Published:Updated:

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
இருவன்
ஓவியங்கள்:ஸ்யாம்
தொடர் கதை: ஒன்று

தோழர்... உங்கள் பர்ஸில் இருப்பது யாரின் புகைப்படம்?

பிரபாகரன், பிள்ளையார்பட்டி விநாயகர், இயேசு, அன்னை, சாய்பாபா, கருணாநிதி, ஜெயலலிதா, அப்துல் கலாம், காதலி, மனைவி, குழந்தை... என ஏதோ ஒன்று இருக்கலாம். என் பர்ஸில் இருப்பது மலர்விழி - தமிழவன் கல்யாண போட்டோ!

மெரூன் கலர் பட்டுப் புடவையில் மலர்விழியும், பட்டு வேட்டி - சட்டையில் தமிழவனும் அவ்வளவு அழகு. 'ஒளியிலே தெரிவது தேவதையா...' பின்னணியில் இசைந்த ஆர்கெஸ்ட்ரா பாடல், அப்படியே படிந்த ஒரு புகைப்படம். கறுப்புக் கண்ணாடிகள் அணிந்த முகங் களின் புன்னகையில், பெற்றோர்களின் ஆசியுடன் நிகழும் காதல் திருமணத்தின் பெருமிதம் இருக்கிறது. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்தப் பெரும் பேறு. ஆரஞ்சு வண்ண நட்சத்திரங்கள் உதிரும் வண்ணத் தாள் சுருட்டி, மணமகள் அறையில் கிடந்த எனது பரிசுப் பொருளை யார் அறிவீர்? அதில் இருந்தது என் காதல் தோழர்!

ஐஸ்வர்யா ராய் - கண்களுக்குத்தான் அழகி. அருந்ததி ராய் - மனசுக்கும் அழகி. சிலரை, இன்னும் சீக்கிரமே சந்தித்து இருக்கலாம் எனத் தோணும். சிலரை, சந்திக்காமலே இருந்திருக்கலாம் எனத் தோணும். மலர்விழி ஓர் அருந்ததி ராய். சீக்கிரமே சந்தித்து இருக்கலாம் தோழர்!

லர்விழியை எனக்கு அறிமுகப்படுத்தியது தமயந்தி அக்கா. அனுதினமும் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மின்சார ரயிலில், பொருள்வயிற் பிரியும் ஆயிரமாயிரம் மனிதர்களில் ஒருவன் நான். நீங்கள் என்னை ஏதேனும் சென்னை தெருக்களில் பார்த்து இருக்கலாம் தோழர். பி.ஏ., வரலாற்றைப் பாதியில் விட்டுவிட்டு, நீல் மெட்டல் ஃபனால்கா லாரியில் குப்பைகள் அள்ளும் இளைஞன் நான்.

அழுகிய காய்கறிகள், ஊசிப்போன பார்சல் சாப்பாடு, சரக்கு பாட்டில்கள், காண்டம் உறைகள்... என உதிர்ந்துகொண்டு இருந்த என் நாட்களில் நறுமணத்தின் சிறு தெய்வமாக மலர்விழி!

தொடர் கதை: ஒன்று

அரக்கோணத்தில் காலை 6.45 ரயிலில், ஒரு கம்பார்ட்மென்ட், எங்கள் நண்பர்கள் வட்டம். அது ஒரு தனி நாடு தோழர். தமயந்தி அக்காதான் சோனியா காந்தி, கணபதி சார்தான் மன்மோகன் சிங். அரட்டையில் தொடங்கி அந்தாக்ஷரியில் முடியும் எங்கள் பயணங்கள்!

ன்று காலை என்றால்... இப்படித்தான் இருந்திருக்கும்...

"டைம்ஸ் நவ்ல போட்டுப் பின்னி எடுக்கிறானுங்க... பார்த்தியா?" - கணபதி சாரோ, மோகனோ ஆரம்பிப் பார்கள்.

"ஆமாய்யா... யோக்கியமா இருந்தா உங்க தலைவரு, அந்த ஆளை ரிஸைன் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே?"

"ஆக்சுவலா... எந்திரனோட நிஜமான ரிசல்ட் என்னப்பா?"

"ரெய்னாவை ஏன் தலைவா டெஸ்ட்ல சேக்க மாட்றானுங்க?"

"லேண்டு பிரச்னை என்னாச்சு பிரதர்?"

"சுஜாதாவுக்குக் காய்ச்சல்" - எங்கெங்கோ தொடங்கி முந்தைய நாள் திருமதி செல்வம் வரை தடதடக்கும் அரட்டை!

ப்படி... ஆறேழு மாதங்களுக்கு முன் ஓர் அதிகாலை தோழர்!

மலரை நான் பார்த்தது அந்த புதன் கிழமை தான். 6.30-க்கே வந்து ஜூனியர் விகடன் வாங்கியபோது, தமயந்தி அக்காவோடு வந்தது மலர்விழி. கூலிங் கிளாஸ், கையில் சில்வர் ஸ்டிக்... மலர் விழி... விழிகளற்ற மலர்!

"மலரு... இவன்தான் தனசேகர். நீல் மெட்டல்ல வேலை பார்க்குறான்."

"ஆமாவா... வணக்கம் சார்!"

"ஏங்க... என்னை தனான்னே கூப்பிடுங்க!"

"டேய் தனா... இது மலர்விழிடா. சி.எம்.பி.டில டிக்கெட் கவுன்ட்டர்ல வேலை பார்க்குது. இனிமே நம்ம கம்பார்ட்மென்ட்லதான் வரும்!"

"நல்லதுங்க."

"சும்மா இல்ல தனா... மலரு செம சிங்கர் தெரியும்ல. இனிமே பாட்டுக்குப் பாட்டுல நீயெல்லாம் காலி!" - தமயந்தி அக்கா சொன்னதும், மலர் முகத்தில் குறு நகை.

தொடர் கதை: ஒன்று

லோ... எல்லாரும் கேளுங்க... வெள்ளிக் கிழமை ரஞ்சனிக்கு பர்த்டே... ஆளுக்கு 20 ரூபா" - தமயந்தி அக்கா அறிவிக்க, அத்தனை பேரும் கை தட்டினார்கள். "மொத்தமா கிஃப்ட் வாங்கிரலாம்..." - திடுதிப்பென்று வசூல்.

"இப்போது மணி ஒலிப்பது கா... குறில் அல்ல நெடில்!"-அந்தாக்ஷரி தொடங்கினால்... ஆரோக்கியம் அண்ணன்தான் அப்துல் ஹமீது.

அன்று பாட்டுக்குப் பாட்டில் மலர் கலந்துகொள்ளவில்லை. அத்தனை பேர் கூப்பிட்டும் கூச்சமும் குறுகுறுப்புமாக மறுத்தது.

"இப்போ பாடலை... திருவள்ளூர் ப்ரிட்ஜ்ல பிடிச்சுத் தள்ளிவிட்ருவேன்" - மோகனின் செல்ல மிரட்டலுக்கு, சிரித்தது. "அதெல்லாம் வேணாம். இப்போ நீ பாடலைன்னா, நான் குதிச்சுருவேன்" - தமயந்தி அக்கா சொன்னதும், "ஆமாவா..." என அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு பாட ஆரம்பித்தது மலர்,

"தெய்வீக ராகம்

தெவிட்டாத பாடல்

கேட்டாலே போதும்

சில நெஞ்சங்கள் வாழும்!"

தொடர் கதை: ஒன்று

ஹைய்யோ... மலருக்கு ஜென்ஸியின் தங்கச்சியின் குரல் தோழர். மிகச் சரியாக அந்தக் கணத்தில் எனக்குள் ஒரு பிரியம் பிறந்தது.

ய்யோ... கொடுமைடா! ஏரியா எம்.பி வீட்ல விசேஷம்னதும் நெனைச்சேன்... இன்னிக்கு லோடு எகிறிடும்னு! சீக்கிரமா சிங்கப்பூருக்குப் போயிரணும் தனசேகரு" - என்றான் மகேஷ்.

குப்பை லாரியின் பின்னால் தொங்கிக்கொண்டு இருந்த எனக்கு எதுவுமே தெரியவில்லை. மலரை நினைத்தாலே... சுவாசம் பூப்பூக்கும் தோழர். பார்த்த முதல் நாளே பரிசுத்தமானதைப்போல உணர்ந்தேன். மென் சோகம் இழையோட யுகங்களின் அழகில் மிளிர்ந்த முகமும், விரல்கள் பூத்தொடுக்க வழிந்த குரலின் வசீகரமும்... என்னை ஏதேதோ செய்தது தோழர். அடிக்கடி மலர் சொல்லும் அந்த 'ஆமாவா...' உறங்காத சங்கீதமாக என்னைக் கிறங் கடித்தது தோழர்.

மலர் விழி... நிறங்களற்ற உனது உலகில் நிரந்தர வானவில்லாக நான் வரலாமா?

சாயங்காலம்...

ஃப்ளாட்ஃபார்மில் யாரோ ஒரு கஞ்சா பார்ட்டியைப் போட்டுப் புரட்டிக்கொண்டு இருந்தார்கள். திமிறித் தள்ளும் கூட்டம். மூங்கில் கூடையில் திருட்டு வி.சி.டி விற்பவர்கள், ஹேர்பின், கர்ச்சீப், செல்போன் கவர் விற்கும் சிறுவர்கள், பிளாஸ்டிக் பூக்கள், பட்டாம்பூச்சிகள், ஹவுஸ் கிட் உண்டியல்கள், கொய்யாப் பழம், மல்லிப்பூ, - 'ண்ணா... ண்ணா'வெனக் கையேந்தி அலையும் பிள்ளைகள், பிச்சைக்காரப் பாடகர்கள்...

ரயில் நிலைய வாசலில் மலர்விழிக்காகக் காத்திருந்தேன் தோழர். பிங்க் நிற காட்டன் சுடிதார் சரசரக்க வந்தது. நல்லது... தமயந்தி அக்கா இன்னும் வரவில்லை.

"ஹலோ மலர்... நான் தனசேகருங்க."

"ஆமாவா..."

"நேத்து உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்தது மலர்."

"ஆமாவா... பொய்தானே?"

"சேச்சே... நீங்க மட்டும் மெட்ராஸ்ல மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டைனு எங்கியாச்சும் பொறந்திருந்தீங்கன்னா, இந்நேரம் 'சூப்பர் சிங்கர்'ல வின் பண்ணி, யுவன்ஷங்கர் மியூஸிக்ல பாடி இருப்பீங்க தெரியுமா?"

"அநியாயம் பண்ணாதீங்க தனா..." - இதழ் பிரித்து மலர் சிரித்தபோது, 'இந்தப் புன்னகை இவளுக்கு நிரந்தரமாக இருக்கட்டும்' எனப் பிரார்த்தித்தேன் தோழர்.

"ஹலோ... சீரியஸாத்தான் சொல்றேன் மலர்."

"என்னடா மலர்கிட்ட ஓவரா ஸீன் போடுற... வா மலரு!" - தமயந்தி அக்கா ஸ்பான்ஸரில் கம்பார்ட்மென்ட்டே மொளகா பஜ்ஜி வாசத்தில் நிரம்பியது.

ன்ன... பாட்டுக்குப் பாட்டு ஆரம்பிச்சுரலாமா... புதுசா ஒரு சின்னக் குயில் வேற வந்துருக்காங்க" - மலரைப் பார்த்துச் சிரித்தார் அப்துல் ஹமீது. சுற்றுப்படி மலருக்கு அடுத்து நான்...

"இப்போ மலர்விழிக்கு. மணி ஒலிப்பது ஏ... குறில் அல்ல நெடில்..."

"ஏதோ மோகம்

ஏதோ தாகம்

நேத்து வரை நினைக்கலியே

ஆச வெத மொளைக்கலியே

சேதி என்ன... வண்ணக் கிளியே...

ஏதோ மோகம்..."

"ஸ்டாப்... மணி ஒலிப்பது ம். ம அல்லது

மா..."

நான் மலர் விழியைப் பார்த்தேன். வெளியே தொடு வானில் மேகங்கள் எங்கோ ஓடிக்கொண்டு இருந்தன என் நினைவுகளைப்போல.

"மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்

பெறத் துடிக்குதே மனமே..."

"ஓ.கே... இப்போது மலருக்கு ஒலிப்பது மே..."

"ம்... மேகமே மேகமே

பால் நிலா காயுதே

தேகமே தேயினும்

தேனொளி வீசுதே..."

அத்தனை பேரும் கை தட்ட, சாந்தி விசிலே அடித்தது.

"சூப்பர்... தனாவுக்கு இப்போ தே..."

"ஹா.... தேவதையைக் கண்டேன்

காதலில் விழுந்தேன்

என் உயிருடன் கலந்துவிட்டாள்

நெஞ்சுக்குள்...."

"ஸ்டாப்... ஸ்டாப்... மலர் உனக்கு நெ..."

"நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே..."

து அந்தாக்ஷரி அல்ல தோழர்... என் வாழ்வின் வழிப் பாதை. விரல் பிடித்து விழியாக வாழ்ந்து காட்டக் கிடைக்கவிருக்கும் ஒரு வரம். யார் யாரோ கஷ்டப்பட்டு இத்தனை காலத் திரை இசையை எங்களுக்காகவே படைத்ததாய் தோன்றிய கணம் அது தோழர்.

தொடர் கதை: ஒன்று

அரக்கோணம் ரயில் நிலைய ஸ்டாண்டில் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தால், தமயந்தி அக்காவின் ஸ்கூட்டியில் மலர்... என்னைப் பார்த்ததுமே தமயந்தி அக்கா, "தனா வர்றான் மலரு... ரெண்டு பேரும் செம ஜோடி. போய் சுத்திப் போடுங்க. இன்னிக்கு கம்பார்ட்மென்ட்டே கண்ணுவெச்சுருச்சு" என்றது.

"ஆமாவா..." - மலர் கூச்சமாகச் சிரித்தது, தமயந்தி அக்காவின் வாய் முகூர்த்தம் பலித்துவிடக் கூடாதா என நினைத்தேன் தோழர்!

றுநாள் ரஞ்சனியின் பர்த்டே. ஆவடியில் ஒரு பேக்கரிக்கு மேலே, நட்சத்திரங்களும் பலூன்களும் பூத்துக்கிடந்த மொட்டை மாடியில் கூடினோம் தோழர். மலருக்காக புதுச் சட்டையில் போயிருந்தேன். மலரால் பார்க்க முடியாது என்கிற ஞாபகம் இதயத்துக்கு இல்லையே தோழர். நான் தனியே ஒதுங்கி நின்றேன். புடவையில் வந்தது மலர், அரக்கு கலரில் பூக்கள் கொட்டும் புடவை.

ரஞ்சனி கேக் வெட்டி, தமயந்தி அக்காவுக்கு ஊட்டிவிட்டாள். மலர்விழி என்னிடம் வந்தது, "வாங்க தனா, போய் கிஃப்ட் குடுப்போம்."

"கிஃப்ட்டா... அய்ய, நமக்கு அந்தப் பழக்கம்லாம் கிடையாது மலர். நீங்க போங்க... என்னை மாதிரி அல்லக்கை எல்லாம் கடைசியா வந்து கை குடுத்துட்டு, ரெண்டு தடவை டிபன் சாப்பிடுவோம்."

'ஹாஹ்ஹாஹ்ஹா..." - சிரித்தபடி தான் வாங்கி வந்த கிப்ஃட் பேக்கை எடுத்து, மோகனிடம் கொடுத்து, 'ஹேப்பி பர்த்டே. பிரேயர்ஸ் அண்ட் விஷஸ் ஃப்ரம் மலர் அண்ட் தனா' என எழுதி வாங்கி என்னிடம் நீட்டியது.

"நீங்க குடுங்க தனா!"

எனக்கு பொலக்கென்று கண்ணீர் முட்டியது தோழர். எப்படி வந்தது இத்தனை பிரியம்!

ரஞ்சனிக்கு கிஃப்ட் கொடுத்து, இருவரும் இருபுறம் நின்று சிரித்ததின் மேல் பேரன்பின் பேரொளியாய் கேமரா ஃப்ளாஷ் மின்னியது.

"நீ சிந்தும் ரத்தத்தினால்

தூய்மை ஆகிறேன்

நீர் பட்ட காயத்தினால்

குணமும் ஆகிறேன்

எந்நாளும் உன்னைவிட மாட்டேன்

என் யேசய்யா எந்நாளும்

உன்னைவிட மாட்டேன்" - ஒரு யாசகர், டேப்படித்தபடி பாடிப் போன பின்னணியில் மலர் வந்தது.

"மலர் ஒரு நிமிஷம்... டிரெயினுக்கு 10 மினிட்ஸ் இருக்கு... இப்பிடி உட்காரலாமா?"

"ஆமாவா..."

"சும்மா தோணுச்சு... உனக்காக இதை வாங்கினேன்."

நான் எடுத்துத் தந்த இரண்டு மீன்கள் துள்ளும் ஹேர்க்ளிப்பை தடவித் தடவிப் பார்த்தது.

"ச்சும்மா, ஹேர் க்ளிப்தான்."

"எதுக்கு இதெல்லாம் தனா..?"

"ஏன் நான் தரக் கூடாதா?"

"ச்சேச்சே... அப்படி இல்ல" - சட்டென்று தலையில் இருந்ததை எடுத்துவிட்டு, புது ஹேர் க்ளிப்பை குத்திக்கொண்டு தலை சாய்த்துக் கேட்டது,

"நல்லாருக்கா தனா?"

"ஏய்... பின்னுது!"

"ஆமாவா..."

று நாள் ரயிலில் இறங்கி நடக்கும்போது, வேகமாகப் பின்னால் வந்து என் சட்டையை இழுத்த மலர், என் கையில் எதையோ திணித்தது தோழர்.

"எங்களுக்கு மட்டும் தோணாதா... வெச்சுக்கோங்க தனா. ஈவினிங் பார்க்கலாம்."

அது 'தனா' என எம்ப்ராய்டரி செய்த கர்ச்சீப் தோழர். நீல வண்ணத்தில் இழையோடிய எழுத்துக்களின் மேல் ஒரு பிறை நிலா. இதுவரை நிமிர்ந்து நாணா நிறை நிலா. இருளும் ஒளியுமற்ற மலரின் உலகில், இரவும் பகலுமாக நான் ஏந்தி தடம் காட்டப்போகும் தனி நிலா. மலர்... உன்னிடம் சீக்கிரம் என் காதலைச் சொல்வேன்!

ம்பார்ட்மென்ட்டில் ஜாஃபர் வீட்டு பிரியாணி மணந்தது. "மணி ஒலிப்பது எ... நெடில் அல்ல குறில்."

மலர்தான் ஆரம்பித்தது.

"எனக்குப் பிடித்த பாடல்

அது உனக்குப் பிடிக்குமே

என் மனது போகும் வழியை

உந்தன் மனது அறியுமே..."

"மனது... ம... குறில்" என்றார் ஆரோக்கியம் அண்ணன் என்னிடம்.

"மலரே மௌனமா...

மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா...

பேசினால் ஓயுமா அன்பே

மலரே..." என நான் சிலிர்த்து இழுக்க, களுக்கென்று மலர் இதழ் உடைந்து சிரித்தது. கை விரல்களால் காற்றில் கோலம் போட்டு, சிணுங்கிச் சிரித்தது தோழர்.

பொசுக்கென்று விதிகள் மறந்து,

"சங்கீத ஸ்வரங்கள்

ஏழே கணக்கா,

இன்னும் இருக்கா..." என இசை வழிந்தேன் தோழர்.

மலர் இன்னும் சிரிக்க, "ஓய்... என்ன இது போங்கு ஆட்டம்? செல்லாது... செல்லாது. ரெண்டு பேரும் தனியா அசத்தப்போவது யாரு நடத்துறீங்களா?" என தமயந்தி அக்கா சொல்ல, வெட்கம் பூசியது மலர்.

"ஆரோக்கியம் சார், தனா அவுட்டு. மலரைப் பாடச் சொல்லுங்க" என்றது அக்கா.

"மலர் 'த' வுல ஆரம்பி..."

புன்னகை கோத்த மலர், "தம்தன தம்தன தம்தனா தம் தனா..." என இழுத்து மறுபடியும் சிரிக்க, அத்தனை பேரும் சிரித்தனர் தோழர். புன்னகைதான்

மலருக்கு விழி. எனக்கு இனி மொழி. இதுதான் எங்களின் காதலுக்குப்

பிள்ளையார் சுழியோ?

லருக்குச் சொல்வதற்கு முன் இதை தமயந்தி அக்காவிடம் சொல்ல வேண்டும் என நினைத்திருந்தபோதுதான், நீல் மெட்டலில் எனக்கு டிரெயினிங் தோழர்.

'குப்பை அள்ளியது போதும்' எனப் பெரிய மனது பண்ணி, எனக்கு சூப்பர்வைஸர் பிரமோஷன் போட்டு, 15 நாட்கள் டிரெயினிங். இரண்டு வாரங்கள் சென்னையிலேயே தங்க வேண்டும். மலர் வந்த நேரம் எனக்கு பிரமோஷன் தோழர்.

15 நாட்களுக்குப் பிறகு...

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கனவுகள் துள்ளக் காத்திருந்தேன். முதலில் தமயந்தி அக்காவிடம் சொல்ல வேண்டும். அடுத்து மலரிடம்...

'டேய்ய்ய்ய்... தனா!"

திரும்பினால் தமயந்தி அக்கா.

"அக்கா..."

"எப்படா வந்த?"

"இன்னிக்குத்தான்க்கா."

"மலர்தான் உன்னைத் தேடிட்டே இருந்துச்சு... உனக்கு ஒரு சர்ப்ரைஸ்!"

"என்னக்கா?" எனக்கு விழி மலர்ந்தது. அக்கா கைப்பையில் இருந்து ஒரு இன்விடேஷனை எடுத்துக் கொடுத்தது. மலருக்குக் கல்யாணம்!

"லவ் மேரேஜ்டா. அந்தப் பிள்ளை உன்கிட்ட நேர்ல இன்விடேஷன் குடுக்கணும்னுசொல்லிட்டே இருந்துச்சு."

பத்திரிகையைப் பிரித்துப் பார்க்கக்கூடத் தோணாமல், உறைந்து நின்றேன் தோழர்.

தொடர் கதை: ஒன்று

"மணி ஒலிப்பது யா... குறில் அல்ல நெடில்..."

"யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரோ நெஞ்சை இங்கு யார் சொல்வாரோ!"

மெரூன் கலர் பட்டுப் புடவையில் மலரும், பட்டு வேட்டி - சட்டையில் தமிழவனும் அத்தனை அழகாக நின்றிருந்தார்கள். கிஃப்ட்டாக ஒரு வாக்மேன் வாங்கிப் போனேன் தோழர்.

"உங்களுக்குத்தான் கிஃப்ட் தந்து பழக்கமே இல்லையே... எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி தனா" - சிரித்தது மலர்.

"நல்ல விஷயங்களை மிஸ் பண்ணிடக் கூடாது இல்ல..."

"ஆமாவா..." எனச் சிரித்த மலர், "தமிழ்... இதான் தனா. பெஸ்ட் சிங்கர்" என்றது கணவனிடம்.

"உங்களைப்பத்தி மலர் நிறைய சொல்லி இருக்கு சார்" என்றபடி தமிழவன் என்னைப் பிரியம் பொங்கும் விரல்களால் தடவித் தடவிப் பார்த்தார். அவரும் பார்வையற்றவர் தோழர்!

தன் பிறகு மலர் ரயிலில் வருவது இல்லை தோழர். தமிழவனும் மலரும் சென்னையிலேயே வீடு எடுத்துத் தங்கிவிட்டார்களாம்.

இப்போது நான் ஏன் அந்தாக்ஷரியில் கலந்துகொள்வதே இல்லை என்பது தமயந்தி அக்காவுக்கு மட்டும்தான் தெரியும். இப்போது உங்களுக்கும் தோழர்!

தொடர் கதை: ஒன்று
தொடர் கதை: ஒன்று
(இன்னும் ஒன்று...)