மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 45

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 45


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் நானும்! - 45
நீயும் நானும்! - 45
நீயும் நானும்! - 45
நீயும் நானும்! - 45
கோபிநாத், படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் நானும்! - 45

டகங்களில், மேடைகளில், கலந்தாய்வுகளில் எனப் பல இடங்களிலும் இப்போது

அடிக்கடி பேசப்படும் விஷயம்... அடுத்த வல்லரசு எது? சர்வதேச அளவிலான நோக்கர்களும், வல்லுநர்களும் பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் ஏதோ ஒன்றுதான் அடுத்த வல்லரசு என்று ஆரூடம் சொல்கின்றனர்.

கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை அடுத்த வல்லரசு ஜப்பான் என்று சொல்லப்பட்டது. இப்போது அதிகம் பேசப்படுவது இந்தியாவும் சீனாவும்தான். ரொம்ப நாள் வரைக்கும் வறுமை பற்றியே அதிகம் பேசிக்கொண்டு இருந்த இந்தியச் சமூகம், இப்போது தனது வல்லரசு மனோபாவத்தை வெளிப்படையாகப் பேசுகிறது.

உலக மயமாக்கலுக்குப் பிறகு... புழங்கும் பணம், அதிகரித்திருக்கும் வியாபாரம், தனி நபரின் வருமானம், பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டு இருக்கும் கணிசமான வளர்ச்சி போன்ற பல காரணிகள் நாமும் விரைவில் வல்லரசாகப் போகிறோம் என்ற மனோநிலையைத் தெரிந்தோ தெரியாமலோ பெரும்பாலானவர்களின் மனதில் விதைத்து இருக்கிறது.

நீயும் நானும்! - 45

ஆனால், ஒரு வல்லரசு தேசத்தின் தகுதி என்ன? எல்லார் கையிலும் பணம் இருப்பதா? மூன்று வேளை உணவு கிடைப்பதா? உலக அரசியலில் அதிகாரம் செலுத்துவதா? உலக வங்கியிடம் அளவில்லாமல் கடன் வாங்குவதா? அணு ஆயுதம் வைத்திருப்பதா? அனுமதி இல்லாமல் அண்டை நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதா? எதுதான் வல்லரசு தேசத்தின் தகுதி?

இன்றைக்கு வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் 3.22 மில்லியன் இந்திய மூளைகள் இருக்கின்றன. அமெரிக்க டாக்டர்களில் 38 சதவிகிதம் பேர் இந்தியர்கள். நாசாவில் பணிபுரியும் அறிஞர்களில் 36 சதவிகிதம் பேர் இந்தியர்கள். உலகையே கட்டி ஆளும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியர்களில் 34 சதவிகிதம் பேர் இந்தியர்கள்தான். அமெரிக்காவில் மட்டுமல்ல... உலகெங்கும் உள்ள பல நாடுகளில், அந்த நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் இந்திய மூளைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.

உலகெங்கும் இந்தியர்கள் அறிவு ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைவைத்து, வல்லரசு இலக்கை நெருங்கிவிட்டதாக வைத்துக்கொள்ளலாமா? ஒரு தனி நபர், தான் வாழும் சமூகத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் எந்த அளவு கரிசனத்தோடு இருக்கிறார் என்பதுதான் இந்தியாவை வல்லரசாக்கும் வாசலைத் திறந்துவைக்கிறது.

படிப்பைத் தாண்டி, செய்யும் பணியைத் தாண்டி, இந்தியா என்கிற ஒட்டு மொத்த தேசத்தின் நிலை என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள நம்மில் எத்தனை பேருக்கு ஆசை இருக்கிறது? நாகாலாந்து, மிசோரம் மக்களின் நிலை என்ன? காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன? இந்திய - சீன எல்லைப் பிரச்னை என்ன? அருணாச்சலப்பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்று அந்த நாடு சொல்வதன் அர்த்தம் என்ன? இப்படி எத்தனையோ விஷயங்களோடு நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால் கைதட்டவும், தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தைத் தாக்கினால் டி.வி. பார்க்கவுமாக தேசத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கிற மனோபாவம்தான் நம் எல்லோருக்கும் இருக்கிறது!

நீயும் நானும்! - 45

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுகிற நாம், தேவையான பல விஷயங்களை அறிந்துகொள்ள முனைவது இல்லை. 'அது எனக்குத் தேவை இல்லாதது' என்று முடிவு செய்துவிட்டு, அரசியலை விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். என் வேலை, ஒழுங்காகப் படிப்பது, கொடுத்த வேலையைச் சரியாகச் செய்வது என்று ஒதுங்கிக்கொள்கிறோம்.

வல்லரசு தாகத்துக்கு இது போதுமா? 60-களில் இருந்து 70 வரை அமெரிக்க மக்கள் ஒன்று கூடி உழைத்த உழைப்பின் பின்னணியில், தேசத்தின் வளர்ச்சி என்ற மாபெரும் நோக்கம் இருந்தது. ஐ.நா சபையையும் உலக வங்கியையும் ஆட்டிவைக்கிற அதிகாரம் அமெரிக்காவுக்குக் கிடைத்ததன் பின்னணி யில், அரசியல் மட்டும் இல்லை... உலகின் தலைவனாக உயர வேண்டும் என்ற தனி மனித வேட்கையும் இருந்தது.

'அதான், எல்லாம் நல்லா இருக்கே... தியேட்டரில் கூட்டம் இருக்கிறது. தங்கம் கத்தரிக்காய் மாதிரி விற்கிறது. தீபாவளி பட்டாசு வாங்கக் கூட்டம் அலை மோதுகிறது. காபி ஷாப்பில் இளைஞர்களும் யுவதிகளும் இங்கிலீஷ் பேசுகிறார்கள். அப்புறம் என்ன... வல்லரசாகிவிடலாம்!' என்று மேம்போக்காக முடிவு செய்தால், ஏறி மிதித்துவிட்டுப் போக சீனா எதிரில் நிற்கிறது.

70-களை இந்தியாவின் பொற்காலம் என்று சொல்வார்கள். சமூக, பண்பாட்டுத் தளங்களில் மிகச் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்ட காலம் அது. தேச விருத்தியில் இளைஞர் கூட்டம் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக்கொண்ட காலம். எண்ணங்களில் புரட்சியும் சிந்தனைகளில் சமூக நோக்கும் தெறித்த காலம். அப்படியான இன்னொரு கோல்டன் பிரீயடில்தான் இப்போதும் உட்கார்ந்து இருக்கிறோம். ஆனால், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நாடகம் பார்க்கிற மனோநிலையோடு அமர்ந்திருக்கிறோம் என்பதுதான் அச்சமூட்டுகிறது.

கிராமத்துக்கும் நகரத்துக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. வேலை தேடிப் பெருநகரங்களுக்குப் படை எடுப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. சர்வதேச சமூகத்துடன் கணினி வழியாக ஒரு பிரிவு உரையாடிக்கொண்டு இருக்கும் அதே வேளையில், விவசாயம் செத்துப்போனதால், தன்னையும் மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளும் அதிகரித்து இருக்கிறார்கள்.

நீயும் நானும்! - 45

பெருநகரத்தின் வண்ண ஒளி விளக்குகளுக்கு மத்தியில் மெல்லிய இசை கேட்டுக்கொண்டே லேப்-டாப்பில் சிலாகித்துக்கிடக்கும் இளைஞனின் காதுகளுக்கு வல்லரசு இந்தியாவின், வயிற்றுப் பசி சத்தம் விழவே இல்லை.

60 சதவிகிதம் மக்கள் நம்பி இருக்கும் விவசாயம் வீழ்ந்துகொண்டே இருப்பதைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல், வெறும் அரை சதவிகிதம் பேர் பணி செய்யும் ஐ.டி. கட்டடங்களை அண்ணாந்து பார்த்து, 'அடேயப்பா!' சொல்லி நாமே மார்தட்டிக்கொள்கிறோம்.

பள்ளியில் படிக்க வேண்டிய வயதில் 4 கோடிக் குழந்தைகள் பள்ளிக்கூடத்தை, இன்னும் எட்டிப் பார்க்கவே இல்லை. 47 சதவிகித குழந்தைகளுக்கு இன்னமும் ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை. உயிரைக் கொல்லும் ஹெச்.ஐ.வி-யின் வீரியம் இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் சரி செய்வது அரசாங்கத்தின் வேலை என்று இனியும் தொடர்ந்து பார்வையாளனாக இருப்பதில் அர்த்தம் இல்லை. அடுத்து, இந்தியா என்ன செய்யப் போகிறது என்று உலகம் காத்துக்கிடக்கிறது. இனியும், மாசக் கடைசி மனோபாவத்தோடு சுருங்கிப்போக வேண்டியது இல்லை.

மேற்சொன்ன பிரச்னைகள் வேறு எந்த தேசத்தில் இருந்தாலும், அது மிகப் பெரிய சவால்தான். ஆனால், உலகின் மாபெரும் இளைஞர் சக்தியை வைத்திருக்கும் இந்திய தேசத்துக்கு அவை ஒரு பிரச்னை இல்லை. மக்கள் தொகையில் பாதிப் பேரை இளைஞர்களாகக்கொண்டு இருப்பதைத் தவிர, வேறென்ன தகுதி வேண்டும் ஒரு வல்லரசுக்கு!

உண்மையில், ஒரு வல்லரசு தேசத்துக்கு உரிய எல்லா தகுதிகளையும் வைத்துக்கொண்டு, அதை அடைய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.உலகத்தையே கட்டி ஆளுகிற அறிவையும் அதிகாரத்தையும் வைத்திருக்கிற இந்திய இளைஞர் கூட்டம், தேச வளர்ச்சி என்ற நீரோட்டத்தில் தன்னை நேரடியாக இணைத் துக்கொள்கிறபோது, வல்லரசு என்ற அதிகாரம் தானாக வந்து சேரும்.

அடைத்துவைத்திருக்கிற ஜன்னல்களைத் திறங்கள்... இந்த தேசத்தின் தெருவெங்கும் கொட்டிக்கிடக்கிற உழைப்பையும் ஞானத்தையும் ஒன்றிணையுங்கள், சமூகத்தின் அத்தனை தளத்தையும் சமமாக்குங்கள்.

இத்தனை இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால், வரலாறு நம்மைக் கேலி பேசிவிடும். பலம் படைத்தவன்தான் அதிகாரம் செய்ய வேண்டும். உலகின் மிகப் பெரிய இளைஞர் சக்தியை வைத்திருக்கிற இந்தியாதான், உலகத்தை அதிகாரம் செய்யத் தகுதியான தேசம்... அந்த நினைப்பும் நம்பிக்கையும் நம் அனைவரின் நெஞ்சுக்குள்ளும் எரியட்டும்!

இந்த தேசத்தின் கோளாறுகளுக்குக் கவலைப்படுவதையும் கண்மூடித்தனமாக அதை விமர்சனம் செய்வதையும் நிறுத்திவிட்டு, களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த உணர்வும் தீவிரமும் உலக நாடுகளுக்கு உரக்கச் சொல்லும், எந்த தேசம் வல்லரசு என்று!

என்னைப் பொறுத்தவரை அறிவார்ந்த, சமூகப் பார்வைகொண்ட இளைஞர்களைக் கையில் வைத்திருக்கிற இந்திய தேசம்தான் என்றைக்கும் வல்லரசு!

ஜெய் ஹிந்த்!

நீயும் நானும்! - 45
நீயும் நானும்! - 45
- நிறைந்தது