மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 35

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 35


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 35
நீயும் ... நானும்! - 35
நீயும் ... நானும்! - 35
கோபிநாத்,படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 35

ரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர், மேடையில்

நின்றுகொண்டு மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்... 'நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?'

சாஃப்ட்வேர் இன்ஜினீயர், டாக்டர், பைலட், சயின்டிஸ்ட் - இப்படி நிறையக் கனவுகள், விருப்பங்கள், திட்டங்கள் பதில்களாக வந்து விழுந்தன. அநேகமாக, 15 வருடங்களுக்கு முன்பு இந்தக் கேள்வி கேட்கப்பட்டு இருந்தால், வேறு ஒரு பட்டியல் கிடைத்திருக்கும்.

டாக்டர், வக்கீல், பேங்க் மேனேஜர், பள்ளிக்கூட ஆசிரியர் என இன்னும் சில குறிப்பிடத்தக்க பதவிகளும் சொல்லப்பட்டு இருக்கலாம். ஆக, காலத்துக்கு ஏற்றபடி கனவுகளும் மாறுகின்றன. சுதந்திர இந்தியாவில் அநேகம் பேர் படிக்க ஆசைப்பட்டது டாக்டருக்குத்தான். ஆனால், இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கான படிப்பு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.

நீயும் ... நானும்! - 35

கடந்த காலத்தைக் கவனித்துப் பார்த்தால், ஓர் உண்மை நன்றாக விளங்குகிறது. கல்வி என்பதும் குறிக்கோள் என்பதும்... பொருளாதாரம், சமூக அந்தஸ்து, பாதுகாப்பு இவை மூன்றையுமே சுற்றிச் சுற்றி வந்துகொண்டு இருக்கிறது. இன்றைக்கும் எதிர்காலம்பற்றிய நமது எண்ணம் அப்படிப்பட்டதுதான்.

இந்த நிர்ணயிக்கப்பட்ட தத்துவத்தில் இருந்து விலகி, உலகத்தின் வாசலை வேறு கோணத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரும்பாலான நேரங்களில் இலக்குகள் என்பவை குறியீடுகளாகவே இருக்கின்றன. டாக்டர் என்றோ இன்ஜினீயர் என்றோ கட்டம் கட்டப்பட்ட குறியீடுகள், குறிக்கோள்கள் என்று அடையாளம் காட்டப்படுகின்றன.

நீயும் ... நானும்! - 35

அப்படிக் குறியீடுகளை முன்னிறுத்தி குறிக்கோள்கள் வைத்துக்கொள்வதைச் சமூகமும் சக மனிதர்களும் ஊக்குவித்தே வந்திருக்கிறார்கள். அப்படிக் குறியீடுகளுடன் குறிக்கோள்களை வைத்துக்கொள்வது தெளிவானதாகவும், செயல்படுத்துவதற்குச் சிரமம் இல்லாத அமைப்பாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், அப்படிப்பட்ட குறியீடுகள் அடிப்படையிலான குறிக்கோள்கள் நம்மை ஒரு வட்டத்துக்குள்ளேயே குறுக்கிவிடுகின்றன என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

மீண்டும் பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கே வருவோம். ஒவ்வொரு மாணவரும் பைலட், இன்ஜினீயர் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது, ஒரு மாணவர் மட்டும் நிதானமாகச் சொன்னார், 'இப்போதைக்கு ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம். எதிர்காலத்தில் என் இலக்கு மாறலாம்' என்றார்.

இந்தக் குறிப்பிட்ட மாணவர் தெளிவு இல்லாத இலக்குடன் இருப்பதுபோலத் தெரிந்தாலும், உலகம் மற்றும் அதன் போக்கு குறித்து மிகத் தெளிவாக இருக்கிறார் என்பதே அறிந்துகொள்ளப்பட வேண்டிய தகவல். குறியீடுகளுக்குள் சிக்கிக்கொள்ளாத கால மாற்றத்துக்கும், வாய்ப்புகளுக்கும் ஏற்ப எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும் என்ற அந்த மாணவரின் பார்வையே இன்றைய காலகட்டத்துக்குச் சரியாக இருக்கும்.

நாம் யார்? என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், என்னவாகப் போகிறோம் என்பதை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது.

காலமும் அது தருகிற வாய்ப்புகளும், நமது

நீயும் ... நானும்! - 35

எல்லையை இன்னும் இன்னும் விரிவடையச் செய்யலாம். அதற்குள்ளாக இப்போது இருக்கும் சூழ்நிலைகள், கண்ணுக்கு எட்டிய தூரத்துக்குள் தெரிகிற வாய்ப்புகள், இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு இலக்குகளை நிர்ணயிப்பது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்லை.

இன்றைக்கு ஒட்டுமொத்த உலகமே ஒரு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் போலத்தான் இருக்கிறது. ஒரு விஷயத்தைப் படித்துவிட்டு வெளியே வரும்போது, அந்தப் படிப்பு அவுட்டேட்டட் ஆகிவிடுகிறது. அதுபோலத்தான் இன்றைய சூழல் சார்ந்த திட்டங்களும் இருக்கின்றன.

திட்டங்கள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் வாழ்கிற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று தோன்றும். குறிக்கோள்களே வேண்டாம் என்று சொல்லவில்லை. குறியீடுகள் அடிப்படையில் குறிக்கோள்களை வைத்துக்கொண்டு குறுக்கிக்கொள்ள வேண்டாம், அவ்வளவுதான்.

வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இலக்குகள்பற்றிய பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்ற இடத்துக்கு காலம் நம்மை அழைத்து வந்திருக்கிறது.

என் வேலையின் பொருட்டு நிறைய பெரிய மனிதர்களைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைப்பது உண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் 'என்ன ஆக வேண்டும்' என்று கனவு கண்டவர்கள் அல்ல. 'என் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்' என்று கனவு கண்டவர்கள்.

இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கும் இன்றைய காலகட்டத்தின் தேவை. 15 வருடங்களுக்கு முன்பு வரைகூட இலக்கு என்பதை யாரோதான் தீர்மானித்து வந்தார்கள். 'நம்ம குடும்பத்துல யாருமே கலெக்டருக்குப் படிக்கலே, அதனால இவனை கலெக்டர் ஆக்கிடணும்'. 'சுப்ரமணியன் டாக்டருக்கு எவ்வளவு மரியாதை கிடைக்குது பாரு. உன் புள்ளைய எப்பாடுபட்டாவது டாக்டர் ஆக்கிடு' என்ற பெரும்பாலான குறிக்கோள்கள், திணிக்கப்பட்ட இலக்குகளாவே இருந்து வந்திருக்கின்றன.

சமீப காலத்தில் அவனுக்கு/அவளுக்கு எது புடிக்குமோ அந்தத் துறையில் ஆளாக்கணும் என்ற பேச்சு வந்திருக்கிறது.

காலம் மாறி இருக்கிறது. மனிதர்களும் மாறியிருக்கிறார்கள். அப்படியானால், இலக்குகள்பற்றிய புரிதலும் மாற வேண்டும். இலக்குகளைக் குறியீடுகளில் இருந்து எடுத்து, 'என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்' என்பதன் மீது செலுத்த வேண்டி இருக்கிறது.

நீயும் ... நானும்! - 35

இன்னும் 10 வருடங்களில் என் பேச்சைச் செவிமடுக்க இந்த தேசம் காத்திருக்க வேண்டும், அம்மாவை அழைத்து வர என் கிராமத்துக்கு சொந்த ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டும். நண்பர்களுக்கு நான் கொடுக்கும் விருந்து, பசிபிக் பெருங்கடல் நடுவே நான் வாங்கியிருக்கும் குட்டித் தீவில் நடக்க வேண்டும். 'என் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்' என்பது குறித்த இலக்குகளை உருவாக்குவோம். அந்தக் கனவும் இலக்கும், நாம் 'என்ன ஆக வேண்டும்' என்பதைச் சொல்லிவிடும்.

திங்கள்கிழமை ஜெர்மனியிலும், செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திலும், வெள்ளிக்கிழமை சீனாவிலும் இருக்கும்படியாய் என் வாழ்க்கை அமைய வேண்டும் என்று முடிவு செய்தால், அதை அடைவதற்கான ஆயிரம் வாயில்கள் தென்படும்.

வாழ்க்கை குறித்து நாம் வரைந்துவைத்திருக்கும் வரைபடம் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருக்கும்போது, அதை அடைவதற்கான வாயில்களையும் அடையாளம் காண முடியும். குறியீட்டு இலக்குகளை வைத்துக்கொண்டு அடைபட்ட கதவுகளை அடித்துக்கொண்டு இருக்கலாம், அவ்வளவுதான்.

இன்னும் சில வருடங்களில் நிலவுக்கும் பூமிக்கும் சாதாரண மனிதர்கள்கூட ராக்கெட்டில் பயணிக்கலாம். விலங்குகளுக்கு ஒரு மாத்திரை கொடுப்பதன் மூலம் அவை மனிதன்போலப் பேசும் நாள் வரலாம். கம்ப்யூட்டர்கள் மொத்தமும் அழிந்துபோய் சின்னதாக ஒரு சிம்கார்டை உடம்பில் பொருத்திக்கொண்டால், உள்ளங்கையில் மானிட்டர் தெரியும் நிலை உருவாகலாம். எய்ட்ஸுக்கு எலி பாஷாணமும், கேன்சருக்கு அகத்திக் கீரையும் மருந்தென்று முடிவு செய்யப்படலாம். செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் மனிதர்களுக்கு என்று சிறப்புத் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படலாம்.

இப்போது இருக்கிற சூழலை மட்டும் வைத்துக்கொண்டு எதாவது ஒரு குறியீட்டை இலக்காகத் தீர்மானிக்காதீர்கள். நமது பயணத்தில், வாழ்க்கை நிறைய விஷயங்களைச் சொல்லித்தரும், காலம் பல தளங்களை அறிமுகப்படுத்தும்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரே தீவாக மாறிப்போனாலும் அதில் எனக்கென்று ஒரு தனி இடம் வேண்டும் என்று சிந்திக்கலாம். அந்த சிந்தனை உயரே உயரே பறக்க உதவும்.

இலக்குகளை அடுத்தவர்கள் தீர்மானிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது.

குறியீடுகளுக்குள் சுருங்கிக்கொள்ளாமல் இலக்குகளை நோக்கிச் சிறகை விரிக்கலாம். இது கனவுகள் நனவாகும் காலம்!

நீயும் ... நானும்! - 35
நீயும் ... நானும்! - 35
- ஒரு சிறிய இடைவேளை