மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

நரி ஏன் வடைக்கு ஆசைப்படுகிறது?

கே.வெங்கட், விழுப்புரம்.

 முழு நிலா, காதல் (அ) சைட், பவர் கட், தென்றல் காற்று - ஒரு மனிதனை மொட்டை மாடிக்கு வரவழைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது எது?

ஹாய் மதன் கேள்வி - பதில்

டி.வி. சீரியல் ஓடும்போது யார் முழு நிலவை ரசிக்கிறார்கள்? பவர் கட் சமயத்தில் கையில் விகடன் இருந்தால்கூட, அதனால் விசிறிக்கொள்வீர்கள். பொல்யூஷன் காரணமாக எப்போதோ தென்றல் காற்று கற்பழிக்கப்பட்டுவிட்டது. ஸோ, காதல்தான் கொளுத்துகிற வெயிலிலும் மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்லும்!

காஞ்சி குமுதன், சென்னை-83.

##~##

ஒருவரைத் தனி அறையில் நாள் முழுக்க அடைத்துப் பூட்டிவிட்டு, அவரிடம் 100 விதமான செல்போன்களைக் கொடுத்து 'எதையுமே உபயோகப்படுத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டால், அவருடைய மனநிலை எப்படி இருக்கும்?

பலருக்குச் சத்தியமாகப் பைத்தியம் பிடித்துவிடும். நானாக இருந்தால், அந்த 100 போன்களை 'பில்டிங் ப்ளாக்ஸ்’ ஆகப் பயன்படுத்தி... வீடு, பஸ், கப்பல் எல்லாம் செய்து பொழுதைப் போக்குவேன். அந்த அறையையே கேரம்போர்டு ஆகக்கூடப் பயன்படுத்தலாம். செல்போன்கள்தான் காயின்ஸ்!

கே.வெங்கட், விழுப்புரம்.

நரி மாமிசப் பிராணி. அதுவா வடைக்கும் திராட்சைப் பழத்துக்கும் ஆசைப்பட்டு இருக்கும்?

பாவம், அப்போது நாட்டில் என்ன வறட்சியோ?! திருவல்லிக்கேணியில் என் பள்ளி நண்பனின் அத்தை ஒரு அல்சேஷன் நாய் வளர்த்துவந்தார். மாமி ரொம்ப ஆசாரம். தினமும் நாய்க்கு இட்லி, அடை, பொங்கல், வடைதான் சாப்பாடு. வேறு வழி? அதையே சாப்பிட்டுப் பழகிப்போய் பரிதாபமான பார்வையுடன் வாசலில் உட்கார்ந்திருக்கும். போன ஜென்மத்தில் யாரோ முனிவரின் சாபம் என்று நான் அந்த நண்பனிடம் பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறேன்!

மு.விஜி, பொழிச்சலூர்.

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் தருவதே இல்லை. அதனால், நான் கூறவருவது என்னவென்றால், வீட்டின் வரவு-செலவைக் கவனிப்பது எல்லாம் மிஸஸ் மதன் என்றே நினைக்கிறேன்... சரியா?

'துரியோதனன் தொடை’ மாதிரி என் 'வீக்னெஸ்’ஸைக் கண்டுபிடித்துவிட்டீர்களாக்கும்... திருப்திதானே?!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

பொதுவாக, காங்கிரஸ்காரர்கள் அனைவரும் நேரு குடும்பத்தின் கொத்தடிமைகள் என்று நினைக்கிறீர்களா?

சேச்சே, அது சற்று கடுமையான வார்த்தை! பக்தர்கள் என்று வைத்துக்கொள்ளலாமே? இந்தியர்கள் 99 சதவிகிதம் பேருக்கு குல தெய்வம் இல்லாமல் வாழ முடியாது. வேண்டுதல், படையல் என்று ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்!

எல்.கனகா, சென்னை-13.

இந்துத் திருமணங்களில் மணமகள், மணமகனுக்கு வலதுபுறம் அமர்கிறாள். கிறித்துவத் திருமணங்களில் இடதுபுறம் நிற்கிறாள். எது சரி?

இதில் சரி, தவறு கிடையாது. சம்பிரதாயம்! 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, மேலை நாடுகளில் பாதித் திருமணத்தில் போட்டியாளர்கள் புகுந்து வாளை உயர்த்தி, 'என்னை ஜெயிச்சுட்டு அவளைக் கட்டிக்க!’ என்று சவால்விடுவது அதிகம் நடந்தது. உடனே, மணமகன் வாளை உருவி சண்டை (Duel) போட்டாக வேண்டும். அதற்கு வலது கை எப்போதும் ஃப்ரீயாக இருக்க வேண்டும். ஆகவே, மணமகள் (பத்திரமாக) இடதுபுறம் நிற்பாள்!

யு.நூருதீன், சிதம்பரம்.

ஏன் அழும்போது மூக்கிலும் ஜலம் சொட்டுகிறது மதன் சார்?

காரணம், கண்களில் உள்ள கண்ணீர் பாதையையும் (Lacrimal Duct) மூக்குப் பாதையையும் (Nasal Cavity) இணைக்கும் பாதை (சந்து!) உண்டு. அதாவது, மூக்கில் வழிவதும் கண்ணீரே! அதிகமாகக் கண்ணீர் (குளம் மாதிரி!) கொட்டினால்தான் மூக்கிலும் வழியும். சரி, எதுக்கு அப்படி அழுதீங்க? ஹாய் மதனுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையே?!

வி.எம்.கார்த்திகேயன், திருநெல்வேலி.

மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளில் பெஸ்ட் எது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்களா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஓ! நல்ல நண்பர்களோடு செலவிடும் நேரம்!

மு.விஜி, பொழிச்சலூர்.

அழகுக்கு அழகு சேர்ப்பது தொப்புள்குழியா... கன்னக்குழியா?

குரங்கு, நாய், பூனைக்குக்கூடத் தொப்புள் குழி உண்டு. (ஆமா, தொப்புள் என்றாலே குழிதானே?!) தேர்தெடுக்கப்பட்ட மிகச் சிலருக்குத்தான் இயற்கை கன்னக் குழியைத் தருகிறது. ஆகவே, அதுவே அரிதான அழகு. கன்னத்தை உதடுகளால் வருடும்போது லேசாக இடறும்!

வண்ணை கணேசன், சென்னை-110.

எந்தத் துறையில் மட்டும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்?

தந்தையாகும் துறையில்!