
கடிதங்கள் - என்றும் விகடன் மக்களோடு!
‘தேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்!’ - தலையங்கத்தோடு சேர்ந்த கட்டுரை பல விஷயங்களில் யோசிக்க வைத்தது. இந்தக் கடுமையான நேரத்தில் விகடன் தாத்தாவும் வருத்தமுகம் காட்டுவது ‘என்றும் விகடன் மக்களோடு’ என்பதைக் காட்டுகிறது.
- எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு.

அதர்வா பேட்டி யதார்த்தமாக இருந்தது. பூமராங் எப்போது வரும் என்ற ஆவலையும் தூண்டியது.
- ராபா, காஞ்சி.
வேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சியைப் பற்றிய கட்டுரை நாம் சிரிக்கவும் அவர்கள் சிந்திக்கவும் உகந்ததாக இருந்தது!
- சி.குமாரசாமி, அசோக்நகர்.
பார்ட் 2 படங்கள பார்ட் பார்ட்டா பிரிச்சு மேஞ்சுட்டியே தலைவா!
- கோவை எஸ்.வி.எஸ். மணியன், டாடாபாத்.
நம்பியார் மகன் பேட்டியில் நம்பியாரின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அட்டகாசம். மோகன் நம்பியார் கூறுவதுபோல, திரையுலகம் நம்பியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
- கருணாதேவி புண்ணியமூர்த்தி, வேலூர்.
பிரேமின் காதல் கதை அவரது ‘96’ படம் போலவே தெளிந்த நீரோடையாய் இருந்தது.
- எம். செல்லையா, சாத்தூர்.
‘யானைகள் மீதா குற்றம்?’ சிந்திக்க வேண்டிய கட்டுரை தெளிவான கருத்துகளோடு சொல்ல வந்ததைத் தீர்க்கமாகச் சொல்லியிருந்தது. ‘பழங்குடிகளுக்கு இருக்கும் புரிந்துணர்வு எல்லோருக்கும் வருவதே தீர்வின் திசைவழி’ என்ற அதன் இறுதிவரிகள் நச்!
- ராஜசேகர், திருமுல்லைவாயில்.
சாதி மதமற்றவர் சான்றிதழ் பெற்ற சிநேகா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்! பலரும் அவரைப் பின்தொடர்ந்து இவ்வாறே செய்தால், சாதி ஒழிப்புக்கு வித்திட்டதுபோல் ஆகும்.
- ராஜேஸ்வரன், vikatan.com
இறையுதிர்காடு வாரா வாரம் எதிர்பார்ப்பைத் தூண்டிவருகிறது.
- பாலாஜி, சிவகங்கை.