'பீடில்ஸி'ன் பிரசித்தத்தில், விழி பிதுங்கி நின்றது பிரபஞ்சம்; வாலிபத்தை வசமிழக்கச் செய்வதில் DRUGS தோற்றன; DRUMS வென்றன! நாளங்களில் நெருப்பு மூட்டவல்ல தாளங்களில் - வெளிப் போந்தன அவர்களது வர்ண மெட்டுகள்; நில நடுக்கம் வராமலேயே, நிலம் நடுங்கியது - அவ்வளவு அதிரடியான PERCUSSION!
சமயக் குரவர் நால்வர்போலிருந்த, அந்த சங்கீதக் குரவர் நால்வரும்...
பட்டை உரிக்கும் பால்மரம்போல்; சட்டை உரிக்கும் சருப்பம்போல் -
புகழைப் பொருளைப் 'பொக்'கென ஒரே நாளில் உரித்துப்போட்டனர்; BASS GUITAR-களிலிருந்தும், BANGOS-களிலிருந்தும், தமது விரல்களையும்; POP-களிலிருந்தும், RAP-களிலிருந்தும், தமது குரல்களையும் விடுவித்துவிட்டு...
இமய மலைச் சாரலில் இளைப்பாறிக்கொண்டிருந்த -
மகேஷ் யோகியின் மாணாக்கரானார்கள்; ஓசைகளால் உலகை ஆண்டவர்கள், ஓசைகள் ஒடுங்கிப்போய் உள்ளளி கண்டதாய் உரைத்தார்கள்!
நம்பிக்கைதான் - மனிதனை
நகர்த்துகிறது!
ஒவ்வொரு முறை செஞ்சுரி அடிக்கும்போதும் -
பெவிலியனுக்கு பேட்; விசும்பிற்கு விழி; என உயர்த்திக் காட்டி நன்றி உரைப்பது, சச்சினின் சம்பிரதாயம்!
'அ'னாவில்தான் - படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது, அமரர் திரு.ஏவி.எம் அவர்கள் காத்து நின்ற மரபு!
அஞ்சாம் ரீலில்தான், ரீ-ரிக்கார்டிங்கை ஆரம்பிக்க வேண்டும் என்பது - மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.வி அவர்களின் சென்டிமென்ட்!
பாடல்களின் மேல் - ஸ்வரங்களைப் பென்சிலால்தான் குறித்துக்கொள்வார் - வெண்குலக் குரல் வேந்து, திரு.டி.எம்.எஸ் அவர்கள். பென்சில் சீவ ப்ளேடும் எடுத்து வருவார்!
தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத் தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பதில், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். படங்களின் பெயர்களும் கூடிய வரையில் ஏழெழுத்தில் வருவதை விரும்புவார். உதாரணம்-'நாடோடி மன்னன்'; 'அரச கட்டளை'; 'உரிமைக் குரல்'; இத்தியாதி இத்தியாதி!
'ம'; 'மா'; 'மு'; என்று மகர வரிசையில் நான் அவரோடு எழுதும் பாடல்கள் தொடங்கப்பெற்றால், அவை பெரிதும் ஹிட் ஆகின்றன என்பது திரு.ஏ.ஆர்.ரஹ்மானின் கணிப்பு; உதாரணங்கள்:
'முக்காபுலா';
'முஸ்தாபா';
'மரியா! மரியா!';
'மாயா! மாயா!';
'மாயா மச்சீந்தரா!'
'மயிலிறகே!'
'மருதாணி உன் விழியில்!'
- படம்: 'சக்கரைக்கட்டி'/
'மச்சான்! மச்சான்! மச்சான்!'
- படம்: 'சிவாஜி'/
'முன்னால் முன்னால் முன்னால் போடா! தோழா!' - படம்: 'அழகிய தமிழ் மகன்'/
|