வாழ்க்கை என்பது மழை நாளில் உன் வீட்டு வாசலில் முளைக்கும் நாய்க்குடை அல்ல; அது நிழற்குடை!
தாரித்திரிய வெயில் தழல் பரப்பி, உனைத் தகிக்கையில் - உனக்கு நிழல் பரப்பி உதவவல்ல அந்த நிழற்குடையை, நீதான் முயன்று முன்நின்று வனைந்தெடுக்க வேண்டும்!
நாய்க்குடை - வான் வடிக்கும் நீரில் விளைவது; நிழற்குடை, உனது ஊன் வடிக்கும் நீரில் உண்டாவது!
வேர்வையில் விளைவது வாழ்க்கை; வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'
45 ஆண்டுகளுக்கு முன்னம், என்னிடம் உதவியாளராகச் சேர மூன்று பேர் விரும்பினர்.
ஒருவர், திருவல்லிக்கேணியில் ஃபார்மஸி வைத்திருந்தவர்; இன்னொருவர் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனோடு பணிபுரிந்தவர்; மூன்றாம் நபர் - தன் கிராமத்தில் இருந்து விடாமல் எனக்குக் கடிதம் போட்டவர்.
ஏதோ காரணங்களால் இந்த மூவரையும் என் உதவியாளர்களாக ஏற்க என்னால் ஏலவில்லை!
ஆயினும் அந்த மூவரும், தொய்யவில்லை; துவளவில்லை; நையவில்லை; நலியவில்லை! சகல வலிகளையும் தாங்கிக்கொண்டு - வாழ்க்கை தனக்கு வாய்த்தே தீரும் என்று... புயல்களால் வீழ்த்தவொண்ணாப் புற்களாய் நின்றனர்; வென்றனர்!
முதல் நபர் - நூறு படங்களை இயக்கியவர்; இரண்டாம் நபர் - ரஜினி, கமல் படங்களை இயக்கி இசைகொண்டார்; மூன்றாம் நபர் - தான் இயக்கிய முதல் படத்தையே பெரிய வெற்றிப் படமாக ஆக்கியவர்!
என்னிடம் வேலை தேடி வந்த இந்த மூவரிடமும், நான் பாடலாசிரியனாக வேலை பார்த்தேன்!
கண்ணில் சினிமாக் கனவோடு சென்னை வரும் என் சகோதரா!
இந்த மூவரைப்போல்
இடையறாது - நீ
முயல்! முயல்! முயல்! ஒருநாள் -
மூஞ்சூறும் ஆகும் முயல்!
அது சரி;
அந்த மூவர் யார் என்று சொல்லவில்லையே!
திரு.இராமநாராயணன்;
திரு.ஆர்.சி.சக்தி;
திரு.கங்கை அமரன்!
|