
நத்தையின் பாதை - 12 - மீறலும் ஓங்குதலும் - ஜெயமோகன்
1986-ல் கேரளத்தை ஒரு கருத்துரிமைப் பிரச்னை உலுக்கியெடுத்தது. மலையாளத்தின் முதன்மையான நாடக இயக்கத் தலைவரும் தீவிர இடதுசாரியுமான பி.எம்.ஆண்டனி, ‘கிறிஸ்துவின்றே ஆறாம் திருமுறிவு’ (கிறிஸ்துவின் ஆறாவது புனிதப்புண்) எனும் நாடகத்தை எழுதி - இயக்கியதோடு, அதில் கிறிஸ்துவாக நடித்தும் அரங்கேற்றம் செய்தார். இந்நாடகம், ஆலப்புழா மாவட்டத்தில் எட்டு இடங்களில் நடைபெற்றது. திரிச்சூரில் மேலும் பத்து இடங்களில் நடைபெறவிருக்கையில், நாடகம் தடைசெய்யப்பட்டது.
இந்நாடகத்தின் முகப்பு வாசகமே உத்வேகமூட்டுவதாக இருந்தது. “தேவகுமாரன் அல்லாத ஏசு; வேசியல்லாத மேரி மக்தலேனா; காட்டிக்கொடுக்காத யூதாஸ்; திருடனல்லாத பாரபாஸ்”. ‘ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் உடலில் ஐந்து புண்கள் உருவாயின. ஆறாவதாக ஒன்று இதயத்தில் இருந்தது’ என்பதே நாடகத்தின் கருப்பொருள். ‘மேரி மக்தலேனா, ஏசுவின் காதலியும் மாணவியுமாக இருந்தாள்’ என நாடகம் குறிப்பிட்டது.

இது திருச்சபையைக் கொந்தளித்து எழச்செய்தது. ஆர்ச் பிஷப்மார், ஜோசப் குண்டங்குளத்தின் தலைமையில் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தன. அப்போது கேரளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. கே.கருணாகரன் முதல்வராக இருந்தார். அரசில் முதன்மையான கூட்டாளி, கிறிஸ்தவர்களின் அரசியல் அமைப்பும் திருச்சபையால் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப் படுவதுமான கேரள காங்கிரஸ். ஆகவே, அரசால் நாடகம் தடைசெய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தடையை ரத்து செய்தது. ‘நாடகத்தில் கிறிஸ்து இழிவுபடுத்தப்படவில்லை. மாறாக, அவர் ஒரு பெரும் புரட்சியாளராகவும் ஞானியாகவும்தான் காட்டப் படுகிறார்’ என அது கருதியது. ‘நிகழ்காலத்திய கிறிஸ்தவ மத நம்பிக்கைகளை அந்நாடகம் எவ்வகையிலும் கேள்விக்குரியதாக ஆக்கவில்லை என்றும், அந்நாடகம் பேசியவை வரலாற்று ஆய்வாளர்களால் தொடர்ந்து சொல்லப்படுவனவே’ என்றும் அது சொன்னது.

ஆனால் அரசு, ‘சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது’ என அறிவித்து, உதவி ஆட்சியர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாவட்டவாரியாக நாடகத்தைத் தடைசெய்தது. நாடக நடிகர்களின் மேல் தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டன. நாடகம் போடப்பட்ட இடங்களில் பாதிரியார்களும் கன்யாஸ்திரீகளும் வந்து போராட்டம் செய்தனர். மும்பையில் நாடகம் நடக்கவிருந்தபோது அங்கும் போராட்டமும் அடிதடியும் நிகழவே, மும்பை அரசும் நாடகத்தைத் தடைசெய்தது.
இறுதியாக, நாடெங்கும் இந்நாடகம் தடைசெய்யப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது திருச்சபைத் தரப்பு. அரசுகள், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி அக்கோரிக்கையை ஆதரித்தன. விளைவாக உச்ச நீதிமன்றம் நாடகத்தைத் தடைசெய்தது. அதைக் கண்டித்து திருச்சூரில் தீவிர இடதுசாரிகள், கருத்துரிமை காக்க ஒரு கருத்தரங்கை நடத்தினர். அதில், ஆந்திர மாநில புரட்சிப் பாடகரான கத்தார் கலந்துகொண்டார். பார்வையாளனாக நானும் பங்கெடுத்தேன். இந்நாடகம் தடை செய்யப்பட்டதைப் பற்றிய ஒரு நாடகத்தை பிரபல நாடக ஆசிரியர் ஜோஸ் சிறைக்கல் நடத்தினார். அந்நாடகமும் தடைசெய்யப்பட்டு அவரும் கைதானார்.
தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வந்துகொண்டே இருந்த நிலையில் பி.எம்.ஆண்டனி, ‘விசுத்தபாபம்’ (தூயபாவம்) எனும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதற்கும் கிறிஸ்தவ சபைகளிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு வந்தது. இறுதி அடியாக, அரசு 1988-ல் ஒரு கடும் நடவடிக்கையை எடுத்தது. கயிறுத் தொழிற்சாலை உரிமையாளராகிய சோமராஜன் என்பவரை தீவிர இடதுசாரியினர் 1980-ல் கொலைசெய்த வழக்கு ஒன்று முன்னரே நீதிமன்றத்தில் இருந்தது. அதில், ஆண்டனியின் பெயரும் சேர்க்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் இல்லாதிருந்த அவர் பெயரை எழுதிச் சேர்த்ததை அன்று ஊடகங்கள் கடுமையாகக் கண்டித்தன. ஆலப்புழா அமர்வு நீதிமன்றம், ‘ஆண்டனி அக்குற்றத்தில் பங்கெடுத்ததற்கு ஆதாரமில்லை, அவருடைய பேச்சுகளால் குற்றத்திற்குத் தூண்டுதல் அளித்தார்’ என்று மட்டும் குற்றம்சாட்டி, ஆறு மாதச் சிறைத்தண்டனை அளித்தது. அத்தண்டனையை அவர் முன்னரே அனுபவித்திருந்தமையால், அவரை விடுதலை செய்தது. அக்குற்றம் நடந்த அன்று, அவர் வேறு ஊரில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தமைக்கான சான்றுகள் பல இருந்தன. ஆனால், 1989-ல் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக நடந்த மறுவிசாரணையில் எந்த ஆதாரமும் கருத்தில் கொள்ளப்படவில்லை. அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

அன்று எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நானும் தமிழில் இரண்டு கட்டுரைகள் எழுதி, எழுத்தாளர்களின் ஆதரவைத் திரட்டினேன். தொடர்ச்சியான போராட்டங்கள் நிகழ்ந்தன. ஈ.கே.நாயனாரின் இடதுசாரி அரசு (1987-ல் ஆட்சிக்கு வந்தது), ஆண்டனிக்குத் தண்டனைக் குறைப்பு அளித்தது. 1993-ல் அவர் வெளியே வந்தார்.
வெளிவந்த பின்னரும் ஆண்டனி தீவிர இடதுசாரி செயல்பாட்டாளராகவும் நாடக இயக்கத்தவருமாகவே செயல்பட்டார். கேரளம் முழுக்க சைக்கிளிலேயே சென்று வீதிநாடகங்களைப் போட்டார். ‘மூன்றாம் அரங்கு’ எனும் அவருடைய கருத்தியக்கம், நாடகத்தை மக்களிடம் கொண்டுசென்றது. 2005-ல் ஆறு மாதங்களில் 1,500 முறை நாடக அரங்கேற்றம் செய்தார். ஒரு நாளில் ஒன்பதுமுறைகூட நாடகம் போடப்பட்டது. 2011-ல் ஆண்டனி மறைந்தார்.
நிகாஸ் கஸன்ட்ஸாகீஸ் எழுதிய ‘The Last Temptation of Christ’ என்னும் நாவலை அடியொற்றி எழுதப்பட்டது பி.எம்.ஆண்டனியின் நாடகம். அந்தப் பெயரை நான் அப்போதுதான் கேள்விப்பட்டேன். அந்நாவல் எங்கும் கிடைக்கவில்ல. ஆனால், அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர். சட்டபூர்வமாக அது தடைசெய்யப்படவில்லை. ஆனால், நடைமுறைத் தடை இருந்தது. நூலகங்களிலிருந்து அது மறைந்தது. திருச்சூரில் ஒரு கல்லூரி ஆசிரியரிடமிருந்து நான் அந்நாவலின் ஒரு பிரதியை வாங்கினேன்.
அது அந்நாவலின் சைக்ளோஸ்டைல் பிரதி. தட்டச்சு எழுத்துகள் வெட்டு இடைவெளியாகப் பதியும் ஒரு தாளில் தட்டச்சு செய்து, அதைக் கரித்தாளுடன் சேர்த்து உருட்டி அச்சிடும் அத்தொழில்நுட்பம், ஒளிநகல் வந்ததுமே அழிந்துவிட்டது. ஆனால், அன்றெல்லாம் சைக்ளோஸ்டைல் இலக்கிய இதழ்களே வந்தன. தீவிர இடதுசாரிகளின் தாள்வெளியீடுகள் எல்லாமே அந்த வகையில் அச்சிடப்பட்டவைதான்.
என்னைக் கொந்தளிக்கவும் பின் அமைதியிலாழ்த்தவும் செய்த நாவல் அது. இன்று வரை மதம் சார்ந்த என் சிந்தனையில் அதன் ஆழ்ந்த பாதிப்பைக் காணலாம். எனக்குரிய கிறிஸ்துவை நான் அந்நாவலிலிருந்து உருவாக்கிக்கொண்டேன். வரலாற்றின் இடிபாடுகளிலிருந்து மதத்தின் உறைநிலைப் பாவைகளிலிருந்து கிறிஸ்துவை மீட்டெடுக்கும் கஸன்ட்ஸாகீஸைப்போல நான் காந்தியை, கிருஷ்ணனை மீட்டுக்கொண்டேன். இத்தொடரிலேயே அந்நாவல் பற்றி எழுதியிருக்கிறேன்.

ஓராண்டுக்குப் பின் சுந்தர ராமசாமியிடம் கஸன்ட்ஸாகீஸ் பற்றிப் பேசியபோது அவர், டி.எச்.லாரன்ஸின் ‘Lady Chatterley’s Lover’ இந்தியாவில் தடைசெய்யப்பட்டதைப் பற்றிச் சொன்னார். அன்று ‘அந்நாவலின் கரித்தாள் கைப்பிரதியை ஒருவரிடமிருந்து பெற்று வாசித்தேன்’ என்றார். அந்நாவலின் ‘சுதந்திரப் பாலுறவுச் சித்திரிப்புகளை’ வாசித்து மூச்சுமுட்டியதாகச் சொல்லி எனக்கு ஒரு பிரதி கொடுத்தார்.
நான் அதை ஆவலுடன் கொண்டு சென்று அவர் வீட்டு மாடியில்வைத்தே வாசித்துவிட்டு, “இதை பம்மன் எழுதியாயிற்றே சார்.” என்று சொன்னேன். பம்மன் மலையாள பாலியல் நாவல்கள் சிலவற்றை எழுதியவர். “கொச்சைப்படுத்தறேள்” என்று சு.ரா கொதித்தார். “இல்ல சார், உண்மையிலேயே இதை பம்மன் எழுதிட்டார். சரி, கிட்டத்தட்ட 100 வருஷம் கழிச்சு எழுதினார். ஆனா, நான் பம்மனைப் படிச்சிட்டுதான் லாரன்ஸ்கிட்ட போறேன். எனக்குப் புதுசா இல்லியே” என்றேன்.
“அதெப்படி புதுசா இருக்க முடியும்?” என்றார் சு.ரா. “தஸ்தயெவ்ஸ்கி இன்னமும் புதுசா இருக்காரே?” என்றேன். சு.ரா, சிவந்த முகத்துடன் பேசாமலிருந்தார். “மானுடத்தின் அறப் பிரச்னைகளைப் பேசுற படைப்பு என்றைக்கும் புதுசா இருக்கும். மொழி, வடிவம் எல்லாத்தையும் தாண்டி ஒரு பெரும் படிமத்தை உண்டுபண்ணி நிறுத்தின படைப்பு சாகாது. இது முதல்ல தனிநபர் எழுத்து. ரெண்டாவது ஒழுக்கப் பிரச்னைகளைப் பேசுற படைப்பு. ஒழுக்கம் சார்ந்த கருவை எடுத்துக்கிட்ட எந்தப் படைப்புக்கும் ரெண்டு தலைமுறை காலத்துக்கு மேல் மதிப்பில்லை” என்றேன்.
சில மாதங்களுக்குப் பின் தேவதச்சனை கோவில்பட்டியில் சந்தித்தபோது, கஸன்ட்ஸாகீஸின் ‘Zorba the Greek’ பற்றிச் சொன்னார். “அதுதான் உண்மையிலேயே அவரோட பெஸ்ட். உண்மையான விடுதலையைப் பற்றிய நாவல்” என்றார். நான் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அந்நாவலை எடுத்துச்சென்று வாசித்தேன். எனக்கு அந்நாவலும் முக்கியமானதென்றே பட்டது. மேலும், அது நித்ய சைதன்ய யதிக்குப் பிடித்த நாவல். நித்யா அவருடைய ஜெர்மனிய மாணவர் ஒருவருக்கு ‘சோர்பா’ எனப் பெயரிட்டிருக்கிறார். பொதுவாக 70-களின் ஹிப்பி இயக்கத்தினரால் கொண்டாடப்பட்ட இரு நாவல்களில் ஒன்று அது. இன்னொன்று ஜே.டி.சாலிங்கரின் ‘The Catcher in the Rye’. ஆனால், என்னை இன்றும் ஆட்கொண்டிருக்கும் நாவல், கிறிஸ்துவின் இறுதிச் சபலம்தான்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தருமபுரிக்கு மாற்றலாகி வந்தபின், என் அடுத்த தலைமுறையினரான செங்கதிருக்கு டி.எச்.லாரன்ஸின் நாவல்களை அளித்தேன். ‘Sons and lovers’ ‘சுவாரஸ்யமான நாவல்...’ என்றார். ஆனால், மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1997-ல் அவர் வாசித்த கஸன்ட்ஸாகீஸின் ‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ அவருக்கு வாழ்க்கையை மாற்றிய படைப்பாக இருந்தது. ஆம், இது என்னுடைய சொந்த ரசனை அல்ல. இதுவே ஒரு கீழை மனதின் மதிப்பீடு என எண்ணிக்கொண்டேன்.
சென்ற மாதம் அருண்மொழி, ‘சோர்பா தி கிரீக்’ நாவலை வாசித்தாள். அவளுடன் அந்நாவலைப் பற்றிப் பேசியபோது, அது மிகத் தெளிவாக நினைவில் எழுவதை உணர்ந்தேன். ஆனால், நாவல் என் உள்ளத்தில் சற்று பின்னுக்குச் சென்றிருந்தது. பொறுப்பேற்றுக் கொள்ளுதலை, கட்டுப்பாட்டை முதன்மையாக வலியுறுத்தும் ஐரோப்பியப் பண்பாட்டில் எழுந்த எதிர்க்குரல் அது. பொறுப்பிலிருந்து விடுதலை அடைதல், கட்டுப்பாடுகளற்றிருத்தல் அளிக்கும் ஆன்மிகமான மகிழ்ச்சியைப் பேசுகிறது. ஆனால், நாராயணகுருவின் மண்ணைச் சேர்ந்த எனக்கோ, பாஷோவின் மண்ணைச் சேர்ந்த ஒருவருக்கோ, அது எதைப் புதிதாகச் சொல்கிறது, இங்கிருந்துகொண்டு அவர்களைவிடக் கூர்மையாக அதை அடையாளம் காண முடிகிறது அவ்வளவுதான்.
(அந்நாவலின் திரைவடிவில், ஆண்டனி க்வின் இறுதியில் ஆடும் நடனம் அதன் மையத் தரிசனத்தை அற்புதமாக விளக்குகிறது என்று நினைக்கிறேன். திரையில் இது அரிதாகவே நிகழ்கிறது.)
‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ என் உள்ளத்தில் ஒரு நாவலாக அல்ல, நிகரான தொன்மமாகவே மாறிவிட்டிருக்கிறது. கஸன்ட்ஸாகீஸ் எழுதியதைவிட மேலான ஒரு வடிவம் என்னுள் உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் 1997-ல் செங்கதிர் வாங்கிய பிரதியை நான் எடுத்து மீண்டும் வாசித்தேன். முதன்முறையாக மக்தலேனாவை நோக்கி என் நோக்கு குவியம்கொண்டிருந்தது. அந்த வயது அப்படி. இரண்டாம் முறை மேலும் பெரிய படைப்பாக இருந்தது அது. இம்முறை அது யூதாஸின் கதை என்று நினைத்தேன்.
யூதாஸ் அதில் கிறிஸ்துவின் இரட்டையன். மெய்யறிவனை எதிர்கொள்ளும் சாமானியன். இவ்வுலகில் தெய்வம் கண்கூடாகத் திகழ விரும்புபவன். அழிவின் மேல் ஆக்கத்தின் வெற்றி எப்போதும் நிலைக்க வேண்டும் என விரும்பும் பேதை. அவனின் கொந்தளிப்புகளுடன் இன்று மேலும் அணுக்கமாகிறேன். ஞானத்தைத் தொடர்பவனின் பெருந்துயர் அவனுடையது.
டி.எச்.லாரன்ஸும் தடை செய்யப்பட்டார். இன்றைக்கு இணையப் பாலியல் கொந்தளிப்பின் காலகட்டத்தில் அதற்கு எந்த அதிர்ச்சி மதிப்பும் இல்லை. ஆனால், இன்றும் ‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ சீண்டுகிறது, நிலைகுலையச் செய்கிறது, கடந்துசெல்லவைக்கிறது. இன்றும் அதை இங்கே நாடகமாகப் போட முடியாது. பி.எம்.ஆண்டனியைப்போல மிகப் பெரிய விலைகொடுக்க வேண்டியிருக்கும். ஏனென்றால்,
டி.எச்.லாரன்ஸ் அக்காலகட்டத்தின் ஒழுக்கவியலை மீறிச் செல்கிறார். கஸன்ட்ஸாகீஸ், மானுடச் சிந்தனையில் என்றுமுள்ள எல்லைகளிலிருந்து ஓங்கி எழுகிறார். மதவாதிகளை ஞானிகள் கடந்துசெல்வதுபோல. பேரிலக்கியத்தின் பாதை அதுவே.
மலையாள விமர்சகர் எம்.என்.விஜயன் ஓர் உரையில் சொன்னார். “மிக அதிகமாக உண்டு, மிகக் குறைவாகப் பால் கொடுக்கும் ஒரு பசு, இலக்கியம்” என. இலக்கியம் மிக மெள்ள வரலாற்றைப் பின்தொடர்கிறது. உளவியல், சமூகவியல், அரசியல் கோட்பாடுகளுக்கெல்லாம் மிகப் பிந்தியே வந்துசேர்கிறது. நத்தைபோல உடலால் ஊர்வது அது. ஆனால், பிற உயிர்களுக்கு இல்லாத ஒன்றுண்டு, அதுதான் சென்ற வழியை ஒளிரவைக்கும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்தை அளவிட, முழுமையாக மறுக்க, வழிகாட்ட முயல ஏராளமான கொள்கைகள் எழுகின்றன. பிற துறைகள், இலக்கியத்தை - பழகிய யானைகள் பிடிபட்ட யானையை வடமிட்டுப் பிடிக்க முயல்வதுபோல் சூழ்ந்துகொள்கின்றன. என் நோக்கில் இலக்கியத்தை அளவிடும் வழி ஒன்றே. வானவில் அதைத் தொடர்கிறதா என்பது.
(பாதை நிறைந்தது)