Published:Updated:

சர்வைவா - 15

சர்வைவா - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சர்வைவா - 15

அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

``அதிகாரம் என்பது மனித மனங்களை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப்போட்டுவிட்டு, நமக்கு ஏற்ற வடிவத்தில் அதை மீண்டும் ஒட்டவைத்துக்கொள்வதுதான்!’’

 - 1984 நாவலில்- ஜார்ஜ் ஆர்வெல்

‘FACIAL RECOGNITION SYSTEM’

சுருக்கமாக FRS. மனிதர்களின் முகபாவங்களை அனலைஸ் செய்து அதன்மூலம் அவர்களுடைய குணங்களைக் கணிக்கிற நவீனத் தொழில்நுட்பம்.

வார்த்தைகள் கடத்தாத கதைகளையெல்லாம் சொல்லக்கூடியவை முகங்கள். எந்திரங்கள் மனிதர்களைப் புரிந்துகொள்ள நம் மூளைகளைப் படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முகங்களையும் படிப்பதும் அவசியம்.

யார் நீ?

ஒருவருடைய முகத்தை வைத்தே அவர் நல்லவரா கெட்டவரா என்பதைக் கண்டுபிடிக்கிற எந்திரம் ஒன்றுதான் மைக்கேல் கோஸின்ஸ்கியின் லட்சியம்!

இப்போதைக்கு அந்தளவுக்கு இல்லையென்றாலும் ஒருவர் சாதாரணப் பாலியல் நாட்டம் கொண்டவரா(Straight) அல்லது ஆண் ஒருபால் ஈர்ப்பாளரா (GAY) என்பதைக் சொல்லிவிட கூடிய செயற்கை நுண்ணறிவு எந்திரத்தை உருவாக்கிவிட்டார்.

சர்வைவா - 15

பெயர்  - GAYDAR.

வேலை  - மனிதர்களுடைய முகங்களைப் படித்து பாலியல் நாட்டத்தைக் கணிப்பது.

உலகின் MOST WANTED செயற்கை நுண்ணறிவுத்துறை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் இந்த மைக்கேல் கோஸின்ஸ்கி. அல்காரிதங்களின் உதவியோடு ஒருவருடைய முகத்தை ஆராய்வதன் மூலம் அவருடைய பல்வேறு குணாதிசயங்களை, உணர்வுகளை, உடல்நிலையை, நடத்தையை எல்லாம் கண்டுபிடிக்கமுடியும் என்பது மைக்கேல் கோஸின்ஸ்கியின் கருத்து. அந்த ஆராய்ச்சியின் முதல்படி `கேடார்.’

இந்தக் கேடார் ஏற்கனவே டேட்டிங் சமூகவலைதளங்களில் பயன்பாட்டில் இருக்கிறதாம். அந்த இணையதளங்களில் ஆள்களின் பாலியல் நாட்டத்தை 89 சதவீதம் சரியாகவே கணிக்கிறதாம்.   

“என்ன ஒரு கேனத்தனமான ஆராய்ச்சி இது” என்று உலகில் திட்டித்தீர்க்காத ஆள்களே இல்லை.  அதிலும் LGBT சமூகத்தினர் எல்லாம் கோஸின்ஸ்கி வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்து... கல்லெடுத்து அடிக்க மட்டும்தான் இல்லை.

வளரும் நாடுகளில் தொடர்ச்சியாக ஒருபால் ஈர்ப்பாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலைதான் நீடிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமானால் அவர்களை எல்லாம் தேடிப்பிடித்து வேட்டையாடிக் கொலை செய்கிற சூழலும் உருவாகலாம்.

ஆனால் கோஸின்ஸ்கி இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் ஒருபால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான அரசுகளுக்கு இப்படி ஒரு மென்பொருள் மிகப்பெரிய பலம். அவர்களை எளிதில் கண்டுபிடித்து, கட்டுப்படுத்த அல்லது தண்டிக்க முடியும் இல்லையா?

நாம் சொல்வதுதான் விலை!

சர்வைவா - 15



செல்வச் செழிப்போடு வாழும் கோஸின்ஸ்கியின் அடுத்த முயற்சி -  அரசியல். ஒருவருடைய முகத்தைப் பார்த்து அவருடைய அரசியல் சார்பைக் கண்டுபிடிப்பது.

கோஸின்ஸ்கி உருவாக்கி இருக்கிற இந்த அரசியல் எந்திரத்தால் இன்றைய தேதிக்கு ஒருவருடைய முகத்தை வைத்தே அவர் வலதுசாரியா, இடதுசாரியா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியுமாம்.

(தமிழ்நாட்டில் இறக்கினால் கன்ஃப்யூஸ் ஆகி வெடித்துவிடும்.)

கோஸின்ஸ்கி ஏற்கனவே Psychometric profiling வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

அப்படின்னா?

ஃபேஸ்புக்கில் நாம் கொட்டி வைத்திருக்கிற புகைப்படங்க ளின் வழி நம்முடைய குணநலன்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் கிடைக்கும் ஆராய்ச்சி முடிவுகளைத் தேவையான வர்களுக்கு விற்பது.

அதை யார் வாங்குவா?

இந்தத் தகவல்கள்தான் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியைப் பிடிக்க உதவியிருக்கிறது. உலகின் முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் கோடி கோடியாய் லாபம் ஈட்ட உதவியிருக்கிறது.

 `இது ரொம்ப ஆபத்து, கோஸின்ஸ்கி கொடியவர்’ என்கிற விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் அவர் இந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இருக்கிறார்.

தன்னுடைய எந்திரத்தைப் பள்ளிகளில் பயன்படுத்தமுடியும். அதன்மூலம் ஐ.க்யூ குறைவாக உள்ள குழந்தைகளை, கற்றல் குறைபாடுள்ளவர்களை அறிந்து  சிறப்புப்பயிற்சிகள் தரமுடியும், மனநல மருத்துவத்தில் உதவிசெய்யக்கூடியதாக இருக்கும் என்று நன்மைகளைப் பட்டியலிடுகிறார்.
காதல் பொம்மை ஆராய்ச்சியாளர்களைப்போலவே அதே வசனங்கள்... அதே குரலில்...

இப்போதைக்கு நம்மிடம் இருக்கிற AI தொழில்நுட்பத்துக்கு அறிவு குறைவுதான் என்றாலும், அதன் மூளையில் மேலும் மேலும் வெவ்வேறு மனிதர்களின் குணாதிசயங்கள் ஏற ஏற, அவை மாயங்கள் நிகழ்த்துமாம். குறிப்பாகக் குற்றங்களைத் தடுப்பதில், குற்றவாளிகளைக் கண்டறிவதில் ஷெர்லாக் ஹோம்ஸாக இல்லாவிட்டாலும் `துப்பறிவாளன் கணியன் பூங்குன்றனா’கவாவது இருக்குமாம்!

இந்த AIகள் `மைனாரிட்டி ரிப்போர்ட்’ படத்தில் வருவதுபோல குற்றங்களை, நடப்பதற்கு முன்பே நமக்கு அறிவிக்கப்போகின்றன. நம்முடைய முகத்தில் சைக்கோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அதைக் கண்டறிந்து சொல்லிவிடும். காவல்துறை கடமையைச் செய்துவிடும். சந்தேகக் கேஸில் உள்ளே தள்ளி, முட்டிக்கு முட்டி தட்டும். ஆனால் அப்படி ஓர் எந்திரத்தை உருவாக்குவது சுலபமான காரியமல்ல...

சர்வைவா - 15

பெரியண்ணா பார்த்துக்கொண்டிருக்கிறார்! 

ஓர் அரசாங்கம் ஏன் தன் குடிமக்களைக் கண்காணிக்க வேண்டும்...?

 `குற்றங்களைக் குறைப்பதற்காக’ என்று சொன்னாலும், உண்மையான காரணம் குடிமகனை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். வேரிலேயே வெட்டி வீழ்த்தப்படாத எதிர்ப்புணர்வுகள் கூட்டாக எழும்போது எத்தகைய அதிகாரமும் மண்டியிடும் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்!

அதனால்தான் கண்காணிப்புக்கான செயற்கை நுண்ணறிவுத்துறை ஆராய்ச்சிகளுக்கென வல்லரசு நாடுகள் கோடிகளைக் கொட்டிக்கொண்டி ருக்கிறார்கள். 

உலகளவில்  AI ஆராய்ச்சிகளுக்காக அதிகம் செலவழிக்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனாதான். அந்த நாட்டின் விஞ்ஞானிகள் பலரும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்று தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு, சொந்த நாட்டுக்கே திரும்பி AI ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே குடையின் கீழ் கண்காணிக்கவேண்டும் என்பதுதான் சீனாவின் சமீபத்திய லட்சியம். ஆயிரம் கண்ணுள்ள எலக்ட்ரானிக் ஒற்றன்!

2000வது ஆண்டின் தொடக்கத்தில் சீனா `இன்டர்நெட் தணிக்கை’ பற்றி அறிவித்தபோது உலகமே சிரித்தது. இதெல்லாம் `ஆவுற காரியமா’ என நினைத்தார்கள்.

சீனர்கள் சமர்த்தர்கள். ஆறு ஆண்டுகள் போராடி அதைச் சாதித்துக்காட்டினர். யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ஓர் இணையத் தடுப்புச் சுவரை எழுப்பினர்.  `The great firewall of china!’

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், சமூகவலைதளங்கள் தொடங்கி சகலமும்  BAN BAN BAN...

இப்போது சீனா அதன் சீசன்-2வுக்கு வந்திருக்கிறது. இந்த முறை இணைய தணிக்கை இல்லை... நேரடியாக மனிதத் தணிக்கைதான். அதற்காக இரண்டு வேலைகளை செய்யத்தொடங்கி யிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரியில் சமூக மதிப்பீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது குடிமகன்களுக்கு மார்க் போடும் முறை. 

குடிமகன்களின் நடவடிக்கைகள், அவர்களுடைய செயல்பாடுகள், குற்றங்கள், சட்டவிரோதச் செயல்கள் முதலானவை கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப மார்க் போடப்பட்டு அந்த மதிப்பெண்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு அரசுச் சலுகைகள், வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கான கல்வி எல்லாம் தரப்படும். நல்ல மார்க் எடுத்தால் நல்ல சலுகை, மோசமான மார்க் எடுத்தால் கடும் தண்டனை.

44 பெரிய நிறுவனங்கள் அரசோடு கூட்டு சேர்ந்து செய்துகொண்டிருக்கிற பைலட் புராஜெக்ட் இது. இப்போதைக்கு ஷாங்காய் மாகாணத்தின் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் 300 வங்கிகளும் இணைந்துள்ளன. கூடவே சீனாவின் சமூகவலைதளங்களும், ஷாப்பிங் தளங்களும் தங்கள் பயனாளர்களின் தகவல்களைக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்.

இப்படி ஒருபக்கம் தகவல்களை திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம்  AI தொழில்நுட்பத்தோடு இயங்கும் 20 கோடி சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த சிசிடிவி கேமராக்களால் ஒரு குடிமகனின் வயது, பாலினம், உடை முதலானவற்றை உணர்ந்துகொள்ள முடியும். அதை வைத்து அவை தகவல்களைத் தொகுத்து அளிக்கும். இதன்மூலம் வீடற்றவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எனப் பல குழுக்களின் எண்ணிக்கைகளைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது சீனா.

இதன் அடுத்த ஸ்டெப்தான்  FACE ++. சீனா-ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான ­அதிநவீன FRS. கோஸின்ஸ்கியின் துக்கடா எந்திரந்தை விட பலமடங்கு பெரிய அறிவுள்ள `முகக் கணிப்பு எந்திரம்!’ 140கோடி முகங்களையும் கண்காணிக்கிற ஒரே எந்திரம். நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை எல்லாம் ஒரு எந்திரம் தீர்மானிக்கப்போகிறது.  சீனர்கள் பாவம்தான்... ஆனால் இது பெரிய திட்டம். இன்னும் இருக்கிறது. கூடவே சீனா மட்டும்தான் இந்தக் கண்காணிப்பில் இருக்கிறதா? மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? ஏன் இவ்வளவு பெரிய கண்காணிப்பு வலை? சீனா மாதிரியே வேறெந்த நாடுகளில் இதே வலைப்பின்னல் தயாராகிக்கொண்டிருக்கிறது?

ஒட்டுமொத்தக் கண்காணிப்பையும் எந்திரங்களின் கைகளில் கொடுத்தால் என்னாகும்? எல்லாம் அடுத்த வாரம்.

இப்போதைக்கு உங்களுக்குச் சொல்ல ஒரே ஒரு செய்திதான் இருக்கிறது...

``எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கிட்டிருக்கான்.”

- காலம் கடப்போம்