மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 21

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 21

மனம் கொத்திப் பறவை! - 21
மனம் கொத்திப் பறவை! - 21
மனம் கொத்திப் பறவை! - 21

ராகேஷ் கண்ணா, என்னுடைய ஆங்கில மொழிபெயர்ப்பாளர். வட இந்தியப்

பெயருடன் தமிழ்நாட்டில் வாழும் அமெரிக்கர். சென்னையில் நண்பர்கள் சந்தித்துப் பேசக்கூடிய ஒரே இடமாக உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன் இருந்தது. அதை அரசாங்கம் மூடிவிட்டது. வேறு எங்கே சந்திக்க? தி.நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் உள்ள பப்-ஐ சொல்லி அங்கே சந்திக்கலாமா என்றார். பப் என்றதும் தயங்கினேன். குடிப்பதை நிறுத்திவிட்டு பப் பப்பாக அலையக் கூடாது அல்லவா? வியாழக் கிழமைகளில் அந்த பப்பில் பழைய சினிமா பாடல்களின் கரோக்கி உண்டு என்று ஆசை காட்டினார் ராகேஷ். பழைய பாடல்களின் தீவிர ரசிகன் நான். போய்ப் பார்த்தால், முக்கால்வாசி சினிமா நண்பர்கள். என் கையில் இருந்த குளிர்பானத்தைப் பார்த்துவிட்டு 'ரம்மா?' என்று கேட்டார் பார்த்திபன். 'பனை மரத்தின் அடியில் உட்கார்ந்து பாலைக் குடித்தாலும் கள் என்றுதானே சொல்வார்கள்?' என்று சொல்லிச் சிரித்துவிட்டு 'கோக்' என்றேன். 'நானும் லிம்காதான்!' என்று சிரித்தார். இப்படி வருபவர்கள் எல்லாம் கோக்கும் லிம்காவும் குடித்தால், பப் முதலாளி திவாலாகிவிட மாட்டாரா? 'வருடம் ஆக ஆக இளமை கூடிக்கொண்டே போகிறதே... என்ன ரகசியம்?' என்று கேட்டேன். 'உள்ளுக்குள் பயணம் செய்கிறேன்!' என்றார். தியானமாக இருக்கும். தியானம்தான் முகப் பொலி வையும் இளமையான தோற்றத்தையும் தரக்கூடியது.

மனம் கொத்திப் பறவை! - 21

பாடகரின் பெயர் ஸ்ரீராம். மனிதர் மூன்று மணி நேரம் அசராமல் பாடுகி றார். அங்கு இருந்த அனைவரும் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு, உருகி உருகிக் கேட்டார்கள். ஒரு பிரபல கதாநாயகி நடிகையும் இருந்தார். நடிகைகளின் பெயரைச் சொல்லவே பயமாக இருக்கிறது. வேண்டாம்! என் தமிழ் சினிமா இசை ரசனை விஸ்வநாதன் -ராமமூர்த்தி காலகட்டத்தோடு முடிந்து விட்டது.

பழைய சினிமா பாடல்கள் என்றதும் நான் எம்.கே.டி., பி.யூ.சின்னப்பா என்றெல்லாம் நினைக்கும் அளவு மோசம் இல்லை. ஆனால் கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் -ராமமூர்த்தி போன்றவர்களையாவது எதிர்பார்த்தேன். ஏ.எம்.ராஜா மற்றும் பி.பி.ஸ்ரீனிவாஸின் தீவிர ரசிகன் நான். பப் மெனுவில் அன்று இவர்களின் பாடல் இல்லை. எல்லாமே 80-களின் பாடல்கள். 'எப்படி... எப்படி?' என்று உற்சாகத்துடன் என்னைக் கேட்டுக்கொண்டு இருந்தார் பார்த்திபன். பயங்கரம், தூள், ரகளை என்று எனக்குத் தெரிந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

It was a fantastic crowd என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அந்த நிலை யில் இருந்தார்கள் அவர்கள். பலரும் பாட்டுக்கு ஆடிக்கொண்டும் இருந்தார் கள். ஆனால், என் மனசெல்லாம் 80-களுக்கு முந்தைய பாடல்களில் இருந்தது. 'அமுதும் தேனும் எதற்கு?', 'அன்பு மனம் கனிந்த பின்னே', 'தேவன் கோயில் மணி ஓசை', 'யார் யார் அவர் யாரோ', 'நினைக்கத் தெரிந்த மனமே', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'பார்த்தால் பசி தீரும்', 'காலங்களில் அவள் வசந்தம்' என்று நூற்றுக்கணக்கான சாகாவரம் பெற்ற பாடல்களைக் கேட்க ஆசைப் பட்டேன். பப்பில் இந்தப் பாடல்களையும் வாரத்தில் ஒரு நாள் சேர்த்தால் என்னைப்போன்ற 'பழைய' ரசிகர்களுக்குப் பலன் உண்டு. பலரும் தமக்குப் பிடித்த பாடலைக் கேட்டு சீட்டு கொடுத்துக்கொண்டு இருந்ததால், எனக்குப் பிடித்த ஒரு பாடலுக்கு ('குணா'/கண்மணி) விருப்பம் கொடுத்தேன். துரதிர்ஷ்டம். கரோக்கியில் அது இல்லை.

இன்னொரு பாடல் கொடுத்தேன். 1975-ல் வெளிவந்த 'பட்டிக்காட்டு ராஜா' என்ற படத்தில் எஸ்.பி.பி. பாடிய 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்' என்ற பாடல். அது ஏன் எனக்கு அப்படிப் பிடித்துப்போனது என்று தெரியவில்லை. எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை. இசை ரசனை தர்க்கத்துக்கு அப்பாற்பட்டது. அது ஒரு நாஸ்டால்ஜியா. கடந்த காலத்துக்குப் பயணிக்கும் கால எந்திரம்.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் படிக்கும் என் ஊர் நண்பர்களைச் சந்திக்கப் போகும்போது, மால் ரோட்டின் முனையில் இருந்த ஒரு தேநீர்க் கடையில் அந்தப் பாடலை நூற்றுக்கணக்கான தடவை கேட்டு இருக்கிறேன். என் முதல் காதலை அனுபவம்கொண்டதும் அப்போதுதான். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஊரை விட்டுத் தள்ளியிருக்கும் அந்தக் கல்லூரி. போகும் வழியில் முந்திரித் தோட்டங்களும் என் தேவதை படித்த கல்லூரியும் உண்டு. கல்லூரிக்குப் போகாமல், எந்த நேரமும் முந்திரிக் காட்டில் ஸாரி, ஸாரி... சரஸ்வதி மகால் நூலகத்தில் பழியாகக் கிடப்பேன்.

நான் இருந்தது வெங்கடேசப் பெருமாள் கோயில் தெரு. அந்த நாலு கால் மண்டபம், காசிக் கடைத் தெரு, ராணி வாய்க்கால் சந்து, மேல வீதி, அதையும் தாண்டி பிருந்தாவனம் என்ற அருமையான தோட்டம். அதில் இருந்த கிருஷ்ணன் கோயில், சிவகங்கைத் தோட்டம் என்று சுற்றாத இடம் இல்லை. இன்னொரு அற்புதம், பெரிய கோயில்! 20 வயதில் அப்படி ஓர் இடத்தில் பகல் முழுவ தும் அமர்ந்து, உலக இலக்கியங்களைப் படிக் கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்?

மனம் கொத்திப் பறவை! - 21

தஞ்சாவூரில் ஓர் அருமையான பொது நூலகம் உண்டு. அதுதான் என் alma mater என்று சொல்லலாம். அங்கேதான் பிரக்ஞை என்ற பத்திரிகை அறிமுகம் ஆயிற்று. கமல் ஹாசன் ஒரு பேட்டியில் தன்னை பிரக்ஞை வாசகன் என்று சொன்னதால், அதைத் தேடிப் பிடித்துப் படித்தேன். நடை கடுமையாக இருக்கும். அதை நடத்திக்கொண்டு இருந்த ரவிசங்கரை தி.நகர் மகாலட்சுமி தெருவில் உள்ள அவர் வீட்டுக்குத் தேடிச் சென்று பார்த்தேன். அந்தப் பத்திரிகையில்தான் அம்பை, வண்ணநிலவன், ந.முத்துசாமி போன்றவர்கள் எழுதிக்கொண்டு இருந்தார்கள்.

'உன்னை நான் பார்த்தது' என்ற பாடல் இப்படி எனக்குள் ஆயிரக்கணக்கான நினைவலைகளை எழுப்புகிறது. ஆனால், தி.நகர் பப்பின் கரோக்கியில் அந்தப் பாடல் இல்லை.

சினிமா பாடல் என்று வரும்போது, பழசுக்கும் புதுசுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசமும் ஞாபகம் வந்தது. பழைய பாடலில் 'மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ, மனைவி என்று ஆகும் முன்னே நெருங்கிடலாமோ?' என்று காதலி பாடுவாள். இன்னொரு பாடலில் 'உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே' என்று காதலன் பாடுவான். இப்போது காலம் மாறிவிட்டது. 'டாடி மம்மி வீட்டில் இல்லே, தடை போட யாரும் இல்லே, விளையாடுவோமா உள்ளே தில்லானா' என்று பெண் ஆணை அழைக்கிறாள்!

11 மணிக்கு பப்பில் இருந்து கிளம்பியபோது அங்கே பத்திரிகையாளர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டேன். நல்ல வேளை, அப்படி இருந்திருந்தால் என்னோடு பேசிக்கொண்டு இருந்த இரண்டு தேவதை களைப்பற்றி எழுதிவிடுவார்கள்!

தஞ்சாவூர் என்றால், எனக்கு கும்பகோண மும் ஞாபகம் வருகிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த பரிசாரகன் ஒருவன், மோகனாங்கி என்ற தாசிக்காக ஒரு கோயிலில் காத்திருந்தான். அவள் வர நேரமாகவே தூங்கிவிடுகிறான். இந்த நிலையில், அகிலாண்டேஸ்வரியை நினைத்துத் தவம் இருந்த ஒருவனுக்கு அருள் புரிய வந்த ஈஸ்வரி, தன் வாய்த் தாம்பூலத்தை அவனிடம் கொடுக்க, அவனோ அவளை யாரோ என நினைத்துத் துரத்திவிடுகிறான். அப்போது அந்தக் கோயிலில் படுத்து இருந்த பரிசார கனிடம் தன் தாம்பூலத்தைக் கொடுத்துத் தின்னச் சொல்கிறாள் ஈஸ்வரி. உறக்கக் கலக் கத்தில் இருந்த அவனும் அதை வாங்கி உண்டு விடுகிறான். அந்தக் கணத்தில் இருந்து அவன் காளமேகன் என அறியப்பட்டான். தஞ்சாவூர்க்காரர்கள் இயல்பாகவே வித்யா கர்வத் துக்கும் பரிகாசத்துக்கும் பேர் பெற்றவர்கள். காளமேகம் அதில் உச்சம். கடவுளையே நிந்தாஸ்துதி செய்யக்கூடியவன். நிந்திப்பதுபோல் இருக்கும்; ஆனால், இன்னோர் அர்த்தத்தில் துதியாக இருக்கும். ஓர் உதாரணம்...

கண்டீரோ பெண்காள்!
கடம்பவனத்து ஈசனார்
பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார்
எண்திசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே
நெருப்பையிட்டார்
அக்காளை யேறினாராம்.

ஈசன் கங்கையைச் சுமந்தது, தன் கையில் (தங்கை) மழுவை ஏந்தியது, ரிஷப வாகனத்தில் (காளை) ஏறியது ஆகியவற்றைத்தான் இப்படிப் பாடியிருக்கிறார். அடியேனும் தஞ்சாவூர்க்காரன் என்பதை நினைவூட்டுகிறேன்!

மனம் கொத்திப் பறவை! - 21

ரு நாள் ஆசிஷ் நந்தியும் நானும் டெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கே வந்தார் ஜாய் கோஸ்வாமி. வங்காளத்தில் இன்று தாகூர் அளவுக்குக் கொண்டாடப்படும் கவிஞர் அவர். ஆசிஷ் நந்தியின் கையில் இருந்த என்னுடைய நாவல் 'ஸீரோ டிகிரி'யின் ஆங்கிலப் பிரதியைப் பார்த்துவிட்டு, "இந்தப் புத்தகத்தை சமீபத்தில் பார்த்திருக்கிறேனே?" என்று யோசனை செய்தவர், "ஆங், சென்ற வாரம் என் மகள் வாங்கி வந்தாள்" என்றார். அப்போதுதான் நான் அவரை முதன்முதலாகச் சந்திக்கிறேன். அது ஓர் எழுத்தாளனுக்கு மறக்க முடியாத தருணம். ஒரு சர்வதேச இலக்கியக் கருத்தரங்குக்காக அங்கே நாங்கள் கூடியிருந்தோம். ஜாயின் பேச்சையும் கவிதையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர்கூடவே அரை டஜன் பேர் இருந்தார்கள். அவர்களும் சாதாரண ஆட்கள் கிடையாது. சர்வதேச அரங்கில் பிரபலமான கவிஞர்கள், நாவலாசிரியர்கள்.

ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தை) மொழிபெயர்த்திருக்கும் ஜாய் கோஸ்வாமி யின் கவிதைகளைச் சமீபத்தில் படித்த போது, அந்தச் சந்திப்பு எனக்கு ஞாபகம் வந்தது. ஜாய்க்கு போன் போட்டுச் சொல் லலாம் என்றால் முடியாது. அவர் கைபேசி உபயோகிப்பது இல்லை. கணினியும் கிடையாது. தபால் மூலம் கடிதம் எழுதலாம். அதுசரி, இதுபோல் நம் தமிழ்க் கவிஞர்களை வங்கத்துக்குக் கொண்டு செல்வது எப்போது? அதற்கு முதலில் ஆங்கிலத்தில் கிடைத்தால்தானே மற்றதைச் செய்ய முடி யும்? தாகூரின் கீதாஞ்சலியையும் பாரதி யின் கவிதைகளையும் படித்துப் பாருங்கள். தாகூரைவிட, பாரதி எவ்வளவோ உயரத்தில் இருப்பது தெரியும். ஆனால், தாகூருக் குக் கிடைத்த நோபல் பாரதிக்குக் கிடைக்க வில்லை. காரணம், பாரதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு இல்லை.

ஜாய் கோஸ்வாமியின் கவிதை ஒன்று...

'நீ மூச்சைப் பிடித்துக்கொண்டு
தண்ணீருக்குள் மூழ்கி
என் கண்களைத் தேடுகிறாய்
மூடிய எனது விழிகளின் மீது
அழுந்துகின்றன உன் உதடுகள்

மனம் கொத்திப் பறவை! - 21


எனக்கு நினைவு வருகிறது
என் ஓநாய் வாழ்க்கை,
என் தேள் வாழ்க்கை,
என் மலைப் பாம்பு வாழ்க்கை
என் கொலையாளிகளின் வாழ்க்கை,
காட்டில் பதுங்கியிருந்த வாழ்க்கை
ஒருகாலத்தில் உன்னை முத்தமிடுவதாக
நான் வாக்குறுதி கொடுத்திருந்தேன்
காலங்கள் பல கடந்து
அதை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.
இப்போது யாரும்
வரப்போவது இல்லை,
உனது தலை மட்டும்தான்
என் மடியை நோக்கித் தழைகிறது!'

மனம் கொத்திப் பறவை! - 21
மனம் கொத்திப் பறவை! - 21
-பறக்கும்...