வீட்ல, ஏதேதோ சொல்லி சமாளிச்சேன். அந்தக் காலத்தில்... கல்யாணம், மேடை விழாக்கள், ஸ்டுடியோ போட்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கிறது... இவ்வளவுதான் போட்டோகிராஃபி. இதைத் தாண்டி அதை வாழ்க்கை முழுக்கச் செய்ய முடியும்னு சொல்றதுக்கு, முன் உதாரணங்கள் இல்லை. அதனால், வீட்டுக்காக கரஸ்பாண்டென்ஸ்ல சும்மா ஒரு பி.எஸ்சி., பிசிக்ஸ் போட்டுவெச்சேன். ரவி யாதவ் அப்போ பெரிய கேமராமேன். அவர்கிட்ட வேலை பார்த்தேன். அப்போ யார் யார்லாம் ஃபீல்டில்ல இருந்தாங்களோ... அவங்க பல பேரிடம் வேலை பார்த்தேன். சினிமாவோ, விளம்பரப் படமோ... எந்த ஷூட்டிங்கா இருந்தாலும் போய் நிப்பேன். ஒவ்வொண்ணும் ஏதாவது கத்துக் கொடுத்தது.
அப்போதான் 89-ல் லயோலாவில் முதல்முறையா விஸ்காம் படிப்பு கொண்டுவந்தாங்க. ஆசை ஆசையாப் போய்ச் சேர்ந்தேன். அப்போ என்கூட ஸ்கூல்ல படிச்சவங்கள்லாம்... காலேஜ் முடிச்சுட்டு வெளியே வந்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் கலக்கமா இருந்தாலும், தைரியமா விஸ்காம் சேர்ந்தேன். படிச்சுட்டே போட்டோகிராஃபர் சரத் ஹக்சர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். காலேஜ் நேரம் போக, மீதி நேரம் எல்லாம் ஷூட்டிங்... ஷூட்டிங்தான். ஒன்றரை வருஷம் அவருடன் வேலை பார்த்துட்டு, தனியா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.
அரைப் பக்க கோ-ஆப்டெக்ஸ் விளம்பரம் தான் என் முதல் புராஜெக்ட். அப்புறம் போத்தீஸ், நல்லி சில்க்ஸ்னு பண்ண ஆரம்பிச் சேன்.
இப்போ நினைச்சதும்... எல்லாம் கிடைக்குது. நல்ல லேப், பிரமாதமான கேமரா, திறமையான டெக்னீஷியன்ஸ் எல்லோரும் இருக்காங்க. அப்போ எதுவும் சுலபமாக் கிடைக்காது. போட்டோகிராஃபி ஒரு பொழுதுபோக்கா மட்டுமே இருந்த சமயத்தில், அதை ஒரு தொழிலா எடுத்துப் பண்ணும்போது அதுக்கே உரிய சவால்கள் வந்தன. அனுபவத்தில்தான் எல்லாம் சமாளிச்சேன். அந்தக் காலத்தில் விளம்பர போட்டோகிராஃபி என்பது வெறுமனே பொருட்களை மையப்படுத்தித்தான் இருக்கும். ஃப்ரிஜ் விளம்பரம்னா... அதன் சிறப்புகளை மட்டும் சொல்லுவாங்க. நான் உயிரற்ற பொருட்களுடன் மாடலிங் பெண்களையும் இணைத்து போட்டோகிராஃபியின் கலரை மாத்தினேன். அது அந்தச் சமயத்தில் ரொம்பவே புதுசு.
அப்போதான் மணிரத்னம் சார் கூப்பிட்டார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்காக ஒரு போட்டோ ஷூட் பண்ணணும். வழக்கமான சினிமாவுக்கான ஸ்டில் போட்டோகிராஃபி வேற. இது வேற. ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சும்மா ஒன் லைன் மட்டும் மனசுல வெச்சுக்கிட்டு லொகேஷன் பார்த்து நடிகர்களைவெச்சு போட்டோ ஷூட் பண்ணணும். 'பாய்ஸ்' படத்துக்கு போட்டோ ஷூட் பண்ணும் வாய்ப்பை ஷங்கர் சார் கொடுத்தார். இரண்டும் ஒரே நேரத்தில் பண்ணினேன். அது என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட எல்லோருமே போட்டோ ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தனிப்பட்ட வகையில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால்னு ஆரம்பிச்சு, இன்னிக்கு முன்னணியில் இருக் கும் எல்லா நட்சத்திரங்களுக்கும் போட்டோ ஷூட் பண்ணி இருக்கேன்.
'அடுத்து என்ன?'ன்னு நிறையப் பேர் கேக்கிறாங்க. காலேஜ் படிக்கும்போது ஒளிப்பதிவு ஆசை இருந்தது. ஆனா, போட்டோகிராஃபிதான் வாழ்க்கைன்னு வந்த பிறகு, அந்த ஆசையை விட்டுட்டேன். இதில் செய்ய வேண்டியதே நிறைய இருக்கு. ஒரு சைக்கிள் வீரரால் அந்தத் துறையில்தான் சாதனை படைக்க முடியும். அவர் மோட்டார் பைக் ரேஸில் பங்குபெற முடியாது. சினிமா, விளம்பரப்படங்கள் தவிர... என்னோட சொந்த ஆர்வத்தின் அடிப்படையில், தனிப்பட்ட புகைப்படக் கண்காட்சியும் நடத்துறேன். இரண்டு வருஷங்கள் செலவழிச்சு, சோழ மண்டலங்களின் கோயில்களை முழுக்கவே கறுப்பு-வெள்ளையில் ஒரு போட்டோ ஷூட் பண்ணேன். பல கல்லூரிகளின் விஸ்காம் மாணவர்களுக்கு என் அனுபவங்களைப் பகிர்ந்துக்கிறதுக்காகப் போயிட்டு வர்றேன். இது, மேலும் மேலும் உற்சாகத்தைத் தருது.
வாழ்க்கையில் நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான்... வாய்ப்பை யாரும் தங்கத் தட்டில்வெச்சு நமக்குத் தர மாட்டாங்க. அது எங்கேயோ ஒரு மூலையில் கிடக்கும். நாமதான் தேடி எடுத்துத் திறந்து பார்க்கணும். அப்படிக் கண்டுபிடிச்ச பிறகு, அதில் முழு ஈடுபாட்டோடு உழைச்சாலே போதும். அதுவே உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டுப் போகும். 'நம்மால் முடியும்' என்பது வேற. இப்படிப்பட்ட போலி தைரியத்தோடு நிறைய பேர் வர்றாங்க. ஆனா, தைரியத்தைத் தாண்டி ஈடுபாடும் பொறுப்பும் வேணும். நான் 1995-ல் என் கேரியரை ஆரம்பிச்சேன். இந்த இடத்தை வந்தடைய இத்தனை வருடங்கள் தேவைப்பட்டன. வளர்ச்சி என்பது படிப்படியா இருந்தால்தான்... அதன் சுவை புரியும்!"
|