
தலையங்கம்
கல்விச் சூழலைச் சமீபகாலமாகக் கவ்வியிருக்கும் இருள் நம்மை அச்சுறுத்துகிறது. உலகின் முக்கியமான சமூக சிந்தனையாளர்கள் அனைவரும், கல்விமுறை குறித்துக் கவனம் செலுத்தியவர்கள். எல்லா மாற்றங்களும் பள்ளிப் பருவத்திலிருந்தும் கல்லூரிப் பருவத்திலிருந்தும் தொடங்குபவை. உலகின் பெரும் சமூகமாற்றங்களை நோக்கிய நகர்வுகளில், போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுத்ததும் உண்டு. தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டங்களும், ஈழ ஆதரவுப் போராட்டங்களும் அதற்கான சான்றுகள்.

மேலும், மாற்றுக்கல்வி, ஆசிரியர் - மாணவர் உறவை ஜனநாயகப்படுத்துவது, கல்விச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பல்வேறு தளங்களில் புதிய சிந்தனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், சமீபகாலமாக அரசியல் உணர்வற்ற, அரசியல் புரிதலற்ற தலைமுறை உருவாகிவருகிறதோ என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுவதற்குக் காரணம், கல்வி வியாபாரமாக மாறியதும், போட்டிச் சூழலில் தன்னை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதை மட்டுமே மாணவர்களுக்குக் கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுத்ததும்தான். இப்படியான மோசமான சூழலில் கல்வி நிறுவனங்கள் குறித்து சமீபமாக எழும் சர்ச்சைகள், தமிழகத்தின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள யாருக்கும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருபவை.

தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவது தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாது, மாணவர்களை அந்நியப்படுத்துவதற்கே இட்டுச்செல்லும். இன்னொருபுறம் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், ஆசிரியர்கள் நியமனம், மாணவர் சேர்க்கை, ஆராய்ச்சி மாணவர்களுக்கான வாய்ப்பு என பலவற்றுக்குப் பின்னும் ஊழலும் பாலியல் சுரண்டலும் இருக்கின்றன என்பது கல்வித்துறையின் அடித்தளத்துக்கே வேட்டுவைக்கும் அவலம்.
பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதற்கு எதிராகக் கற்றுத்தர வேண்டிய கல்வி நிறுவனங்களே, மாணவிகளைப் பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தி, நிறுவனரீதியிலான ஆதாயம் அடைவது என்பது மாபெரும் அநீதி. இதற்குப் பின்னணியில் உள்ள எல்லா அதிகாரமட்டங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் ஆரோக்கியமான கல்விச்சூழலை உருவாக்குவதுமே நமக்கான கடமைகள்.
- ஆசிரியர்