
சஞ்சய்தத் விடுதலையானது எப்படி? - பேரறிவாளன் கேள்விக்கு கிடைத்த பதில்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் கவர்னரின் முடிவே இறுதியானது என்பது முடிவாகிவிட்டது. ஆனால், அவரிடம் வைத்த கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. இந்த நிலையில்தான் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில், நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டதை முன்வைத்து, ‘சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி. எங்களுக்கு ஒரு நீதியா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பேரறிவாளன். இதுதொடர்பாக அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் நாடி, பதில் பெற்றிருக்கிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன், ‘சஞ்சய் தத் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார், மாநில அரசு அவரை விடுதலை செய்வதற்கு முன்பாக, மத்திய அரசிடம் அனுமதி பெற்றதா?’ என்ற கேள்வியை கேட்டிருந்தார். இதுகுறித்து மும்பை எரவாடா சிறைத் தகவல் அலுவலர், ‘இல்லை. மத்திய அரசிடமிருந்து அனுமதி கேட்கவில்லை’ என்று பதில் அனுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து பேரறிவாளன் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “ஏழு பேர் விடுதலை விஷயத்தில், ‘மத்திய அரசின் ஆளுமைக்குக் கீழ்வரும் வழக்குகளில், மாநில அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது’ என்று மத்திய அரசு நிலைப்பாடு எடுத்திருக்கிறது. ஆனால், மும்பைத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அத்தனைக் குற்றவாளி களும் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இத்தகையச் சூழலில், இந்த வழக்கில் தொடர்புடைய சஞ்சய் தத்தின் பரோல் காலத்தையும் தண்டனைக் காலமாகக் கருதி மகாராஷ்டிர மாநில அரசு, தன்னிச்சையாக விடுதலை செய்திருக்கிறது. இது அப்பட்டமான நீதி பாகுபாடு’’ என்றனர்.
‘சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது போலவே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா’ என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான அரிபரந்தாமனிடம் கேட்டோம்.

“மகாராஷ்டிர அரசைப் போலவே தமிழக அரசுக்கும் தமிழக அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் கீழ் ஏழு பேரையும் விடுதலைசெய்ய அதிகாரம் இருக்கிறது. 1999-ம் வருடம் நளினி மற்றும் மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டபோது கவர்னர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான அமர்வும் இதையேதான் கூறியது. அதாவது மாரூநாம் Vs மத்திய அரசுக்குமான வழக்கு ஒன்றை எடுத்துக் காட்டாக அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசு, விடுதலை செய்வது குறித்து கவர்னரிடம் கேட்பதை ‘மரியாதை நிமித்தமான அரசியல் சாசன நடைமுறை’ (constitutional courtesy) என்பார்கள். ஏழு பேரை விடுதலை செய்யச் சொல்லி கவர்னரை நிர்பந்திக் கலாம் அல்லது ‘கவர்னர் விடுதலை செய்யவில்லை, அமைச்சர்களிடம் அதுகுறித்து விவாதிக்கவில்லை’ என்னும் நிலையில், மாநில அரசே முன்வந்து ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்” என்றார்.
அமைதி காக்கும் கவர்னருக்கு அடிபணிகிறதா இந்த அரசு?
- ஐஷ்வர்யா