Published:Updated:

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 01

vandenda nanbenda santhonam
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேண்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 01

வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01
வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01
வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01
வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01

ணக்கம் பாஸ்! எல்லோரும் நல்லா செழிப்பா இருக்கீங்களா?

மொதல்ல கையக் கொடுங்க... இனி, வாராவாரம் நம்ம மீட்டிங் விகடன்லதான். அறிஞ்சது, அறியாதது, புரிஞ்சது, புரியாதது, தெரிஞ்சது தெரியாததுன்னு (என்ன இருமுடி கட்டுற ஃபீலிங் வருதா?) எல்லா விஷயத்தைப்பத்தியும் பேசப்போறேன். இந்த சந்தானம்கிற சாதாரண மனுஷன், ஒரு காமெடியனா உருவான கதையைக் கலாய்ப்போம். வாழ்க்கை எனக்கு என்ன கத்துக்கொடுத்தது, பதிலுக்கு நான் வாழ்க் கைக்கு என்ன கத்துக் கொடுத்தேன்னு லொபலொப லொபலொபான்னு பேசலாம்னு ஐடியா!

இப்போ, நம்ம நண்பர்களைப் பத்தி ஒரு ட்ரெய்லர் பார்க்கலாம்!

'எந்திரன்' ஷூ§ட்டிங் முடிஞ்ச சமயம்... எங்க வீட்டு லேண்ட்லைன் அலறுச்சு. அம்மா எடுத்து 'ஹலோ' சொன்னா, 'ஹலோ... நான் ரஜினி பேசறேன். சந்தானம் இருக்காரா?'ன்னு ஒரு குரல். 'டேய் முருகா... சும்மா விளையாடாதேடா'ங்கிறாங்க அம்மா. முருகன்னு என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அடிக்கடி போன் பண்ணி, ரஜினி, கமல் குரல்ல என்னைக் கலாய்ப்பான். அவன்னு நினைச்சுட்டாங்க அம்மா. 'அம்மா, நான் ரஜினிதான் பேசறேன். சந்தானத்தைக் கூப்பிடுங்க'ன்னு சொல்லுது போன் குரல். 'நிஜமாவே ரஜினி சார்தான் பேசுறார்... அம்மாதான் சூப்பர் ஸ்டாரைச் சுத்தல்ல விடுறாங்க'ன்னு புரிஞ்சு, பதறி, பாய்ஞ்சு ரிஸீவரைப் புடுங்கினேன். 'ஹாய், ஹலோ சந்தானம்... 'எந்திரன்' நல்லபடியா முடிஞ்சிருச்சுல்ல!'னு ஆரம்பிச்சு, எக்ஸ்பிரஸ் ஸ்பீடுல எக்கச்சக்க மேட்டர் சொல்றார் சூப்பர் ஸ்டார். என்னை மாதிரி ஒரு காமெடி நடிகனையும் மதிச்சு, என் வீட்டு லேண்ட்லைனுக்கு (இந்த நம்பர் அவருக்கு எப்படித் தெரியும்?) போன் போட்டுப் பாராட்டுற மனசு இருக்கிறதாலதான்... தலைவர் இவ்ளோ உயரத்துல இருக்கார்!

வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01

'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்லயே எப்படியாவது ரஜினி சாரை பாக்கெட் பண்ணிரணும்னு எனக்கு பிளான். 'இந்த ஆன்மான்னா என்னண்ணே?', 'நாம இறந்தா எது வழியா, எங்கே போவோம்?'னு அதிரடி ஆன்மிகக் கேள்விகளா விசிறி அடிப்பேன். 'அமினுஷ்டா... அபாந்த வேதா'ன்னு புரியாத வார்த்தைகளால் பதில் சொல்வார்னு நினைச்சா, 'ஏய்... என்னை என்ன சாமியாருன்னு நெனைச்சியா? எப்பப் பார்த்தாலும் ஆன்மா, கர்மான்னுட்டு இருக்கே?'ன்னு டென்ஷன் ஆகிட்டார் தலைவர். 'ஆஹா... தலைவரும் நம்ம ட்ராக்குதான்!'னு புரிஞ்சுக்கிட்டு ஃபுல் ஜாலி மொக்கை பிட்டுகளைப் போட்டுப் பேச ஆரம்பிச்சேன்.

'ரோபோ' ரஜினியை ரெடி பண்ற ஓப்பனிங் ஸீன். ரஜினி சாருக்கு முன்னாடி பிரமாதமா நடிச்சிரணும்னு நானும் கருணாஸும் சதித் திட்டம் தீட்டினோம். எட்டாங்கிளாஸ் ஃபெயிலாகி மெக்கானிக் ஷாப்ல சேர்ந்த பசங்க கணக்கா, அவசர அவசரமா ரஜினி சாருக்கு முன்னாடி ரோபோவுக்கு நட்டு, போல்ட் மாட்ட ஆரம்பிச்சுட்டோம். கொஞ்ச நேரம் பொறுமையாப் பார்த்துட்டே இருந்த ரஜினி, 'ஷங்கர், இவங்க ரெண்டு பேருமே ரோபோவை உருவாக்கிடுவாங்க'ன்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டார். "ஐயையோ, அண்ணே... தப்புதான் தப்புதான். இனி நோ ஆர்வக்கோளாறு!"னு சத்தியம் பண்ணி அவரைக் கூல் பண்ணினோம்.

சூப்பர் ஸ்டார்பத்தி சொல்லிட்டு, லிட்டில் சூப்பர் ஸ்டாரை மறக்கலாமா? எனக்கு டார்ச் லைட் அடிச்சு டாப்புக்குக் கொண்டுவந்தது சிம்புதான். 'மன்மதன்' படம்தான் சினிமாவில் எனக்கு அறிமுகம். சிம்புவைப் பார்த்தா பயம்... கேமராவைப் பார்த்தா கூச்சம். டாஸ்மாக்ல கன்டினியூட்டி சரக்கு கிடைக்காம அல்லாடிட்டு இருக்குற குடிமகன் கணக்கா முழிச்சுட்டு இருக்கேன். சிம்பு கூப்பிட்டு என் தோள்ல கை போட்டு, 'டி.வி-யில நல்லாக் கலாய்க்கிற... இங்கே மட்டும் ஏன் இப்படி சொதப்புற?

எதைப்பத்தியும் கவலைப்படாம கலாய். அப்பதான் உனக்கு மலாய் சாய்!'னு சொல்லி, சும்மா இருந்தவன் கையில சூடத்தை ஏத்தி ஆடவெச்சார்.

'வல்லவன்' ஷூட்டிங் சமயம், 'அவசரமா ஃபாரின் ஷூட்டிங். பாஸ்போர்ட்லாம் எடுத்துட்டு வீட்டுக்கு வந்திரு'ன்னு சிம்புகிட்டே இருந்து போன். 'சந்தானம் ஃபாரின் ஃபிகர்ஸோட கஜகஜாவா? மச்சம்டா உனக்கு!'ன்னு எகிறிக் குதிச்சு, பாஸ்போர்ட்டும் கையுமா அவர் வீட்டுக்குப் போனா, மனுஷன் ஜாலியா குர்குரே சாப்பிட்டு உக்காந்து இருந்தார். 'இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு மச்சி. காலண்டர்லாம் பார்க்குற பழக்கம் இல்லையா?'ன்னு சிரிக்கிறார். அசடு வழிஞ்சாலும், அப்புறம் அவரோடு கூட்டணி போட்டு 'ஃபாரின் ஷூட்டிங்... வாங்க வாங்க... ஃப்ளைட் கிளம்பப் போகுது... ஓடி வாங்க... ஜன்னல் ஸீட்டு வேணுமா... சீக்கிரம் ஓடியாங்க... ஆ... சென்னையில இருந்து மும்பை, டெல்லி, பெர்லின், சீனா, கஜகஸ்தான், வழியாக ஃபாரின் செல்லும் ஃப்ளைட் கிளம்பப் போகுது... ஓடி வாங்க'ன்னு எல்லாருக்கும் போனைப் போட்டோம். நானாவது பரவாயில்லை... வெறும் பாஸ்போர்ட் மட்டும்தான் எடுத்துட்டுப் போனேன். ஆனா, நம்ம சத்யன் இருக்காரே... வீட்டு ரேஷன் கார்டு, ஸ்கூல் படிச்ச சர்டிஃபிகேட்லாம் எடுத்துட்டு வந்துட்டாரு. அன்னிக்கு ஓப்பனிங் காமெடியன் நான்... ஓவர் ஆல் காமெடியன் சத்யன்!

தல - தளபதியப் பத்தி கருத்தாப் பேசாம இருக்க முடியுமா? 'கிரீடம்' படத்தில் ஒரு ஸீன்ல த்ரிஷா என்னைத் துரத்துவாங்க. அப்புறம் எங்க ரெண்டு பேரையும் நாய் துரத்தும். நாய்க்கு டிரெய்னிங் கொடுத்தவரு தெலுங்குக்காரரு. பார்ட்டிக்கு நம்ம மேல என்ன காண்டுன்னு தெரியலை. நாய்கிட்டே தெலுங்குல ஏதோ சொன்னாரு. அவ்ளோதான்... நாய் த்ரிஷாவை விட்டுட்டு என்னைத் துரத்த ஆரம்பிச்சிடுச்சு! (அது ஏன் பாஸ், ஆம்பளைகளையே நாய்க அதிகமாத் துரத்துது?) ஒருவழியாத் தலைதெறிக்க ஓடித் தப்பிப் பொழைச்சு திரும்பிப் பார்த்தா, 'பப்பிக் கண்ணு, அம்மு புஞ்சி, லுல்லுல்லாயி'னு அந்த நாயைக் கொஞ்சிட்டு இருக்காங்க த்ரிஷா.

'பில்லா' படத்துக்காக 'வெத்தலையைப் போட்டேன்டி' பாட்டு மலேசியாவுல ஷூட்டிங். வாயில பீடா மென்னுக்கிட்டே ஆடணும். நம்ம ஊரு 120 பீடா மாதிரி ஏதோ ஒரு மலேசியா பீடா கொடுத்தாங்க. ஃபாரின் சரக்கு ஃபாரின் சரக்குதான். சுத்தவெச்சு சுண்ணாம்பு அடிச்சிருச்சு. என்ன நடந்துச்சுன்னே தெரியலை. ஷூட்டிங் முடிஞ்சு என்னைத் தெளியவெச்சு ஷூட் பண்ணதை ஓட்டிக் காட்டுனாங்க. அஜீத் சாரை நான் டான்ஸ் ஆடவேவிடாம செம அலப்பறை பண்ணி இருக்கேன். கேமராவைக் கட்டிப்பிடிக்கிறதும், அஜீத் சாருக்கு முத்தம் கொடுக்குறதுமா செம கலீஜ். அந்த உடான்ஸ் வீடியோ மட்டும் ரிலீஸானா... என் டப்பா டான்ஸ்தான்!

வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01

விஜய் சார் என்னை 'வாங்க ஜல்லி'ன்னுதான் கூப்பிடுவார். லொள்ளு சபாவுல 'கில்லி'யை 'ஜல்லி'யா மாத்திக் கலாய்ச்சிருந்தோம்ல... அந்த ஜல்லி. 'ஐயையோ, ஆரம்பத்துலயே தலைவன் கலாய்க்கிறாரே'ன்னு ஜெர்க் ஆச்சு. ஆனா, மனுஷன் ரொம்ப கேஷுவலாப் பழகுவார். 'அழகிய தமிழ்மகன்' படத்துல, விஜய் சார், ஷகிலா மேடத்தோட எனக்கு ஒரு ஸீன். நடிகை ஷகிலாவாவே அவங்க நடிப்பாங்க. அவங்களைப் பார்த்ததும் எனக்குள்ள ஃப்ளாஷ்பேக் பொங்கிப் பெருகி ஃபீலிங்ஸ் டீலிங்ஸ் ஆயிருச்சு. 'சபரிமலை ஜோதியைப் பார்க்க வர்ற கூட்டத்தைவிட, பரங்கிமலை ஜோதியைப் பார்க்க வர்ற கூட்டம்தான்டா அதிகம்'னு டைமிங் ரைமிங்கா டயலாக் எடுத்துவிட்டேன். சட்டுனு ஷகிலா கீழே குனிஞ்சாங்க. 'ஆஹா... அக்கா செருப்பைக் கழட்டி சாத்தப்போறாங்க'ன்னு மெர்சலாகி, என் கை, கால்லாம் கதகளி ஆடுது. ஆனா, ஷகிலா ரொம்ப கூலா, 'எந்தா சேட்டா... கொசு நோக்கியோ!'ன்னாங்க. அப்பாலதான் அப்பீட் ஆன உயிர் ரிப்பீட் ஆச்சு. 'நான் நோக்குறது இருக்கட்டும்... நீங்க முதல்ல நிமிர்ந்து நோக்குங்க!'ன்னு நான் சமாளிச்சதைப் பார்த்து, விஜய் சிரிக்க ஆரம்பிச்சாரு பாருங்க... 'ஃப்ரெண்ட்ஸ்' படத்துல வடிவேலுவைப் பார்த்து சிரிச்சதைக் காட்டிலும் அதிகம்!

'எஸ்.எம்.எஸ்'ல நானும் ஜீவாவும் போட்ட லூட்டியை அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாடு மறக்காது. அதுல எனக்கும் ஜீவாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே ஸ்லாங். எஸ்.எம்.எஸ் டோன்ல ஆரம்பிச்சு, டாஸ்மாக் கோடவுன் வரைக்கும் 'மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்'னு ரிப்பீட் ஆர்டர் சொல்லி உற்சாகம் கரை புரண்டு ஓடுச்சு. அதுல நிறைய பேருக்கு டவுட் என்னான்னா, 'நீ படத்துல குடிக்கிற மாதிரி நடிச்சியா... இல்லை, நடிக்கிற மாதிரி குடிச்சியா?'ங்கிறதுதான். பொறாமை பிடிச்ச பசங்க!

அதை விடுங்க... தியேட்டர்ல ஒரு நேபாளிப் பொண்ணை நான் உஷார் பண்ற மாதிரி ஒரு ஸீன் வரும்ல... அப்போ, 'இந்த பொண்ணு நேபாளி'ன்னு நான் டயலாக் சொல்லணும். ஒரிஜினலா அது மிசோரம் பொண்ணு. டேக்ல நான் 'நேபாளி'ன்னு சொல்றப்போ, 'நோ, நோ மிசோரம்'னு அந்தப் பொண்ணு கடுப்படிச்சுட்டே இருந்துச்சு. எவ்வளவோ சொன்னாலும் தாய் மண்ணுக்கு வணக்கம் போட்டுட்டே இருந்தது. அப்புறம் 'நேபாளி'ன்னு சொல்ற இடத்துல எல்லாம் 'நெய்வேலி'ன்னு சொல்லிச் சமாளிச்சு, டப்பிங்ல நெய்வேலியை நேபாளி ஆக்கி.... அய்யய்யய்யோவ்!

'சந்தோஷ் சுப்ரமணியம்' படம் பண்ணிட்டு இருக்கோம். திடீர் திடீர்னு புரொடக்ஷன் மேனேஜர்கிட்ட இருந்து போன் வரும். 'ஜெயம் ரவிக்கு உங்களைப் பிடிக்கவே இல்லைங்க... சந்தானம்லாம் என்ன பெரிய காமெடியனா? அவரை எதுக்கு புக் பண்ணீங்க?'ன்னு திட்டிட்டே இருக்கார்'னு சொல்வார். நான் பொறுமையா, 'ரவி சார் அப்படிலாம் பேசியிருக்க மாட்டாரே... அவர் ரொம்ம்ம்ம்ப நல்லவராச்சே!'ன்னு பதில் சொல்லிட்டே இருப்பேன். ரொம்ப நாளைக்குப் பிறகுதான் தெரிஞ்சது, மேனேஜர் குரல்ல பேசுனதே ஜெயம் ரவிதான்னு. ஏதோ ஒரு வேகத்துல 'அட, உங்காளுலாம் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா?'ன்னு நான் கேட்டிருந்தா, சந்தானத்துக்கு 'ஊஊ'ன்னு வடக்குப்பட்டி ராமசாமிக்குக் கடன் கொடுத்த கதைதான்!

வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01

இப்பவும் திடீர்னு போன் வரும். 'சார், எருமைக்காரன் பட்டியில இருந்து முனுசாமி பேசறேன். உங்க அகில உலக ரசிகர் மன்ற உறுப்பினர்ங்க நானு!'ன்னு யாராவது பேசு வாங்க. நான் ரொம்பப் பொறுமையா, 'அப்புறமா பேசுங்க சார்... நான் மீட்டிங்ல இருக்கேன்'னு சொல்வேன். 'அப்படியா? எந்தக் கட்சி மீட்டிங்ல இருக்கீங்க?'ன்னு அந்தக் குரல் கலாய்க்கும். பார்த்தா... நம்ம ஜெயம் ரவி!

நம்ம 'நண்பேன்டா'வை டச் பண்ணாம இருக்க முடியுமா? ஆர்யா எனக்கு செம நண்பேன்! 'ஒரு கல்லூரியின் கதை' படத்துல இருந்தே நானும் அவனும் ஃபெவிகால் ஃப்ரெண்ட்ஸ். அப்போ ஆர்யாவுக்கு 'அறிந்தும் அறியாமலும்' ரிலீஸ் ஆகலை. ஆனா, நான் 'லொள்ளு சபா' ஹிட் அடையாளத்தோடு உலகத்துக்குள்ள உலா வந்துட்டு இருந்தேன். ஷூட்டிங் பார்க்க வர்ற கூட்டத்துக்கு ஆர்யா யாருன்னே தெரியலை. மொத்தக் கூட்டமும் என்னையே மொய்க்கும். ஆட்டோகிராஃபுக்குப் பிய்க்கும். அப்போ ஆர்யாவுக்கு என்ன வேலைங்கிறீங்க! 'சார் வர்றாரு... வழி விடுங்க... வழி விடுங்க. ஏம்ப்பா சிவப்பு சட்டை, சார் முன்னாடி கூலிங் கிளாஸ் மாட்டிட்டு நிக்குற... சாருக்கு கோபம் வந்துரும். ஓரமா ஒதுங்கி நில்லுங்க... ஆம்பளைங்க எல்லாம் அஞ்சு அடிக்கு முன்னாடியே ஜருகண்டி... ஜருகண்டி. லேடீஸ் லேடீஸ் மட்டும் பக்கத்துல வாங்க!'ன்னு ஆர்யாவுக்குத்தான் கூட்டத்தை கன்ட்ரோல் பண்ற வேலை.

இப்பவும் என்னைப் பார்த்தவுடனே எந்திரிச்சு நின்னு கையைக் கட்டி, 'வாங்க காமெடி சூப்பர் ஸ்டார்! ஏய்... கூட்டம் சேர்க்காதீங்கப்பா!'ன்னு சவுண்டுவிடுவார் சார். என்னைக் கலாய்க்கிறாராமாம்!

வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01
வந்தேண்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம்  - 01
(இன்னும் கலாய்ப்பேன்)