
ஓவியம்: செந்தில்
உறக்கமற்றவர்களின் கனவுகள்
முறம் வாங்கலையோ முறமெனும்
குரல் கேட்டு நாளாயிற்று
சிமென்ட் கொண்டு மூடப்பட்ட
எங்கள் தெருக்களில்.
நல்லதைத் தன்னுள் வைத்துக்கொண்டு
தீயதை வெளித்தள்ளும் முறம்
ஒன்றுக்கு நான்காய்
எங்கள் வீடுகளில் இருந்தபோது
எங்கள் கட்டுத்தரைகளும்
கழனிகளும் மணந்திருந்தன.
எங்கள் வீடுகளில் முறம்
தாராளமாய்ப் புழங்கியபோது
எங்களூரில் மருத்துவமனைகள் இல்லை.
உழைத்த அலுப்பு தீர
உணவுண்டு உறக்கம் தழுவிய நாங்கள்
இப்போதெல்லாம்
புரண்டுகொண்டேயிருக்கின்றோம்
மருந்துகள் உண்டாலும்.
பச்சை மூங்கிலைப்
பக்குவமாய்ப் பிரித்தெடுத்து முறமாக்கி
தங்கள் வயிற்றை நிரப்பியவர்களும்
இப்போது எங்கோ
நகரத்தின் தெருவோரங்களில் உறங்கக்கூடும்
எங்களைப்போல் உறக்கமில்லாமலே
எங்கள் கழனிகளையும்
தெருக்களையும் பற்றிய கனவுகளுடனே.
- தமிழ்த்தென்றல்

பிம்பம்
நிலவை
தொட்டுத் திரும்புகிறது
நீரில் வாளி.
- பாணால்.சாயிராம்.
விதையும் மரமும்
பேச்சம்மன்கோயிலின்
வேப்பம்பழத்தை
ருசித்தலின்பொருட்டு
விதையையும்
விழுங்கிவிட்டாள் சமுத்ரா.
வேப்பமுத்தை
விழுங்கிவிட்டதால்
வயிற்றுக்குள்
வேப்பமரம் முளைக்குமென்ற கதையை
முதன்முதலாக
கசப்புச்சேர்த்துக்கூறுகிறாள் பாட்டி.
மருங்கிய விழிகளுடன்
மடியில் கிடந்தவளுக்கு
வேப்பமரம்
வாய்வழியாக
கிளைபரப்பிய கதையை
என்பங்கிற்குச் சொல்கிறேன்.
இந்த மருந்தைக் குடித்தால்
வேப்பமரம் முளைக்காதென்று
ஏற்கெனவே இருந்த நோய்க்கு
மருந்தூட்டி
காரியக்காரியாகிவிடுகிறாள் தாய்.
விடிந்ததும்
பீரோக்கண்ணாடிமுன் நின்று
வேப்பமரம்
முளைத்திருக்கிறதாவென
நாக்கை நீட்டி நீட்டிப்பார்க்கிறாள்
சமுத்ரா.
நேற்றுவிழுங்கிய
வேப்பமுத்து
மரமாவதற்கு முன்
குட்டி அம்மனை
பிரசவித்திருக்கிறது.
- சோலை.சீனிவாசன்.