
27.12.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியான சிறுகதை...
11.10.1987 விகடனில் வெளிவந்த சிறுகதை
பனை மட்டையில் மழை பெய்தது மாதிரி, கடந்த அறுபத்தைந்து நிமிஷங்களாக புரொபசர் பேசிக் கொண்டிருந்தார்.
சங்கர் தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான் 11.20.
பத்தேகாலுக்கு இந்தக் கூட்டம் ஆரம்பித்திருந்தது. சுமார் அறுபத்தைந்து நிமிஷங்களாக புரொபசர் பேசிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுக்காலமாக அவர் எதைப் பேசிக் கொண்டிருந்தாரோ, அதையேதான் இன்றும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
“மாணவர்கள் தங்கள் ஆய்வில் இன்னும் கூடுதலாகச் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அசிரத்தை உதவாது, அது உங்கள் ஆய்வு முடிவுகளை பலவீனப்படுத்தி விடும்.”

சங்கர், புரொபசரைக் கொஞ்ச காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தான். இப்போதும் ஆராய்ந்தான். அவர் பிரச்னை, மாணவர்களின் அசிரத்தை அல்ல. மாணவர்களே அவருடைய பிரச்னை. அவர்களின் இளமையே அவருடைய பிரச்னை. டிஜிட்டல் கடிகாரத்தின் எண் மாதிரி. துடிக்கிற மாணவர்களுடைய சுறுசுறுப்புதான் அவரின் பிரச்னை. அவர்கள் தங்கள் இருபதுகளில் இருக்க, அவர் மட்டும் ஐம்பதில் இருந்தார். வராண்டாவில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு அவர்கள் மாணவிகளுடன் எதையோ பேசி உரக்கச் சிரிக்கிறார்கள். அவர் அப்படியெல்லாம் வராண்டாவில் மாணவிகளோடு பேசி இது மாதிரி சிரிக்க முடியாது. உரத்து, சந்தோஷமாகச் சிரிப்பது அவர் பதவியின் உயர்வுக்கு ஒவ்வாதது. ஆகவே, மாணவர்கள் தங்கள் கடமை தவறுபவர்கள்! நுனிப்புல் மேய்கிறவர்கள்! சே! என்ன இந்த மாணவர்கள்!
ரைட்! புரொபசரின் பிரச்னை இதுதான்.
சங்கர் அவர் பேசுவதைப் பார்த்தான். அந்தரத்தில் கையையும் காலையும் விசித்து விசித்து நீட்டியும், முகத்தைப் பல கோணலாக்கியும் எதிரே சூனியத்தில் தன்னால் கற்பித்துக்கொள்ளப்பட்ட ‘மாணவனை’ ஹதம் செய்துகொண்டிருந்தார் அவர். அந்த அறை முழுக்க நாக்குப்பூச்சிகள் மாதிரியும், மரவட்டைகள் மாதிரியும் வளையம் வளையமாக அவர் வார்த்தைகள் அந்தரத்தில் நெளிந்துகொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது.
திடீரென்று ஓர் உருவகம் அவன் மனசுக்குள் உருவாயிற்று. சட்டை போட்ட மாமியார். மருமகளின் கருக்கழியாத இளமையில் பொறாமை கொண்டு தன் மென்று சுவைக்காத இறந்த காலத்தை நினைத்துச் சதா வருந்தி, அதன் விளைவாக நிகழ்காலத்தைச் சபிக்கும் மாமியார்... புரொபசர் மாமியார்.

சங்கர் வாய்விட்டுச் சிரித்தான்.
பேசிக்கொண்டிருந்த புரொபசர் திடுக்கிட்டுத் தன் பேச்சை நிறுத்தினார். அவனைக் கண்டுகொள்ளாது, அவனால் தன் பேருரைக்கு ஒன்றும் இழுக்கு ஏற்பட்டுவிடவில்லை என்று மெய்ப்பிக்கும் முயற்சியில், அறுந்து தொங்கிய தன் வாக்கியச் சங்கிலியை அவசர அவசரமாகப் பின்னிக் கொண்டு தன் உரையைத் தொடர்ந்தார்.
“என்னப்பா, கலாட்டாவா?” என்றாள் சுமதி, சங்கரிடம்.
சுமதி அவன் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தாள். அவள், அவனின் சக ஆய்வு மாணவி. கடந்த ஆறு மாதங்களாகத்தான் சுமதி, சங்கருக்குப் பக்கத்தில் வந்து உட்காரும் தைரியத்தைப் பெற்றிருந்தாள்.
“இல்லை... வர வர இதையெல்லாம் சகிக்க முடியவில்லை...” என்றான் சங்கர் ரகசியக் குரலில்.
“எதையெல்லாம்..?”
“இந்த அழுக்கு மூட்டைகளை...”
சுமதி தலையை மேசையை நோக்கிக் கவிழ்ந்துகொண்டு புரொபசர் பார்க்காத வண்ணம் சிரித்தாள்.
11.30 என்பது தேநீருக்கான இடைவேளை என விதிக்கப்பட்டிருந்தது. ஆகவே, புரொபசர் ஒருவழியாகப் பேச்சை முடித்தார்.
டாய்லெட்டுக்குப் போய் வந்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. தொண்டையில் இருந்த முள் எடுக்கப்பட்ட நிம்மதியாய் இருந்தது. உலகத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. அப்பப்பா! என்ன உபாதை இது.

வராண்டாவில் டீ கிண்ணத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள் சுமதி. உறிஞ்சிக்கொண்டே தூரத்து மரங்களை, மரங்களுக்கப்பால் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். வகுப்பறையில் மாணவிகள் அவரவர் இடத்தில் இருந்தவாறே டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு டீ கிண்ணத்தோடு சங்கர் அவள் பக்கத்தில் வந்து நின்றான்.
“லெக்சர் முடிஞ்சதும் முடியாததுமா எங்கே ஓடினே...?” என்றாள் சுமதி.
“டாய்லெட்டுக்குப் போனேன். அவசரம். நீ போகலையா..?’’ என்றான் சங்கர்.
“தூ...! இது ஒரு பேச்சுன்னு பேசறியே நீ... வெக்கமாயில்லை...?”
“இதுல வெக்கப்பட என்ன இருக்கு...? எனக்குப் புரியலையே..!’’
``காலையில் ஆறு மணிக்கு நான் படுக்கையை விட்டு எழுந்திருச்சேன். உடனே குளிச்சுட்டேன். ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, பஸ்ஸைப் பிடிச்சு யூனிவர்சிடிக்குப் பத்து மணிக்கு வந்துட்டேன். இடைவேளை பதினொண்ணரை மணிக்குத்தான் டாய்லெட்டுக்குப் போக முடிந்தது. இடையில் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் தெரியுமா? அடக்கி வைக்கிறது தப்பு இல்லையா? ஆண் உடம்பு மாதிரிதானே உங்க உடம்பும், நீங்க மட்டும் ஏன் ‘ஃப்ரீயா’ இருக்க மாட்டேங்கறீங்க? இயற்கையான உபாதைதானே இது? இதைத் தடுக்கிற முயற்சியிலே எதைக் காப்பாத்த முயற்சி பண்றீங்க? டீ டைம் என்கிறது டீ குடிக்கிறதுக்கு மட்டும்தானா? இந்த மாதிரி உபாதைக்கு விடுதலை கொடுக்கவும்தானே? என்ன தயக்கம்? பல் விளக்கிற மாதிரிதானே இது?!”

எங்கிருந்தோ ஒரு வெட்கம் திடீரென்று வந்து அவள் முகத்தில் உட்கார்ந்துகொண்டது.
“லுக்! இப்படி இருக்கிறதுக்குத்தான் நீங்க வெட்கப்படணும். எதுக்கெல்லாம் வெட்கப்படக் கூடாதோ, அதுக்கெல்லாம்தான் வெட்கப்படறீங்க! எது எதுக்கு பயப்படக்கூடாதோ, அதுக்கெல்லாம் பயந்து சாகறீங்க...”
“பயம்னா சொல்றே?”
“நிச்சயமா பயம்தான். காரணம், நீங்க இன்னும் உடம்பாலேயே வாழறீங்க. இருபத்து நாலு மணி நேரமும் உடம்பையே நினைச்சுக்கிட்டிருக்கீங்க. உங்களை அறியாமலேயே உங்கள் கை, மார்புத் துணியை இழுத்து இழுத்து மூடிக்கிட்டே இருக்கு. மேசை மேலே கையை ஊன்றி ஒரு நிமிஷம் உங்களாலே நிம்மதியா உட்கார முடியறதில்லை. உங்க பக்கவாட்டு உடம்பை எவனாவது பார்த்துக்கிட்டி ருப்பான்னு நீங்க நினைக்கறீங்க. அதனாலேயே உங்களையும் நீங்க அசிங்கப்படுத்திக்கறீங்க. எங்களையும் அசிங்கப்படுத்தறீங்க... வெறும் உடம்பா நாம்? இல்லை. நம்ம சிந்தனைதான் நாம்...”
கோப்பையில் மிஞ்சியிருந்த டீயைக் குடித்து முடித்துக் கைப்பிடிச்சுவரின் மேல் வைத்தான் சங்கர்.
“டீயைக் குடி, ஆறிடும், டீ ஆறினா உனக்குப் பிடிக்காதே... சூடு இல்லேன்னா சொல்லு. வேற டீ வாங்கியாறேன்...’’ என்றான் அவளிடம். அந்தக் குரலில் தொனித்த பரிவு அவளைத் தொட்டது.
“வேணாம்... சூடு இருக்கு...” என்றவள். அவனைப் பார்த்தவாறே அதைப் பருகி முடித்தாள்.
“என்ன பார்க்கறே?”
“ஒண்ணும் இல்லை!”
அதைக் கேட்டு அவன் சிரித்தான்.

இந்தச் சிரிப்புத்தானே அவன் உயிர்? எல்லோரும் சிரிப்பதாக நினைத்துக்கொண்டு பல்லைத்தானே காட்டுகிறார்கள். பச்சைப் பற்களை, மஞ்சள் பற்களை, கறையேறிய பற்களை, கோரைப் பற்களை, புரொபசர் மாதிரி காமப் பற்களை. இவன் சிரிப்பு இதயத்தில் இருந்தல்லவா வருகிறது. ‘உன் சிரிப்புக்குக் கைகள் உண்டா சங்கர்? அது என் அப்பாவைப்போல என் தலையைத் தடவிக் கொடுக்கிறதே! ஒரு குழந்தையின் பிஞ்சுக் கைகளாய்க் கன்னத்தைக் கிள்ளுகிறதே! உன் சிரிப்பு கைகளை விரித்து என்னைத் தழுவிக்கொண்டு விடுகிறதே! சிரிப்புக்குக்கூட கைகள் இருக்குமா சங்கர்?’
“என்ன பேசாமயே நிக்கறே சுமதி...?”
என்ன சொல்வது இவனிடம்?
“ஒண்ணுமில்லை. உன் சிரிப்பை அப்படியே கண்ணாடிச் சட்டம் போட்டு வெச்சுக்கணும்னு தோணுது இந்த நிமிஷத்துல...”
அவன் மீண்டும் சிரித்தான். சிரித்துக்கொண்டேயிருந்தான்.
புரொபசர் அவர் அறையில் தேநீர் அருந்திவிட்டு, முகத்தைக் கழுவி பவுடர் போட்டுக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கரிய முகத்தில் அவசரம் அவசரமாகப் பூசப்பெற்ற பவுடர், முகத்தோடு ஒட்டாமல் பூசணிக்காய் வெள்ளை மாதிரி துருத்திக்கொண்டிருந்தது. சரியாக சங்கர் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் கணத்தில் அவர்களைக் கடந்த அவர் முகம் சட்டெனச் சுருங்கியது.
ஓர் இளைஞனும் யுவதியும் பேசிச் சிரிப்பதன் அர்த்தம்? அது வேறு விதமாய் இருக்க முடியாது. இன்று சிரிப்பார்கள். நாளை படுத்துக் கொள்வார்கள். கற்பு, பண்பாடு எதுவும் இல்லாதவர்கள்!
நடந்துகொண்டிருந்தவர், திரும்பி சுமதியிடம், ‘`சாயங்காலம் என்னை என் அறையில் வந்து பார்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
அதிர்ச்சிக்குள்ளாகி நின்றாள் சுமதி.
“எனக்கு பயமா இருக்கு சங்கர்...”
“என்னத்துக்கு பயம்? ஒரு புரொபசர் அவரோட மாணவியை அறைக்கு வரச் சொல்றது என்ன தப்பு?”
“நீயும் வாயேன், ப்ளீஸ்!”
“நான் வரமாட்டேன், பெண்கள் எல்லாத்துக்கும் ஆண்களோட துணையை நாடக் கூடாது... குழந்தைக்குக்கூட நடைவண்டி கொஞ்ச காலந்தான்... என்ன நடந்துடப்போறது... மிஞ்சிப்போனா, என் உடம்பு பலமும் மனசோட பலமும் உன்னைக் காப்பாத்தும், பெண்கள் ஆண்களுக்கு நிகரான பலம் உள்ளவங்கதான். உங்க பலத்தை நீங்களே உணர்றதில்லை. அதுதான் உங்களோட பிரச்னை... யானை தன் பலத்தை உணர்ந்தா பிச்சை எடுக்குமா..?”

சுமதி, புரொபசரின் அறையில் ஒரு பூனை மாதிரி நுழைந்தாள். பெரியோர்களின் அறைக்குள் அப்படித்தான் நுழைய வேண்டும். அலாராக நுழையக் கூடாது. வயசான அறை. எல்லா இடங்களுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா ஆண் பெண்களுக்கும் பிரத்யேகமான வாசனைகள் இருக்கும். அந்த அறைக்கும் ஒரு வாசனை இருந்தது. ஒரு பழைய மேசைக்குப் பின்னால் புரொபசரின் நாற்காலி. பல படிக்கட்டுகளைக் கடந்து வந்தால் மட்டுமே அமரத் தகுதி உள்ள நாற்காலி. அதன் முதுகில் ஒரு சின்ன டவல் மடித்துப் போடப்பட்டிருந்தது. மேலுறை போடப்படாத அம்மேசையின் முகத்தில் ஏராளமான பெயர்க் கிறுக்கல்கள் ஆபாசமாக இருந்தன. செங்கற்களின் அளவில் தடிமன் தடிமனான புத்தகங்கள்.
மேசைக்கு முன்னால் இருந்த ஓர் ஒற்றை நாற்காலியில் அவள் அமர்ந்தாள். நாற்காலியின் ஒரு கால் ஊனம் போலும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிற எல்லாப் பொருள்களுமே ஏன் ஊனமாகவே இருக்கின்றன? நாற்காலி லேசாக ஆடியது.
புரொபசர் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், சுமதி எழுந்து நின்றாள்.
“உட்கார்... உட்கார்...” என்று அவள் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்துவிட்டுத் தன் நாற்காலிக்குப் போய் அமர்ந்தார் அவர்.
சுமதி கூசிப் போனாள். புரொபசர் எப்போதும் இப்படித்தான். தொட்டுத் தொட்டுத்தான் பேசுவார். அதில் தப்பில்லை. அது அவர் சுபாவமாகக் கூட இருக்கும். தவிர, அப்பா மாதிரி வயதானவர். தொட்டால் தப்பு இல்லைதான். ஏனோ தொட்டுத் தொட்டுப் பேசுவதை அவள் விரும்பவில்லை. அதைச் சொல்லவும் முடியவில்லை. அது அவர் சுபாவமாக இருக்கும் பட்சத்தில் பையன்களையும் தொட்டுத்தானே பேச வேண்டும்? அவர் பையன்களைத் தொடுவதில்லை.
“அப்புறம்... ஆய்வு எல்லாம் எப்படி நடக்குது...?”
“நல்லா போய்க்கிட்டிருக்கு சார்...”
“ஏதேனும் பிரச்னை இருந்தா உடனே என்னை வந்து பார்க்கணும் நீ...”
“வர்றேன் சார்..!”

புரொபசர் சிரித்தார். அந்த மஞ்சள் பற்கள் அவளுக்கு அச்சம் ஊட்டின. பிறகு அவரே தொடர்ந்தார்:
“கொடைக்கானல்லே ஒரு கருத்தரங்கம். நீ கட்டுரை படிக்கணும்... வரியா...?”
சுமதி யோசிக்க வேண்டியிருந்தது.
“என்ன யோசிக்கிறே...?”
என்றவாறே எழுந்த புரொபசர், அவள் அருகில் வந்து நின்று கொண்டார். சுமதியும் எழுந்து நின்றாள்.
“ரெண்டு நாள் அங்கே தங்க வேண்டியிருக்கும்... போகும்போது நம்ம கார்லயே நீயும் வரலாம்... என்ன சொல்றே?” என்றவாறு அவள் தோள் மீது அவர் கைகளை மெதுவாக வைத்தார்.
மேலே இருந்து ஒரு பாறை அவள் தோள் மேல் வந்து இறங்கியது மாதிரி இருந்தது. அருவருப்பும் கோபமும் பொங்கியது அவளுக்கு. எவ்வளவு நாளைக்கு இதைத் தாங்க? எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துப் பொறுத்துப் போவது? அஞ்சி, ஒடுங்கி, வெட்கப்படக் கூடாததுக்கெல்லாம் வெட்கப்பட்டு, பட வேண்டியதுக்குப் படாது வாழ்வது? யாரைத்தான் யார் என்ன செய்ய முடியும்? யானைகள் தம் பலத்தை எப்போது அறியப் போகின்றன?
“ப்ளீஸ்...! என் தோள் மேல் இருக்கிற கையை எடுங்க சார்! எனக்கு இது பிடிக்காது” என்றாள் சுமதி. துப்பட்டாவைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவள் குரலில் இருந்த உஷ்ணம் அவரைத் தாக்கியிருக்க வேண்டும். ஒரு அடி தள்ளி நின்றார். செய்த தவறை, தவறாகாமல் அடிக்க, தவறு என நினைக்காதவர் போல மிக இயல்பாகப் புன்னகை ஒன்றைத் தன் முகத்தில் வருவித்துக்கொள்ள முயன்றார். அம்முயற்சியில் பரிதாபகரமாகத் தோற்று அவசரம் அவசரமாக, “உன் கட்டுரைக்கு என்ன தலைப்பை எடுத்துக்கப்போறே..?” என்றார்.
“நான் கொடைக்கானல் வரப்போறதில்லை” என்று அவர் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு விடுவிடென நடந்து, அறைக் கதவைப் பட்டென்று அறைந்து சாத்திவிட்டு வெளியேறினாள் சுமதி.
“நீ செஞ்சது ரொம்ப சரி” என்றான் சங்கர்.
“ஒரு சந்தேகம். இங்கேயே படுத்துக்கறதுக்கு சௌகரியமான இடமெல்லாம் இருக்கே. எதுக்கு கொடைக்கானல்?” என்றான் சங்கர், அவளைப் பார்த்து.
“உங்களுக்கு இதெல்லாம் ஜோக்கா இருக்கு... ஆனா, எனக்குத்தான் பயமா இருக்கு...”
“எதுக்கு பயம்?”
“புரொபசர் ரொம்பக் கோபமா இருக்கார்... என்னோட ஆராய்ச்சிகளை இப்போதைக்கு ‘ஓகே’ பண்ணமாட்டார். இன்னும் இரண்டு வருஷம் தள்ளிப் போடுவார். அப்புறம்...”

“அப்புறம்..?”
“அப்பா, ‘நீ படிச்சுக் கிழிச்சது போதும்... சும்மா வீட்டுல இரு’ங்கறார். மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருக்கார்...”
லேசாகக் கவிந்துகொண்டிருந்த இருட்டிலும் அவன் கண்கள் மின்னின.
“ஸாரி சுமதி! இதெல்லாம் எனக்கு பிரச்னையாவே படலை. எந்த சந்தர்ப்பத்திலேயும் நீ தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது. பயம்தான் மரணம். புரொபசர்கிட்டே எப்படி தைரியமா பேசினியோ அதே தைரியத்தில்தான் எல்லா விஷயத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அர்த்த மில்லாததுக்கெல்லாம் கூச்சப்படக் கூடாது. சிரிக்கணுமா, சிரிச்சுடு... அழணுமா, அழுதுடு. அறையணும்னு தோணுதா, அறைஞ்சுடு. அதுதான் நல்லது... நீ உன் அப்பாவைப் பத்தி சொன்னே! எல்லா அப்பாவும் அப்பாவாகத்தான் இருப்பாங்க.. நீ உன்னோட முடிவுலே உறுதியா இருந்தா யார்தான் உன்னை என்ன செய்ய முடியும். எழுந்திரு, இருட்டிடுச்சு...”
எழுந்து நடந்தார்கள்.
“சங்கர்...!”
“என்ன..?”
அவள் என்னவோ சொல்ல நினைத்து சொல்லாமல் நடந்தாள். உதடுகள் மட்டும் துடித்தன, முகம் கோணியது.
“சுமி... ஏதேனும் கஷ்டம் வந்தா நேரே என்கிட்டே வா. ஒரு மனைவியா, கணவன் வீட்டுக்குப் போறோம்கிற உரிமையோட நீ வரலாம், சரிதானா?” என்றவாறு சங்கர் சிரித்தான். அதே இதயத்திலிருந்து வரும் சிரிப்பு. கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கிற சிரிப்பு.
- பிரபஞ்சன் - ஓவியங்கள்: ஸ்யாம்
(27.12.2018 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)