ஸ்பெஷல் -1
Published:Updated:

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!
டிக்டிக் டிக்கெட்ஸ்!
ந.வினோத்குமார், இர.ப்ரீத்தி, படங்கள்:ஜெ,தான்யராஜு
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

து ஒரு தன்னம்பிக்கைப் பயிலரங்கம். 'வாழ்க்கையில் வெற்றி அடைவது என்றால்

என்ன?' - பயிலரங்கத்தின் சிறப்பு விருந்தினர் கேட்டார். 'நிறையப் பணம் சம்பாதிப்பது', 'வீடு, கார் என வசதியாக இருப்பது', 'மனதுக்குப் பிடித்த துணையுடன் வாழ்வது' எனப் பலப் பல பதில்கள். 'ம்ஹூம்... இவை எதுவுமே இல்லை!' என்று உதடு பிதுக்கினார் விருந்தினர். இறுதியாக எழுந்த ஒருவர் இப்படிச் சொன்னார், 'நம் கனவுகளை அடைவதுதான் வாழ்க்கையில் வெற்றி அடைந்ததற்கான சாட்சி!' 'சபாஷ்!' என்று கை தட்டினார் அந்த விருந்தினர்!

ஆம் நண்பர்களே... நமக்கென்று சில கனவுகள் இருக்கும். அதை அடைவதற்கான திறமைகளும் நம்மிடம் இருக்கும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் சதுரங்க விளையாட்டால் தடம் மாறிப் பயணிக்க வேண்டிய சூழல் சுழலில் சிக்கிக்கொள்வோம். அதையும் கடந்து தங்கள் இலக்கினை அடைய வேண்டிய மனத்திடம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

'எனக்கு ஓவியர் ஆகணும்னு ஆசை. ஆனா, என் அப்பா என்னை பி.காம்., படிக்கவெச்சார். இப்போ பேங்க் கிளார்க் வேலைகூடக் கிடைக்காம, சேல்ஸ் ரெப்பா ஊர் சுத்திட்டு இருக்கேன். என்னை என் போக்கில் விட்டிருந்தா, நான் என்னென்னவோ சாதிச்சு இருப்பேன்!', 'நான் ஆசைப்பட்ட படிப்பை மட்டும் என்னைப் படிக்கவெச்சு இருந்தாங்கன்னா, இந்நேரம் நான் இருக்க வேண்டிய இடமே வேற!', 'ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்தாங்களேன்னு நானும் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். இப்ப படிப்பு முடிஞ்சிருச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கிறேன்!' - இப்படி இன்னும் பல விதங்களில் புலம்பித் தவிக்கும் இளைஞர்கள் நம்மில் எத்தனை பேர்?

'படிச்சது ஒண்ணு... பிடிச்சது ஒண்ணு!' என்று தங்கள் கல்விக்குச் சம்பந்தமே இல்லாத துறைகளில் சாதனை படைத்த சிலர் உங்களுக்குத் தங்கள் அனுபவக் கதைகள் சொல்கிறார்கள்...

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

"ஒரு துறை சம்பந்தப்பட்ட படிப்பு படிச்சா மட்டும்தான், அதில் சாதிக்க முடியும்னு நினைப்பது பழங்கதை. உங்களிடம் திறமையும், புதுசு புதுசா நிறைய விஷயம் கத்துக்கணும்னு ஆர்வமும் இருந்தால் எந்தத் துறையிலும் நீங்கள் பிரகாசிக்க முடியும்!" என்று நம்பிக்கையுடன் தொடங்குகிறார் சிவா. ரேடியோ ஜாக்கியாக கேரியர் துவங்கி, நாலு நண்பர்களுள் ஒரு நண்பர் என நடிகர் ஆகி, இன்று 'ஹீரோ' அந்தஸ்து எட்டியிருக்கும் சிவா படித்தது பத்தாம் வகுப்பு வரைதான்.

"படிப்பு நல்லா வந்ததோ இல்லையோ, எனக்கு நடிப்பு நல்லா வந்தது. ஸ்கூல்ல எப்பவும் கல்ச்சுரல்ஸ், காமெடி, டிராமான்னு சுத்திட்டே இருப்பேன். நம்ம சேட்டையைப் பார்த்துட்டு நாலு பேரு கை தட்டுவாங்க. 'ஆஹா... ரேங்க் கார்டு கொடுக்கும்போது தலை குனிஞ்சு உட்கார்ந்திருக்கிற நாம, கல்ச்சுரல் ஸ்டேஜ்ல கம்பீரமா தலை நிமிர்ந்து நிக்கிறோமே... இனி, இதுதான்டா நம்ம பேட்டை. எதிர்காலத்துல நல்ல என்டர்டெயினர் ஆகணும்'னு அப்ப முடிவு பண்ணேன். அப்போ இருந்தே ஹ்யூமர் பண்ண ஸ்கோப் உள்ள இடங்களாத் தேடித் தேடிப் போவேன். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தில் டிராமா, காமெடி சொல்லிக் கொடுக்கும் டீச்சரா இருந்தேன். அங்கே இருந்த குழந்தைங்க சிரிக்கச் சிரிக்க, எனக்குள்ள புதுசு புதுசா என்னென்னவோ பூக்கும். அப்புறம் ரேடியோ ஜாக்கி வேலை. 'சிவா சிரிக்கவைப்பான்'னு ஒரு பளிச் அடையாளம் தந்த வேலை. அப்புறம்... சினிமா. நான் சொல்ல வர்ற ஒரே விஷயம்... நீங்க படிச்சிருக்கீங்க... பிடிச்ச படிப்பு படிச்சிருக்கீங்க... அல்லது படிக்கவே இல்லை. எதுவா இருந்தாலும், உங்களுக்குப் பிடிச்ச வேலையைப் பண்ணுங்க. அல்லது எந்த வேலை பார்க்குறீங்களோ... அதை இஷ்டப்பட்டுப் பண்ணுங்க. நீங்க எந்த ஃபீல்டில் இருந்தாலும், அதில் ஒரே நாள்ல உச்சிக்கு வந்துட முடியாது. அதெல்லாம் 'தமிழ்ப் படம்' பாட்டுலதான் சாத்தியம். 'நமக்கு இதுதான் வரும். இதுலதான் நாம சாதிக்கணும்'னு நினைச்சு ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துட்டா... அப்புறம் மறுபரிசீலனைக்கு இடமே இல்லை. இப்ப இல்லைன்னா எப்போ... உங்களால முடியாமப்போனா வேறு யாரால் முடியும்?" என்று பஞ்ச் வைக்கிறார் சிவா.

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

ர்னாடக சங்கீதத்தில் முத்திரை பதித்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா பெற்றோர்களுக்கென சில சங்கதிகள் சொல்கிறார். "எங்களுடையது வணிகக் குடும்பம். எல்லோருக்குமே இசையில் ஆர்வம். ஆனால், யாரும் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. என் அம்மா நன்றாகப் பாடுவார். அவரைப் பார்த்து நானும் பாட வேண்டும் என்று ஒரு குச்சியை வைத்துக்கொண்டு தம்புராபோலக் கற்பனை செய்துகொண்டு பாடுவேனாம். அதைக் கவனித்த அம்மா, என்னை இசை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார். என் முதல் கச்சேரி 12 வயதில் நடந்தது. இசைத் துறைக்கு எங்கள் குடும்பத்தில் இருந்து வந்த முதல் ஆள் நான்தான்!" என்பவர் படித்தது பொருளாதாரம். "எகனாமிக்ஸ் படித்து அதில் நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனா, இசை என்னை விடவில்லை. கல்லூரிக் காலங்களில், ஆர்வத்தில் செய்த கச்சேரிகள் பாராட்டுகளைக் குவிக்க, சாஸ்திரிய சங்கீதம் என்னை முழுவதுமாக சுவீகரித்துக்கொண்டது. பெற்றோர்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்கள் பிள்ளைகளின் மீது நம்பிக்கைவையுங்கள். அவர்கள் சாதிப்பார்கள். நான் இன்று ஜெயித்திருக்கிறேன் என்றால், அதற்கு என் குடும்பம் ஆதரவாக இருந்தது" என்பவர், இளைஞர்கள் கவனிக்க வேண்டிய சிலவற்றையும் பட்டியலிடுகிறார்.

"இளம் பருவத்தில் பாராட்டுகள் கிடைப்பது சுலபம். காரணம், சின்ன வயசுதானே என்று பாராட்டிவிடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு எந்த வளர்ச்சியும் இல்லாமல் பல வருடங்களுக்கும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு ஆதரவுகள் கிடைக்காது. நான் சின்ன வயதில் பாடும்போது, மதியம் 12 மணி, 1 மணி கச்சேரி கள்தான் கிடைக்கும். காரணம், அது இலவசக் காட்சி. டிக்கெட் கட்டணம் கிடையாது. அதன் பிறகு, என் திறமையை நான் மெருகேற்ற மெருகேற்ற, எனது கச்சேரிகளைக் காசு கொடுத்துக் கேட்க முன்வந்தார்கள். எல்லாத் துறைகளிலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வளர்ச்சியை அடைவார்கள். இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விதி... பாராட்டுகளுக்கு மயங்கி நிற்காதீர்கள். பாராட்டுக்கள் நீங்கள் நன்றாக வளர்கிறீர்கள் என்பதற்கானது அல்ல; இன்னும் இன்னும் வளர வேண்டும் என்பதற்கான தூண்டுகோல்!"

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

டித்தவர்களே போட்டியின் காரணமாகச் சிரமப்படும் இந்தக் காலத்தில் படிப்பு, மொழி, வறுமை எனப் பல இன்னல்களைத் தாண்டி தன் ஆசையில் ஜெயித்திருக்கிறார் ஜானகி. நடிப்பு படிக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் டெல்லியில் அமைந்திருக்கும் 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் இடம் கிடைக்க வேண்டும் என்பது வாழ்நாள் தவமாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து அந்தப் பள்ளிக்குச் சென்று பயின்ற முதல் பெண், ஜானகி. "கன்னியாகுமரியில் தேவ சகாய மௌன்ட்தான் என் சொந்த ஊர். தலித் விவசாயக் குடும்பம். ப்ளஸ் டூ-வுக்கு மேலே படிக்க முடியலை. கரஸ்ல பி.ஏ., தமிழ் படிச்சேன். எங்க தாத்தா ஒரு 'கவியல்' ஆசான். அதனால், இயல்பாவே நாட்டுப்புறக் கலை மேல் ஒரு ஈர்ப்பு. 'முரசு'ன்னு ஒரு கலைக் குழுவில் வேலை பார்த்தபோதுதான், நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா பத்தி தெரிஞ்சது. அப்போது இருந்தே அங்கு எப்படியாவது சேர்ந்து படிக்கணும்னு ஆசை. அப்போது, நாகர்கோவிலில் 10 நாட்கள் நாடகப் பயிற்சியில் கலந்துகொண்டேன். பயிற்சியின் இறுதியில் நடைபெற்ற ஒரு தேர்வில், 'நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?'னு ஒரு கேள்வி. 'டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேர்ந்து படிச்சு, அங்கீகாரம் பெற்ற கலைஞன் ஆக ஆசை!'ன்னு எழுதினேன். கிராமத்தில் பிறந்தவளுக்கு இப்படி ஓர் ஆசையான்னு ஆச்சர்யப்பட்டாங்க. அதுதான் திருப்புமுனை. டெல்லி பயிற்சிப் பள்ளிக்கு அவங்களே என்னை விண்ணப்பிக்கவைத்தார்கள். அங்கு பயிற்று மொழி ஆங்கிலம் அல்லது இந்தி. இந்த ரெண்டுமே என் பரம்பரையில் யாருக்கும் தெரியாது. 'முரசு' குழுவினரின் செலவில், ஆங்கில, இந்தி மொழிகள் பயிற்சி வகுப்புக்குப் போனேன். சமாளிக்கக்கூடிய அளவுக்கு அந்த மொழிகளைக் கற்றுக்கொண்டு டெல்லிக்குச் சென்றேன். பள்ளியில் சேர்ந்தேன். முதல் வருட முடிவில் மாணவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி நடித்துக்காட்ட வேண்டும். நாங்கள் தயாரித்த நாடகத்தில் எனக்கு ஊமைப் பாத்திரம். நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் மொழிப் பிரச்னை தடங்கலாக இருந்ததால், என்னைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். விடாமுயற்சியாக அடுத்த ஒரு வருட இடைவெளியில் இந்தியை நன்கு கற்றுக்கொண்டேன். இப்போ மறுபடியும் அந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ளேன். நிச்சயம் முத்திரை பதிப்பேன்!" என்கிறார் கனவுகளை நனவாக்கப் போராடும் இளைஞர்களின் பிரதிநிதியாக!

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

வித்தியாசமான நிகழ்ச்சிகளால் உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் விஜய் டி.வி-யின் புரொகிராமிங் ஹெட்... பிரதீப் மில்ராய் பீட்டர். "ஆர்வம் உள்ள துறையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால், ஒவ்வொரு நாளின் பயணமுமே சுவாரஸ்யம்தான்!" என்கிறார். "பள்ளிக்கூட வயசில் கேமராவும் கையுமா அலைவேன். 'விஷ§வல் கம்யூனிகேஷன்' என்ற புதிய படிப்புபற்றி தெரிய வந்தது. கொஞ்சம் செலவும் ஜாஸ்தி. புது படிப்புங்கிறதால வேலைவாய்ப்பு குறித்த அச்சம். ஆனா, என் கனவுகளுக்கு இடம் கொடுக்கும் படிப்பு. அதை மட்டும் மனசுலவெச்சுட்டு விஸ்காம் சேர்ந்தேன். ஆசைப்பட்டுப் படிச்சேன். படிச்சதை அப்ளை பண்ணிப் பார்க்க, படிக்கும்போதே பகுதி நேரமாக ஒரு சேனலில் வேலை பார்த்தேன். அந்த நாளின் அனுபவம் இப்போ வரை எனக்குக் கை கொடுக்குது. நான் இந்தத் துறையில் நுழையும்போது, டி.வி-யில் வேலை என்பது அவ்வளவு மரியாதையான விஷயம் கிடையாது. சம்பளமும் ரொம்பவே குறைவு. அதெல்லாம் மனசுல ஏத்திக்கலை. ஒரே காரணம், ஆர்வம்தான்!

நான் மட்டுமல்ல... இன்று சாதித்து இருப்பவர்கள் எல்லோரும் சம்பளம்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஆர்வத்தை மட்டுமே செலுத்தி வந்தவர்கள்தான். பி.ஏ., பி.காம்., என்று வழிவழியாக வரும் படிப்புகளைப் படிக்காமல், புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் என்னை உயர்த்தியது. அதே வித்தியாசம் உங்களையும் உயர்த்தும். நீங்கள் செய்யும் தொழிலில் வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே இருங்கள்!" என்று உற்சாகம் உரைக்கிறார்.

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

"இலக்கு எதுவாக இருந்தாலும், அதை அடையும் வரை, நம் வேலையில் கவனமாக இருந்தால், எதுவும் சாத்தியம்!" சினிமாவில் டிசைனராகத் தன் தடம் பதித்த வாசுகி இப்படி ஆரம்பிக்கிறார். "படித்தது பி.ஏ., ஆங்கில இலக்கியம், எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன். வேலையோ... சினிமா காஸ்ட்யூம் டிசைனர். எப்படிச் சாத்தியம்? சின்ன வயசுல இருந்தே புதுப்புது டிசைன்களில் டிரெஸ் பண்ணி போட்டுக்குவேன். அந்தப் பழக்கமே, ஃபேஷன் டிசைனிங் மேல் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மாஸ் கம்யூனிகேஷன் முடிச்ச கையோடு, ஃபேஷன் டிசைனிங்தான் படிப்பேன்னு அடம்பிடிச்சு அந்தப் படிப்பில் சேர்ந்தேன். படிச்சுட்டு இருக்கும்போதே, ஒரு விளம்பரம் பண்ணிக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு பாரதிராஜா அங்கிள், 'கண்களால் கைது செய்' படத்தில் வேலை பார்க்கச் சொன்னார். அப்படி ஆரம்பிச்சது என் சினிமா பயணம். ஆனா, நான் சினிமாவில் வேலை பார்ப்பது வீட்டில் யாருக்கும் பிடிக்கலை. அவங்ககிட்ட காஸ்ட்யூம் டிசைனிங்தான் என் கனவுன்னு புரியவைக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன். என் சொந்தக்காரங்களே என் வேலையைப்பத்தி ஏதாவது தப்பா பேசினால், நான் எந்தப் பதிலும் சொல்ல மாட்டேன். ஆனா, ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசாம, என் கோபத்தை எல்லாம் ஆக்கபூர்வமா வேலையில் காண்பிச்சேன். விடாம போராடிட்டே இருந்தேன். நான் நினைச்ச இடத்தை அடைந்தவுடன், என்னை இளக்காரமா பார்த்தவங்க இப்போ ஆச்சர்யமாப் பார்க்கிறாங்க!" என்று பூரிக்கிறார் வாசுகி.

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!

"நான் படித்தது வரலாறு. ஆனால், இப்போது நான் இயங்கும் தளங்களில் எல்லாம் வரலாறு படைக்க முயற்சிக்கிறேன்!" என்கிறார் அஜயன் பாலா. "வீட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச் சொல்வார்கள் என்பதாலேயே, நான் படித்த டிகிரி சர்ட்டிஃபிகேட்டை இன்னும் வாங்கவே இல்லை. அவர்களுக்கு அரசாங்க வேலை முக்கியம். எனக்கோ... சினிமா கனவு. செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையே 56 கிலோ மீட்டர்கள் என்றபோதும் கோடம்பாக்கத்தை அடைவதற்கான வழிகள் எனக்குப் பிடிபடாமலேயே இருந்தது. சென்னை வந்து பல்வேறு பத்திரிகைகளில் வேலை பார்த்தேன். பிறகு, நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்ததால், உதவி இயக்குநர் ஆனேன். 'லவ் டுடே' படத்தில் இணை இயக்குநர். அதன் பின்பு தயாரிப்பாளர் கிடைத்தும் ஐந்து முறை பல்வேறு காரணங்களால் படம் டிராப் ஆனது. நான் இயக்குநராகும் வாய்ப்புகளை இழந்தபோதெல்லாம் என் வலிகளை வெளிக்காட்டாமல் என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டே இருந்தேன். உலக சினிமாக்கள், ஆங்கில இலக்கியங்கள் எனக் காலம் சென்றது. வேதனைகள் இருந்தாலும், நண்பர்களின் ஆதரவும் இருந்த அந்த காலகட்டத்தில்தான் 'பைசைக்கிள் தீவ்ஸ்' என்ற கிளாஸிக் படத்தின் திரைக்கதையைத் தமிழில் எழுதினேன். அதற்குக் கிடைத்த வரவேற்பில் பத்திரிகைகளில் தொடர்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய 'கூட்ஸ் வண்டியில் கடைசிப் பெட்டி' சிறுகதை 'இலக்கியச் சிந்தனை' பரிசு வென்றது. இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக 'தி வீக்' ஆங்கில இதழ் என்னையும் தேர்வு செய்தது. இப்போது எழுத்தாளன், பேச்சாளன், நடிகன், சமூக ஆர்வலன் என எனக்குப் பல அடையாளங்கள். நமக்கு நம் லட்சியத்தின்பால் பிடிவாதம் இருக்கும். அந்தப் பிடிவாதம் நமக்கு உள்ளே இருக்கும் மற்ற திறமைகளை மறைத்துவிடும். அந்தப் பிடிவாதம் நம்மை ஒரே திசை நோக்கியே நகர்த்தும். அதனால், வேறு பல நல்ல வாய்ப்புகளையும் இழக்க நேரிடலாம். ஆகவே, ஒன்றில் மட்டும் பிடிவாதம்கொள்ளாமல் மற்ற திறமைகளையும் கண்டறியுங்கள்!" என்கிறார் அஜயன் பாலா.

'முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்' என்கிறது வள்ளுவம். அதே தத்துவம்தான் இவர்களை உயர்த்தி இருக்கிறது. உங்களுக்கு எது பிடிக்கிறதோ... அதை நிறைவாகச் செய்யுங்கள். அந்தப் பங்களிப்பு, உங்களுக்கும் உலகத்துக்கும் முன்னேற்றத்தைத் தருவதாக அமையட்டும்!

படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!
படித்த துறையா... பிடித்த துறையா? டிக்டிக் டிக்கெட்ஸ்!