
வாலி, ஒவியம் : மணி, படம் : கே. ராஜசேகரன்
உள்ளும் புறமும்!
##~## |
நான் படித்ததில்லை; நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சமீபத்தில்தான் என் நெருங்கிய நண்பர் திரு.கிருஷ்ணகுமார் கொண்டுவந்து என் முன் கொட்டினார் 'சாரு நிவேதிதா’வை!
என்னை ஈர்த்தது அவர் எழுத்து; வசீகர நடை ஒருபுறமும், உலகளாவிய நுண்மாண் நுழைபுலமும் அவரெழுத்தில் விரவிக்கிடந்ததால் அல்ல.
தன்னை, வரிக்கு வரி ஒரு திறந்த புத்தகமாகப் போட்டு - 'வாசி வாசி’ என்று வாசகனை வாசிக்கவைக்கும்...
அந்த மெய்ம்மை!
நான் பத்மஸ்ரீ வாங்கும்போது - என்னுடன் திரு.குஷ்வந்த் சிங் பத்ம விபூஷண் வாங்கினார்.

அவர், illustrated Weekly-யில் இருந்த காலம் தொட்டு, அவர் எழுத்துகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஆசிரியராக இருந்தபோது எழுதியதைவிட -
அவரது தனிப் படைப்புகள், ஒளிவு மறைவின்றி எதையும் ஒப்புவிக்கும். சுய விமர்சனங்களில் அவர் தன்னையே நடுமுள் நடுங்காத தராசில் அமர்த்தித் தன் எடையை அறிவிப்பார்!
என்னளவில் ஒரு மானுடனின் உயர்ந்த பண்பு - Confession-தான்! கிறித்துவம் இதை ஏற்று பாவ விமோசனம் தருவதால், அந்த மதத்தினுடைய அளப்பருங் கருணை புலனாகிறது!
'குற்றம் புரிவாரைக்
கொடுநரகில் இடுவாயெனில் -
குற்றம் புரியாதார்
குவலயத்தில் யாருளரே?’

- இது, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அற்புதமான பாடல்!
Sex - என்பது விஸ்வாமித்திரனே வழுக்கி விழுந்த இடம். எத்தகு விஸ்வாமித்திரன்?!
வசிஷ்டரே, 'உன் மகனை அவனோடு அனுப்பு; அது உன் மகனுக்கு நலம் பயக்கும்!’ என்று -
தசரதனிடம் பேசும்படி தகவுகள் வாய்ந்த விஸ்வாமித்திரன்.
'ஆவருந்தவத்தோன்!’ என்று கம்பனால் சுட்டப்பெற்ற அவன்தான் -
மேனகையைக் கண்டதும், துவராடைகளைத் தூர எறிகிறான்!
முனியாய் இருந்தாலென்ன; மூலக்கடை முனியாண்டியாய் இருந்தாலென்ன -
மனிதன் பலவீனங்களால் ஆக்கப்பெற்றவனே; அதைப் பொத்திவைத்துத் தன்னைச் சுத்த சுயம்பிரகாசமாகக் காட்டிக்கொள்பவன் -
கண்ணதாசன் பாட்டு மாதிரி, 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவன்!’
Self Abuse எனப்படும் - Masturbation குரங்குகளிடம்கூட உண்டு; குரங்கிலிருந்து பிறந்த மனிதன், என்னணம் அதைத் தவிர்க்க ஏலும்? பிள்ளைப் பிராயத்தில் அதைப் பழகாதிருக்க - எவ்வுயிரையும் இயற்கை அனுமதிக்காது!
ஓரினச் சேர்க்கையையே - இப்போது ஒவ்வாததல்ல என்று - இந்திரப் பிரஸ்தமே இயம்பிவிட்டது! Gays are with gay now!
மேற்கண்ட விஷயங்களையெல்லாம் நான் இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் - சில தவறுகளை - அந்த அந்தப் பருவச் சூழல்களால் நேர்ந்தவற்றை - ஒப்புக்கொள்வது ஒரு புழுத்த சிந்தனையல்ல எனப் புரியவைக்கத்தான்!
நான் இந்த நினைவு நாடாக்களில் - கவிதா ஹோட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியை - அதுவும் என்னைப் பற்றியதை ஒளிவு மறைவின்றி எழுதியதை -
போற்றியோரும் உண்டு; தூற்றியோரும் உண்டு!
என்னைச் சிலுவையில் நானே அறைந்துகொள்வதில், எவர்க்கென்ன வந்தது?
இன்று என் வயதுக்கும், எனக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து -
நான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உத்தமன் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது - பித்தலாட்டத்தின் பிழிவாகும்.
இதனால்தான் - சாரு நிவேதிதாவின் எழுத்தில் உள்ள சத்திய தரிசனம், என்னை அவர்பால் மரியாதைகொள்ளச் செய்கிறது.
புலனடக்கத்தைக் காவிகளே புறந்தள்ளிவிட்ட பிறகு -
சராசரி மானுடன் அதனோடு சண்டை செய்து வெல்லல் சாத்தியமா?
அறுபதனாயிரம் தசரதனுக்கு; அவன் மகனுக்கு, ஒன்றே ஒன்று.
இது எதைக் காட்டுகிறது? பலதாரப் பழக்கத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டதுபோல், ஓர் ஒருதாரப் பழக்கம் பரிணமித்திருக்கிறது என்பதைத்தானே!
நம்முடைய பிழைகளே, நம்முடைய நெறிகளுக்கு - நம்மை இட்டுச் செல்கின்றன!
திரு.கவிஞர் மாயவநாதனின் அற்புதமான பாட்டு இது:
'தப்பித்து வந்தானம்மா! - காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க
முடியாமல்
தப்பித்து வந்தானம்மா!’

கொலை கொள்ளை பயின்ற வேடன், வால்மீகியானது இப்படித்தான்; திருடன், திருமங்கையாழ்வாராயானதும் இப்படித்தான்; கருப்புகழ் பாடியே காலங்கழித்தவன், திருப்புகழ் பாடுபவனாகக் கனிந்ததும் இப்படித்தான்; இதுபோல் அனேகம் சொல்லலாம்!
கண்ணதாசனும் நானும் - எங்களையே அழுக்குப் போகத் துவைத்துக் காயப் போட்டவர்கள்; தன்னையறிந்தவர்க்கே ஆன்மானுபூதி சித்திக்கும்!
இந்த அலைவரிசையிலேயே - சாரு நிவேதிதாவையும் வைத்துப் பார்க்குங்கால் -
அவரது எழுத்து, ஒழுக்கத்தை ஓம்புகிறது எனலாம்!
'உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என்று பாடினான் -
தண்ணீரில் விளக்கெரித்துக் காட்டிய தவத்தோன்!
நெஞ்சுள் உள்ளது - நஞ்சாயினும், நறவம்ஆயினும், அதை வாய்வழி உமிழ்தலே வாய்மையாகும்!
பாண்டவர்கள் வனவாசம் புரிகையில் ஒருநாள் அசுரப் பசி; அடவி பூராவும் அலைந்தும் ஆகாரம் கிடைக்கவில்லை!
ஒரே ஒரு மரத்தில் ஒரே ஒரு கனி, கிளையில் தொங்குவதைக் கண்டதும் - அதை உண்டு அனைவரும் ஓரளவு பசியாறலாம் என நினைத்து -
யுதிஷ்டிரன், அதைப் பறிக்க யத்தனிக்கையில் -
கண்ணன் வந்து தடுக்கிறான் - அந்தக் கனி ஆர் கைக்கும் அகப்படாது என்று!
'இத்துணை காலம் - உங்கள் இதயத்தின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் ஆசையை - நாகரிகம் கருதி வெளியே சொல்லாதிருக்கும் உண்மையை -
எவர் உள்ளது உள்ளபடியே உரைக்கிறாரோ, அவருக்கே இந்தக் கனி கிட்டும்!’ என்கிறான் தேவகி மைந்தன்!
உள்ளத்தில் உள்ளதை உதட்டு வழி உமிழ ஒருவருக்கும் துணிவில்லாதபோது -
ஐவரின் பத்தினியான பாஞ்சாலி - தன் உள்ளத்தில் வெகு காலமாக ஒளித்துவைத்திருக்கும் ஆசையைக் கூச்சமின்றிக் கூறுகிறாள்; கனி, அவள் கையில் விழுகிறது!
'ஐவரின் மனைவியாய் இருந்தாலும், அந்தக் கர்ணனோடு ஒருநாள், பள்ளியறை புக வேண்டும் என்பதுதான் -
என் நெடுநாள் ஏக்கம்!’
- இப்படிச் சொன்ன, துரோபதியைத் தான் -
போற்றப்பட வேண்டிய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாக, ஒரு வடமொழி ஸ்லோகம் வந்திக்கிறது!
'பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம்
மஹாபாதக நாசனம் -
அஹல்யா த்ரௌபதீசைவ
தாரா ஸீதா மண்டோதரீ!’
- சுழலும்...