"அவளாதானே போனா, அவங்க அப்பன் பெரிய பணக்காரன்கிற திமிர்லதானே போனா... அவளாத் திரும்ப வரட்டும். நீ அவளுக்கு போன்கூடப் பண்ணாதேடா!" என்று தாய்க்குலம் ஓதிவைக்க, ஒமரும் அடி பிறழாமல் அப்படியே இருந்தான். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, கடைசியில் இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன.
"வீட்டுல ஒரு நாய் வளர்த்தாகூட... அது சாப்பிட்டுச்சா, நல்லா இருக்கான்னு கவலைப்படுவோம். கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளையும் எப்படி இருக்காங்கனு ஒரு போன்கூட பண்ணிக் கேட்காத இவனெல்லாம் ஒரு மனுஷனா, அவனை மறந்துடு" என்று நர்கீஸுக்கு எல்லோரும் அறிவுரை கூறினார்கள். அவள் படித்த பெண், அதனால், சும்மா வீட்டில் உட்கார்ந்துகொண்டு கவலைப்படுவதற்கு ஏதாவது வேலைக்குப் போகட்டுமே என்று அப்பா அவளுக்கு ஒர் பிசினஸ் ஏற்படுத்தித் தந்தார். பலரைத் தினமும் சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றாள் நர்கீஸ். அப்படி அவள் சந்தித்த நபர்களில், ரியாஸ் என்பவனுக்கு அவள் மேல் ஆசை, காதல், இரக்கம் எல்லாம் வந்தது. அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, அவள் பெற்றோரிடம் விண்ணப்பிக்க, ஆரம்பத்தில் ஆட்சேபித்த நர்கீஸும், போகப்போக இணங்க ஆரம்பித்தாள். இருவருக்கும் திருமணம் முடிவானது.
நர்கீஸ் அவனை தலாக் செய்துவிட்டு, ரியாஸைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறாள் என்பது தெரிந்ததும், ஒமருக்குப் பதற்றம் ஆரம்பித்தது. அவள் தன்னைவிட்டு நிரந்தரமாகப் போய்விடப் போகிறாள் என்றதும்தான் அவனுக்குத் தன் இழப்பின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. நர்கீஸோடு அவன் சந்தோஷமாக இருந்த நாட்கள் நினைவுக்கு வர, தன் மனைவியை இன்னொருத்தன் தொடப்போகிறானே என்கிற தவிப்பும், என் மகளை அவன் ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயமுமே அவன் தூக்கத்தைக் கெடுத்தன. வீட்டில் இதுபற்றிப் பேச்சு தலை தூக்கியபோது, "பொம்பளை அவளுக்கே இன்னொரு புருஷன் கிடைக்கும்போது, என் பையனுக்கு நான் இன்னொரு நிக்காஹ் பண்ணிவைக்க மாட்டேனா?" என்று ஆரம்பித்தாள் அவன் அம்மா. "ஆமா, முதல் பொண்டாட்டியோடு ரொம்ப வாழவிட்டுட்டே... இன்னொரு பொண்ணு வந்து இந்த வீட்ல கஷ்டப்படணுமா? நான் ஒருத்தன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறது போதாதுன்னு இப்ப என் பையன் வாழ்க்கையையும் கெடுத்துட்டியே!" என்று அப்போது மட்டும் திருவாய் மலர்ந்தார் ஒமரின் அப்பா. அப்போதுதான் ஒமருக்குச் சட்டெனப் பொறி தட்டியது.
அதுவரை அம்மாவை மீறி எதுவும் சிந்தித்தும் பார்த்திராத ஒமருக்கு அப்போதுதான் அம்மா என்கிற உறவை மறந்து ஒரு தனி மனுஷியாக அவளை எடை போட முடிந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாருடனும் அனுசரித்துப்போகாமல் எப்போதுமே இன்செக்யூர்டாக அம்மா இருந்தது அவன் நினைவுக்கு வந்தது. தங்கை தன் கணவனுடன் தங்க வந்தால், தன் படுக்கை அறையை அம்மா காலிசெய்து தந்ததும், இவன் தன் மாமியார் வீட்டுக்குப் போனால் மட்டும், "அங்கெல்லாம் போய் ராத்திரி தங்காதேடா, அப்புறம் நம்மளை மதிக்க மாட்டாங்க" என்று தடுத்ததும், நர்கீஸ் போனதில் இருந்து அம்மா அவன் சம்பளத்தைவைத்து தங்கை குழந்தைக்கு நகை செய்து போட்டதும், இன்னும் இதுபோன்ற பல சம்பவங்களும் நினைவுக்கு வந்தன.
அதற்குள் நர்கீஸ், ஜமாத்தில் சொல்லி விவாகரத்து வாங்கி ரியாஸை நிக்காஹ் செய்துகொண்டாள். அடுத்த ஆண்டு அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் அதற்கு அடுத்த ஆண்டு இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தன. அப்போதும் ஒமருக்கு இன்னொரு நிக்காஹ் செய்து முடிக்கவில்லை அவன் அம்மா. தன் அறையின் தனிமையில் தன் இழப்பை நினைத்து ஒமர் எவ்வளவோ வருந்தினான். ஆனால் அவன் அம்மா, "அந்த ராட்சசிகிட்டே இருந்து என் பையனைக் காப்பாத்திட்டேன்" என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டுக்கொண்டாள்.
ஆக, எப்போதெல்லாம் ஆண்கள் தங்கள் அம்மாக்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் மரபணு அபிவிருத்தியில் தோற்றுத்தான் போகிறார்கள். அதனால்தானோ என்னவோ, தொல்காப்பியர்கூட, அடிமையாகவோ, காவலனாகவோ இருப்பவனை ஒரு பாட்டுக்குக்கூடத் தலைவனாக வைக்கக் கூடாது என்கிற விதியை வகுத்தார். பாட்டுக்கே தலைவனாக இருக்க லாயக்கற்ற அடிமை, எப்படி ஒருத்தியின் வாழ்க்கைக்குத் தலைவனாக இருக்க முடியும்?
|