மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 37

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 37

நீயும் ... நானும்! - 37
நீயும் ... நானும்! - 37
நீயும் ... நானும்! - 37
இந்த உலகம் எளியவர்களுக்கானது!
கோபிநாத் , படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 37

சென்னை நகரில் அடுத்தடுத்த 15 நிமிடங்களில் பார்த்த காட்சிகள் சில...

 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கிற பள்ளி முடிந்து மாணவர்கள் வாசலில் நிற்கிறார்கள். அவர்கள் சாலையைக் கடப்பதற்கு வசதியாக, அந்தப் பள்ளியில் பணி செய்யும் ஊழியர் 'ஸ்டாப்' என்ற பலகையைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார். வாகனங்கள் நிற்கின்றன. குழந்தைகள் சாலையைக் கடந்து சென்று தங்கள் வாகனங்களில் ஏறிப் பயணிக்கிறார்கள். குழந்தைகள் சாலையைக் கடந்து செல்லும் வரை எல்லோரும் பொறுமையாகக் காத்து இருந்தார்கள். ஒரு சிலர் மட்டும் ஒலிப்பான்கள் மூலம் சத்தம் எழுப்பி தங்கள் அவசரத்தை அறிவித்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அந்த ஒரு நிமிடம் பொறுமையாகவே காத்திருந்தார்கள்!

மேற்சொன்னதைப் போன்ற பரபரப்பாகவும் அதிகமான வாகனங்கள் இயங்கக்கூடியதாகவும் இருக்கும் இன்னொரு பகுதி. மாநகராட்சிப் பள்ளி முடிந்து மாணவர்கள் சாலையின் எதிர்புறம் செல்லக் காத்து நிற்கிறார்கள். அந்தப் பணக்காரப் பள்ளிபோல் இங்கு யாரும் 'ஸ்டாப்' என்ற பலகை பிடித்து நிற்கவில்லை. அண்ணன்கள் தங்கள் அறுந்த வார் பையை ஒரு பக்கமும், தங்கையின் கையை மறுபக்கமும் பிடித்துக்கொண்டு விறுவிறுவெனப் பயணிக்கும் வாகனங்களுக்கு மத்தியில், ஏதாவது ஓர் இடைவெளி கிடைக்குமா எனக் கவனம் பதித்துக் காத்திருக்கிறார்கள். அந்த சாலையைக் கடக்க... மனதில் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எப்படியும் கடந்துவிடலாம் என்று முன்னேறும் சில மாணவர்கள், இரண்டடி வைத்தவுடன் பயந்துபோய் பின்வாங்குகிறார்கள். அந்தப் பணக்காரப் பள்ளியின் முன்பு நின்றதைப்போல் இங்கு யாரும் நிற்கவில்லை. நிறைய நேரங்களில் எல்லோரும் அப்படித்தான். நானும் நின்றதில்லை!

நீயும் ... நானும்! - 37

விறுவிறுவென வாகனங்களில் பறக்கும் நமக்கு, சாலையைக் கடப்பதில் எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கு இடம் தரக்கூட மனம் முன்வருவதில்லை என்ற உணர்வு உள்ளுக்குள் தைப்பதில்லை. இன்னொரு பக்கம், இந்தக் குழந்தைகள் சாலையைக் கடந்து போகட்டும் என வண்டியை நிறுத்தினால், பின்னால் வருகிறவர் என் வண்டியை மோதிவிடக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணம். இதற்கு நடுவில், சாலையைக் கடக்க முயன்ற சிறுவர்களை முறைத்துக்கொண்டே போனவர்களும் உண்டு.

குழந்தைகள் கடக்க வேண்டுமே என்று எந்த வாகனமும் நிற்கவும் இல்லை. வாகனங்களை மறித்து வழி ஏற்படுத்தித் தர இந்தச் சிறுவர்களுக்கு ஆட்களும் இல்லை. அருகில் இருந்த டீக்கடையில் நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. கண் கண்ணாடியைத் தலையில் அணிந்துகொண்டு வலது கையில் டாட்டூ குத்திய இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்தின் வாசலில் தன் பைக்கை நிறுத்தினார். கைகளைக் குறுக்கே காட்டியபடி வாகனங்களை இடைநிறுத்தினார். வாகனங்களை நிறுத்தியவர்களிடம் நன்றி சொன்னார்!

இப்போது மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சாலையைக் கடந்து சென்றனர். இந்தக் காலத்து இளைஞர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை என்ற பொதுக் குற்றச்சாட்டுக்குப் பதில் தருவதுபோல இருந்தது அவர் பணி. டீ கிளாஸை வைத்துவிட்டு ஓடிப் போய் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.

அதிகாரமும் பொருளாதாரமும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்ற உண்மை, இன்றைய மனிதர்களின் யதார்த்த நடவடிக்கைகளிலும்கூட வெளிப்படவே செய்கிறது. ஆனால், இந்த உலகம் எளியவர்களுக்காகவும்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளியவர்கள் என்பது பொருளாதாரத்தில் குறைவானவர்கள் மட்டுமல்ல, பலமற்ற சாதாரண மனிதர்களும்தான்.

இந்த எளிய மனிதர்களுக்கு அரசாங்கம் எவ்வளவோ விஷயங்களைச் செய்கிறது. அவை, என்னுடைய வரிப் பணத்திலும் செய்யப்படுகின்றன. ஆகவே, எளிய மனிதர்களின் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருக்கிறது என்று முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆனால், சக மனிதனின் இயலாமைக்காகவும், அசௌகரியமான சூழலுக்காகவும் வருந்துகிற, துடிக்கிற மனசு நமக்குள் தொலைந்து போய் இருக்கிறது.

பெரிய மனிதர்களே தடுமாறி, முண்டியடித்து ஏறி இறங்குகிற அரசுப் பேருந்தில் புத்தகப் பையை ஒரு கையில் வைத்துக்கொண்டு இரண்டு பெரியவர்களின் கையிடுக்கில் சிக்கிய தலையை வெளியே எடுக்க முடியாமல் மூச்சு முட்டியபடியே தினமும் பள்ளிக்கூடத்துக்குப் பயணிக்கிற பிள்ளைகளைப் பார்க்கிறபோது நம்மில் எவ்வளவு பேருக்கு 'ஏதாவது செய்ய வேண்டும்' என்று தோன்றுகிறது? இன்னும் ஒரு படி மேலே போய் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நம்மில் எத்தனை பேர் அதைக் கவனிக்கிற அளவுக்கான மனசையாவது வைத்திருக்கிறோம்?

மக்கள் தொகை மிகுந்த நெருக்கடியான இந்த தேசத்தில் இதெல்லாம் தவிர்க்க முடியாதது என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். உண்மையில், நம்மால் முடிந்த வரை ஏதாவது செய்ய வேண்டும் என்றுகூடத் தோன்றாத அளவுக்கு நம் மனசு மழுங்கிப்போய்க் கிடக்கிறது.

முதலாளித்துவத்தைப் போதிக்கிற தேசங்கள்கூட, எளிய மனிதர்களுக்குத் தேவையான இடம் தருகிறது. ஆனால், ஜனநாயகவாதிகளான நாம்தான் மனசுக்குள் முதலாளிகளாகவும் வாய்ப்பேச்சில் ஜனநாயகமுமாக முரண்பட்டு நிற்கிறோம்.

உலகின் வளர்ந்த பல நாடுகளிலும் பாதசாரிகளுக்குத்தான் முன்னுரிமை. பச்சை விளக்கு எரிகிற நிலையிலும் அவசரமாக சாலையைக் கடக்க முனையும் ஒருவர் கைகளைக் காட்டினால், கார்கள் நிற்கின்றன.

அந்த மாண்பும் பண்பும் நமக்கு ஒரு விஷயத்தை சொல்லித்தருகின்றன. அவசர வேலையாகப் போகிறவர், காரிலோ, பைக்கிலோதான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடந்து போகிற, அந்த எளிய மனிதருக்கும் ஆயிரம் அவசரம் இருக்கும். ஏதாவது வாகனத்தை வைத்திருப்பவர் தனது வேலையை விரைந்து முடிப்பதற்கு ஒரு ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கிறார். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் இல்லாத மனிதர்கள் எதைக்கொண்டு தங்கள் வேலையை முடிப்பது?

நீயும் ... நானும்! - 37

வசதிகள் படைத்த நாம்தான், அத்தகைய வசதிகள் வாய்க்கப்பெறாத எளியவர்களுக்கு இடம் தர வேண்டும். இந்த மனசுதான் ஜனநாயகத் தன்மையின் அடையாளம். அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற அரசாங்கங்கள் திட்டம் போடலாம். ஆனால், தனி மனிதனின் மனத்தன்மைதான் நியாயங்களை முடிவு செய்கிறது.

எரிச்சலோடு டிராஃபிக் சிக்னலின் விநாடிகளை எண்ணிக்கொண்டு இருக்கும்போது, மூன்று சக்கர வாகனத்தில் எடை ஏற்றிக்கொன்டு மெதுவாக நகருகிற மனிதர் மேல் ஆத்திரம் வரத்தான் செய்கிறது. அப்போதெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான், 'இந்த உலகம் எளிய மனிதர்களுக்கானது!'

நீயும் ... நானும்! - 37

'என்ன இது, எல்லா மனிதர்களின் மனதும் மரத்துவிட்டதைப்போலப் பேசுகிறீர்களே?' என்று மனசுக்குள் கேள்வி வரலாம். எங்காவது செல்கிறபோது, கையில் குழந்தையோடு ஒரு அம்மா நின்றால், நான் எழுந்து நின்று இடம் கொடுப்பேன் என்று சொல்லலாம். அது அவர்கள் 'பாவம்' என்ற எண்ணத்தில்தான் பெரும்பாலும் வெளிப்படுகிறது.

அழுக்குப் பிடித்த எளிய மனிதனின் வறுமையையும் அவனது நிலைமையும் இன்னும் தேவையான அளவுக்கு நம்மை சிந்திக்கவைக்கவில்லை என்பதுதான் சுயவிமர்சனப் பார்வையில் தென்படுகிற உண்மை. என்னால் என்ன செய்ய முடியும் என்று ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு, அமைதியாக இருந்துவிடல் தவறு நண்பர்களே. நம்மால் எந்த அளவுக்குச் செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு முயற்சிக்கலாமே!

ஏதோ ஒரு வேலையாகப் போய்க்கொண்டு இருந்த அந்த இளைஞர், சாலையைக் கடக்க முடியாமல் திணறிய அந்த எளிய குழந்தைகளுக்கு ஐந்து நிமிடம் ஒதுக்கியதுபோல் ஏதாவது செய்யலாம். பார்வையற்ற பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கலாம். அவர்களுக்காகப் பரீட்சை எழுதிக் கொடுக்கலாம். பஸ் ஸ்டாப்பில் தேமே என்று நிற்காமல் இரண்டு, மூன்று பிள்ளைகளைப் பாதுகாப்பாக பேருந்துக்குள் ஏற்றிவிடலாம். வெயில் தாங்காமல் சாலையில் நிற்கிற பெரியவருக்கு டூவீலரில் லிஃப்ட் கொடுக்கலாம். கோயில் வாசலில் செருப்பு தைக்கிற அண்ணனுக்கு ஒரு ஷூ பாலீஷ் வாங்கிக்கொடுக்கலாம். இன்னும் நம் எல்லைக்கு உட்பட்ட எத்தனையோ விஷயங்களைச் செய்யலாம். குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஃப்ளாட் வாங்கி இருக்கிறேன், பக்கத்திலேயே குடிசை போட்டு வைத்திருக்கிறார்கள் என்று எரிச்சல் படாமல் இருக்கலாம்!

யாரோ ஒருவர் 'ஸ்டாப்' போர்டு காட்டித்தான் பிள்ளைகளுக்கு வழிவிட வேண்டும் என்றில்லை. பின்னால் வரும் வண்டிகளுக்கு கையை உயர்த்திக்காட்டி பாதை ஏற்படுத்திக் கொடுக்கிற சூழல் வர வேண்டும்.

உங்கள் கைபேசிச் சேவைக்கான கட்டணத்தை இந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட வேண்டும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் வரும். அதில் கடைசியாக ஒரு விஷயம் குறிப்பிட்டு இருப்பார்கள். நீங்கள் ஏற்கெனவே பணம் செலுத்தியிருந்தால் இந்த எஸ்.எம்.எஸ்ஸைப் புறக்கணித்துவிடுங்கள் என்று.

இந்தக் கட்டுரையும்கூட அப்படித்தான்!

இந்தக் கட்டுரை, யாரோ ஒருவருக்கு, எளிய மனிதர்களின் உலகை அடையாளம் காட்டினால், நானும் சந்தோஷப்படுவேன். என்னால் முடிந்த ஒன்றை நானும் இன்று செய்திருக்கிறேன் என்று!

நீயும் ... நானும்! - 37
நீயும் ... நானும்! - 37
- ஒரு சிறிய இடைவேளை