தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

மனைவி கவனத்துக்குபாஸ்டன் ஸ்ரீராம்

பெண்களின் பாதுகாப்பு பற்றி இப்போது பரவலாகப் பேசப் படுவது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னமும் பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

‘உங்க குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?’

‘நெட் வொர்த்தா? அப்படீன்னா?’

‘குடும்பத்தின் மாதச் சேமிப்பு எவ்வளவு?’

‘அதெல்லாம் என் கணவருக்குத்தான் தெரியும்.’

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!



‘சேமிப்பை எப்படி முதலீடு செய்கிறீர்கள்?’

‘என் கணவர்தாங்க அதெல்லாம் பாக்கறார்.’

‘உங்க கணவருக்கு எவ்வளவு ஆயுள்காப்பீடு இருக்கு?’

‘தெரியலீங்க... எல்.ஐ.சி-யில ஏதோ பாலிசி எடுத்திருக்கார். என் பேர்ல, பிள்ளைங்க பேர்லகூட இருக்கு. மத்த விவரமெல்லாம் அவருக்குத்தான் தெரியும்.’

‘சரி, உங்க வங்கிக் கணக்கின் ஆன்லைன் பாஸ்வேர்டு தெரியுமா?’

‘தெரியாது. அவர் சொல்லவும் இல்லை. எனக்கும் கேக்கணும்னு தோணலை.’

- இந்தியாவில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். இவர்களிடம் கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது.

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

‘எதிர்பாராவிதமாக கணவருக்கு  ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால்... உங்கள் பிள்ளைகள் தலையெடுக்கும்வரை அடுத்த 15 - 20 ஆண்டுகளுக்கு எப்படிக் குடும்பம் நடத்துவது? யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?’ இந்தக் கேள்வியையே பெண்கள் அபசகுனமாக நினைத்துப் பதறுவார்கள். பின்னர் இதற்கு விடை காண முயற்சி செய்வது எப்படி?

இந்தச் சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது... பெங்களூரில் வசித்த ஒரு தம்பதி.  மனைவி சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், கணவர் மென்பொருள் நிபுணர். படித்த இந்தப் பெண்மணியும்கூட மற்றவர்களைப்போலவே தன் குடும்பத்தின் நிதி நிர்வாகத்தில் பங்கெடுக்கவில்லை. ஒருநாள் திடீரெனக் கணவர் விபத்தில் இறந்துபோக, மனைவியின் உலகமே தலைகீழாக மாறிப்போனது. வீட்டுக் கடனுக்குத் தவணை கட்டும் வங்கிக் கணக்கு பற்றிய விவரம் அவரிடம் இல்லை. வங்கிக் கணக்குகள் ஜாயின்ட்டாக இல்லாததால், அவற்றையும் அவரால் உடனடியாக ஆபரேட் செய்ய முடியவில்லை. திருமணத்துக்கு முன்னரே எடுக்கப்பட்ட காப்பீட்டில், இறந்துபோன மாமியார் பேர் நாமினியாக இருந்திருக்கிறது. எல்லா பாஸ்வேர்டுகளும் சேமித்துவைக்கப்பட்டிருந்த லேப்டாப் விபத்தில் உருக்குலைந்துவிட்டது. நட்டாற்றில் நிற்பது போலாகிவிட்டார் அந்தப் பெண்.

ஒருவேளை இப்படியொரு நிலை வந்தால் அதைச் சமாளிக்கத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதைப் பற்றி பெண்களிடம் வலியுறுத்துவதைப்போலவே, ஆண்களிடமும் பேச வேண்டியுள்ளது. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை இவைதாம்...

 பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுக்க வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 15 மடங்காவது காப்பீட்டுத் தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

காப்பீடு குறித்துத் திட்டமிடும்போது பெண்களும்   இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல், நாமினியாகத் தன்னை நியமிக்கச் சொல்லி வலியுறுத்துதல், நாமினியின் விவரங்களைச் சரியாக எழுதுதல் (பெயர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.

எங்கெல்லாம் ஜாயின்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக்கணக்கு, அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும்) அவையெல்லாம் இருவர் பெயரிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னென்ன சேமிப்புகள்/முதலீடுகள் உள்ளன, அவற்றைக் கணவரின் ஆயுளுக்குப் பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் தவறோ, சென்ட்டிமென்டோ எதுவும் இல்லை.

உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக யார் யாருக்கு என்னென்ன சேர வேண்டும் என உயிலில் எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துகளோடு வையுங்கள். உயில் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை மாற்றி எழுதலாம். ஒருமுறை எழுதிவிட்டால் கன்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.

பிள்ளைகள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனைவியையே நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியைப் பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்.

வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுன்ட் லாகின், இ-மெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்டுகளையும் இருவரும் அறிந்த ஓரிடத்தில் (லேப்டாப், நோட்புக்) சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் தவறாமல் அதில் அப்டேட் செய்துவிடுங்கள்.

கணவன் மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன்கள் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது. திடீரென ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் என்றால் மற்றவர் அந்த போன் நம்பரைத் தொடர்ந்து உபயோகிக்க இயலும். செல்போனில் வரும் ஓடிபி (One Time Password) இல்லாமல் வங்கிக் கணக்கு, இணையப் பணப்பரிவர்த்தனை என எதிலும் பாஸ்வேர்டு மாற்றுவது கடினம்.

 

பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து  10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, இருவருமாகச் சேர்ந்து அவற்றுக்கான பதில்களை உள்ளீடு கொடுத்து வையுங்கள். அவற்றையும் பாஸ்வேர்டு ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒருவேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்டு தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.

 

குழந்தை பிறப்புக்குப் பின் குடும்ப நிர்வாகியாக மாறும் பெண்கள், குழந்தைகள் ஓரளவு வளர்ந்து முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் மீண்டும் வேலைவாய்ப்பு தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறைகளிலும் பெருகியிருக்கின்றன. அவற்றை பற்றிப் பெண்கள் யோசிப்பதும் முக்கியம்.

அமெரிக்காவில் விவாகரத்து ஆகும்போது (திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடவில்லையென்றால்) இருக்கும் சொத்துகள் அனைத்தும் கணவன் மனைவிக்குப் பிரித்து வழங்கப்படும், அதுநாள் வரை யார் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்ப தெல்லாம் பொருட்டேயில்லை. இப்படிப்பட்ட தீர்க்கமான விதிகள் இந்தியாவில் இல்லாத நிலையில் பெண்கள் தமக்கென சேமித்தல் அவசியம். மேலே சொன்னாற்போல ஜாயின்ட் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளலாம். அல்லது பெண்கள் தங்களுக்கென ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கி அதில் குடும்பத்தின் சேமிப்பில் பாதியை வைக்கலாம்.

விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டு மானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாதவரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே. ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். சரிதானே?

-பாஸ்டன் ஸ்ரீராம்