மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 43

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 43


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் நானும்! - 43
நீயும் நானும்! - 43
நீயும் நானும்! - 43
நீயும் நானும்! - 43
கோபிநாத், படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் நானும்! - 43

'எதுவா இருந்தாலும், முகத்துக்கு நேரா சொல்லிடுவேன்... எனக்கு ஒளிச்சு மறைச்சு

எல்லாம் பேச வராது. நான் ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. என்னை மாதிரி எதையும் நேரடியாகப் பேசுபவர்கள்... ரொம்ப உண்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் ஒரு நாணயம் இருக்கும்.

இந்தக் காலத்துல எல்லாரும் அடுத்தவர்களுக்குத் தேவைப்படும்படி பேசுறாங்க. ஆனா, நான் அப்படி இல்லை. அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு அமைதியா இருக்க மாட்டேன். மனசுல பட்டதைப் பட்டுனு சொல்லிடுவேன். யாருக்கும் பயப்பட மாட்டேன்!'

இப்படி, ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக இருப்பதுதான் என்னுடைய ஸ்பெஷாலிட்டி என்று அதைச் சிறப்பு குணமாக முன்னிறுத்த முயற்சிக்கிற பலருக்கும், 'அந்த குணத்தை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக, அதாவது தனது தனிச் சிறப்பை வெளிக்காட்டும் குறியீடாகப் பார்க்கிற மனோபாவம் இருக்கிறது' என ஓர் ஆய்வுக் கட்டுரை சொல்கிறது.

இயல்பிலேயே எதையும் நேரடியாக, ஒளிவு மறைவு இன்றிப் பேசுகிறவர்கள் ஒரு ரகம். 'நான் யாராக்கும்' என்ற கோட்பாட்டோடு நேரடியாகப் பேசும் மனோ நிலை சிலருக்கு அமைந்துவிடுகிறது.

நீயும் நானும்! - 43

எனக்குத் தெரிந்த ஒருவரின் தந்தை இறந்துவிட்டார். ஊரில் இருந்து தகவல் வருகிறது. தந்தை இறந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டிய மகன், உடல்நலம் இல்லாமல் விடுப்பில் இருக்கிறார். அவர் உடம்பு சரி இல்லாமல் இருக்கும்போது, இந்தத் தகவலை அவரிடம் நாசூக்காகவும் அவர் தாங்கிக்கொள்ளும் விதமாகவும் சொல்வது எப்படி?

தனியாகச் செல்வதற்குச் சங்கடப்பட்டு, நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு விடுப்பில் இருந்த நண்பரின் வீடு தேடிப் போனேன். நாங்கள் சென்ற நேரம், நண்பர் அங்கு இல்லை. மருத்துவமனைக்குச் சென்று இருந்தார். அன்போடு வரவேற்று, காபி கொடுத்து உபசரித்துக்கொண்டு இருந்த அவருடைய அம்மாவிடம் எப்படிச் சொல்வது இந்தத் தகவலை? நண்பர் இருந்தாலாவது அவரிடம் எடுத்துச் சொல்லலாம் என நான் யோசித்துக்கொண்டு இருந்தேன்.

நீயும் நானும்! - 43

கூட வந்த நண்பர், 'என்னப்பா... மென்னு முழுங்கிட்டு இருக்க... எப்படியும் சொல்லித்தானே ஆகணும்' என்று என்னைச் சமாதானப்படுத்தியவாறே அந்த அம்மாவிடம், "உங்கள் கணவர் இறந்துவிட்ட தகவல் சொல்லத்தான் வந்தோம்" எனப் பொட்டென்று போட்டு உடைத்தார்.

அந்த அம்மாவுக்குப் பதற்றத்தில் நடுக்கமும் மயக்கமும் ஏற்பட்டுவிட்டது. ஒரு வழியாக மருத்துவமனைக்குப் போன நண்பர் வந்து சேர, மயங்கிக்கிடந்த அம்மாவுக்கு முதலுதவி செய்து காரில் ஏற்றி ஊருக்கு அனுப்பிவைத்தோம்.

'என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க. பாருங்க... அந்த அம்மாவால அதைத் தாங்க முடியலை' என்று அவரிடம் சொன்னேன். இப்ப இல்லை, இன்னும் அரை மணி நேரம் கழிச்சுச் சொன்னாலும், அந்த அம்மா மயங்கி விழத்தான்போகுது' என்று ஒரு விளக்கம் சொன்னார். 'இல்ல சார், நண்பர் வந்த பிறகு நாசூக்காகச் சொல்லி இருந்தால், அவர் தன் அம்மாவிடம் தகுந்த மாதிரி எடுத்துச் சொல்லி இருப்பார்' என்றேன் நான்.

கூட வந்த நண்பருக்குக் கோபம் வந்தது. 'உங்களை மாதிரி எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேசத் தெரியாது. நான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆளு!' என்றார்.

இந்த இடத்தில் நண்பரின் அந்த குணம் அப்படி பேசவைத்ததா? அல்லது நான் பட்டவர்த்தமான ஆசாமி. சாயங்களோ, பூச்சுக்களோ இல்லாமல் சங்கதியை நேரடியாக முன்வைக்கிற கறார் பேர்வழி என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு அப்படிப் பேசவைத்ததா?

எல்லா மனிதருக்கும் தான் வித்தியாசமானவன் என்று காட்டிக்கொள்ளும் ஆவல் இருக்கிறது. சிலர் அந்தப் பணிவோடு நடந்துகொள்வார்கள். சிலர் அளவுக்கு மீறிய அன்பு பொழிபவர்களாக இருப்பார்கள். சிலர் அர்த்தம் இல்லாமல், கோபம் காட்டுபவராக வெளிப்படுவார்கள். சிலர் அனைத்தையும் பொறுமையோடு கையாளும் மனிதராகத் தெரிவார்கள். சிலர் தேவை இருந்தாலும், இல்லாவிட்டாலும், பரபரப்பாக இயங்குவார்கள். சிலர் வேண்டும் என்றே, விடிய விடியக் கண் விழித்து வேலை பார்ப்பார்கள். இன்னும் சிலர் எதற்கு எடுத்தாலும் விளக்கம் கேட்பார்கள்.

சில பேர் எது சொன்னாலும், அதற்கு ஒரு மாற்றுக் கருத்து சொல்வார்கள். சிலர் சாதாரண விஷயத்தைக்கூட பூடகமாகவே சொல்லுவார்கள். நாம் அனைவரும் இதில் ஏதாவது ஒரு வகைக்குள் வந்துவிடுவோம். மேற்சொன்ன இந்தக் குணங்கள் இயல்பிலேயே நமக்கு அமையப்பெற்று இருந்தால், அது 'குண விதிகள்' என்ற கோட்பாட்டின் கீழ் வந்துவிடுகிறது.

ஆனால், அதை மெனக்கெட்டு செய்யும்போது, தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற ஆவலே முந்திக்கொண்டு நிற்கிறது. எதிரில் இருப்பவன் மீது காட்ட வேண்டிய அக்கறையை அது கொன்றுவிடுகிறது.

நீயும் நானும்! - 43

சில ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு மனசுகளும் அப்படித்தான் இயங்குகின்றன. தான் கேள்விப்பட்ட, பார்த்த பெரிய மனிதர்கள், சிந்தனாவாதிகள் பலரும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற குணம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு சமூக அங்கீகாரமும் அந்தஸ்தும் கிடைக்கிறது. எனவே, நானும் அப்படி இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவது ஆரோக்கியமானது அல்ல.

அந்தப் பெரிய மனிதர்கள் இயல்பிலேயே எதையும் நேரடியாகப் பேசும் குணம்கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் குணம் இயல்பிலேயே அவர்களிடம் இருப்பதால்தான் வெளிப்படையாகச் சொல்ல விரும்பும் விஷயத்தைக்கூட எதிரில் இருப்பவரின் மனம் நோகாமல் சொல்லும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்கும்.

இன்னொரு புறம், தங்கள் சிந்தனையாலும் கருத்துக்களாலும், மக்கள் மனதில் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று இருப்பதால், அவர்கள் பட்டவர்த்தனமாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள மற்றவர்களும் தயாராக இருப்பார்கள். அந்தப் பெரியவர்களின் நோக்கம், தங்கள் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். மாறாக, நான் எதையும் வெளிப்படையாகப் பேசுபவன் என்று விளம்பரப்படுத்திக்கொள்வது அல்ல.

ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக இருத்தல் என்பது எதையும் வெளிப்படையாகப் பேசுதல் என்ற அளவில் பார்க்கப்பட வேண்டியது அல்ல; தடைகள் இன்றி நேரடியாக ஒரு விஷயத்தைச் சிந்திப்பதும் செயல்படுத்துவதும் அந்த அளவுகோலில் வருகிறது.

வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் சிந்திப்பது சிரமம். பேசுவது எளிது. எது எளிதோ, அதைச் செய்துவிட்டு அதைத் தன் சிறப்புக் குணம் என்று பெருமை பேசிக்கொள்வது அர்த்தம் அற்றது.

'அவர் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆன ஆளு. அவர் சரியாகத்தான் சொல்வார்' என்றெல்லாம் அங்கீகாரம் கிடைக்காது. நீங்கள் சொல்கிற கருத்துதான் உங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும், நீங்கள் யார் என்று விளம்பரம் செய்வதில் அந்த இடம் கிடைக்காது.

பெரும்பாலானவர்கள் நான் வெளிப்படையான ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆசாமி என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதன் பின்னணியில் வீரம் என்றொரு விஷயம் ஒளிந்துகிடக்கிறது. வீரர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக இருப்பவர்கள் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக இருப்பார்கள் என்ற எண்ணம் இதற்குக் காரணம்.

ஆனால், உண்மையில் வீரன் கண்ணை மூடிக்கொண்டு கத்தியைச் சுழற்ற மாட்டான். இடம் அறிந்து இயங்கும் குணம்தான் அந்த வீரத்தை அர்த்தப்படுத்துகிறது. அதேதான் பேசுவதற்கும் தேவைப்படுகிறது. உண்மையான வெளிப்படைச் சிந்தனைகொண்ட மனிதர்கள் இடம் அறிந்தே பேசுவார்கள்.

'மெனக்கெட்டு ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆக நடந்துகொள்வதால், நம்மை அறியாமல் எத்தனை பேரை காயப்படுத்தி இருக்கிறோம்? எத்தனை நட்புகளை இழந்து இருக்கிறோம்? எத்தனை உறவுகளைத் தொலைத்து இருக்கிறோம்? எவ்வளவு இதயங்களைத் தூரத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கிறோம்? கொஞ்சம் யோசித்தால், இந்த வேஷம் எதையும் தரவில்லை என்பது விளங்கும்.

இந்தக் கட்டுரை உண்மையாகவே வெளிப்படையாக சிந்திக்கிற, பட்டவர்த்தனமாகப் பேசுகிற மனிதர்களுக்கு எதிரானது அல்ல; அப்படிப் பேசுவதை ஓர் அங்கீகாரக் குறியீடாக நம்பி, மெனக்கெட்டு தன் குணாம்சத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

'கடைசியில கோபி பயந்துட்டான்' என்று உள்ளுக்குள் சிரிக்கிறவர்களுக்கு ஒரு விளக்கம். இது பயம் அல்ல... பக்குவம்!

நீயும் நானும்! - 43
நீயும் நானும்! - 43
- ஒரு சிறிய இடைவேளை