மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும்... நானும்! - 42

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும்... நானும்! - 42


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும்... நானும்! - 42
நீயும்... நானும்! - 42
நீயும்... நானும்! - 42
நீயும்... நானும்! - 42
கோபிநாத், படங்கள்:'தேனி' ஈஸ்வர்
நீயும்... நானும்! - 42

"புதிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும், அது சம்பந்தமாக உங்களிடம் ஏதாவது

ஆலோசனை கேட்கலாம் என்பதற்காக உங்கள் அலுவலகம் வரை வந்திருக்கிறேன்" என்று கண்களில் ஆர்வம் மின்னப் பேச ஆரம் பித்தார் அந்த இளைஞர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற துடிப்பு அவர் பேச்சில் தெரிந்தது.

"எனக்கு நீண்ட நாட்களாகவே தொழில் தொடங்கி, அதை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறது. ஆனால், எதைச் செய்ய வேண்டும், எந்தத் துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து, ஒரு தெளிவு ஏற்படவில்லை. குழப்பமாகவே இருக்கிறது" என்றார்.

ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போனால்கூட, அங்கு நடக்கும் விற்பனையைக் கூர்ந்து கவனிப்பாராம். என்ன செய்தால் ஒரு ஹோட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பது குறித்த திட்டம் என்னிடம் இருக்கிறது. ஹோட்டல்தான் என்று இல்லை, இப்படி நிறைய துறைகள் குறித்த தகவல்களைத் திரட்டிவைத்துஇருக்கிறேன் என்றும் அந்த இளைஞர் சொன்னார்.

நீயும்... நானும்! - 42

"இவ்வளவு திட்டங்களுடன், ஆர்வமாகவும் துடிப்பாகவும் இருக்கும் உங்களுக்கு ஏன் குழப்பம் வருகிறது? ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை அமல்படுத்த வேண்டியதுதானே" என்று கேட்டேன். இளைஞர் ஆழமான யோசனையோடு சொன்னார், "முதலீடு செய்து தொழிலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது எனப் பயமாக இருக்கிறது!'

நாங்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டு இருப்பதைச் சற்று தொலைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்தார் என் நண்பரின் அப்பா. ஊரில் ஒரு மளிகைக் கடை நடத்துகிறார் அவர். "தம்பி, நான் ஒரு யோசனை சொல்லட்டுமா" என்று இருக்கையில் அமர்ந்தவாறே கேட்டார்.

"நீங்க என்ன வியாபாரம் வேண்டுமானாலும் பண்ணுங்க. உங்களிடம் எது அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதை முதலீடு செய்யுங்கள். ஒரு தொழில் தொடங்கவும் வெற்றிஅடையவும் மிக முக்கியமானது அதுதான்" என்றார்.

நீயும்... நானும்! - 42

பணம் நிறைய இருந்தால், பணத்தை முதலீடு செய்யுங்கள். மூளை நிறைய இருந்தால் மூளையை முதலீடு செய்யுங்கள். இவை இரண்டையும்விட, உழைக்கும் ஆற்றல்தான் அதிகமாக இருக்கிறது என்று நம்பினால், உழைப்பை முதலீடு செய்யுங்கள். அதுதான் தொழிலை விருத்தி செய்யும். தொழில் முனைவோருக்கான மிகச் சிறந்த சூத்திரமாக அந்த வார்த்தைகளை உணர முடிந்தது.

'எது அதிகமாக இருக்கிறதோ, அதை முதலீடு செய்யுங்கள்!'

இந்தத் தத்துவத்தில் உண்மை நிலைப்பாடு ரொம்பவும் அவசியம். தன்னைத்தானே கடுமையாக சுயவிமர்சனம் செய்து, எது தன்னிடம் அதிகம் இருக்கிறது என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும்.

நீயும்... நானும்! - 42

முதலீடு என்று வருகிறபோது, நாம் பலரும் நினைப்பது பணத்தைத்தான். நிறையப் பேர் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கி நிற்பதற்குக் காரணம், முதலீடு என்பதை முழுக்க முழுக்கப் பணத்தோடு பொருத்திப் பார்ப்பதுதான். என்ன செய்வதாக இருந்தாலும், பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வரும் சௌகர்யக் காரணியை வேதமாக எடுத்துக்கொள்கிறோம்.

உண்மையில் இன்றைக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. முதலாளி ஆவதற்குப் பணம் மட்டும்தான் முதலீடு என்று இனியும் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. மூளையை மட்டும் முதலீடு செய்து பணம் பண்ணியவர்கள் நிறையப் பேர். உழைப்பை முதலீடாகக்கொண்டு உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

நாம் கேட்கிற வெற்றிக் கதைகளின் பின்னால் முதலீடாக பணம் மட்டுமே இருந்தது இல்லை. பணம் இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்ற நினைப்பிலேயே இருப்பதால்தான், இன்ன பிற வாய்ப்புகள் தெரிவது இல்லை. எந்த விஷயத்தையும் தெளிவுபட முன்னிறுத்துகிற ஆற்றல், துறை சார்ந்த வல்லுநர்களின் தொடர்பு, வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டுச் சிந்திக்கிற கற்பனா சக்தி, நேரம் காலம் பார்க்காமல் நினைத்ததை அடையத் துடிக்கும் உழைப்பு, உதவிக்கு வரத் தயாராக இருக்கும் நட்பு வட்டாரம், பேச்சுத் திறன், தேடல், தேடலால் கிடைக்கிற அறிவு... இப்படி இன்னும் பல விஷயங்களும் முதலீடுதான். இந்த முதலீட்டோடு பணத்தையும் இன்னொரு காரணியாகச் சேர்த்துக்கொள்ளலாம் அவ்வளவுதான்.

ஏதாவது தொழில் செய்து வாழ்க்கையில் ஜெயித்துவிட வேண்டும் என்று தொழில் தன்மையை உணர்ச்சிபூர்வமாக அணுகுவது ஆரோக்கியமானது அல்ல. கையில் இருக்கும் பணம், கடனுக்கு வாங்கிய பணம், நகைகளை விற்றதில் வந்த பணம், பெற்ற கடனுக்காக அப்பா தந்த பணம், அடகுவைத்ததில் கிடைத்த பணம்... இப்படி அத்தனையும் கொட்டி, உங்கள் இயல்போடு தொடர்பு இல்லாத ஏதோ ஒரு தொழில் ஏன் செய்ய வேண்டும்?

எதிர் வீட்டுக்காரன் செய்தான் என்பதற் காக நாமும் அப்படியே செய்துவிட முடியாது. அவரிடம் பணம் இருந்தது, அவர் பணத்தை முதலீடு செய்தார்? உங்களிடம் எது அதிகமாக இருக்கிறது பணமா? மூளையா அல்லது வேறொரு திறனா? எது அதிகமோ அதைத்தான் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில் தொடங்குவதிலும் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதிலும் சரி, இரண்டு விஷயங்கள் இருக்கவே கூடாது. ஒன்று, அதிபுத்திசாலியாகச் செயல்படுவது. இரண்டாவது, அர்த்தம் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தொழிலை அணுகுவது!

கம்ப்யூட்டரில் default settings என்று சொல்லுவதைப்போல, நமக்குள்ளும் சில default settings இருக்கும். அதுதான் இயல்பிலேயே நமக்கு உரிய திறன். அந்தத் திறன் எதுவென்று அறிந்து, அதை முதலீடு செய்வதே சிறந்தது. பணம் மட்டும்தான் முதலீடு என்றால், பிறவிப் பணக்காரர்கள் மட்டும்தான் தொழில் தொடங்க முடியும்.

நீயும்... நானும்! - 42

இன்றைக்கு நம் கண் முன்னே பெரும் சாம்ராஜ்யங்களை நிர்வகிப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்களாக உயர்ந்ததற்குக் காரணம், பணம் இல்லை. தங்கள் திறன் எதுவென்று அறிந்து, அதை முதலீடு செய்த தன் விளைவாகவே அவர்கள் பணக்காரர்களாக இருக் கிறார்கள்.

ராம்ராஜ் காட்டன் அதிபர் நாகராஜ் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். "பணம்தான் முதலீடு என்று நினைத்துக்கொண்டே இருந்தால், கடைசி வரை எந்தத் தொழிலும் தொடங்க முடியாது. 1,000 ரூபாய் தேவைப்படும் இடத்தில் 500 ரூபாய்தான் இருக்கிறது என்றால், தேவைப்படும் இன்னொரு 500 ரூபாய்க்கு இணையான கூடுதல் உழைப்பைக் கொடுங்கள். அது அனைத்தையும் ஈடுகட்டும்!"

ஒரு தேசம் வளர்வதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. ஒன்று, தொழில் செழிக்கவும் வியாபாரம் பெருகவும் தேவைப்படும் கட்டமைப்பை உருவாக்கிவிட்டால், தானாகவே தொழில்கள் வெற்றிபெற்றுவிடும். இன்னொன்று, உழைப்பையும் அறிவையும் கொட்டிச் சம்பாதிக்கிற பணத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவைப் படும் கட்டமைப்பை உருவாக்குதல்.

இரண்டுமே வெற்றிபெறுவதற்கான சூத்திரங்கள்தான். இது தனி மனிதர்களுக்கும் பொருந்தும். பணம் இல்லை, அப்பாவிடம் சொத்து இல்லை என்றெல்லாம், இந்தக் காலகட்டத்தில் அலுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

எது அதிகமாக இருக்கிறதோ அதை முதலீடு செய்யுங்கள். அதன் மூலம் பணம் பண்ணுங்கள். பணம் இல்லாமல் எப்படித் தொழில் செய்ய முடியும்? என்று யோசிப்பதைவிட, என்னிடம் இருக்கும் எந்தத் திறனைப் பணமாக்கலாம் என்று யோசிக்கலாம்.

வெறுங்கையில் முழம் போட முடியாது என்பது எல்லாம் பழைய கதை. உங்களிடம் இயல்பிலேயே இருக்கும் முதலீட்டை அறிந்துகொண்டால், அது வெறுங்கை அல்ல. வெற்றிக் கதவை திறக்கும் சாவி அந்தக் கையில்தான் இருக்கிறது!

நீயும்... நானும்! - 42
நீயும்... நானும்! - 42
- ஒரு சிறிய இடைவேளை