அந்த வீட்டின் முற்றத்தில் தன் மனைவி ஷோபனாவின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருக்க... “நாங்கள் என்ன தவறு செய்தோம்... யாருக்குக் குற்றம் இழைத்தோம்... மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு எங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை?” என்று கண்ணீர் வற்றக் கதறுகிறார் மருத்துவர் ரமேஷ். இன்னொரு பக்கம் படுகாயங்களுடன் அவரின் மகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். ரமேஷை வெறும் மருத்துவர் என்று சொல்ல இயலாது... மக்கள் மருத்துவர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆனால், அவரது கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது... இப்படி வேண்டுமானால் சொல்லலாம்... “ரமேஷ், நீங்கள் வேண்டுமானால் மக்கள் மருத்துவராக இருக்கலாம். ஆனால், இது மக்களுக்கான அரசு இல்லை. இது சாராய அரசு... இது போதை அரசு... இது குட்கா அரசு... இது கொலைகார டாஸ்மாக் அரசு!”

கோவை கணுவாய் பகுதி மக்களுக்கு ‘முப்பது ரூவா டாக்டர்’, இலக்கியவாதிகள் மத்தியில் எழுத்தாளர், சூழலியல் செயல்பாட்டாளர்களுக் குப் போராளி... இப்படிப் பல்வேறு பரிமாணங்களைக்கொண்டவர் மருத்துவர் ரமேஷ். கூடங் குளம் போராட்டம், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழகத்தின் தலையாயப் பிரச்னை களில் மக்களுக்கு ஆதரவாகக் கருத்தியல் ரீதியாகப் போராடிய மருத்துவர் ரமேஷை, தன் மனைவியின் சடலத்துடன் நடு சாலையில் அமர்ந்து டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராகப் போராட வைத்துவிட்டது தமிழக அரசு!

ஜூன் 24-ம் தேதி, ஆனைகட்டியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவரும் தன் மகள் சாந்தலாதேவியைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ரமேஷின் மனைவி ஷோபனா. ஜம்புகண்டி என்கிற இடத்தில் வந்தபோது எதிரே அசுர வேகத்தில் வந்த ஒரு பைக், ஷோபனாவின் பைக் மீது பயங்கரமாக மோத, சம்பவ இடத்திலேயே பலியானார் ஷோபனா. பலத்தக் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் சாந்தலாதேவி. தகவலறிந்து சம்பவ இடத்துக்குப் பதறிக் கொண்டு வந்தார் ரமேஷ். இறந்து கிடக்கும் மனைவி ஒருபக்கம்... ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகள் ஒருபக்கம்... எந்தத் தந்தைக்கும் வரக்கூடாத துயரமான சூழலில், கதறித் துடித்தார் ரமேஷ். அப்போது, ‘இங்க இருக்கிற டாஸ்மாக்தான் எல்லாத்துக்கும் காரணம். மோதிய பைக்கில் வந்த மூவருமே நிறை போதை. அதுதான் அந்த அம்மாவின் உயிரை வாங்கியிருக்கு’ என்று அந்தப் பகுதி மக்கள் குமுறினர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் தன் மகளைப் பார்த்துக்கொள்ள நண்பர்களைக் கேட்டுக்கொண்ட ரமேஷ், ஜம்புகண்டியில் உள்ள டாஸ்மாக்கை மூடக்கோரி, தன் மனைவியின் சடலத்தின் அருகே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அந்தப் பகுதி தாசில்தார் சம்பவ இடத்துக்கு வந்து, ‘சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்படும்’ என்று உத்தரவாதம் கொடுத்த பிறகே தன் மனைவியின் உடலை அங்கிருந்து எடுக்க அனுமதித்தார் ரமேஷ். அதன் பிறகு, ரமேஷ் எடுத்த முடிவுதான் நெகிழ்ச்சியின் உச்சம்.
“நீண்ட நாளாக ஜம்புகண்டி பகுதி மக்கள், அந்த டாஸ் மாக் கடையை எதிர்த்துப் போராடிக்கிட்டு இருக்காங்க. என் மனைவி உயிர் அந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்காகப் போனதாக இருக்கட்டும். அதன் நினைவாக அந்தப் பகுதி யிலேயே என் மனைவியின் உடலை அடக்கம் பண்ணணும்” என்று ரமேஷ் வேண்டுகோள் விடுக்க... “எங்க பொண்ணு சார் இது” என்று கண்ணீர் மல்க, ரமேஷின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜம்புகண்டி பகுதி பழங்குடியின மக்கள், அருகில் உள்ள இடுகாட்டில் தங்கள் வழக்கப்படி ஷோபனாவை அடக்கம் செய்திருக்கிறார்கள்.


மருத்துவர் ரமேஷுக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். “எங்களுக்கு நகர வாழ்க்கையில் ஈடுபாடு கிடையாது. அதனால, எங்கப் பொண்ணை ஆனைகட்டியில உள்ள பழங்குடி யின மாணவர்களுக்கான பள்ளியில் சேர்த்தோம். அவளுக்கு நொய்யலாற்றின் வரலாறு பத்தி சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன். நொய்யல் ஆறு நமக்கு ஏன் தேவை, அதில் என்னென்ன பிரச்னைகள் இருக்குன்னு அவ ஆய்வு பண்ணிட்டு இருந்தா. அவளுக்கு வனத்தின்மீது பெரிய ஈடுபாடு. ஏராளமான பூச்சிகளைப் புகைப்படம் எடுத்து ஆவணமாக்கி வெச்சுருக்கா. அவளைச் சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடிய ஒரு பெண்ணாக மாற்றணும்ங்கிறதுதான் என்னுடைய கனவும் என் மனைவியுடைய கனவும். ஆனால், அதை எல்லாம் பார்க்காமலேயே அவள் விரும்பிய வனத்திலேயே என் மனைவி தேவதையாகிட்டா! என் பொண்ணுக்குப் பயங்கரமான அடி. எலும்பு முறிஞ்சு ஆபரேஷன் பண்ணியிருக்கு. உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவளைப் பார்க்க உள்ளே போனாலே, ‘அம்மா எங்கப்பா?’ன்னுதான் கேட்குறா. அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல” என்று வெடித்து அழுகிறார் ரமேஷ்.
- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்
“நடந்தது நடக்கட்டும்... நாம் அடுத்த வேலையைப் பார்ப்போம்!”
தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரமேஷ். பள்ளிப் படிப்பில் அதிக ஈடுபாட்டைக் காட்டியதால், உடுமலைப்பேட்டை அமராவதியில் அமைந்துள்ள ராணுவப் பள்ளியான ‘சைனிக்’கில் ரமேஷுக்கு அனுமதி கிடைத்தது. இங்கு தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று ப்ளஸ் 2 படிப்பை நிறைவு செய்தவருக்கு, மருத்துவப் படிப்பு தேடி வந்தது. 1983-84-ம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தார். `எந்தவொரு துறையையும் சமூகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்; மருத்துவம் அதற்கு விதிவிலக்கல்ல’ என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். ஒருமுறை மருந்தியல் துறையின் வாய்மொழித் தேர்வு நடந்துகொண்டிருந்தது. சக மாணவர்கள் அச்சத்துடன் வராண்டாவில் காத்திருக்க, மார்க்சிய அறிஞரான அல்தூசரின் நூலை ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தார் ரமேஷ். இந்தக் காட்சியை ஆச்சர்யத்தோடு கவனித்துள்ளனர் சக மாணவர்கள்.

கல்லூரிப் படிப்பில் பெரிதாக ஆர்வத்தைக் காட்டா விட்டாலும், முதலாம் ஆண்டிலேயே அனாடமி துறையில் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். `சில நேரங்களில் ரத்தக் குழாய்களின் பாதைகள் வழி மாறி அமைந்துவிடும்’ என்பதைப் பிணக் கூராய்வின்போது கண்டறிந்தார். `அனாமலி’ என்று இதைச் சொல்வார்கள். இந்தக் கண்டுபிடிப்புக்காக ஆசிரியர்கள் ரமேஷை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். கல்லூரி நாள்களில் அணு உலைகளைப் பற்றிய ஆய்வில் தீவிரம் காட்டிவந்தார். அணுஉலைக்கு எதிராகப் பத்திரிகையாளர்களையும் அறிஞர்களையும் திரட்டி அமைதி ஊர்வலத்தை நடத்திக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, `நோ மோர் செர்னோபில்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தார் ரமேஷ்.
`தமிழ்நாட்டில் சுனாமி வரும்’ என்று முதன்முதலில் அறிவித்தது ரமேஷ் எழுதிய ஒரு புத்தகம்தான். 2004 செப்டம் பரில், `சேதுசமுத்திரத் திட்டம்’ குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில், `சேது திட்டம் அமையும் இடத்தில் வண்டல் மண் அதிகமாகப் படிகிறது. அங்கு மண் ணைத் தோண்டினால், மேலும் வண்டல் படிந்துகொண்டே யிருக்கும. ஆகவே, அறிவியல்ரீதியானப் பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு அமல்படுத்துங்கள்’ என்பதை வலியுறுத்தியதுடன், `இந்தப் பகுதியில் சுனாமிவரும்’ என்ற எச்சரிக்கையையும் அதில் எழுதியிருந்தார். அதே ஆண்டு டிசம்பரில் சுனாமி வந்தது.
இதன் பின்னர், `கூடங்குளம் அணுமின் நிலையமும் பூகம்பவியலும்’, `கல்பாக்கம் எரிமலை’ ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். கல்பாக்கம் தொடர்பான புத்தகத்துக்காக வி.டி.பத்மநாபன், புகழேந்தி ஆகியோர் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தினர். நியூட்ரினோ திட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக உள்ள பிரச்னைகளையும் முதன்முதலில் வெளியிட்டவர் ரமேஷ். அந்தப் பகுதியில் உள்ள பிரச்னைகளைக் கள ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்தார். ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது ஏற்படும் பிரச்னைகளையும் விரிவாக முன்வைத்தார். ராஜீவ் காந்தி படுகொலையில் தடயவியல் துறையின் கோளாறுகளை `பைபாஸ்’ ஆவணப் படம் மூலம் பொதுமக்களின் பார்வைக்கு முன்வைத்தார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ ஒன்றைப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார் சூழலியல் ஆர்வலர் முகிலன். இந்த வீடியோ உருவாக்கத்தில் ரமேஷின் பங்களிப்பு முக்கியமானது. அந்தக் காட்சிகளை மக்களுக்குப் புரியும் வகையில் எளிய தமிழில் விளக்கியிருந்தார் முகிலன். இந்த வீடியோ உருவாக்கத்தில் பொன்.சந்திரன், மேக் மோகன் ஆகியோருடன் இணைந்து சம்பவ இடத்துக்கு நேரடியாக அலைந்து திரிந்து தகவல்களைச் சேகரித்தார் ரமேஷ். இதற்காகப் பல நாள்கள் கிளினிக் வருமானத்தை இழந்து கஷ்டப்பட்டார்.
சமூகரீதியான அவரது முயற்சிகளுக்குத் தன்னுடைய ஆதரவைச் சிரித்த முகத்துடன் வழங்கிவந்தவர் அவருடைய மனைவி ஷோபனா. சபரிமலை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். ரமேஷின் கிளினிக்கில் செவிலி யராகப் பணிக்கு வந்தவர், ரமேஷின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டுத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன், எழுவர் விடுதலைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மகள் சாந்தலாவுடன் பங்கேற்றார் ஷோபனா.
ரமேஷ் எப்போதும், ஒரு வாக்கியத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார். அது, `Let it be’ என்ற பீட்டில்ஸ் இசைக் குழுவினரின், `நடந்தது நடக்கட்டும்... நாம் அடுத்த வேலையைப் பார்ப்போம்’ என்பதே. தன் மனைவி விபத்தில் சிக்கி உயிரற்ற சடலமாகச் சாலையில் கிடந்தபோதும் சரி... இனியும் சரி... அவர் அடுத்த வேலைகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அந்த வேலையின் பெயர் ‘போராட்டம்!’
- ஆ.விஜயானந்த்