லிவிடலாம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைய அஞ்சாநெஞ்சர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் போராடியதுபோல், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தமிழகச் சட்டசபையில் மாநில அரசுக்கெதிராகப் போராடுவார்கள் என அறிவிக்கலாம். ஒரே குழப்பமா இருக்குல்ல..?
கடைசிகட்ட ஆயுதம் இதுதான்... ஸ்டெர்லைட் உற்பத்தி செய்வது காப்பர் உலோகத்தை. காப்பருக்குத் தமிழில் செம்பு எனப் பெயர். இன்னொரு பெயரும் இருக்கிறது. அது, தாமிரம். ‘‘தமிழகத்தில் தாமரை மலரத்தான் வாய்ப்பு இல்லை. தாமிரமாவது மலரட்டுமே’’ என ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டால்... கதம் கதம்!