அண்ணா பிள்ளைத் தெருவில், 'பிரம்ம சமாஜம்' என்று போர்டு போட்டுள்ள ஒரு வீடு. அந்த வீட்டு வாசலில் 'தனம் அண்ட் கோ', 'கனடியன் வாட்ச் கம்பெனி', 'ஜெனுயின் வாட்ச் கம்பெனி' என்று வரிசையாகப் பல போர்டுகள் தொங்கும். 'தபால் மூலம், நீங்கள் விரும்பும் 144 பொருள்களை ஒரே ரூபாய்க்குப் பெறலாம்' என்றும் பலகை தொங் கும். எல்லாம் வாசன் அவர்களது கம்பெனிகள்! அங்கு மும்முரமாக வேலை நடந்துகொண்டிருக்கும். நானும் வெங்கடராமன் அவர்க ளும் (வாசன் அவர்களின் மாமா) 'பாக்கிங்', 'அட்ரஸ் எழுதுவது' போன்ற வேலைகளில் வாசனுடன் ஈடுபட்டிருபோம். கட்டுக் குடுமியுடன் வாசன் உழைக்கும் உழைப்பு, என்னைப் பிரமிக்கச் செய்யும்.
அந்தக் காலத்தில், 'ஆனந்த போதினி' 'அமிர்த குண போதினி' இவையெல்லாம் பிரசித்தமான பத்திரிகைகள். கல்லூரி நாட்களி லேயே (பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் படித்தார்) 'நீலமேகன்' போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார் அவர். நாவல், பத்திரிகை இவற்றுக்கு மக்களிடம் இருக்கும் மோகத்தைப் பார்த்து, 'நாமே ஒரு பத்திரிகையைத் துவக்கினால் என்ன?' என்ற எண்ணம் இவரிடம் எழுந்திருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருந்தவர், அது கிடைக்காமல் போகவே, பத்திரிகை எண் ணத்தில் முழு கவனம் செலுத்தி, 300 ரூபாய் கொடுத்து 'ஆனந்த விகடன்' பத்திரிகையை விலைக்கு வாங்கினார். விகடகவி பூதூர் வைத்தியநாத ஐயர் என்பவர் அப்போது ஆனந்த விகடனை நடத்திக்கொண்டிருந்தார். கையால் சுற்றுகிற செகண்ட் ஹாண்ட் பிரஸ் அது. வாசலில், பல போர்டுகளுடன் 'வாசன் புக் டிப்போ' என்ற போர்டும் இருக் கும். ஆனந்த போதினியின் குறிக் கோள் 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்ற குறள்; ஆனந்த விகடனுக்கு 'எல்லோரும் இன்புற்றிருக்க' என்ற குறிக்கோளை உண்டாக்கினார் வாசன்.
எல்லாக் கட்சிகளிடமும் சமமாக மரியாதை காட்டி வந்தார் வாசன். ஒரு முறை அவர் பிரஸ்ஸில் சுயமரியாதை மகாநாட்டுப் பிரசங்கங்களும், பெரியார் படமும் அச்சாகிக்கொண்டிருந்தது. "நீங்கள் காங்கிரஸ்காரராயிற்றே, எப்படி இது?" என்று கேட்டேன். "எல்லாக் கட்சிகளிடமும் சுமுகமாகப் போக வேண்டும். அதுதான் பத்திரிகைக்காரனுக்கு அழகு" என்று பதில் அளித்தார். இறுதி காலம் வரை அவர் அப்படியே வாழ்ந்தும் காட்டினார்.
|