மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 44

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 44


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் நானும்! - 44
நீயும் நானும்! - 44
நீயும் நானும்! - 44
நீயும் நானும்! - 44
கோபிநாத், படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் நானும்! - 44

முழுக்க முழுக்கக் கடன் அட்டைகளிலேயே (கிரெடிட் கார்டு) வாழ்க்கை நடத்தும்

அமெரிக்கர்கள் மத்தியில், இப்போது சேமிக்கும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்று ஒரு தகவல். பணத்தைக் கையாள்வது குறித்த பல்வேறு விஞ்ஞானரீதியான அணுகுமுறைகளை உலகத்துக்கே சொன்ன அமெரிக்கா, இப்போது சேமித்தால் தவிர, வாழ்க்கை நடத்த முடியாது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டு இருக்கிறது!

'வாரம் முழுவதும் உழைக்க வேண்டும், வார இறுதியில் அதைச் செலவழிக்க வேண்டும்' என்று இருந்த அமெரிக்கர்களை, சமீபத்திய பொருளாதாரச் சீர்குலைவு ரொம் பவே சிந்திக்கவைத்தது. இத்தனைக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிக அளவு சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள்தான் அவர்கள். பொருளாதாரச் சீர்குலைவைச் சந்திப்பதும்கூட அவர்களுக்குப் புதிது அல்ல. ஆனால், ஆசிய நாடுகளின் பழைய தத்துவமாகப் பேசப்படும் சேமிப்பு குறித்து, இப்போது தீவிரமாகச் சிந்திக்கிறார்கள் அமெரிக்கர்கள். 'இந்தா... அப்பா உனக்கு ரெண்டு ரூபா தருவேனாம். அதைக் கொண்டுபோய் உண்டியல்ல போட்டுவைப்பியாம்'என்று சேமிப்புத் தத்துவத்தைச் சிறு வயதிலேயே சொல்லி வளர்த்த நமது நாடு, இன்று சேமிப்பை சிறுபிள்ளைத்தனமாகப் பார்க்கிறது.

கொடுக்கப்படும் பாக்கெட் மணியின் ஒரு பகுதியைச் சேமித்துக்கொள்ளும் பழக்கம் இப்போது அவ்வளவாக இல்லை. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, ஒருவரின் தனிநபர் வருமானம், வாங்கும் சக்தி, செலவு செய்யும் திறன் ஆகிய அனைத்துமே அதிகரித்துவிட்டது. அதனால் சிறுகச் சிறுக சேமிக்க வேண்டிய நெருக்கடி எல்லாம் இப்போது இல்லை என்ற நினைப்புகூட சாதாரணமாக இருக்கலாம்.

உண்மையில், சேமிப்பு குறித்து கூடுதலாகக் கவலைப்பட வேண்டிய காலகட்டம் இதுதான். உலகமயமாக்கலோடு ஒட்டிய பொருளாதாரக் கொள்கைகளும், சிந்தனைகளும் நம்முடைய பாரம்பரிய பொருளாதாரச் சித்தாந்தத்தைப் புறந்தள்ளிவிட்டன. உண்டியலில் சேர்த்த காசில் பொருள் வாங்கிய காலம் போய், கிரெடிட் கார்டில் வாங்கிய பொருளுக்குக் கடன் கட்டு வது இப்போதைய கலாசாரமாக மாறி இருக் கிறது. வேறு எதையும்விட, அடிப்படைக் கூறு களைச் சிதைக்கும் சக்தி பணத்துக்கு உண்டு. புதிதாக அதிகரித்து இருக்கும் பணப் புழக்கம் சேமிப்பைச் சின்னப் பிள்ளைகளின் விளையாட் டாக ஆக்கிவிட்டது.

ஒரு காலத்தில் கடன் வாங்குவது கௌரவக் குறைச்சல். இன்றைக்குக் கடன் அட்டை என்பது கௌரவத்தின் அடையாளம்!

நீயும் நானும்! - 44

மேற்கு உலகின் பண வியாபாரிகள் இந்தியாவில் கடை விரிக்கத் தடையாக இருந்தது, நம்முடைய 'நிதிக் கலாசாரம்'! அதை மெள்ள மெள்ளக் கொன்ற பிறகு, இப்போது கடன் அட்டையில் காலம் தள்ளுகிற நிதிக் கலாசாரத்துக்கு வந்திருக்கிறோம்.

கடன் பெறுவது, அவசரத் தேவைக்குப் பணம் புரட்டுவது இவை எல்லாம் முன்பைவிட எளிதாக மாறி இருந்தாலும், சேமிப்புதான் நிதிப் பாதுகாப்பின் மிக முக்கியமான அம்சம் என்று நவீன கால நிதி வல்லுநர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். சேமிப்பு என்ற கலாசாரம் சீரியஸான விஷயமாகப் பார்க்கப் படுவது இல்லை என்பதால்தான், பணம் மட்டும் இன்றி, எல்லா விஷயங்களிலும் 'பயன்படுத்துதல்' என்ற மனோபாவம் மட்டுமே முன்னால் நிற்கிறது.

நீயும் நானும்! - 44

'நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? சில்லறை சில்லறையாகச் சேமித்து என்ன செய்யப்போகிறோம்? தினமும் 10 ரூபாய் சேர்த்தால்கூட, மாதம் 300 ரூபாய் தான் சேரப்போகிறது! அதற்கு ஏன் இவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும்?' என்ற கேள்வி இயல்பாகவே எழத் தான் செய்யும். இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலும் இருக்கிறது.

வங்கியில் பணியாற்றும் ஒரு நண்பர் சொன்ன விஷயம் இது. கடனும் சரி, சேமிப்பும் சரி... அதிகரித்துக் கொண்டே போகும். கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆரம்பத்தில் சிறியதாகத் தெரியும் தொகை, ஒரு நாளில் பெரிதாகி வளர்ந்து நிற்கும். வளர்ந்து நிற்பது கடனாக இருந்தால், வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.அதுவே சேமிப்பாக இருந்தால், ஆச்சர்யக்குறியாக மாறும்!

'ஏதோ விளையாட்டுத்தனமா மாசா மாசம் 1,000 ரூபாய் கட்டிக்கிட்டு வந்தேன். இப்போ ரொம்ப உதவியா இருக்கு!' என நிறையப் பேர் சொல்லிக் கேட்டு இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ப்பது சிரமம் இல்லை. தேவைப்படும்போது மொத்தமாகச் செலவு செய்வதுதான் சிரமம். தேவை ஏற்படும்போது நாலா பக்கமும் ஓடி, தடுமாறி, மனது புழுங்கி அலைவதைவிட, சில்லறைகளைச் சேமிப்பது சிரமம் இல்லாத விஷயம். சேமிப்பை ஒரு பழக்கமாகப் பார்ப்பதைவிட, அதை ஒரு கலாசாரமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்தக் கலாசாரம் தேவையான செலவு, தேவையற்ற செலவு, அர்த்தமுள்ள செலவீனம், முட்டாள்தனமான செலவீனம் என அனைத்தையும் சரியாக அடையாளம் காட்டுகிறது.

துரதிருஷ்டவசமாக, பணத்தைச் சம்பாதிப்பது குறித்து சொல்லித்தருகிற நம்முடைய குடும்பங்களும், சமூகமும் அதனைக் கையாள்வது குறித்து சொல்லித் தருவது இல்லை. எங்களது நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகளில் மாணவர்களைச் சந்திக்கிறபோது, பணத்தைக் கையாள்வது குறித்த பார்வையும் திட்டமும் வெகு சிலரிடம் மட்டுமே இருப்பதையும் கவனிக்க முடிந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்வியல் தன்மை இப்போது இல்லை. சுற்றி இருக்கும் வர்த்தகக் காரணிகள் தனிமனிதனைச் செலவு செய்யவே தூண்டுகின்றன. இந்த நிலையில்தான் சேமிப்பு குறித்த சிந்தனை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இளைஞர் சமூகத்தின் முன்பு இன்று காட்டப்படும் ஆபரணம் பூசிய சில அடையா ளங்கள், எதிர்காலம் இன்னமும் சிறப்பாகவே இருக்கும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கின்றன. ஆனால், அந்த எண்ணங்கள் வெறும் வியாபார உத்தியாகவே விதைக்கப் படுகின்றன. எத்தனை புதிய தத்துவங்கள் சொல்லப்பட்டாலும், சேமிப்பு என்ற அஸ்தி வாரத்தின்மீதுதான் நிதிக் கொள்கைகள்நிலைத்து நிற்க முடியும்.

நீயும் நானும்! - 44

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவால் இந்தியாவிலும் ஐ.டி. துறையில் பாதிப்பு ஏற்பட்டது. அது தொடர்பான ஒரு 'நீயா-நானா'வில் நிதி ஆலோசகர் புகழேந்தி பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தைச் சொன்னார். 'ஐ.டி துறையில் வேலை இழந்தால் என்ன செய்வது என்றே தெரியாமல் ஏன் தவிக்க வேண்டும்? இத்தனை வருடங்களாகச் சம்பாதித்த பணத்தைச் சேமித்துவைக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தோம்?' என்ற கேள்வியை முன்வைத்தார்.

அந்தக் கேள்வி, நம் நிதிக் கலாசாரம் எவ்வளவு மழுங்கிப்போய் இருக்கிறது என்பதை உணர்த்தியது. மற்றொரு நிதிக் கொள்கை நிபுணர் நாகப்பன், நிகழ்ச்சிக்கு ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அது அந்தக் காலத்தில் அவர் தாயார் எழுதிய செலவுக் கணக்கு தினசரி நோட்டுப் புத்தகம்.

உண்மையில் இன்று நாம் செலவுக் கணக்கும் எழுதுவது இல்லை. சேமித்துவைக்கவும் பழகுவது இல்லை. இன்றைய சூழ்நிலையில், பணத்தை உண்டியலில்தான் சேமித்துவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனையோ புதிய திட்டங்களும், சேவைகளும், நமது பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் தன்மைகொண்டவையாக அமைந்து இருக்கின்றன.

ஆனால், அவை மீது கவனம் ஏற்படவும், அதை அறிந்துகொள்ளவும்கூட சேமிக்க வேண்டும் என்ற தன்முனைப்பு அவசியமாகிறது. மழை நீர் கொட்டி வெள்ளம் அடித்துக்கொண்டு போகும்போது, அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. அதற்குரிய பாதை கட்டி, அணைப்பு கொடுத்துத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகள் ஆயிரம் இருந்தும் அதை உதாசீனப் படுத்துகிறோம்.

ஒட்டுமொத்த தேசத்திலும், கடந்த காலத் துடன் ஒப்பிடும்போது, பணம் இப்போது அதிகம் புழங்குகிறது. அதுவும் இளைஞர்கள் கையில் புழங்கும் பணம் அதிகம். அதனைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகளை உணர்ந்து இருந்தும் செலவு மட்டுமே செய்துகொண்டு இருந்தால் எதிர்காலம் என்னவாகும்?

சம்பாதிப்பதில் 20 சதவிகிதத்தைச் சேமிப்புக்கு என்று ஒதுக்குங்கள் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். சின்னத் தொகையோ, பெரிய தொகையோ ஏதோ ஒன்றைச் சேமிப்போம். நாம் தொலைத்துவிடக் கூடாத அற்புதமான நிதிக் கலாசாரம் அது. ஆடித் தீர்த்த பிறகு அமெரிக்கா புரிந்துகொண்டது, எதுவும் சாஸ்வதம் இல்லை என்று!

நாமும் அடிபட்டுத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடுத்தவர் அனுபவத்தில் இருந்தே கற்றுக் கொள்ளலாம்.

முதலில் போய் சின்னதாக ஒரு நோட்டு வாங்குங்கள். அதன் முதல் பக்கத்தில் இன்றைய செலவை எழுதுங்கள். இரண்டாம் பக்கத்தில் சேமிப்பை எழுதுங்கள். நானும்கூட அப்படி ஒரு நோட்டுப் புத்தகம் வாங்க வேண்டும்!

நீயும் நானும்! - 44
நீயும் நானும்! - 44
- ஒரு சிறிய இடைவேளை