ஸ்பெஷல் -1
Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

மிழக சட்டமன்றத்தில் தாமரைக்கனியின் 'தட்டு' பற்றிக் கேள்விப்படாதவர்கள்

இருக்கமுடியாது. சரித்திரப் புகழ்பெற்ற(?!) அந்தச் சம்பவம் நடந்தது இந்த ஆண்டுதான்!

அது வேறு ரகம்!

மிழக சட்டமன்றத்தில் கவர்னர் தன் உரையைத் துவக்குமுன், பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்க, உடனே சில அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர். சுயேச்சை உறுப்பினரான தாமரைக்கனி எழுந்துவந்து பண்ருட்டி ராமச்சந்திரனின் முதுகில் ஓங்கி அடித்தார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றி முதலமைச்சர் கூறும்போது, 'பண்ருட்டி ராமச்சந்திரன் செய்ததுதான் முதல் தவறு; தாமரைக்கனி செய்ததும் தவறு' என்று இரண்டு தவறு களையும் ஒரே மாதிரியாகக் கருதி வரிசைப்படுத்தியிருக்கிறார். முதல்வர் இப்படிக் கூறியது நியாயமா?

இன்று சட்டமன்ற மரபுகள் பல இஷ்டம்போல மீறப்படுகின்றன! சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அவையிலேயே முதல்வர் காலில் சேடப்பட்டி முத்தையா விழுந்து வணங்கினார்; அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது எப்படிச் சரியானதல்லவோ, அதுபோன்றதே பண்ருட்டியார் செய்ததும்! ஆனால், ஓர் உறுப்பினர் இன்னொருவரைக் கையை நீட்டித் தாக்குவது அதே ரகமல்ல; அது வேறு ரகம். அநாகரிக ரகம்!

காலப்பெட்டகம்

மொத்தத்தில், வெவ்வேறு விதமான இரண்டு தவறுகளையும் சமப் படுத்தும் முயற்சியில், நிலை தவறி விட்டார் முதல்வர்!

நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த இளம் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது இந்த ஆண்டு மே மாதத்தில்தான்!

காலப்பெட்டகம்

பின்னணியில் யார்?

ராஜீவ் படுகொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பெண் தன் இடுப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்துக் கொண்டு ராஜீவை நெருங்கி, அதை வெடிக்கச் செய்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ராஜீவ் மற்றும் பதினைந்து பேர் உடல்கள் கோரமாகச் சிதறி விழும் அளவுக்கு அந்தக் குண்டு பயங்கர சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது.

நடந்த இந்தக் கொலைபாதகச் செயலை ஒரு தனிநபர் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரமான சதி இல்லாமல் இருக்கவே முடியாது.

காலப்பெட்டகம்

நடந்த கொடுமையைத் தடுக்க முடியாமல் போனது வேறு விஷ யம். ஆனால், இதற்குக் காரணமான கொலைகாரக் கும்பலைப் பிடித்தே ஆகவேண்டும். இல்லையெனில், கொலைகாரர்களுக்கு அதுவே ஊக்க மளிப்பதாக அமையும். இன்னும் பல அரசியல் படுகொலைகள் இந்தி யாவில் அரங்கேறும்.

ஆனந்த விகடனில் கி.ராஜ நாராயணன் எழுதிய 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக அவருக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அப்போது வெளியான பேட்டியிலிருந்து ஒரு துளி...

"பயணம்னாலே எனக்கு ஒரு பயம்..!"

ரசிகமணி டி.கே.சி-யின் கடைசி காலத்து சீடரான கி.ரா.வின் முழுப் பெயர் ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகம் நாட்டுப் புறக்கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க, அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். 70 வயதிலும், தனது 60 வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!

"முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி. தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே, பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் டெல்லிக்குப் போய் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு! ஏன்னா, பயணம்னாலே எனக்கு ஒரு பயம், தயக்கம், அலுப்பு, சலிப்பு!

இந்தப் பரிசு, விகடனில் நான் எழுதின 'கோபல்லபுரத்து மக்க'ளுக்காகக் கிடைச்சதுலே எனக்குத் திருப்திதான் என்றாலும், 1976-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட என்னோட நாவலான 'கோபல்ல கிராம'த் துக்கே இது கெடைச்சிருக்கணும்.

ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னன்னா, அப்போ சாகித்ய அகாடமி பரிசுத் தொகை 5,000 ரூபாய்; இப்போ 25,000 ரூபாய்ங்கறதுதான்!

ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல, அந்த மக்களின் பிரச்னைகள், வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.

அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். 'இதோ, இதுதான் கரிசல் இலக்கியம்' என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான். மேலும், அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல், எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன்; சொல்கிறேன்; சொல்வேன்!

காலப்பெட்டகம்

'கணையாழி' காலம்கிற மாதிரி அப்போ 'சரஸ்வதி' (இதழ்) காலம். விஜயபாஸ்கரன் அதோட ஆசிரியர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமியெல் லாம் அதிலேயிருந்துதான் பொறந் தாங்க. நானும் அப்போ கம்யூனிஸ்ட்டா... அதால, ஜெயகாந்தன் மூலமா 'சரஸ்வதி'க்கு நான் அறிமுகம் ஆனேன். அதுலே எழுதத் தொடங் கினேன். நானும் அங்கேதான் பொறந்தேன். முன்னே, 1971-ல் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு எனக்குக் கிடைச்சுது. அதற்கு அப்புறமும் தமிழக அரசோட மற்ற பரிசுகளும் கிடைச்சிருக்கு.

ஆனா, இப்போ - அப்போன்னு எப்பவுமே, எந்தக் காலத்திலுமே எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் என்கிறதெல்லாம் கொஞ்சமும் கிடை யாது. பார்க்கிறேன்; கேட்கிறேன்; சிந்திக்கிறேன்; எழுதறேன். அவ்ளோ தான்! அப்படி என் மக்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்; எழுதுகிறேன். அவை பிரசுரமாகின்றன. அவ்ளோதான்! இதற்குப் பணமும் கிடைக்கிறதே, அப்புறம் என்ன?!" - மகிழ்ச்சியாய்க் கூறிய ராஜநாராயணன், தொடர்ந்தார்...

"பணத்துக்காகச் சும்மாவேனும் எழுதிக் குவிப்பது, கொட்டுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. நிதானமா எழுதணும்; அதனால அது சிறப்பா இருக்கணும்னு விரும் பறேன்.

முதல்ல நிறைய நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி, சேகரிச்சுப் பின்னால எழுதப்போறேன். அதுலயே இனிமே முழுசா கவனம் பண்ணணும்னு நெனச்சிட்டிருக் கேன். இந்த நிதானத்துக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையிலே ஏராள ஈடுபாடு; அதுதான்! பாட்டு கத்துக்கிட்டேன்; தொண்டையிலே கட்டி வந்து நின்னுபோச்சு. பின்னாலே வயலின் கத்துக்கப் போனேன்; அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை!

சின்ன வயசிலே இடைசெவலில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் காருகுறிச்சி அருணாசலம் மாப்பிளெ ஆனார். அவர் நாகஸ்வர வித்வான் என்கிறதைவிட, ரொம்பவும் சிறந்த பாடகர். மாமனார் வீட்டுக்கு வந்து அங்கே சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்து விடுவார். நான் அவரோட பாட்டின் பரம ரசிகன்.

எனக்குள் ஒரு வேடிக்கை உண்டு. ஒரு தச்சு ஆசாரி அழகா நாற்காலி செஞ்சா, அதைச் செய்ய ணும்னு எனக்கும் தோணும். சவத் துக்கு அடிக்கிற மோளத்திலே லயிச்சு, அப்படி வாசிக்க நினைப் பேன். எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன்; ஆனா படிக்கல; ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத் துக்கும் ஆசைப்பட்டேன்; எல்லாத் திலேயும் லயிச்சேன்; கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன்" என்று குற்றால அருவி போலக் கலகலவென பொழிகிறார் கி.ரா.

- ஆர். தணிகைத்தம்பி

'பத்திரிகை உலகின் இரும்பு மனிதர்' என்று வர்ணிக்கப்பட்ட ராம்நாத் கோயங்கா மறைந்தார்.

"என் அகராதியில் மன்னிப்பு என்பதே கிடையாது..!"

ரசியலில் சர்தார் வல்லபபாய் படேலை ஓர் 'இரும்பு மனிதர்' என் றால், பத்திரிகை உலகின் 'இரும்பு மனிதர்' மறைந்த ராம்நாத் கோயங்கா.

காலப்பெட்டகம்

ஒருமுறை, சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் அனைத்துக் கல்லூரி கலை விழா ஒன்று நடந்தது. அதில் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு மாணவரை மேலே இருந்து தூக்கி வீசிவிட்டனர். இதைப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்தான் செய்துள்ளனர் எனத் தெரிந்தது. இது சம்பந்தமாக இந்தியன் எக்ஸ்பிரஸில் 'ரௌடியிஸம் பை பச்சையப்பாஸ் காலேஜ்' எனத் தலைப்பிட்டு செய்தி வந்தது. இந்தச் செய்தியைப் பார்த்து மாணவர்கள் கொதிப்படைந்தனர். எக்ஸ்பிரஸ் அலுவலகம் நோக்கி நூற்றுக்கணக்கான மாணவர்கள் புறப்பட்டனர். அப்போதைய கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் இது சம்பந்தமாக எக்ஸ்பிரஸ் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு பேசி, "மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சமாதானமாகப் பேசி அனுப்பி விடுங்கள்" என்று ஆலோசனை கூறியுள்ளார்.

திரண்டு வந்த மாணவர்கள் கூர்க்காவையும் தாண்டி அலுவலகத்துக்குள் புகுந்துவிட்டனர். செய்தி ஆசிரியர் சேஷாத்ரியைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். தகவல் அறிந்து கோயங்கா தனது அறைக்கு வந்தார். மாணவர் கள் அவரையும் சுற்றி வளைத்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூச்சலிட்டனர். ஆனால், கோயங்காவோ திரண்டு வந்திருந்த மாணவர்கள் கூட்டத்தைக் கண்டு பயப்படாமல், "என் அகராதியில் மன்னிப்பு என்பதே கிடையாது. என் நிருபர் பார்த்ததை எழுதியுள் ளார். உங்கள் தரப்பு வாதத்தையும் எழுதிக்கொடுங்கள். நியாயமாக இருந்தால் அதையும் பிரசுரிக்கிறோம்" என்று கூறிவிட்டார். ஆனால் மாணவர்களோ, மன்னிப்புக் கேட்கும் வரை விடமாட்டோம் என்று கூறி, அவரை கேரோ செய்தனர். போலீஸாரால்கூட மாணவர்களைச் சமாதானப்படுத்த முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று கூறமுடியாதபடி பதற்ற நிலை! கோயங்கா கடைசி வரை பின்வாங்கவில்லை. நிலைமை மேலும் மோசமாக.... அப்போது முதல்வராக இருந்த அண்ணா, எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டுக்கு வந்தார். வேனில் இருந்தபடியே மைக் மூலம் மாணவர்களிடம் பேசி, சமா தானம் கூறி, கலைந்து போகும்படி கேட்டுக்கொண்டார். அண்ணா கேட்டுக்கொண்டதால், மாணவர்கள் சமாதானமாகிப் போனார்கள்.

மற்ற பத்திரிகைகளின் ஆசிரியர்களிடமும் நெருக்கமாக இருந்தார் கோயங்கா. 'ஆனந்த விகடன்' ஆசிரியர் அமரர் எஸ்.எஸ்.வாசனும் கோயங்காவும் நெருக்கமாக இருந்தவர்கள். ஒருமுறை 'சினிமா'வைத் தாக்கி ராஜாஜி ஓர் அறிக்கை வெளியிட்டாராம். அதற்குப் பதில் அறிக்கை கொடுக்க, நடு இரவு 12 மணிக்கு கோயங்காவைச் சந்திக்கச் சென்றார் வாசன்.

கோயங்கா அந்த நேரத்திலும் விழித்துக்கொண்டிருந்தார். வாசனுடைய அறிக்கையை எக்ஸ்பிரஸின் அனைத்துப் பதிப்புகளிலும், முதல் பக்கத்திலேயே வெளியிடச் செய்தார் கோயங்கா.

\ ஜி.ஆர்.ராஜகணபதி

சங்கீத மேதை டி.கே.ஜெயராமன் மறைந்தார்.

காலப்பெட்டகம்

அண்மையில் மறைந்த சங்கீத வித்வான் டி.கே.ஜெயராமன், இந்த வருடம் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது தனக்கு வழங்கப்பட்டபோது, "சொர்க்கத்துக்குப் போயிட்ட மாதிரி இருக்கும்மா" என்று தன் மகள் சுகன்யாவிடம் கூறியிருக்கிறார்.

அறுநூறுக்கும் மேற்பட்ட சீடர்களை உருவாக்கியவர் டி.கே.ஜெ.! யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவரிடம் வந்து இசை கற்றுக் கொள்ளலாம். கடைசி நேரத்தில் மருத்துவமனையில் இவர் இருந்தபோதுகூட, அங்கு வந்த இவருடைய ரசிகை ஒருவர் தன் நான்கு வயதுப் பெண் குழந்தையைக் காட்டி, "இவள் உங்களின் விசிறி. இவளை உங்களின் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார். சற்றும் தயங்கவில்லை டி.கே.ஜெ. "நாளைக்கே குழந்தையை வீட்டுக்கு அழைச்சுண்டு வாம்மா" என்று சொல்லியிருக்கிறார்.

- எஸ்.ரகோத்தமன்

காலப்பெட்டகம்
சுதாங்கன் எழுதி, வாசகர்களிடம் மிகவும் பரபரப்புக்குள்ளான தொடர்கதை 'அந்தக் கனல் வீசும் நேரம்' விகடனில் வெளியானது இந்த ஆண்டுதான்.

வளைகுடாப் போர் நடந்தது இந்த ஆண்டுதான்.

நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. அதையட்டி, வாசகர்களுக்கு பிரமாண்டமான தேர்தல் போட்டி அறிவித்து, ரூ.25,000 பரிசளித்தது விகடன். ஆனந்த விகடன் நடத்திய முதல் தேர்தல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்