
சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர் - படம் : வி.சரவணகுமார்
வங்கிப் பணியாளர்களைத் தேவ தூதர்களாகப் பார்த்த காலமுண்டு. இன்றோ, விஜய் மல்லையாவில் ஆரம்பித்தது நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி என்று தொடர்ந்து அடி வாங்கி, பொதுத் துறை வங்கிகளின் மதிப்பு அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. தனியார் வங்கிகளும் தங்கள் பங்குக்குத் தடுக்கிவிழுகின்றன.
ஆனாலும், நம் நாட்டு மக்களின் சேமிப்பில் 70% வங்கிகளில்தான் உள்ளது. வங்கிகளும் காலத்துக்கேற்ப கணினி மயமாக்கி, உலகளாவிய சேவைகளை வழங்குகின்றன. விவசாயக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என்று பல வகையிலும் நம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வங்கிகள் அளிக்கும் சில திட்டங்கள் பற்றி அறிந்து பயன் பெறுவது அவசியம்.

அதிக வட்டி வேண்டுமா?
வங்கிகள் தரும் `சேவிங்ஸ் ப்ளஸ் திட்டம்', அதிகம் அறியப்படாத ஒரு சிறந்த திட்டம். இதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து வங்கியில் தந்துவிட்டால், நமது சாதாரண சேவிங்ஸ் அக்கவுன்ட், சேவிங்ஸ் ப்ளஸ் அக்கவுன்ட்டாக மாறிவிடும். நம் சேவிங்ஸ் ப்ளஸ் அக்கவுன்ட்டில் ரூ.28,000 இருக்கிறது எனில், 10,000-க்கு மேல் உள்ள உபரித் தொகை (18,000) ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாற்றப்படும். இதனால் நாம் அடிக்கடி வங்கிக்குச் சென்று,

எஃப்.டி போடும் வேலையும் குறையும். சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்துக்குக் கிடைக்கும் வட்டியைவிட, இதில் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும். பணத்தேவை ஏற்படும்பட்சத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை முடிப்பதற்காக வங்கி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தப் பணத்தையும் ஏடிஎம், காசோலை அல்லது வழக்கமான பணப் பரிமாற்ற முறைகளிலேயே எடுத்துக்கொள்ளலாம்.
கைகொடுக்கும் ஓவர் டிராஃப்ட்!
பிசினஸ் செய்பவர்கள், கம்பெனிகள் மட்டுமல்ல... சாமான்யர்களும் ஓ.டி என்கிற ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம். உதாரணமாக, ஸ்டேட் பேங்கில் நாம் ரூ.50,000-த்துக்கு எஃப்.டி வைத்திருந்தால், அந்தப் பத்திரத்தை அடமானமாகப் பெற்றுக்கொண்டு, நமக்கு ரூ.40,000 வரை ஓ.டி அக்கவுன்ட் வசதி தருவார்கள். நமது அவசரத் தேவைகளுக்குப் பிறரிடம் கையேந்தி நிற்காமல் இந்த அக்கவுன்ட்டிலிருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அடுத்த நாளேகூட திரும்பச் செலுத்தலாம். இதற்கான வட்டி நமது எஃப்.டி-க்கு வங்கி தருவதைவிட 1% மட்டுமே அதிகம்.

7 - 8% வட்டியில் நமக்கு எப்போதும் பணம் தரக் காத்திருக்கும் கற்பகச் சோலை நம் வங்கிகள். சிறிய அளவில் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இந்தத் திட்டம் வரப்பிரசாதம்!
சிட் ஃபண்டுகள் ஜாக்கிரதை
வங்கிகளைப் போலவே, சிட் ஃபண்டும் நம்மில் பிரபலம். நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. அவசரத்துக்குப் பணம் தேவைப்படும் பிசினஸ் பெண்களுக்கு சிட் ஃபண்டு உகந்தது. இதில் நடத்துநர் மற்றும் உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக இல்லை என்றால் ரிஸ்க்தான். எனவே, அரசிடம் பதிவு செய்துகொண்டு நடத்தப் படும் சிட் ஃபண்டுகளில் மட்டும் நன்கு விசாரித்துச் சேரலாம்.
நகைச் சீட்டுகள் நம்மூரில் பிரபலமாக இருக்கின்றன. நீண்ட காலமாக நல்ல முறையில் இயங்கும் நிறுவனங்களிடம் நகைச் சீட்டு சேர்வதே உத்தமம்!
ப(ய)ணம் தொடரும்
