
ஹெல்த்
கணவன்-மனைவிக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது செக்ஸ். பல நேரங்களில் கணவன்-மனைவிக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதும் அதுதான். டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், `கணவன் உறவுக்கு அழைக்கும்போது மனைவி தொடர்ந்து நிராகரித்தால், அதை ஒரு காரணமாக வைத்து விவாகரத்து வழங்கலாம். மனைவியின் இது போன்ற நடவடிக்கையால் கணவனுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று தீர்ப்பு கூறியிருக்கிறது.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ தாம்பத்ய இன்பத்தைக் கொடுக்க மறுத்தால், அதை `செக்ஸ் டினையல்’ (Sex Denial) என்போம். இருவருக்குமிடையில், ‘யார் பெரியவர்’ என்ற போட்டி ஏற்படுவதே இந்த நிலைக்குக் காரணம். கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது கோபம். கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ கோபம் கொண்டு தாம்பத்யத்தைத் தவிர்ப்பது பொதுவானது. ஆனால், ஒருவர் மீது கோபம் இருப்பதை அறியாமல் தவிர்ப்பதுதான் மிகவும் ஆபத்தானது, அதைக் கையாள்வதும் கடினம்.
தாம்பத்யத்தில் ஆர்வம் வரும்போது, இணை அதை ஏற்றுக்கொண்டு கோபத்தை மறந்து, ஈடுபட்டால்தான் தாம்பத்யம் தேனாக இனிக்கும். தாம்பத்யம் வைத்துக்கொள்ள மறுப்பது, இணைக்குத் தரும் தண்டனை. கணவன் மீது கோபமாக இருக்கும் பெண், ஆர்வத்துடன் தன்னை நெருங்கும் கணவனைத் தடுப்பாள்; அவனது குறைகளைச் சொல்லிக் காயப்படுத்துவாள். இதேபோலதான் ஆணும் மனைவியிடம் நடந்துகொள்வான். கோபத்தில், இணையின் அழகு குறித்துச் சிலர் மோசமாக விமர்சனம் செய்வார்கள்; மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவார்கள்.

சில நேரங்களில், தாம்பத்யம் வேண்டாமென்று நேரடியாக மறுக்க மாட்டார்கள். `சீக்கிரமாக முடித்துக்கொள்’ என்று அவசரப்படுத்துவார்கள். `ஏன் அடிக்கடி தொந்தரவு செய்கிறாய்?’ என்று கோபப்படுவார்கள். சிலர், கணவன் நெருங்கும்போது, `குழந்தைகள் தூங்கவில்லை’, ‘பிள்ளைகள் வந்துவிடுவார்கள்’ என்று ஏதேதோ காரணம் சொல்லி மறுப்புத் தெரிவிப்பார்கள். நேரடியாகச் சொல்லாமல், வேறு காரணம் சொல்லி மறுப்பார்கள். சிலர், எப்படி தாம்பத்யம் வைத்துக்கொண்டால் தனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்பதைச் சொல்லாமல், ‘உனக்கு ஒன்றும் தெரியவில்லை, எதற்கும் லாயக்கில்லை’ என்று இணையைப் புண்படுத்துவார்கள்.

ஆர்வ்த்தோடு வரும்போது, `இப்போது வேண்டாம்... பிறகு வைத்துக்கொள்ளலாம்’ என்று சொல்வார்கள். ஆர்வம் குறைந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துவார்கள். மனைவி அழைக்கும்போது கணவனோ, கணவன் அழைக்கும்போது மனைவியோ வெவ்வேறு காரணங்களைச் சொல்லி மறுப்பார்கள். தன் இணையின் தேவை என்ன என்பது தெரிந்தும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும்விதமாக நடந்துகொள்வார்கள். இவையனைத்தும் இருவரிடமும் மனப்பக்குவம் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகளே. கணவன்-மனைவியிடையே பிரச்னைகள் வருவது இயல்பு. அதை முறையாகக் கையாண்டு, விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் சரிசெய்ய வேண்டுமே தவிர, தண்டனை கொடுக்கக் கூடாது. இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள், மனநல மருத்துவரைச் சந்தித்துச் சரிசெய்துகொள்வது நல்லது. பிரச்னை பெரிதாகாமல் தவிர்க்கலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் தாம்பத்ய வாழ்க்கையை மேலும் இனிதாக்கிக்கொள்ளலாம்!
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- ஐ.கெளதம்
டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்