கட்டுரை, படங்கள்: ந.வினோத்குமார்
##~## |
தங்களுக்கு ஞானம் அளிக்கும் ஞானிகளுக்கு அவர்களுடைய சீடர்கள் அன்பினால் நினைவு மண்டபங்களும் கோயில்களும் கட்டுவது வழக்கம். ஆனால், மிகப் பெரும் ஞானியைப் பின்பற்றிய சீடர் ஒருவருக்குக் கோயில் இருப்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால், நீங்கள் வடலூருக்கு வர வேண்டும்!
வள்ளலார் பாதம்பட்ட உன்னத பூமி வடலூர். அங்கு அவர் எழுப்பிய சத்திய ஞான சபை, உலகம் முழுவதும் மிகப் பிரபலம். அந்தச் சபைக்குக் கிழக்கே சில அடிகள் தொலைவில் கிணறு ஒன்று இருக்கிறது. அதன் அருகில் உள்ளது கல்பட்டு ஐயா திருச்சந்நிதி.
'கல்பட்டு ஐயா’ என்று சன்மார்க்க அன்பர்களால் அழைக்கப்படுகிற கல்பட்டு இராமலிங்கம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் பிறந்தவர். அவருக்குச் சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் அளப்பரிய நாட்டம் இருந்தது. அதனால், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 16 கி.மீ. தொலைவில் உள்ள திருநறுங்குன்றம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கே இருந்த குன்று ஒன்றில் குடிசை அமைத்து தவம் புரிந்துவந்தார். அப்போது ஒரு நாள், 'குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட ஒருநாளில், குறிப்பிட்ட ஒரு நாழிகையில் ஒரு ஞானாசிரியர் தாமாகவே வந்து உன்னை ஆட்கொள்வார்’ என்று அசரீரி சொன்னதாம்.

குறிப்பிட்ட அதே நேரத்தில், அந்த வழியாக வந்த வள்ளலார், கல்பட்டு ஐயாவின் குடிசையில் காலடி எடுத்துவைத்தார். ஞானத்துக்காகக் காத்துக்கிடக்கிற கல்பட்டு ஐயாவை வாரி அணைத்துக்கொண்டார் வள்ளலார். பிறகு, 'சிதம்பரத்தில் சில நாள் இருந்துவிட்டு, தன்னை வந்து பார்க்குமாறு அவரிடம் சொல்லிவிட்டுச் சென்றாராம் வள்ளலார்.
வடலூருக்கு அருகில் உள்ள சிதம்பரம் ஆன்மிகத்துக்குப் புகழ்பெற்ற இடமாக விளங்கியது. அதனாலேயே கல்பட்டு ஐயாவுக்கு இப்படிக் கட்டளையிட்டார் வள்ளலார். அவர் சொல்படியே அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு பிறகு வடலூருக்கு வந்தார்.
அங்கே சபையின் கிழக்கில் கிணற்றுக்கு அருகில் இருந்த குடிசையில் இருந்தபடி வள்ளலாருக்குத் தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை வள்ளலார் வெளியூர் சென்றிருந்தார். தன் சீடர்களிடம் தான் வரும்வரை கல்பட் டாரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார். சில நாட்கள் கழித்து வந்த வள்ளலார், கல்பட்டாரைப் பற்றிக் கேட்டார். கல்பட்டார் நீண்ட நாட்கள் தியானத்தில் இருந்ததால், உணவு எதையும் எடுத் துக்கொள்ளவில்லை. இதைக் கேள்விப்பட்ட வள்ளலார், 'பைத்தியங்களே! உணவு கொண்டு வாருங்காணும்’ என்று சொல்லி, உணவை எடுத்துக்கொண்டு கல்பட்டாரிடம் ஓடினார். அவர் வந்ததை அறிந்த கல்பட்டார், பதறி எழுந்தார். அந்தப் பதற்றத்தை உணர்ந்த வள்ளலார், 'அடியார்களுக்குச் சிவஞானிகள் தொண்டு செய்வது உண்டு’ என்று கூறிவிட்டு, கல்பட்டு அடிகளின் கையில் தாமரை இலையைவைத்து, அதில் சோற்றை உருட்டி உருட்டி வைத்து, அவர் சாப்பிடுவதைப் பார்த்து இன்பம் எய்தினாராம்.

இப்படி வள்ளலாருடன் நெருக்கமாக இருந் தவர் கல்பட்டார். தான் ஏற்படுத்திய சத்திய தரும சாலையை கல்பட்டு ஐயாவிடம்ஒப்ப டைத்துவிட்டு மறைந்துவிட்டார் வள்ளலார். அவரின் கட்டளைப்படி, தரும சாலையின் நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 28 வருடங் கள் நிர்வகித்து வந்த கல்பட்டு ஐயா, 26-4-1902-ல் மறைந்தார். இப்போதும் அவருடைய சந்நிதியில் அணையா தீபம் அருள் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.