
ஹெல்த்
என்னிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர்கள் மனதில் இருந்த விரக்தி முகத்திலும் படர்ந்திருந்தது. `டாக்டர்... தாம்பத்யத்தில் ஒண்ணும் குறையில்லை. ஆனா, குழந்தையில்லை. வெறுப்பா இருக்கு’ என்றார் கணவர். அந்தப் பெண்ணிடம் தனியாகப் பேசினேன். ‘குடும்பத்தாரோடு கணவரும் சேர்ந்து தன்னை அவதூறாகப் பேசுகிறார்கள்’ என்று சொல்லி அழுதார். கணவன், மனைவி இருவரையும் ஒன்றாக அமரவைத்து ஆலோசனைகள் கூறி அனுப்பிவைத்தேன்.

திருமணம் செய்துகொண்ட பிறகு நல்லதோ, கெட்டதோ எந்த சந்தர்ப்பத்திலும் தன் துணையை விட்டுக்கொடுக்கக் கூடாது. குழந்தையின்மை என்பது பொதுவான பிரச்னை. அதில் இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் இருவருக்கும் பங்குண்டு. இதற்காக ஒருவரை மட்டுமே குறை சொல்வது, அதற்காக அவரைப் பழிவாங்குவது, அவமானப்படுத்துவது நல்லதல்ல.

பொதுவாக, குழந்தை இல்லாவிட்டால் `அதற்கு மனைவிதான் காரணம்’ என்ற எண்ணம் பெரும்பாலான ஆண்களிடம் இருக்கிறது. இது தவறு. முதலில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசினால்தான் குடும்பத்தில் பிரச்னை ஏற்படாது. இந்த தம்பதியைப் பொறுத்தவரை குழந்தையின்மைக்குக் காரணம் ஆண்தான். ஆனால், அவர் மனைவி மீது பழிபோடுகிறார்.
ஆண்களைப் பொறுத்தவரை, உயிரணுக்களின் உற்பத்தி நன்றாக இருக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு ஒரு முறை தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். இவை தவிர, ஒரு பெண் கர்ப்பம் தரிக்க
20 மில்லியன் உயிரணுக்கள் தேவைப்படும். தாம்பத்யம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். உடலியக்கம் (Movement) சரியாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆண்களுக்கு, தாம்பத்யக் குறைபாடு ஏற்பட, விதைப்பையில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. விதை சேதமடைந்திருந்தாலோ, காயம்பட்டிருந்தாலோ அது குழந்தைப்பேற்றைப் பாதிக்கும். சிலருக்கு பிறவிக்கோளாறு (Hypospadias) காரணமாக ஆணுறுப்பு வளைந்து இருந்தால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாது. அவர்களுக்கு விதை சற்றுக் கீழிறங்கி காணப்படும். இதன் காரணமாக உயிரணுக்கள் உற்பத்தியாகாது.

கன்னத்தில் ஏற்படும் புட்டம்மை காரணமாகவும், கொனோரியா போன்ற (Gonorrhea) பால்வினை நோய்கள் காரணமாகவும்கூட உயிரணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்னை ஏற்படும். முறையான சிகிச்சை பெற்றால் இவையெல்லாம் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால், தகுதியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். பாலியல் மருத்துவத்தில் ஏராளமான போலிகள் ஊடுருவிவிட்டார்கள். அதனால் கவனம் தேவை.
அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கு விதைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிவது, டெனிம் வகை ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு இளைஞர்கள் ஜீன்ஸ் அணிந்தபடியே தூங்குகிறார்கள். அது தவறு. இரவில் ஜீன்ஸ் அணியக் கூடாது. உறங்கும்போது உடைகள் தளர்வாக இருக்க வேண்டும். காட்டன் ஆடைகள் அணியலாம். லுங்கி, வேட்டி, பைஜாமா நல்லது.
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- எஸ்.ரவீந்திரன்