Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

யக்குநர் ஸ்ரீதர், ஜெயலலிதா பற்றிய தன் மனக் குறையைச் சொல்லி விகடனுக்குப்

பேட்டியளிக்க, அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. இந்தச் சர்ச்சையில், தயாரிப்பாளர் கோவை செழியனும் தனது கருத்தைச் சொல்ல, பரபரப் பானது விஷயம். இதோ, அந்தக் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்...

"என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!"

காலப்பெட்டகம்

புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது.கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்...

"என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட 'என்ன'னு ஒரு வார்த்தை விசாரிக்கலே!

'வெண்ணிற ஆடை' படத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! 'வெண் ணிற ஆடை' படத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!" - தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக்கொண்டார் ஸ்ரீதர்.

"தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். 'கான்வென்ட்' படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!

தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது. இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!

கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? 'வெண்ணிற ஆடை' படம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக் கறப்ப கஷ்டமா இருக்கு!"

விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: "என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!"

"யூ டூ மிஸ்டர் ஸ்ரீதர்?" - ஜெயலலிதா விளக்கம்!

காலப்பெட்டகம்

ன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

உங்கள் 15.9.1996 ஆனந்த விகடனில், டைரக்டர் ஸ்ரீதர் அளித்துள்ள பேட்டியில் உண்மைக்குப் புறம்பான சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி, உங்கள் வாசகர்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதனால் சில விளக்கங்கள் அளிக்கவேண்டியது அவசியமா கிறது.

பொதுவாழ்வில் 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த போதிலும், நான் அவ்வளவாகப் பிறர் வீடுகளுக்கு விஜயம் செய்யும் பழக்கம் இல்லாதவள் என்பதனை, தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்கள் அறிவார்கள். அதனாலேதான் எத்தனையோ முக்கிய நண்பர்களின் குடும்ப வைபவங்களுக்குக்கூட நான் போகாமல் இருந் திருக்கிறேன். என்னை நன்கு புரிந்துகொண்ட எவரும் என்னை வற்புறுத்துவதும் இல்லை. சிறு வயது முதல் நான் ஒரு சங்கோஜியாகவும், தனிமை விரும்பியாகவும் இருந்திருக்கிறேன். அது எனது உரிமை. முதலமைச்சர் ஆனதால், எனது வேலைப்பளுவும் 1991-க்குப் பின் அதிகரித்து வந்துள்ளது என்பதையும் மறந்துவிடலாகாது. டைரக்டர் ஸ்ரீதர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்க இயலாமல் போனதன் காரணம் வேறேதுமில்லை. எனினும், அவர் தேறி வருகிறார் என்று உங்கள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்து கொள் வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் திரு.ஸ்ரீதரைப் பார்க்கவில்லை என்று அவர் வேதனைப்படலாம்; நியாயம்! ஆனால், தேவையில்லாமல் உண்மைக்குப் புறம்பான சில சம்பவங்களைக் கூறி என்னை வேதனைப்படுத்தியுள்ளாரே திரு.ஸ்ரீதர் என்று வருந்துகிறேன். You too Mr.Sridhar? 'வெண்ணிற ஆடை' படத்தில் நடிக்க வாய்ப்பளித்து, என்னைத் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ஸ்ரீதர் என்பதனை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை. ஆனால், அதனால்தான் நான் பின்னர் பொது வாழ்வில் பேரும் புகழும் பெற்றேன் என்று அவர் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. திரு.ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய புதுமுக நடிகை களில் எத்தனை பேர் முதலமைச்சராகி உள்ளார்கள்? எத்தனை பேர் அரசியலில் பிரவேசித்துள்ளார்கள்? எத்தனை பேர் பேரும் புகழும் பெற்றுள்ளார்கள் என்பதனை அவரே கூறட்டும்.

நான் எனது நடன ஆற்றலால் சிறந்த நாட்டியக் கலைஞராக இருந் தேன்; நடிப்பாற்றலால் சிறந்த நடிகையாக இருந்தேன்; அறிவாற் றலால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பிரகாசித்தேன்; அரசியல் ஆற்றலால் முதலமைச்சராக வீற்றிருந்தேன் என்பது என் கருத்து. இக்கால கட் டங்களில் எனக்கு உறுதுணையாக, ஆசானாக, நண்பர்களாக, ஊன்று கோலாக, ஆலோசகர்களாக இருந்த வர்கள் எத்தனையோ பேர். அவர் கள் அத்தனை பேர் மீதும் அன்பும், பரிவும், பாசமும், நேசமும் கொண்டு நன்றி மறவாமல் வாழ்ந்து வருகி றேன். 'நன்றி மறப்பது நன்றன்று' என்பதை நான் நன்கு அறிவேன். திரு.ஸ்ரீதர் போன்றோர் கூறும் கூற்றுக்களில் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பதனையும் நான் அறிவேன்.

என் தாயார் அவரிடம் போய் எனக்காக மன்றாடினார் என்று அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய். நடிகை ஹேமமாலினி, அதே படத்தில் வேறு பாத்திரத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின்னர் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஹேம மாலினியின் தாயார் திரு.ஸ்ரீதரைப் பார்த்து சந்தர்ப்பம் கேட்டார் என்று திரு.ஸ்ரீதரே என்னிடம் கூறியுள்ளார். அவ்வாறு திரு.ஸ்ரீதரால் உதாசீனப் படுத்தப்பட்ட ஹேமா, பம்பாய் சென்று அகில இந்திய அளவில் பெரிய நடிகையாகப் பேரெடுத்து, பேரும் புகழும் பெற்று வளர்ந்தாரே, அதுவும் திரு.ஸ்ரீதரால்தானா என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.

'இனிய உளவாக இன்னாத கூறல்' அவசியமா திரு.ஸ்ரீதர்?

- ஜெ.ஜெயலலிதா
பொதுச்செயலாளர், அ.இஅ.தி.மு.க.,
முன்னாள் தமிழக முதலமைச்சர்.

ஜெயலலிதாவுக்கு ஸ்ரீதர் பதில்!

ஜெயலலிதா விகடனுக்கு (29.9.96 இதழ்) எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, "என் தரப்பில் மேலும் சில விளக்கங்கள் சொல்ல விரும்பு கிறேன்!" என்று டைரக்டர் ஸ்ரீதரிட மிருந்து போன். நேரில் சந்தித்தபோது ஸ்ரீதர் சொன்னார்...

"என் உடல்நிலை பற்றி பத்திரிகை வாயிலாகத் தெரிந்து, பத்திரிகை மூல மாகவே நலம் விசாரித்ததற்கு ஜெய லலிதாவுக்கு என் நன்றி! ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவல் களைச் சொல்லியிருப்பது அவர் தான்; நான் அல்ல!

ஜெயலலிதாவின் தாயார் திருமதி சந்தியா, என்னைச் சந்தித்துத் தன் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டபோது, தயாரிப்பாளர் கோவை செழியன் என்னுடன் இருந்தார். அவரைக் கேட்டால் உண்மையைச் சொல்வார்!

காலப்பெட்டகம்

மேலும், ஜெயலலிதா சொல்வது போல், ஹேமமாலினியை நான் தேர்வு செய்தது 'வெண்ணிற ஆடை' படத்துக்கு அல்ல; 'காதலிக்க நேர மில்லை' படத்துக்கு! அப்போது அவர் முகம் குழந்தைத்தனமாக இருந்ததால், அறிமுகம் செய்ய வில்லை. ஆனால், அவர் இந்தியில் 'ட்ரீம் கேர்ள்' படத்தில் அறிமுகமாகி நடிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு நானும் ஒரு திருக்குறளை நினைவுபடுத்த விரும் புகிறேன் - 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந் நன்றி கொன்ற மகற்கு!"

தயாரிப்பாளர் கோவை செழியனைச் சந்தித்தோம்.

"டைரக்டர் ஸ்ரீதருக்கு ஜெயலலிதா பதில் எழுதிய கடிதத்தை விகடனில் நானும் படித்தேன். ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.

நான் தயாரித்த 'சுமைதாங்கி' படம் வெளியான பிறகு, டைரக்டர் ஸ்ரீதர் முழுக்க முழுக்கப் புதுமுகங் களை வைத்து 'வெண்ணிற ஆடை' படத்தை உருவாக்கத் திட்டமிட்டார்.மற்ற தேர்வுகள் முடிந்து கதாநாயகி யைத் தேடிக்கொண்டிருந்த சமயத் தில்தான், சிவாஜி தலைமையில் நடிகை சந்தியாவின் மகள் நடன அரங்கேற்றம் நடந்தது. 'அவரை ஏன் கதாநாயகியாக்க முயற்சிக்கக் கூடாது?" என்று சந்தியாவுக்கு போன் செய்து வரவழைத்துப் பேசி னோம். அப்போது ஜெயலலிதாவுக்கு 14 வயது. கதாநாயகி பாத்திரத்துக்குப் பொருந்திவரமாட்டார் என்ற முடி வில், வேறு கதாநாயகியைத் தேட ஆரம்பித்துவிட்டோம்.

காலப்பெட்டகம்

சித்ராலயா ஆபீஸில் பாடல் கம்போஸிங். டைரக்டர் ஸ்ரீதர், நான், எம்.எஸ்.விஸ்வநாதன், சி.வி. ராஜேந்திரன், சித்ராலயா கோபு அனைவரும் இருந்தபோது, சந்தியா அங்கு வந்தார். 'வேறு நடிகை தேடு கிறீர்களாமே... நீங்கள் அவசியம் என் மகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண் டார். 'என் மகள் வயது குறைந்தவள் என்றாலும், நல்ல முறையில் நடிப் பாள். அவள் நடிப்பில் திருப்தி இல்லாவிட்டால் பிறகு மாற்றிவிடுங் கள்!' என்று சொன்னபோது, சந்தியாவின் கண்களில் நீர் பெருகி விட்டது. அதன்பிறகுதான் ஜெய லலிதாவை நடிக்க வைக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடங்கி னோம்!" என்றார்.

- செல்லா

அறிஞர் அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் மறைந்தார்.

கேழ்வரகுக் கஞ்சி!

காலப்பெட்டகம்

1967-ம் ஆண்டு. முதலமைச்சர் அண்ணா இரவு முழுவதும் கண் விழித்துக் கோப்புகளை சரிபார்த்துக் கையெழுத்திட்டுப் படுக்கிறபோது, விடியலை அறிவிக்கும் வகையில் சேவல் கூவுகிறது!

காலை 7:30. உதவியாளர் கஜேந் திரன் உள்ளே சென்று, அயர்ந்து உறங்கும் அண்ணாவை எழுப்பி, "இன்று சட்டசபையில் கேள்வி நேரம் எட்டரை மணிக்கு! தாங்கள் பதில் அளிக்கவேண்டும்" என்கிறார்.

சற்று நேரத்தில், வெளியே கார் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்க்கிறார் ராணி அம்மையார். அதற்குள், அண்ணா புறப்பட்டுப் போய்விட் டார்.

"ஐயோ! இந்த மனுஷன் வெறும் வயித்தோடு போறாரே! காலையிலே வெறும் வயிறா இருக்கக்கூடாதுன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. கேழ்வரகுக் கஞ்சி ஒரு டம்ளர்தான் ஆகாரம். அதையும் குடிக்காம போயிட்டாரே" என்று பதறும் ராணி அம்மையார், தயாராக இருந்த கேழ்வரகுக் கஞ்சியை உதவியாளர் மூலம் அண்ணாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

சட்டமன்றம் முடிந்து, மதியம் 2 மணிக்கு அண்ணா வீடு திரும்பிய தும், "காலையிலே கஞ்சி சாப்பிடாம போயிட்டீங்களே? வெறும் வயிற் றோடு இருக்கலாமா? அதான் கொடுத்தனுப்பிச்சேன். மனசு கேக் கலே. அதனாலே காலையிலிருந்து நானும் சாப்பிடலே!" என்கிறார் ராணி அம்மையார்.

"நீ சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். அதான் நானும் சாப்பிடலே!" என்று அண்ணா சொல்ல, ராணி அம்மையாரின் கண்களில் நீர்!

\ கயல்

மக்கள் கொதித்துப் போவார்கள்..!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மருத்துவக் கல்லூரியில் படித்த முதலாண்டு மாணவர் நாவரசு படுகொலை செய்யப்பட்ட கொடுமையைப் படித்து நம் நெஞ்சு பதறியது. உடல் நடுங்கியது. கண்ணீர் பெருகி யது.

நாவரசின் தந்தையான சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னுசாமிக்கு ஆறுதல் சொல்ல வழியின்றித் தமிழகமே தவிக்கிறது.

கொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, குற்றவாளியின் மனோ நிலை எத்தகையது என்பதையெல் லாம் போலீஸ் தங்கள் முழுத் திறமையையும் பயன்படுத்திச் சேக ரித்து, நீதிமன்றம் முன் வைக்க வேண்டும். தடயவியல் துறையின ரின் உதவிகொண்டு, சந்தேகங்கள் துளியும் எழும்பாமல், கொலை செய்யப்பட்ட விதம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி அதற்குரிய தண்டனை பெறவேண்டும். ஏனோதானோ வென்ற அலட்சியப்போக்கு போலீஸிடம் இருக்கக்கூடாது.

இந்தக் கொடூரமான கொலை வழக்கு நீதிமன்றத்துக்கு வரும்போது சாட்சிகள் பல்டி, கேஸ் பிசுபிசுத்தது என்றெல்லாம் நிகழ்ந்தால் மக்கள் கொதித்துப்போவார்கள்!

(1.12.96 இதழ் தலையங்கம்)

விகடன் 'வாசகர் திருவிழா' வில்... விகடனின் குறிக்கோள் வாசகமான, தாயுமான சுவாமி களின் 'எல்லோரும் இன்புற்றி ருக்க...' என்னும் கவிதை வரியை பொதுத் தலைப்பாகக் கொண்டு கவிதை வாசித்தார்கள் காவியக் கவிஞர் வாலி, கவியரசு வைர முத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் மூவரும்.

காலப்பெட்டகம்

"ஒரு குடும்பம்
கடன் வாங்கினால் -
இருக்க முடியுமா
உற்சாகத்தின் உச்சத்தில்?
இருக்க முடியும்;
வாங்கிய கடன் -
'விகடன்' எனும் பட்சத்தில்!"

- என்று தொடங்குகிற காவியக் கவிஞர் வாலியின் கவிதை, துள்ளும் கன்றுக்குட்டிபோல் தாவிச் செல் லும் அழகே அழகே!

உங்கள் ரசனைக்கு அந்தக் கவிதையிலிருந்து மேலும் சில வரிகள்...

வெள்ளை மொழியை
உதடுகளில்
உட்கார்த்தி வைப்பதுதான்
உச்சகட்ட நாகரிகம் என்று -
நம்மவர் நாக்குகள்
நம்பின; இமயத்தில்
கொடிபோட்ட
தமிழனின் மூக்குகள் -
தமிழ் வாடை பட்டாலே -
பொடிபோட்ட மூக்குகள்போல்
தும்மின!

கடைசியில் - அத்தகு
கசந்த காலம் போய் -
வண்ணத்தமிழ் ஏடுகளுக்கு ஒரு வசந்த காலம் வந்தது!
அந்த வசந்த காலம் எனும்
சீசன் வந்ததற்கு
ரீசன் - ஈசன் அல்ல;
எஸ்.எஸ். வாசன்!
வாசன் கைபட்டாலே
தவிடு தங்கமாகும்;
தவளை சிங்கமாகும்!
அவர்தான் -
வெற்றிகரமாக - தமிழ்
ஏடு நடத்தினார்;
வெள்ளை மொழியை - ஓரளவு நாடு கடத்தினார்!

அவர்தான் -
தமிழ் சினிமாவின் தந்தை;
அவரால்தான் அகலமானது -
தமிழ் சினிமாவின் சந்தை!
அந்த -
முக்காக் கைச் சொக்கா மனிதர் -
முகஸ்துதிக்குச் சொக்கா மனிதர்;
சின்னச் சிந்தனைகளில் -
சிக்கா மனிதர்;
வாய்மையைப் பேச - வாய்
திக்கா மனிதர்;
மொத்தத்தில் - ஒரு
பக்கா மனிதர்!

தாதாக்கள் நிறைந்த நம்
தாய்த்திரு நாட்டில் - மூன்று
தாத்தாக்கள் -
தமிழர்களுக்குப் பரிச்சயமானவர்கள்!
ஒருவர் - டிசம்பரில் வரும்
கிறிஸ்மஸ் தாத்தா;
இன்னொருவர் - அக்டோபரில் வரும்
காந்தித் தாத்தா;
மூன்றாவது தாத்தா -
வாரந்தோறும் வரும்
விகடன் தாத்தா! - அவர்
உருவம் உங்களுக்குத் தெரியும், உள்ளே புரட்டி -
நீங்கள் விகடன் பாத்தா!

இடையறாது சிரிப்பது
விகடனின் வாய்;
வாய் நிறைய ஜாய்!
எனவே -
எழுபது வயதிலும்
விகடன் இஸ் எ காம்ப்ளான
பாய்!

வாசகர்களின்
டேஸ்ட்
விகடனுக்குத் தெரிகிறது; அந்த டேஸ்ட்டை - அது
பூஸ்ட் செய்து தருகிறது!

That -
Boost is the Secret of
Vikatan's Energy!

காலப்பெட்டகம்

விகடனின் குறும்பு டீம் கலாட்டாக்கள் தொடங்கியது இந்த ஆண்டுதான். செட்டப் திருமண ஜோடியை கூவத்தில் படகுச் சவாரி செய்ய வைத்தது, 'ஜீன்ஸ்' தயாரிப்பு பற்றிய படம் என்று சொல்லி, இயக்குநர் ஷங்கரின் 'ஜீன்ஸ்' சினிமா தயாரிப்பு பற்றிய படமோ எனச் சில திரையுலக பிரபலங்களையும் நட்சத்திரங்களையும் நம்ப வைத்து வரவழைத்து, அவர்களுக்கு ஜீன்ஸ் துணி தயாரிப்பு பற்றிய டாகுமென்ட்டரி படத்தைப் போட்டுக் காட்டிக் கடுப்பேற்றியது, லக்ஷ்மண்-ஸ்ருதி குழுவினர் நடத்திய மகளிருக்கு மட்டுமேயான பிரத்யேக இசை நிகழ்ச்சியில், ஆண் நிருபருக்குப் பெண் போல மேக்கப் போட்டு அனுப்பியது, உயரமும் பருமனுமான விகடன் ஊழியர் ஒருவருக்கு சட்டை, அரை நிஜார் என ஸ்கூல் யூனிஃபார்ம் அணிவித்து, பள்ளிக்கூடம் ஒன்றில் முதல் வகுப்பில் கொண்டு போய்ச் சேர்த்தது என குறும்பு டீம் அடித்த கலாட்டாக்கள் வாராவாரம் வாசகர்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தின.

இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படு தோல்வி அடைய, ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. கலைஞர் மு.கருணாநிதி மீண்டும் தமிழக முதல்வர் ஆனார். ஊழல் வழக்குகளுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட் டார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஜெயித்து, மேயர் ஆனார் மு.க.ஸ்டாலின். அரசியல் திருப்பங்கள் நிறைந்த இந்த ஆண்டில், விகடனில் வெளியான பரபரப்புக் கட்டுரைகளுக்கும் பேட்டிகளுக்கும் குறைவே இல்லை.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 'உச்சி முதல் உள்ளங்கால் வரை'

காலப்பெட்டகம்

என்னும் பொதுத் தலைப்பில் தலை, கண், தோல், எலும்பு என மனித உடம்பு பற்றிய மருத்துவக் கட்டுரைகள், சமையல் பற்றிய தொடர், கல்லூரி கலாட்டாக்களை விவரிக்கும் 'இளமை காம்பௌண்ட்' எனப் பல புதிய பகுதிகளோடு, புதுமையான லே-அவுட்டில், 144 பக்கங்களுடன் கனமான புத்தகமாக வெளியாகத் தொடங்கியது விகடன். விகடன் பிரசுர விற்பனையில் அசுர சாதனை படைத்த சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!', தொடர்கட்டுரையாக வெளியானதும் இந்த ஆண்டில்தான்.

காலப்பெட்டகம்

குழந்தைகள் வளர்ப்பு முறை, படிப்பு, விளையாட்டு போன்றவை குறித்து, 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' என்னும் தலைப்பில் விகடனில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார் லதா ரஜினிகாந்த்.

தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய டி.என்.சேஷன் தனது வாழ்க்கையில் நடந்த பரபரப்பான சம்பவங்களை, இந்த ஆண்டு விகடனில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார்.

விகடனுக்கு வயது 70. இதை வழக்கம்போல் போட்டிகள், பரிசு மழை, கவியரங்கம் என 'வாசகர் திருவிழா'வாகக் கொண்டாடியுள்ளது விகடன். தவிர, விகடன் பிறந்த அதே 1926-ஆம் ஆண்டில் பிறந்த 1300 பேருக்குப் புத்தகங்கள், ஈஸிசேர்கள் எனப் பரிசுகள், மருத்துவ உதவித் திட்டம் ஆகியவற்றுக்குத் தனியாக ரூபாய் இரண்டு லட்சத்தை ஒதுக்கி, 'சீனியர்களுக்கு சியர்ஸ்!' சொல்லியுள்ளது விகடன்.

விகடன் அறிவித்த நாவல் போட்டியில், முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம் வென்ற 'அம்பாரி மாளிகை', இந்த ஆண்டில் தொடர்கதையாக வெளியாகியுள்ளது. தமிழ்ப் பத்திரிகை வரலாற்றிலேயே இன்றுவரை மிக அதிகத் தொகையைப் பரிசாகப் பெற்ற நாவல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்