மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அருவி கோபம்... நதி அன்பு!

##~##
சாம்பசிவன், சென்னை-32.

மினி இட்லி, மினி டிபன், கிரிக்கெட் மேட்ச்சில் 20/20 வந்ததுபோல் சினிமா துறையில் ஏன் மினி சினிமாக்கள் வரவில்லை? மூன்று மணி நேரம் பார்க்கும் வகையில் எடுக்கப் படும் படங்களை, ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் பார்க்கும் வகையில் ஏன் எடுக்கக் கூடாது?

நம்முடைய திரைப்படங்களோடு ஒப்பிடும்போது, அநேகமாக எல்லா உலகத் திரைப்படங்களும் நீங்கள் சொல்கிற 'மினி’ சினிமாதான். அதாவது, 90 அல்லது அதிகபட்சம் 110 நிமிடங்கள். ஒரு திரைப்படத்துக்கு அந்த நேரம் தாராளமாகப்போதும். நமக்கு, ஆசை தீர 'மூட்டை நிறைய’ சினிமா காட்டினால்தான் திருப்தி. சில வருடங்களில் நமது படங்களும் 110 நிமிடங்களுக்குக் குறைந்துவிடும் என்பது உறுதி!

எஸ்.செந்தில்நாதன், கும்பகோணம்-1.

பொதுவாக, அரசியல்வாதிகள் எல்லோரும் தோளில் துண்டு போட்டுக்கொள்வது ஏன்?

'ஆதி காலத்தில்’ அரசியல்வாதி, நிதி தேவைப்பட்டபோது 'டக்’கென்று துண்டை விரித்து அதில் அஞ்சு ரூபா, பத்து ரூபா, சில்லறை சேர்ந்தவுடன் குட்டி மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்வது வழக்கத்தில் இருந்தது. இன்று 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி, சுவிஸ் வங்கியில் 70 லட்சம் கோடி என்கிற அளவுக்கு அசாத்திய 'வளர்ச்சி’ ஏற்பட்டுவிட்டது. இந்தப் பணத்தை எடுத்துச் செல்ல நூற்றுக்கணக்கான லாரிகள் பல முறை 'ட்ரிப்’ அடிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், எளிமையான அந்தக் காலத்தைநினைவு படுத்தத் துண்டு மட்டும் வெறுமனே இன்றளவும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்!

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.

கைது செய்யப்படும்போது, மற்றவர்களைப்போல் முகத்தை மூடிக்கொள்ளாமல், சாமியார்கள் மட்டும் சிரித்துக்கொண்டே 'போஸ்’ கொடுக்கிறார்களே, ஏன்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

மற்றவர்கள், முகத்தில் ஏற்படும் அவமானம், பயம், கவலை போன்ற உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சாமியார் களங்கம் இல்லாத என் முகத்தைப் பாருங்கள். 'கைது, சிறை போன்றவற்றை எல்லாம் கடந்த நிலைக்குப் போனவன் நான். எனக்கு எல்லாமே ஒன்றுதான்!’ என்று பக்தர்கள் முன்னிலையில் காட்டிக்கொள்ள விரும்புகிறார். போலிச் சாமியார்கள் மகா கில்லாடிகள்!

எம்.ஜே.நந்தினி, சென்னை-4.

ஹாய் மதன் கேள்வி - பதில்

கடவுள் இறங்கி வந்தால், அவருக்குப் பிடித்த யாரோடு புத்தாண்டு கொண்டாடியிருப்பார்? (நீங்க மாட்டிக்கிட்டதா ஒரு யூகம்!)

வண்டுகளோடுதான் உட்கார்ந்து 'ஹேப்பி நியூ இயர்’ என்று கொண்டாடுவார்.பூமியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விதவிதமான பூச்சிகளும் வண்டுகளும் உண்டு. ஒவ்வொன்றின் வண்ணங்களும், டிசைனும் பிரமிப்பூட்டுபவை. வண்டுகள் Coleoptera என்கிற பூச்சி இனத்தைச் சேர்ந்தவை ('கிளி யோபாட்ரா’ மாதிரி இல்லை?!)’ வண்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டாலே, அதில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. உலகில் உள்ள அத்தனை பூச்சி, வண்டுகளை தராசில் ஒரு பக்கமும், மற்ற அத்தனை உயிரினங்களையும் இன்னொரு பக்கமும் வைத்தால்... பூச்சிகளின் எடை பல மடங்கு அதிகம்!

எம்.மிக்கேல்ராஜ்,சாத்தூர்.

பொங்கி விழும் அருவி. அமைதியான நதி... எது அழகு?

ஹாய் மதன் கேள்வி - பதில்

கோபப்படும் காதலி - அருவி. அவளே, மென்மையாகக் கொஞ்சும்போது-நதி. அருவிக்கு ஆழம் என்பது கிடையாது - காதலியின் கோபம்போல. நதி - அவளுடைய அன்பைப்போலவே ஆழமானது!

அ.குணசேகரன், புவனகிரி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

இன்று குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க சிறந்த நடிகை யார்?

உடனே நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வண்ணன் மட்டுமே!

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

நாகஸ்வர, தவில் வித்வான் கள் எல்லாமே ஆண்களுக்கே உரிய கம்பீரமான 'மீசை’ வைத்துக் கொள்ளாமல் மழித்துவிடுவது ஏன்?

நாகஸ்வரத்துக்கும் மீசைக்கும் சரி வராது. பாதி வாசிக்கும்போது மீசை முடி 'பீப்பி’யில் சிக்கிக்கொண்டு திடீர் என்று அபஸ்வரமாக 'ப்ர்ர்ர்’ என்கிற சத்தம் வர வாய்ப்பு உண்டு. தலைவர் மீசை வைத்துக்கொள்ளாததால், தவிலமைச்சரும் வைத்துக்கொள்வது இல்லை!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்-1.

சந்தர்ப்பம் கிடைக்காதவன்தான் ஏகபத்தினி விரதனாக இருக்கிறான் என்கிறேன்... சரியா?

பயம்கூட ஒரு காரணம் என்கிறேன் நான், சரியா?!