அவள் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருந்தது. திரும்ப வந்தால் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று நினைத்தேன். இன்று ஸ்கூல் இல்லையா என்றும் கேட்கலாம். அப்படிக் கேட் டால், இன்னும் ஓரிரு விநாடிகள் என் எதிரில் நிற்பாள் அல்லவா? அவள் வரும்போது ஒழுங்காகப் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். தடுமாறக் கூடாது. அப்புறம் அவளுக்கு என் மேல் மதிப்பே வராது. மனம் ஒத்திகை பார்க்க ஆரம்பித் தது. 'தேர்த்தம் வேணும்' என்று சொல்லிக்கொண்டேன். அவள் புன்னகைக்கிறாள். 'இதோ எடுத்துண்டு வரேன்' என்று சொல்லிவிட்டுப் போகிறாள். தண்ணீர் கொண்டுவருகிறாள். நான் குடித்து முடித் ததும் சொம்பை வாங்கிக்கொண்டு போவதற்காக நிற்கிறாள். 'இன்னிக்கு ஸ்கூல் இல்லியா?' என்று கேட்கிறேன். 'அம்மாக்கு உடம்பு சரியில்ல, அதனால லீவு போட்டுட்டேன்' என்கிறாள். 'ஒனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா?' என்கிறேன். அவள் வெட்கத்துடன் சிரிக்கிறாள். வட்ட முகம் மலர்கிறது. நானும் சிரிக்க முயல்கிறேன்.
"எப்படா வந்த?" என்று கேட்டபடி ஸ்ரீவத்ஸன் வந்தான். "அப்பவே வந்துட்டேன்டா" என்று சொன்னபடி சுதாரித்துக்கொண்டேன்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. ஏதாவது சாக்கு வைத்து ஸ்ரீவத்ஸன் வீட்டுக்குப் போவேன். சில சமயம் அவளுடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. ஸ்ரீவத்ஸன் வீட்டில் எல்லோரும் என்னுடன் நன்றாகப் பழகுவார்கள். அவன் அப்பா சப்தரிஷிக்கு அதிகம் பேசும் பழக்கம். என்னிடம் ஒருநாள் வைஷ்ணவம்பற்றி ஏதோ பேச ஆரம்பித் தார். ஸ்ரீமதி வீட்டுக்குள் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால், அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தேன். ஆர்வத்தை நிரூபிப்பதற்காக நடுநடுவே கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தேன். அன்று வைகுண்ட ஏகாதசி. முடவனுக்கு மோட்சம் தந்த பெருமாளின் கருணையைச் சொல்லிக்கொண்டு இருந்தார். கதை நன்றாகத்தான் இருந்தது. ஸ்ரீமதியைத்தான் பார்க்கவே முடியவில்லை.
ஒரு புத்தகத்தை எடுப்பதற்காக நடுவில் அவர் எழுந்து போனார். நான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எழுந்து உள் அறையின் பக்கம் போய், சற்றே தலையைச் சாய்த்து எட்டிப் பார்த்தேன். குடிக்கத் தண்ணீர் கேட்க வேண்டும் என்பது திட்டம். அவள் ஜன்னல் ஓரம் சுவரில் சாய்ந்தபடி காலை நீட்டிக்கொண்டு மடியில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. அந்த அறையில் அதிக வெளிச்சம் இல்லை. அவள் உட்கார்ந்து இருந்த இடத்தின் அருகே ஜன்னல் இருந்ததால், அவள் மீது மட்டும் வெளிச்சம் விழுந்து அவள் உடல் ஜொலித்தது. அவளது பக்கவாட்டுத் தோற்றம் செதுக்கிவைத்ததுபோல் இருந்தது.
கோயில் தூணில் பார்த்த, கம்பீரமான பெண்ணின் அழகிய சிலை நினைவுக்கு வந்தது. சலனம் கேட்டுத் திரும்பினாள். பதற்றம் இல்லாத மெல்லிய அசைவு. காலை நேரத்துக் காற்றில் ஆடும் செடிபோல. முகத்தில் புன்னகை. எனக்குப் பேச்சே வரவில்லை. எப்படியோ சமாளித்துக்கொண்டு, "தேர்த்தம் வேணும்" என்றேன். கொலுசுச் சத்தம் சலசலக்க, பாவாடை சரசரக்க ஸ்ரீமதி உள்ளே சென்றாள். சொம்புடன் வந்தாள். கவனமாக வாங்கிக்கொண்டேன். தடுமாற்றத்தில் கொட்டிவிடுவேனோ என்று பயம். குடித்துவிட்டு சொம்பைத் தரும்போது கையில் பட்டுவிடக் கூடாது என்று கவனமாக இருந்தேன். சாக்குக் கிடைத்தால் தொட்டுப் பார்க் கும் கயவனாக என்னை அவள் நினைத்துவிட்டால் என்ன செய் வது? "போதுமா" என்றாள். "ம்..." என்றபடி தலையாட்டினேன். ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போனாள். அந்தப் புன்னகைஎன் கண்களில் இன்னும் நிற்கிறது.
இப்படிச் சின்னச் சின்னச் சந்திப்புகள். நான் அவளைக் காதலிக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. பார்க்காதபோது மனம் தவிப்பதைவைத்துப் பார்த்தால், காதல்தான் என்று தோன்றியது. ஆனால், அதிகம் பார்க் கவோ பழகவோ சந்தர்ப்பம்அமை யாதபடி ஆகிவிட்டது. அவர்கள் பல்லாவரத்தில் வீடு கட்டிப் போய்விட்டார்கள். ஸ்ரீவத்ஸன் எம்.எஸ்ஸி. சேர்ந்துவிட்டான். நான் பி.எஸ்ஸி., முடித்ததும் வேலை தேட ஆரம்பித்தேன். அரசுத் தேர்வுகள் எல்லாவற்றை
யும் கர்ம சிரத்தையாக எழுதினேன். அப்பாவின் நண்பரான ஆடிட்டரிடம் பகுதி நேர வேலைக்குப் போனேன். நிறைய வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். கடைசியில், தாம்பரத்தில் ஸ்வஸ்திக் டிரக்ஸ் என்னும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சம்பளம் 200 ரூபாய் என்றால் உங்களுக்குச் சிரிப்பு வரும். அதுவும் நீங்கள் 1970-களுக்குப் பின் பிறந்தவர் என்றால். பாரதி ராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' வெளியான சமயம் அது. அப்போது எல்லாம் 200 ரூபாய்க்கு மதிப்பு இருந்தது. டீ 15 பைசா. தியேட்டரில் அதிக பட்ச டிக்கெட் 2.90 ரூபாய். 10 பைசாவுக்கு வேர்க்கடலை வாங் கினால், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு வருவது வரையிலும் கொறித்துக் கொண்டே வரலாம்.
தினமும் சேத்துப்பட்டில் இருந்து தாம்பரம் போக வேண் டும். வீட்டுக்கு வந்ததும் அரசுத் தேர்வுகளுக்கான பாடங்களைப் படிக்க வேண்டும். ராத்திரி 10 மணிக்குக் கிளம்பிப் பக்கத்துத் தெருவில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வர வேண்டும். இந்த அலைச்சல்களுக்கு இடையில் ஸ்ரீமதிபற்றிய நினைப்பே வரவில்லை. படுத்ததும் தூக்கம் வந்துவிடும். சீக்கிரமே ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது.
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. ஸ்ரீவத்ஸன் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு போய்விட்டான். ஒரு முறை கடிதம் போட்டான். நான் பதில்கூடப் போடவில்லை. எக்கச்சக்கமான தேர்வுகள் எழுதிய எனக்கு, குரோம்பேட்டையில் ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை கிடைத்தது. வேலைக்கான ஆர்டர் வந்த அன்று அம்மா பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் சிறப்புப் பூஜை செய்துவிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. சம்பளம் 800 ரூபாய். ஓயாமல் பேரேடுகளைப் புரட்டிக்கொண்டு இருக்கும் வேலை.
குரோம்பேட்டைக்குப் போகும் வழியில் ஒருநாள் பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஸ்ரீமதியைப் பார்த்தேன். புடவை கட்டி இருந்தாள். கொஞ்சம் உயரமாகி இருந்தாள். பார்த்ததும் என் மனம் துள்ளியது. ரயில் நிற்பதற்குள் அவளை நான் பார்த்துவிட்டேன். இறங்கி அவள் இருக்கும் இடத்துக்குப் போவதற்குள், அவள் ரயிலில் ஏறிவிட்டாள். பெண்கள் பெட்டிக்குப் பக்கத்துப் பெட்டியில் ஏறிக்கொண்டேன். அடுத்த ஸ்டேஷனில் நான் இறங்க வேண் டும். அவள் இறங்குகிறாளா என்று பார்த்தேன். இறங்கவில்லை.
அடுத்து சானடோரியம் ஸ்டேஷனிலும் அவள் இறங்கவில்லை. தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கினாள். என்னைப் பார்க்கவில்லை. எனக்கு படபடப்பாக இருந்தது. அவள் பின்னால் நடந்தேன். அவளுடன் அதிகம் பேசிப் பழக்கம் இல்லை என்றாலும், தெரிந்த பெண் என்ற முறையில் பேசுவதில் தவறு இல்லை என்ற தைரியம். கொஞ்சம் பக்கத்தில் போய், "ஸ்ரீமதி" என்று கூப்பிட் டேன். திரும்பினாள். நான் மயங்கி விழாத குறையாகத் திணறிப்போனேன்.
அவ்வளவு கிட்டத்தில் அவள் முகத்தைப் பார்த்தது இல்லை. அந்த அழகை என்னால் தாங்க முடியவில்லை. என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை நாள் இவளைப் பார்க்காமல் இருந்திருக்கிறோமே என்று தோன்றியது.
"ஏ... ஹயக்ரீவன். எப்டி இருக்கேள்?" என்று கேட்டபோது, அவள் கண்கள் விரிந்தன. அந்தக் கண்களுக்குள் மிக ஆழமாக உள்ளே போய்க்கொண்டு இருந்தேன்.
"நன்னாத்தான் இருக்கேன். நீ எப்டி இருக்க?"
"ஓ, ஃபைன். என்ன மீசை எல் லாம் வெச்சிண்டிருக்கேள்?"
"ஏன் வெச்சிக்கக் கூடாதா?"
"அப்டி சொல்லல..."
"ஓரமா போய் நிக்கலாம் வா" என்றபடி நடந்தேன். கால்கள் தரையிலேயே படாமல் எப்படி நடப்பது என்பதை முதல்முறையாக அன்றுதான் உணர்ந்தேன்.
பின்னாலேயே வந்த ஸ்ரீமதி, "கிளாஸுக்கு டயமாயிடுத்து. தாம்பரத்துக்கு எதுக்கு வந்திருக்கேள்?" என்று கேட்டாள்.
"குரோம்பெட் போறேன். ஒன்னப் பாத்துதான் திரும்ப ஏறிட்டேன்."
"குரோம்பெட்ல என்ன?"
அவள் பேசும்போது அவள் உதடுகள் அசையும் அழகைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
"அங்கதான் வேலை செய்றேன். சரி, நீ என்ன கிளாஸுக்குப் போற?"
"டெய்லரிங். சும்மா போரடிச்சுதுன்னு சேர்ந்தேன்... டயமாயிடுத்து. நாளைக்குப் பாக்கலாம்." அவள் பேசும்போது மெல்லிய முறுவல் ஒன்று எப்போதும் உடன் வருவதையும் கவனித்தேன். உள்ளூர ஏதோ ஒரு போதை ஏறிக்கொண்டு இருந்தது.
கை ஆட்டினாள். நானும் கை ஆட்டினேன். அவள் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ரயில் வரும் சத்தம் என் கவனத்தைக் கலைத்தது. மறு நாளைய ரயில் பயணத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் குரோம்பேட்டையில் அவள் காத்திருந்ததைப் பார்த்ததும், ஆச்சர்யமாக இருந்தது. கையில் ஒரு டப்பா வைத்திருந்தாள். இருவரும் பெஞ்ச்சில் உட்கார்ந்தோம். டப்பாவை என்னிடம் நீட்டினாள்.
"உங்களைப் பாத்தத அம்மாகிட்ட சொன்னேன். ரொம்ப விசாரிச்சா. இத குடுக்கச் சொன்னா."
"என்ன இது?"
"நேத்திக்கு கோகுலாஷ்டமின்னா..."
எங்கள் வீட்டிலும் கோகுலாஷ்டமி கொண்டாடினோம். ஆனால், இவளுக்காகக் கொண்டுவர வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லையே என்று நினைத்து வெட்கமாக இருந்தது. அது மட்டுமல்ல. நான் இவளைச் சந்தித்ததை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.
"அம்மா எப்டி இருக்கா? அப்பா எப்டி இருக்கா? வைஷ்ணவம்பத்திப் பேசினா அவருக்குப் பொழுது போறதே தெரியாதே..."
கலீர் என்று சிரித்தாள். "அப்டியேதான் இருக்கார். இப்போ ரிட்டயர் ஆயிட்டாரோன்னோ? பக்கத்து வீட்டு மாமாவோட சதா பேச்சுதான். அவருக்கும் உங்கள மாதிரியே பிலாசஃபில இன்ட்ரெஸ்ட். "
எனக்குச் சிரிப்பு வந்தது. எனக்கு பிலாசஃபில இன்ட்ரெஸ்ட்டா?
"ஆனா, நீங்க நசிகேதன் மாதிரி கேள்வி கேட்டுண்டே இருப்பேள். அவர் பேசாம கேட்டுண்டு இருப்பார்" என்றாள். நசிகேதனுக்குத் தத்துவ விசாரம். எனக்கு வேறு விசாரம்.
அதன் பிறகு பரஸ்பரம் இருவரது குடும்பங்கள்பற்றியும் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். ஸ்ரீவத்ஸன் போன வாரம் வந்திருந்தானாம். பெங்களூரில் அவன் அலுவலகத் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டேன்.
நேரமாகிக்கொண்டு இருந்தது. மூன்று ரயில்கள் போய்விட்டன.
"நாளைக்கும் பாக்கலாமா?" என்றேன்.
"நாளைக்கு எல்லாம் இவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியாது. அம்மாவுக்கு முடியல. நான்தான் எல்லா வேலையும் முடிச்சுட்டு வரேன்."
"டப்பாவைத் திருப்பித் தரணுமோல்லியோ?"
"அது என்ன பெரிய விஷயம்? ஸ்டேஷன்ல வண்டி நிக்கும்போது குடுத்துட்டுப் போக வேண்டியதுதானே."
இவள் இவ்வளவு பேசுவாள் என்று நான் கற்பனைகூடச் செய்தது இல்லை. பேசும் பொற்சித்திரம் என்ற சொல் ஞாபகத்துக்கு வந்தது. மனம் சிலிர்த்தது.
ரயில் வந்தது. எழுந்துகொண்டோம்.
"வெறும் டப்பாவைக் கொண்டுவராதீங்கோ. ஏதாவது போட்டுக் கொண்டுவாங்கோ" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் அவளைப் பார்க்க முடியவில்லை. டப்பாவில் இனிப்பைப் போட்டு எடுத்துக்கொண்டு போனதுதான் மிச்சம். இருவரும் வரும் நேரம் ஒன்றாகக் கூடிவரவில்லை. அப்போது அவள் வீட்டிலும் தொலைபேசி இல்லை. என் வீட்டிலும் தொலைபேசி இல்லை. தொலைபேசி கேட்டு விண்ணப்பித்து இரண்டு வருடங்களாகக் காத்திருந்தகாலம் அது.
அடுத்த திங்கள்கிழமை சீக்கி ரமே போய்த் தாம்பரத்தில் இறங் கினேன். நீல நிறப் புடவையில் மிதந்து வந்தாள். நான் அவளைப் பார்ப்பதை அவள் பார்க்கவில்லை என்பதால் சுதந்திரமாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அன்று வெயில் குறைவாகவே இருந்ததாக ஞாபகம். கிட்டே வந்ததும் என்னைப் பர்த்தாள். அதே வியப்பு. அதே சந்தோஷம். டப்பாவை நீட்டினேன். திறந்து பார்த்தாள். பால்கோவாவைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.
"பால்கோவா எனக்குப் புடிக்கும்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்?"
அவள் கண்களை ஆழமாகப் பார்த்துச் சிரித்தேன். அவள் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்த்தது.
|