
“சமீபகாலமாக அ.தி.மு.க நல்லாட்சி நடத்துகிறது!”
அ.தி.மு.க கூட்டணியில் ஐந்து சீட்டுகள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன். வழக்கமாகவே பா.ஜ.க மீது விமர்சனங்கள் அதிகம். தேர்தல் நேரத்தில் அது இன்னும் அதிகம். கேள்விகளுடன் அவரைச் சந்தித்தேன்.

தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது என்று காங்கிரஸ் ஆட்சியில் குற்றம் சாட்டினீர்கள். இப்போது பி.ஜே.பி ஆட்சியிலும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கிவிட்டதே?
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யிருக்கிறது’ என்று எல்லாப் பிரசாரங்களிலும் நாங்கள் சொன்னது உண்மைதான். புல்வாமா தாக்குதல் துரதிருஷ்டவசமானது. ஆனால், தற்போது சமூக வலை தளங்களில் வரும் வீடியோ தவறாக, திரித்துப் போடப் பட்டுள்ளது. இத்தகைய சூழலில், காங்கிரஸ் கூட அரசின் பக்கம் நிற்கிறது என்று சொல்லியிருந்ததை எடிட் செய்து, மாற்றி வெளியிட்டி ருக்கிறார்கள்.இப்போதுகூட நாட்டின் பக்கம் நிற்காமல் இருப்பது என்னமாதிரியான மனநிலையோ?”
‘புல்வாமா தாக்குதல்போல் இனியும் நடக்காமல் இருக்க, மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்’ என்று உங்கள் கட்சியினர் சொல்வது கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?
“மோடி பிரதமரானதும் நாட்டின் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தானுக்குப் பலவிதமான அச்சுறுத்தலைக் கொடுத்து வருகிறார். நாட்டில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்காக, புல்வாமா தாக்குதலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த தாக்குதல்களை விட இப்போது தாக்குதல்கள் குறைந்திருக்கின்றன. பலம் பொருந்திய மோடி, மீண்டும் பிரதமராக வந்தால்தான், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். இதை அரசியலாக்கத் தேவையில்லை.”

ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடந்த இந்தச் சமயத்தில், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியி ருக்கிறீர்களே, நியாயம்தானா?
“தாக்குதலின் காரணமாக, நாடே பதற்றத்தில் இருந்தபோது, எங்களுடைய கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஞ்சலி நிகழ்ச்சிகளாக மாற்றினோம். ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சியைக் கூட ரத்து செய்திருக்கிறோம். நாட்டுக்காக உயிர் துறந்த ஜவான்கள் வீட்டுக்குச் சென்று உணர்வுபூர்வமாக ஆறுதல் தெரிவித்து வந்தோம். பி.ஜே.பி என்ன செய்தாலும் தவறாகவே பார்க்கிறார்கள். எங்கள் தேசபக்தியைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.”
அ.தி.மு.க-வை மிரட்டிதான் கூட்டணிக்குப் பணிய வைத்திருப்ப தாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படு கிறதே?
“நாங்கள் நட்பு ரீதியாகவே அ.தி.மு.க–வுடன் பழகி வருகிறோம். அ.தி.மு.க–வை மிரட்ட வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. மோடி சொன்னதாகச் சொல்லித்தான், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தார். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? மூத்த தலைவர் என்ற முறையில் ஆலோசனை சொல்வதுகூடத் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டால் என்னதான் செய்வது?
பிரிந்திருந்தவர்களை, சேர்ந்து இருங்கள் என்று சொல்வதை மிரட்டுவதாக எப்படிச் சொல்வீர்கள்? நாங்கள் நட்பு என்று சொல்வதை, நீங்கள் தவறு என்று சொன்னால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அரசு ரீதியாகத் தொடர்ந்த நட்பு, அரசியல் ரீதியாகத் தொடர வேண்டும் என்று உருவானதுதான் இந்தக் கூட்டணி.”

இதே அ.தி.மு.க ஆட்சியில் தான், தலைமைச் செயலகத்திலேயே ஐ.டி ரெய்டு நடந்தது. அந்தக் கட்சி யுடன் கூட்டணி வைத்தி ருக்கிறீர்களே?
“தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றுதான், ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கிறோம். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் அ.தி.மு.க எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆட்சிமீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை.”
இந்த ஆட்சியின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறதே..?
“தற்போது அ.தி.மு.க நிறையவே மாறியிருக்கிறது. அக்கட்சியின் நிலைப்பாடுகளிலும் முன்னேற்றம் இருக்கிறது. இ-டெண்டர் முறைகளைச் செயல்படுத்துகிறார்கள். பல விஷயங்கள் பாராட்டும்படி நடக்கின்றன. சமீபகாலமாக நல்லாட்சி நடக்கிறது. நாங்கள் மத்தியில் நல்லாட்சி கொடுத்துவருகிறோம். தமிழகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து பல நல்ல திட்டங்களைக் கொடுத்துவருகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, ஆட்சியில் இருந்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி. தமிழினத்துக்கு துரோகம் செய்த இந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதனால்தான், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.”

சமீபகாலமாக என்றால், ஜெயலலிதா ஆட்சி நன்றாக இல்லை என்கிறீர்களா?
“நான் அப்படிச் சொல்லவில்லை... நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது.”
ஈழத்தமிழர் பிரச்னையில் தி.மு.க–காங்கிரஸைக் குற்றம்சாட்டும் நீங்களும், ஈழத்தில் தமிழர்கள் பலரது உயிரிழப்புக்குக் காரணமான ராஜபக்ஷேவை மோடி பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தீர்களே?
“ராஜபக்ஷேவை மட்டும் அழைக்கவில்லை. மற்ற நாடுகளின் தலைவர்களையும் தான் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தோம். இலங்கையில் தூக்குத்தண்டனைக் கைதிகளாக இருந்த ஐந்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையு டன்தான் ராஜபக்ஷேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக மீனவர்களை விடுவித்து விட்டுத்தான் வரவேண்டும் என்று சொன்னவர் மோடி. அதற்குமுன் ஆட்சியில் இருந்த தி.மு.க-வும், காங்கிரஸும் செய்யாததை மோடி செய்திருக்கிறார்.”

கூட்டணி குறித்த சுப்பிரமணிய சுவாமியின் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
“எப்போதுமே அவர் இப்படித்தான், சில கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். அது அவருடைய கருத்து. நாங்கள் அதைக் கட்சியின் அதிகாரபூர்வ கருத்தாக என்றுமே சொன்ன தில்லையே?”
அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்குச் சமமானது என்று டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறாரே?
“அ.தி.மு.க எது செய்தாலும் தினகரன் இப்படித்தான் சொல்வார். தினகரன் தேய்ந்து கொண்டிருக்கிறார். வெற்றுக் கனவுகளை மட்டுமே அவர் சுமந்துகொண்டிருக்கிறார். ஆர்.கே நகர் டோக்கன் சிஸ்டம், தமிழகத்தின் வேறு இடங்களில் செல்லு படியாகாது.”

தமிழக பி.ஜே.பி–க்குள் கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறதே...
“எங்கள் கட்சிக்குள் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், நீங்கள் சொல்வதுபோல் கோஷ்டிகள் இல்லை. இப்போது தலைவர்களுக்குத் தனித்தனியாகவே பேனர்கள் வைக்கிறோம். இது கட்சியே முடிவெடுத்தது. எல்லாத் தலைவர்களையும் கெளரவிக்க எடுத்த முடிவு. நிச்சயமாக தமிழக பி.ஜே.பி–க்குள் கோஷ்டிகளே கிடையாது.”
பி.ஜே.பி அரசு, கார்ப்பரேட்டு களுக்கான அரசு என்ற குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்..?
“இது இப்போது பேஷனாகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில்தான் கார்ப்பரேட்டுகள் உருவானதா? தி.மு.க, காங்கிரஸ்காரர்களை எந்தக் கார்ப்பரேட்டும் சந்திக்கவில்லையா? எங்கள் கட்சி, சாமானியர்களின் நிதியில்தான் நடந்துவருகிறது.”
தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிபெறும் என்று நினைக்கிறீர்கள்?
“நாற்பது இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மோடியின் திட்டங்களை இந்த நாட்டு மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இன்னும் நாங்கள் செய்யவுள்ள திட்டங்களையும் கொண்டு செல்வோம்.”
இந்த முறையும் ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தருவீர்களா?
“ராமஜென்மபூமியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது எங்கள் கனவு. உணர்வுபூர்வமான கொள்கை இது. அடுத்தமுறை ஆட்சிக்கு வரும்போது, எங்கள் கொள்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இது அரசியலுக்கு எடுத்த நிலைப்பாடு கிடையாது. எங்கள் உணர்வு.”

எஸ்.வி. சேகர் கமலாலயத்துக்குள் வரக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறதா?
“அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை.”
‘மாட்டை முன்னிறுத்தி மனிதர்களை மறந்துவிட்டதாக’ பி.ஜே.பி மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
“இது தவறான குற்றச்சாட்டு. பி.ஜே.பி தீவிரவாதத்தை வளர்க்கவில்லையே; பசுவைத்தானே வளர்த்தது. மனிதனைப் பாதுகாக்காமல், பசுவைப் பாதுகாக்க வில்லையே. பால் ஏற்றுமதியில் ஹாலந்துக்கு அடுத்த இடத்தில் நாம்தான் இருக்கிறோம். வெண்ணெய் ஏற்றுமதியில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. பசுவைப் பாதுகாப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.”
கமலஹாசனின் அரசியல் செயல்பாடுகள்?
“மாறுபட்ட அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்கிறார். அரசியல் அனுபவங்களை இப்போதுதான் பெற்று வருகிறார். அவர் வெற்றி பெறக்கூடிய அரசியல் வாதியாக இருக்கமாட்டார்.”
திரைத்துறையில் ரஜினி சூப்பர்ஸ்டார்; அரசியலிலும் அப்படி ஜொலிப்பாரா?
“இன்னும் அவர் அரசியலுக்குள் வரவில்லை. அரசியலில் ஈடுபட்டபிறகு தான் அதைப்பற்றிச் சொல்லமுடியும். ஆனால், அவர் அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக வரவேண்டும் என்பது என் விருப்பம்.”
இ.லோகேஷ்வரி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்