மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 18

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 18

மனம் கொத்திப் பறவை! - 18
மனம் கொத்திப் பறவை! - 18
மனம் கொத்திப் பறவை! - 18
மனம் கொத்திப் பறவை! - 18

ருத்துச் சுதந்திரமும் விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமும் இல்லாத

சமூகத்தில் பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக எழுதக் கூடாது என்பது என் கருத்து. அதுவும் தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இதை எனக்கு சொன்னவர் சுஜாதா. ஒரு சமயம், அவருடைய நாவல் சிலரின் ஆட்சேபத்தினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனக்கும் அதேபோல் நேர்ந்து இருக்கிறது. ஆரம்பித்த ஜோரிலேயே இரண்டு முறை என் தொடர்கள் நிறுத்தப்பட்டன. இப்போது, நான் விழித்துக்கொண்டேன். அதற்காக மற்ற எழுத்தாளர்களைப்போல் 'எந்திரன்' படம் ஹாலிவுட்டுக்கே சவால் என்றெல்லாம் எழுத மாட்டேன். ஏனென்றால், நான் ஹாலிவுட் படங்களைப் பார்த்து இருக்கிறேன். நீங்களும் இந்தப் படங்களைப் பார்க்கலாம்: Fritz Lang இயக்கிய Metropolis, Stanly Kubrick-ன் 2001: A Space Odyssy, Chris Columbus-ன் Bicentennial Man. இதில் மெட்ரோபொலிஸ் 1927-ல் மௌனப் பட காலத்திலேயே வெளிவந்தது.

மனம் கொத்திப் பறவை! - 18

சிலி சுரங்க விபத்துபற்றி வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால், அதன் விவரங்களுக்குள் நான் செல்லவில்லை. பூமிக்குள் முக்கால் கி.மீ. ஆழத்தில் 33 பேர் சிக்கி 69 நாட்கள் கழித்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முதல் 17 நாட்கள் அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதே 17-வது நாள்தான் வெளி உலகத்துக்குத் தெரிந்தது. அந்த 17 நாட்களும் அவர்கள் சாப்பிட்ட உணவு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு ஸ்பூன் ட்யூனா மீன், அரை டம்ளர் பால், அரை பிஸ்கட். அதற்கு மேல் சாப்பிட, கையிருப்பில் உணவு இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் கொலை செய்து சாப்பிடும் சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. விமானம் விபத்துக்கு உள்ளாகி, மலைகளிலும் காடுகளிலும் தப்பிப் பிழைக்கும் ஒரு சிலர் அப்படிச் செய்தது உண்டு. கியூபாவின் (Cuba) இயக்குநர் தாமஸ் அலியாவின் Survivors என்ற படத்தில் இதுபோன்ற ஒரு கட்டம் வரும். விமான விபத்து அல்ல; வேறு ஒரு விபத்து!

மனம் கொத்திப் பறவை! - 18

ஆனால், சிலி சுரங்க விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது மட்டும் அல்ல... 33 பேர் 69 நாட்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் இருந்து பிழைத்து இருக்கின்றனர். யோசித்துப்பாருங்கள்... எவ்வளவு மன உறுதி இருந்தால், இத்தனை நாட்களை அவர்கள் அந்த இருட்டு நரகத்தில் கழித்திருக்க முடியும்? இது சிலியின் தேசிய குணம் என்றே தோன்றுகிறது. கலாசார விழிப்பு உணர்வும் ஆன்மிகமும்தான் அந்தக் கட்டுப்பாட்டையும் மன உறுதியையும் அளித்திருக்க முடியும். லிஃப்ட் நின்றுபோனாலே, நமக்கு இதயம் நின்றுவிடுகிறாற்போல் ஆகிவிடுகிறது. நம் நாட்டின் ஆன்மிகப் பாரம்பரியம்பற்றி நாம் எப்போதும் பெருமையுடனே பேசி வருகிறோம். சமணம், பௌத்தம், இந்து மதம் என்ற மூன்று ஆன்மிக வழிகளின் பிறப்பிடம் இந்தியா. 20 ஆண்டுகளுக்கு மேல் தவத்தில் இருந்து, உடலைச் சுற்றிப் புற்று கட்டிய ஞானிகள் இங்கே ஏராளம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இங்கே இப்படி ஒரு விபத்து நடந்திருந்தால், இத்தனை பேரும் ஓர் உயிர்ப் பலிகூட இல்லாமல் காப்பாற்றப்பட்டு இருப்பார்களா? நம்மிடம் அந்த மன உறுதியும் கட்டுப்பாடும் இருக்கிறதா? இவ்வளவுக்கும் உள்ளே இருந்து ஒரு தொழிலாளி கவிதை எழுதி மேலே அனுப்பி இருக்கிறார். நம் ஊராக இருந்தால் உள்ளே அடைபட்ட தொழிலாளிகளுக்கு கவிதை அனுப்பியே கொன்றிருப்போம். உதாரணம், முரசொலியில் 'வித்தகக் கவிஞர்' பா.விஜய் எழுதும் 'கலைஞரின் பயணம்' என்ற கவிதைத் தொடர். ஒரு சாம்பிள்:

'முதலமைச்சர் பொறுப்பேற்றதும்

முதல் முறையாக

பிரதமரையும்

மத்திய அமைச்சர்களையும்

மாநிலத்தின் நிலை குறித்துப்

பேசுவதற்குத் தயாரானது

கலைஞரின் பயணம்'

வார்த்தையை உடைத்து உடைத்துப் போட்டால் கவிதை! இதுபோன்ற கவிதைகளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு அனுப்பிவைத்தால், பாவம், எத்தனை விபத்தைத் தான் தாங்குவார்கள்?

மனம் கொத்திப் பறவை! - 18

ஒரே ஒரு விஷயத்தில்தான் நமக்கும் சிலி தொழிலாளர்களுக்கும் செட் ஆகிறது. ஒரு தொழிலாளி தன் மனைவிக் குத் தெரியாமல், இன்னொரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அவர் சுரங்கத்தில் இருக்கும்போது காதலி வந்து அவருக்காகப் பிரார்த்தனை செய்ய, அங்கே நின்றுகொண்டு இருந்த மனைவிக்கு விஷயம் தெரிந்து, சுரங்க வாசலிலேயே அடிதடி சண்டை. இரண்டு பெண்களும் உருண்டு புரண்டது தொலைக்காட்சியிலும் வந்துவிட்டது. 'அவளைக் கைவிட்டால் தான் நீ என்னோடு வாழலாம்!' என்று சொல்லிவிட்டு, அங்கே இருந்து கிளம்பிவிட்டார் மனைவி. தொழிலாளியின் சகோதரி, 'என் அண்ணன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போது, இந்தப் பெண்கள் இப்படி அடித்துக்கொண்டதால், இரண்டு பேருமே சரியில்லை. அண்ணன் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து மணந்துகொள்ள வேண்டும்!' என்று சொல்லி இருக்கிறார். பாசமுள்ள தங்கை!

மக்கு புத்தகங்கள் என்றாலே கசக்கிறது. வெளிநாடுகளில் ஐந்து லட்சம் பேர் வசிக்கும் நகரில் உள்ள நூலகத்தில் 10 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தேகம் இருந்தால், வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். பாரிஸில் உள்ள பொம்பிது நூலகத்தில், நம் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பார்த்தேன். இங்கே அப்படிக் கிடைக்கிறதா? அவர்கள் நூலகங்களைக் கட்டுகிறார்கள்; நாம் மல்டிப்ளெக்ஸ் சினிமா அரங்குகளைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்.

சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் நூலக வாரம் கொண்டாடப்பட்டது. அதன் பொருட்டு, பெசன்ட் நகர் எட்வர்ட் எலியர்ட்ஸ் பீச்சில் ஒரு சிறிய புத்தகக் கண்காட்சி நடந்தது. ஆறு, ஏழு பதிப்பகங்களே கலந்துகொண்டன. அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் 'இப்படி புத்தகங்களை வைக்கக் கூடாது!' என்று ஆங்கிலத்தில் ஆட்சேபித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழர்தான். உடனே 100-க்கு போன் செய்து போலீஸையும் வரவழைத்துவிட்டார். போலீஸும் ஏதோ நக்சலைட்டுகள்தான் புத்தகங்கள் விற்றுப் புரட்சி பரப்புகிறார்கள் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு சைரன் ஒலிக்க வந்துவிட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சி அரசாங்கத்தின் ஆதரவில்தான் நடக் கிறது. நக்சலைட் பிரச்னை அல்ல என்று பதிப்பாளர்கள் போலீஸிடம் விளக்கி, அங்கே வைக்கப்பட்டு இருந்த முதலமைச் சரின் புகைப்படத் தட்டியைக் காண்பித்த பிறகுதான் போலீஸ் கிளம்பியது!

இவ்வளவுக்கும் அந்த பீச்சில் கால்பந்து, கைப்பந்து எல்லாம் ஆடி, அங்கே வருபவர்களைக் கலவரப்படுத்துகிறார்கள் இளைஞர்கள். அரசுத் தடை இருந்தும், ஏதோ சந்தை மாதிரி பெட்டிக் கடைகள் பெருத்துவிட்டன. போதாக்குறைக்கு ஒரு பெரிய படுதாவைக் கட்டி அரசாங்கத்தின் விளம்பரப் படம் ஓடுகிறது. சமயங்களில் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரத்துக்காகத் தங்கள் பொருட் களை இலவசமாகக் கொடுத்து அதகளம் பண்ணுகிறார்கள். அதற்காக ஸ்பீக்கரில் பாட்டு போட்டு கடற்கரையை ஒரு decibel infernoவாக மாற்றுகிறார்கள். இதையெல்லாம் கேட்க நாதி இல்லை. புத்தகங்கள் விரித்தால் போலீஸ் வருகிறது. இந்த அளவுக்கு புத்தகங்களை வெறுக்கக் கூடிய சமூகம் உலகில் வேறு எங்காவது உண்டா?

மனம் கொத்திப் பறவை! - 18

ஜெர்மனியில் வூப்பர்ட்டால் என்ற ஒரு நகரம் இருக்கிறது. இங்கே சில தினங்கள் நான் தங்கி இருந்தேன். இந்த நகரத்துக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று, தொங்கும் ரயில். சரியாக 110 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தத் தொங்கும் ரயில்தான் வூப்பர்ட்டால் நகர மக்கள் பயன்படுத்தும் பிரதானப் போக்குவரத்தாக உள்ளது. இதன் விசேஷம் என்னஎன்றால், இதுபோன்ற தொங்கும் ரயில் உலகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. (அமெரிக்காவின் டெனஸி மாநிலத்தில் உள்ள மெம்ஃபிஸ் நகரில் சிறிய தூரம் செல்லக்கூடிய ஒரு தொங்கும் ரயில் உள்ளது). செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட்விட்டாலும், உலகத்தில் தொங்கும் ரயில் அமைப்பதில் மட்டும் தயக்கம் இருக்கிறது. காரணம் தெரியவில்லை.

முதல் முறை இந்தத் தொங்கும் ரயிலில் பயணம் செய்யும்போது எனக்குச் சற்று பயமாகவே இருந்தது. நம் தலைக்கும் மேலே உள்ள இருப்புப் பாதையில் ரயில் பெட்டி தொங்கிக்கொண்டே செல்வதால், ரயிலும் சற்று ஆடுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது ரயிலே தலைகீழாகச் செல்வதுபோல் தோன்றுகிறது. தினமும் ஒரு லட்சம் பேரை ஏற்றிச் செல்லும் இந்தத் தொங்கும் ரயில்கள் மொத்தம் 14 கி.மீ. தூரம் ஓடுகின்றன. ஜெர்மன்காரர்கள் முசுடுகள் என்றாலும், தொழில் நேர்த்தி மிக்கவர்கள். கடந்த 110 ஆண்டுகளில் இந்தத் தொங்கும் ரயில் ஒரே ஒரு விபத்தை மட்டுமே சந்தித்து இருக்கிறது. (இந்தியப் போக்குவரத்தையும் கட்டுமானத் தேர்ச்சியையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பழநியில் ரோப் கார் விழுந்து பக்தர்கள் இறந்ததுபோல் பல சம்பவங்கள் இங்கே உண்டு).

மனம் கொத்திப் பறவை! - 18

வெளிநாடுகள் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கின்றன என்று அங்கே சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. இங்கே ராணுவத்தை மட்டுமே பலப்படுத்துவதன் மூலம் வல்லரசு என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இதனால், மக்களின் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு இருக் கிறதா?

சமீபத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் சீனா, கொரியா போன்ற நாடுகளுக்குப் போய் வந்தார். அப்போது பார்த்திருப்பார், அந்த நாடுகள் நம் நாட்டைவிட எந்த அளவு முன்னேறி இருக்கின்றன என்று. அதுபற்றி அவர் பேசக்கூட வேண்டாம். தினசரிகளில் வந்த அவருடைய பயணப் புகைப்படங்களைப் பார்த்தாலே அந்த நாடுகளின் வளர்ச்சி தெரிந்துவிடும். அது போன்ற சாலைகளை இந்தியாவில் சண்டிகரிலும், தெற்கு டெல்லியிலும் மட்டுமே (ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் வசிக்கும் பகுதி) காண முடியும். மும்பை, கொல்கத்தா, சென்னைபோன்ற நகரங்கள் சீன, கொரிய நகரங்களைப்போல் ஆக இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்றே தெரியவில்லை.

மனம் கொத்திப் பறவை! - 18

வூப்பர்ட்டாலைப் போலவே பாரிஸில் சுரங்க ரயில் (மெட்ரோ) அமைத்து 110 ஆண்டுகள் ஆகின்றன. இங்கே டெல்லியில் சுரங்க ரயில் சமீபத்தில்தான் வந்தது. இன்னும் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் வரவே இல்லை.

சென்னையில் இப்போதுதான் ரோடு தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். பலரையும் கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டு இன்னும் 10 ஆண்டுகளில் வரலாம். ஆனால், கவனிக்கவும். இங்கே பூமிக்குள் ஒரே ஒரு அடுக்கில்தான் மெட்ரோ கட்டப்படுகிறது. பாரிஸ் மெட்ரோ ரயில் பாதை பூமிக்குள் ஐந்து அடுக்குகளாகக் கட்டப்பட்டு உள்ளது. ஐந்து அடுக்குகளில் ரயில்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன. மொத்தம் தினசரி 45 லட்சம் பேர் இதில் பயணம் செய்கிறார்கள்.

வூப்பர்ட்டாலின் இன்னொரு விசேஷத்தையும் சொல்லிவிடுகிறேன். மார்க்சீயத்தின் மூலவர்களில் ஒருவரான ஏங்கெல்ஸ் இந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்தார்!

மனம் கொத்திப் பறவை! - 18
மனம் கொத்திப் பறவை! - 18
-பறக்கும்