மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 36

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 36


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 36
நீயும் ... நானும்! - 36
நீயும் ... நானும்! - 36
கோபிநாத்,படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 36

ங்கிலக் கவிதை ஒன்று. யார் எழுதியது என்று தெரியவில்லை.

'நான் சிறுவனாக இருந்தபோது
இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை.
இளைஞன் ஆனபோது ஊரைத்
திருத்த முனைந்தேன்
முடியவில்லை
குடும்பத் தலைவன் ஆனபோது
குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்
இயலவில்லை.
தந்தை ஆனபோது
பிள்ளைகளை மாற்றிவிட வேண்டும்
என்று துடித்தேன்
அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.
மரணப்படுக்கையில்தான்
எனக்குப் புரிந்தது
இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக
நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று
ஆனால் நேரம் கடந்துவிட்டது!'

நீயும் ... நானும்! - 36

இந்தக் கவிதை ஒரு மனிதனின் இயலாமையைச் சொல்வதுபோல இருந்தாலும், இந்த உலகில் சில விஷயங்களை மாற்றி அமைப்பது நம் சக்திக்கு உட்பட்டதாக இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது.

சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் நாம் எடுக்கிற பல்வேறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது. ஆனால், நானும் எனது நிலைப்பாடும்தான் சரி. அதற்கேற்ப இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனோ பாவம்தான் பிரச்னை.

என் நண்பர்கள் சிலர் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருப்பார்கள். நல்ல வேலை, நல்ல சம்பளம். இவற்றை விட்டுவிட்டு, இன்னொரு நிறுவனத்துக்குத் தாவுவார்கள். ஒவ்வொரு முறை இடம் பெயரும்போதும் அவர்கள் சொல்கிற காரணம், இந்த கம்பெனி சரி இல்லை என்பதுதான்.

வேலைக்குச் சேர்ந்த கொஞ்ச நாள் வரை அவர் கள் பேச்சு வேறு மாதிரி இருக்கும். பழைய நிறுவனத்துடன் ஒப்பிடும்போது, 'இந்த நிறுவனம் சிறப்பானதாக இருக்கிறது. எங்க பாஸ் ரொம்ப நல்ல மனிதர். அன்பாகவும் நட்பாகவும் பழகுகிறார். கௌரவமாக நடத்துகிறார்கள்' என்று ஏறக்குறைய அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதுவரைப் போன்று அவ்வளவு சொல்வார்கள்.

நாட்கள் ஆக ஆக... பேச்சு திசை மாறும். 'இவர்களிடம் தொழில் குறித்த பார்வை இல்லை. தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தலைக்கனம் பிடித்தவராக இருக்கிறார்' என்று அங்கலாய்ப்பார்கள்.

நீயும் ... நானும்! - 36

இறுதியில் ஒருநாள், அந்த வேலையை விட்டுவிட்டேன் என்று சொல்லி, அதற்கு ஒரு விளக்கமும் தருவார்கள். 'தப்புத் தப்பா நிறைய விஷயங்கள் செய்துகொண்டே இருந்தார்கள். அவர்களை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன், அது நடக்கவில்லை. அதனால் என் வேலையை ராஜினாமா செய்துட்டேன்' என்பார்கள்.

இது அச்சுப் பிசகாமல் அடுத்த கம்பெனியிலும் அப்படியே நடக்கும். என் கருத்துக்கும் சிந்தனைக்கும் விரோதமான எதுவும் நியாயம் இல்லாதவை என்று நினைக்கிற மனோபாவம், ஒரு நிலையில் நமக்குள் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. அந்த எண்ணத் தால்தான் எல்லோரும் தப்பு செய்கிறார்கள், இவர்கள் திருந்தியாக வேண்டுமே என்று ஒரு கற்பனை உலகத் தைச் சிருஷ்டித்துக்கொள்ளவைக்கிறது.

இயற்கையில் ஒரு சமன்பாடு இருப்பதைப்போலவே வாழ்க்கையிலும் சில சமன்பாடுகள் அவசியம். எப்படி வாழ்க்கையின் சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியுமோ... அதேபோல் சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது. விடாமுயற்சி என்ற போர்வையிலும், நினைத்ததை முடிக்காமல் விட மாட்டேன் என்ற வீம்பிலும் எல்லாவற்றையும் மாற்ற முயன்றால், வாழ்க்கை முழுவதும் இறுக்கமாகவே கழியும்.

நீயும் ... நானும்! - 36

நியாயமான மாற்றங்களை உருவாக்குவதற்குக்கூட முதலில் நமது முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டி இருக்கிறது. அடிக்கடி பணி மாறும் என் நண்பர்கள் அனைவருமே நன்கு பணி செய்யக்கூடியவர்கள். தங்கள் துறையில் தேர்ந்த ஞானம் பெற்றவர்கள். ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அங்குள்ள சூழ்நிலை களை உள்வாங்கிக்கொண்டு, தன் திறனால் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிப்பதற்கு முன்னதாகவே அங்கே இருந்து விலகிவிடுவார்கள்.

ஒருவேளை கொஞ்சம் பொறுமையாக இருந்து செயல்பட்டால், அவர்கள் நினைக்கிற மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், அவர்களிடம் இரண்டு பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, என்னால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ளாத மனது. இரண்டாவது, என் கருத்தை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் அனைவரும் விவரம் அறியாதவர்கள் என்கிற தவறான அபிப்ராயம்.

அப்படி என்றால், ஒரு தவறு நடக்கும்போது அதைச் சரிசெய்ய முயற்சிப்பதோ, தவறான விஷயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிப்பதோ... தேவையற்ற செயலா? இல்லவே இல்லை. மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, சரியான புரிதலோடும் நமக்கு இருக்கிற சக்தியின் அளவை அனுசரித்தும் நடக்க வேண்டும். அது ரொம்பவும் முக்கியம்.

ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிற நமது பலரின் நினைப்பிலும் துருத்திக்கொண்டு இருப்பது, 'நான் செய்வதுதான் சரி' என்ற எண்ணம். கருத்துக்கள் கேட்பதற்குக் காதுகளைத் திறந்துவைக்கிற நாம், அதை ஏற்றுக்கொள்ள மனதைத் திறந்துவைப்பது இல்லை. ஆனால், மற்ற எல்லாரும் அப்படிச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

'என் அம்மா என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என் குடும்பம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. என் அலுவலகத்தில் என் கருத்தை யாரும் செவிமடுப்பது இல்லை. இந்தச் சமூகம் எனக்கு எதிராக நிற்கிறது' என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், மாற வேண்டியது நீங்கள்தானே தவிர, சமூகம் அல்ல.

ஏன் உங்களுக்கு மட்டும் அப்படி நேர வேண்டும்? ஏன் எவருமே உங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும்? நல்ல விஷயத்தைச் செய்ய முயலுகிற உங்களுக்கு எதிராக சமூகம் எதற்காக நிற்க வேண்டும்?

காரணம், என் பொருட்டு இந்த உலகம் மாற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதால்தான். மாற்றத்தைக் கொண்டுவந்த பலரும், தவறான ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்பதில்தான் தீவிரமாக இருந்தார்கள். என் திட்டம்தான் சரி, அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. அப்படி நிர்பந்தம் செய்கிறவர்களின் கருத்துக்கள் நிலைத்ததும் இல்லை.

ஒரு ஞானி கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்... 'இறைவா! என்னால் எந்தெந்த விஷயங்களை மாற்ற முடியுமோ அதனைச் செய்வதற்கு உரிய துணிச்சலைக் கொடு. என்னால் எதை எல்லாம் மாற்றவே முடியாதோ அவற்றை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைக் கொடு.' உண்மையில் இதுதான் நிதர்சனம்.

நீயும் ... நானும்! - 36

உங்கள் கட்டுப்பாட்டில், உங்கள் ஆளுகைக்குள் இல்லாத விஷயங்களை உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று களம் இறங்காதீர்கள். அது அர்த்தமற்ற முயற்சி.

இல்லையில்லை... இது கட்டாயம் மாற்றப்பட வேண்டிய விஷயம் என்று நியாயமாக முடிவெடுத்தால், மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உரிய அதிகாரத்தை எட்ட வேலை செய்யுங்கள்.

இவை இரண்டும் இல்லாமல், ஏதாவது செய்ய முயன்றால், கம்பெனி கம்பெனியாக மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முனைந்த நீங்கள், மாறுவதற்கு இடம் இல்லாமல் தவிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

நம் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் முதலில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்போம். பிறகு, அடுத்த நிலைக்குப் பயணப்படுகிற சூழல் தானாகவே கைகூடும்.

மன ஓட்டங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியம் இல்லை. நினைவிருக்கட்டும்... உங்களுக்குத் தக்கபடி இந்த உலகம் ஒரு நாளும் மாறப்போவது இல்லை!

நீயும் ... நானும்! - 36
நீயும் ... நானும்! - 36
ஒரு சிறிய இடைவேளை