மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 12

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 12

மனம் கொத்திப் பறவை! - 12
மனம் கொத்திப் பறவை! - 12
மனம் கொத்திப் பறவை! - 12
மனம் கொத்திப் பறவை! - 12

தாஸ்தாவஸ்கியின் பாத்திரத்தைப்போல் வாழ்ந்த ஒரு விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபேன்மன்

(Richard Feynman). இயற்பியலில் குவான்டம் எலெக்ட்ரோ டைனமிக்ஸில் செய்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற ஃபேன்மன் (1918-1988) மற்ற விஞ்ஞானிகளைவிட மிகவும் வித்தியாசமானவர்.

அவருடைய சுயசரிதையான 'Surely You Are Joking Mr. Feynman' என்ற நூல் ஒரு மகத்தான

மனம் கொத்திப் பறவை! - 12

நாவலுக்கு உரிய எல்லா தகுதிகளையும்கொண்டது. வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்போதும் உல்லாசம்; எந்த நிலையிலும் உற்சாகம்! அதைத்தான் இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்க முடிகிறது. கல்லூரியில் படிக்கும்போது, அவருடைய சக மாணவர்கள் தங்கள் அந்தஸ்துக்கு ஏற்றபடி பணக்காரப் பெண்களோடு சகவாசம் வைத்துக்கொண்டபோது, ஃபேன்மன் மட்டும் வாய் பேசாத, காது கேளாத ஒரு பெண்ணைத் தன் தோழியாக ஆக்கிக்கொண்டார். அதுவும் ஹோட்டலில் வேலை பார்த்த ஒரு பணிப் பெண். ஃபேன்மனிடம் என்னை ஈர்த்தது இதுதான். அவருடைய வாழ்நாள் முழுவதுமே அவர் எல்லோரையும் சமமாகவே பாவித்தார். ஒருநாள் தோழி அவரைத் தன்னுடைய மற்ற தோழிகளைப் பார்ப்பதற்கு அழைத்துச் செல்கிறாள். எல்லோரும் தங்கள் நண்பர்களுடன் நடனமாடியபடி உல்லாசமாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே வாய் பேசாது; காது கேட்காது. ஆனாலும், சைகை மொழியில் வெகு சரளமாகப் பேசிக்கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் இருந்ததைப் பார்த்து ஃபேன்மன் சொல்கிறார், 'எனக்குத் தெரியாத ஓர் அந்நிய மொழியைப் பேசும் நண்பர்கள் மத்தியில் இருந்ததுபோல் உணர்ந்தேன். உண்மையில் எனக்குத்தான் சிரமமாக இருந்ததே தவிர, அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்!'

மனம் கொத்திப் பறவை! - 12

அன்றைய தினம் அவர்களோடு நீண்ட நேரம் இருந்ததால், அதே சைகை மொழி ஃபேன்மனுக்கும் ஓரளவுக்குப் பழகிவிட்டது. திடீர் என்று அவருக்குப் பால் குடிக்க வேண்டும் என்று தோன்ற, பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று மில்க் என்று வாயைப் பக்கவாட்டில் அசைத்து, ஆனால் சத்தம் வெளியே வராமல் கேட்டிருக்கிறார். கடைக்காரருக்குப் புரியவில்லை. ஏனென்றால், மில்க் என்பதற்கு சைகை மொழி வாயைப் பக்கவாட்டில் அசைப்பது அல்ல; பிறகு, மாட்டின் மடியில் இருந்து பால் கறப்பதுபோல் இரண்டு கைகளையும் மேலும் கீழும் ஆட்டிக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் கடைக்காரருக்கு விளங்கவில்லை. கடையில் கண்களுக்கு எதிரே மில்க் பாக்கெட்டும் இல்லை. இருந்தால் சுட்டிக் காட்டி இருக்கலாம். இப்படியே கடைக்காரரும் ஃபேன்மனும் ரொம்ப நேரம் போராடியிருக்கிறார்கள். கடைசியில், ஓர் ஆள் வந்து மில்க் என்று சொல்லி வாங்கிக்கொண்டு இருப்பதைப் பார்த்ததும் சைகையிலேயே 'இதுதான்... இதுதான்!' என்று காண்பித்து உற்சாகமாகக் குதித்திருக்கிறார் ஃபேன்மன்.

இதுவரை நடந்ததோடு முடிந்திருந்தால், ஃபேன்மனை அராத்து என்று சொல்லியிருக்க மாட்டேன். பாலைவாங்கிக்கொண்டு கடைக்காரரிடம், 'தேங்க்யூ வெரிமச்!' என்று வாயைத் திறந்து சொல்லி இருக்கிறார். இதைச் சற்றும் எதிர் பார்க்காத கடைக்காரர், 'அட, சைத்தானுக்குப் பிறந்தவனே!' என்று திட்டினாராம். இப்படியே பக்கத்துக்குப் பக்கம் வயிறு வலிக்கச் சிரிக்கும்படி ஃபேன்மனின் சாகசங்கள் தொடர்கின்றன.

மனம் கொத்திப் பறவை! - 12

1945-ல் ஹிட்லரின் மரணத்துக்குப் பிறகு, ஜெர்மனி பிரிட்டிஷ்/அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்பில் வந்தது. அதற்காக அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான தேர்வுக்கு ஃபேன்மன் போய் வந்த கதை, சார்லி சாப்ளினின் 'தி க்ரேட் டிக்டேட்டர்' படத்தைவிட நகைச்சுவையானது. ஃபேன்மன் அந்தச் சமயத்தில் ராணுவத்துக்குத் தேவைப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட்டு இருந்த நேரம். இருந்தாலும், கட்டாய ராணுவ சேவை என்பதால் செல்கிறார். உடல் பரிசோதனையில்தேறி விடுகிறார். அடுத்து, மனநலம். சைக்கியாட்ரிஸ்ட் இவரிடம் கேட்கிறார், 'யாராவது உங்களைப்பற்றிப் பேசுவது உண்டா?'

'ஆமாம். என் அம்மா என்னைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவாள்!' (ஆனால், சைக்கியாட்ரிஸ்ட் இவர் சொன்ன பதிலை முழுமையாகக் கேட்காமல், 'ஆமாம்' என்றதுமே ஏதோ சீரியஸாக எழுத ஆரம்பித்துவிடுகிறார்).

அடுத்த கேள்வி. 'உங்களை யாரும் உற்றுப்பார்ப்பது உண்டா?' இதற்கு ஃபேன்மன் 'இல்லை' என்று சொல்ல வாயெடுக்கும்போது சைக்கியாட்ரிஸ்ட், 'உதாரணமாக, இந்த அறையில் யாரும் உங்களை உற்றுப்பார்க்கிறார்களா?' என்று கேட்கிறார். உடனே, சுற்றுமுற்றும் பார்த்த ஃபேன்மன், பெஞ்ச்சில் தங்கள் முறைக் காகக் காத்துக்கொண்டு இருந்த இளைஞர்களில் இரண்டு பேர் தன்னையும் சைக்கியாட்ரிஸ்ட்டையும் உற்றுப்பார்ப்பதைக் காண்கிறார்.

'ஆமாம், இரண்டு பேர் நம்மை உற்றுப்பார்க்கிறார்கள்!' ஆனால், சைக்கியாட்ரிஸ்ட் இப்போதும் ஃபேன்மன் சொல்வதை முழுதாகக் கேட்கவில்லை. 'ஆமாம்' என்றதுமே சீரியஸாக எழுத ஆரம்பித்து விடுகிறார். இதேபோல் பல கேள்விகள். 'உங்களுடனேயே நீங்கள் பேசிக்கொள்வது உண்டா?' 'ஆமாம், ஷேவ் செய்துகொள்ளும்போது பிளேட் அறுத்துவிட்டால், 'சே... லூஸுத்தனமா பண்ணிட்டனே!' என்று என்னையே திட்டிக்கொள்வேன்!' 'உங்கள் பயோடேட்டாவில் இருந்து உங்கள் மனைவி இறந்துவிட்டார் என்று தெரி கிறது. அவரோடு பேசுவீர்களா?' 'ஆமாம், எப்போதாவது அவளை நினைத்து 'ஐ லவ் யூ டார்லிங்' என்று சொல்வேன்!'

கடைசிக் கேள்வி. 'வாழ்க்கையின் மதிப்பு என்ன?' பதில் '64.' 'என்னது 64ஆ? 73 என்று ஏன் சொல்லக் கூடாது?' 'அதுசரி, 73 என்று சொன்னாலும் நீங்கள் இதே கேள்வியைத்தானே மாற்றிக் கேட்பீர்கள்?'

தேர்வின் முடிவில் ஃபேன்மனுக்கு பைத்தியம் என்று சொல்லி, ராணுவம் அவரை நிராகரித்து விடுகிறது.

பிறகு, இந்தச் சம்பவத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லிச் சிரிக்கிறார் ஃபேன்மன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ஃபேன்மனின் அம்மா தன் கண வரிடம் 'இப்போது என்ன செய்வது? இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே?' என்று கவலையுடன் கேட்டாராம். அது மட்டுமல்ல; ஃபேன்மன் அங்கு இருந்து நகர்ந்த பிறகு அவருடைய அப்பா, 'என்ன இருந்தாலும் நீ அவன் எதிரில் அப்படிக் கேட்டு இருக்கக் கூடாது, பாவம் அவன்!' என்று சொல்லி இருக்கிறார். இதை ஃபேன்மனிடம் சொன்னது அவருடைய தங்கை.

இப்படியே போகும் இந்தப் புத்தகத்தில், அவ் வப்போது சில இயற்பியல் புதிர்களும் உண்டு. ஃபேன்மன் மாணவனாக இருந்தபோது, ஐன்ஸ் டீனின் நண்பரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுத் திணற அடித்திருக்கிறார். ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்தபோது, யாருக்கும் அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. எப்படி இதைக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டால், 'கனவில் வந்தது!' என்கிறார் ஐன்ஸ்டீன். ஒரு பொருளை மேலே எறிகிறீர்கள். அது புவியீர்ப்பு விசையால் கீழே விழுகிறது. இதுதான் நார்மல் நேரம் மற்றும் நார்மல் தூரம். ஆனால், அதே பொருளை மிகுந்த வேகத்துடன், அதிக உயரத்துக்கு அனுப்பினால், அங்கே 'நேரம்' சீக்கிரமே கடந்துவிடும். அதாவது, 'இவ்வளவு வேகமாப் போறானே, சீக்கிரம் செத்துடுவான்!' என யாராவது சாபம்விட்டால் ரிலேட்டிவிட்டி தியரியின்படி அது தப்பு. லாஜிக் இடிக்கும். ஏனென்றால், அந்தத் தியரியின்படி ஒரு பொருள் வேகமாகச் சென்றுகொண்டு இருக்கும்போது, மூன்று மாறுதல்களுக்கு உள்ளாகிறது.

1) பொருளின் நிறை கூடுதல் (An increase in mass)

2) அது போகும் திசையில் நீளம் குறைதல் (A contraction in the direction of travel)

3) காலம் மெதுவாகச் செல்லுதல் (A slowing down of time)

மனம் கொத்திப் பறவை! - 12

வேகம் கம்மியாக இருந்தால், மாறுதல் மிகவும் குறைவாக, நம்மால் உணர முடியாத அளவு இருக்கும். விமானத்தில் சென்றால்கூட இந்த மாறுதலை உணர முடியாது. ராக்கெட்டில் சென்றால் லேசான மாறுதல் தெரியும். ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ. அந்த வேகத்தில் சென்றால், காலம், பருமன், நீளம் ஆகியவற்றில் மாறுதலை உணரலாம். அதாவது, உங்களைவிட வயது முதிர்ந்த பெண்ணைக் கூடக் காதலிக்கலாம். இதை ஐன்ஸ்டீன் வேடிக்கையாக விளக்கினார். நீங்கள் உங்கள் முதலாளியோடு இருக்கும்போது மெதுவாகப் போகும் காலம், காதலியோடு இருக்கும்போது சீக்கிரமே ஓடிவிடும். இதன் அடிப்படையில் ஐன்ஸ்டீனின் நண்பரை மடக்குகிறார் ஃபேன்மன். நீங்கள் ஒரு கடிகாரத்துடன் ராக்கெட்டில் செல்கிறீர்கள். தரையில் இருக்கும் கடிகாரத் தின்படி நீங்கள் ஒரு மணி நேரத்தில் தரைக்குத் திரும்ப வேண்டும். ஆக, ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அதிகமான தூரம், எவ்வளவு வேகமாகப் போய் வர முடியுமோ, அவ்வளவு வேகமாகப் போய் திரும்ப வேண்டும். மிகவும் அதிக தூரம் போய் விட்டால், என்னுடைய கடிகாரத்தின்படி நீங்கள் ஒரு மணி நேரத்தில் திரும்ப முடியாது. அப்படியானால், நீங்கள் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு? உங்கள் ராக்கெட்டின் வேகம் என்ன?

ஃபேன்மனுக்கும் மற்ற விஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசம், மிஸ்டிஸிசம் (Mysticism) குறித்த விஷயத்தில் பூசி மெழுகாமல் நேர்மையாகப் பேசியவர் அவர்.

போகர் 7000-ல் வரும் ஒரு கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். கொங்கணவர் என்ற ரிஷி காட்டில் தவம் செய்துகொண்டு இருக்கும்போது மரத்தின் மேல் இருந்த கொக்கு ஒன்று எச்சமிட்டு விடுகிறது. கொங்கணவர் கோபத்துடன் பார்த்ததால் அது எரிந்துபோகிறது. பிறகு, கொங்கணவர் பிச்சைக்காக ஊரை நோக்கி வருகிறார். முதல் வீட்டில் பிச்சை கேட்கும்போது, அந்த வீட்டுப் பெண்மணி தன் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டு இருக்கிறாள். கொங்கணவரின் குரல் கேட்டு, கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு, கணவர் சாப்பிட்டு முடித்ததும் பிச்சையுடன் செல்கிறாள். அப்போது கொங்கணவர் 'இந்தப் பெண்ணுக்கு என் கோபத்தில் கொக்கு எரிந்துபோனது தெரியாது; தெரிந்திருந்தால் இப்படித் தாமதித்திருக்க மாட்டாள்!' என்று தனக்குள் நினைத்துக் கொள்கிறார். அப்போது அந்தப் பெண் அவரைப் பார்த்து, 'என்னைக் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?' என்று கேட்கிறாள்.

கொங்கணவர் கொக்கை எரித்தது நடுக் கானகத்தில். அது எப்படி இந்தப் பெண்ணுக்குத் தெரியும்? அந்தத் தருணத்தில்தான் கொங்கண வருக்கு ஞானம் கிடைக்கிறது. இதுதான் இந்திய ஆன்மிகம், நவீன விஞ்ஞானத்துக்கு விடுக்கும் சவால். இதை நேர்மையாக எதிர்கொள்ளும் ஃபேன்மன், 'விஞ்ஞானத்தில் இதற்குப் பதில் இல்லை!' என்கிறார்.

சமீபத்தில் பில்ஹணர் என்ற காஷ்மீரத்துக் கவிஞர் எழுதிய சௌரபாஞ்சசிகா என்ற சம்ஸ் கிருத குறுங்காவியத்தைப் படித்தேன். மொத்தம் 50 சுலோகங்கள். 11-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல், உலகின் மிகச் சிறந்த காதல் காவியங் களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கவிதை நயம் குன்றாமல், பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ள இந்த நூல் தமிழில் கிடைக்கவில்லை.

ஓர் அரசன், தன் மகளுக்குக் கற்பிப்பதற்காக கல்வியில் தேர்ந்த சௌரா என்ற இளைஞனை ஆசிரியராக நியமிக்கிறான். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்தி, அரசிளங்குமரி பார்வை அற்றவள் என்று சௌராவிடமும், சௌரா ஒரு குஷ்டரோகி என்று அரசிளங்குமரியிடமும் சொல்லிவிடுகிறான். ஆனால், அதையும் மீறி இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இது அரசனுக்குத் தெரியவர,

மனம் கொத்திப் பறவை! - 12

சௌராவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதுவரை நாம் அந்தக் காலத்தில் பார்த்த எம்.ஜி.ஆர் கதைதான். ஆனால், இந்தக் காவியத்தை உலகம் எல்லாம் போற்றுவதற்குக் காரணம் பின்னால் வருகிறது. சௌரா மரண தண்டனைக்காகக் கொண்டுசெல்லப்படும்போது, மன்னரை இறுதியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறான். மன்னரும் அதற்குச் சம்மதிக்க, தான் சிறையில் இருந்தபோது இயற்றிய 50 கவிதைகளையும் அரசனிடம் சொல்கிறான் சௌரா.

அந்தக் கவிதைகளில் அவனுக்கும் அரசிளங்குமரிக்குமான காதலையும், அவர்களுக்கிடையில் நடந்த மைதுன சல்லாபங்களையும் காமம் சொட்டச் சொட்ட எழுதியிருக்கிறார் பில்ஹணர். தன் மகளுக்கும் சௌராவுக்கும் இடையிலான காதலின் வீரியத்தை அந்தக் கவிதைகளில் கண்ட அரசன், மரண தண்டனையை ரத்து செய்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தான் என்று முடிகிறது காவியம்!

மனம் கொத்திப் பறவை! - 12
மனம் கொத்திப் பறவை! - 12
(பறக்கும்...)