மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 16

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 16

மனம் கொத்திப் பறவை! - 16
மனம் கொத்திப் பறவை! - 16
மனம் கொத்திப் பறவை! - 16

வூதி அரேபியா என்றால், நமக்கு என்ன தோன்றும்? அங்கே உள்ள ஷேக்குகள்,

தண்டனை என்றால் சவுக்கடி, கை, காலை வெட்டுவது (சமயங்களில் தலையை), பேரீச்சை, பெட்ரோல் மற்றும் முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை. மற்றபடி, அந்த நாட்டின் இலக்கியம், கலாசாரம் ஆகியவைபற்றி அவ்வளவாக யாரும் அக்கறை காட்டுவது இல்லை. அப்படி அங்கே ஒன்று இருக்கிறது என்றே பலருக்கும் தெரியுமா எனச் சந்தேகமாக உள்ளது. இருக்கவே இருக்கிறது, இஸ்லாமிய நாடுகள் மீது அமெரிக்கா செய்யும் தூஷணை.

உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒருவர் தஸ்தயெவ்ஸ்கி. 19-ம் நூற்றாண்டில் அவருக்கு நிகரான இலக்கியவாதியே இல்லை என்று நம்புகிறவர்களும் உண்டு. அப்படிப்பட்ட தஸ்தயெவ்ஸ்கிக்கு இணையான ஒருவரை 20-ம் நூற்றாண்டில் சொல்ல முடியும் என்றால், அவர் பெயர் அப்துல் ரஹ்மான் முனிஃப் (1933-2004). இவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் என்றால், யாராலும் நம்ப முடியுமா? இதற்கு முக்கியமான காரணம், சமகால அரபி இலக்கியத்தின் சாதனைகள். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக இலக்கியத்தில் பரவலாகப் பேசப்பட்டது லத்தீன்அமெரிக்க இலக்கியம். பின்னர், அந்த இடத்தைப் பிடித்து இப்போது சர்வதேச அளவில் பல சாதனைகளைச் செய்துகொண்டு இருக்கிறது அரபி இலக்கியம். முக்கியமாக மொராக்கோ, அல்ஜீரியா, துருக்கி, லெபனான், பாலஸ்தீனம், எகிப்து போன்ற நாடுகள். நோபல் பரிசுக்கு இணையான டப்ளின் இம்பாக் (Dublin Impac) பரிசைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருப்பவர்கள் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக் (துருக்கி), அதை வாங்கு வதற்கு முன்பே டப்ளின் பரிசைப் பெற்றுவிட்டார். இந்தப் பின்னணியில்தான் ஜுமானா ஹத்தத் (Joumana Haddad) என்ற அரபிப் பெண் கவிஞர் எனக்கு அறிமுகம் ஆனார்.

மனம் கொத்திப் பறவை! - 16
மனம் கொத்திப் பறவை! - 16

இறைவன் நமக்குக் கொடுத்த உடலையும் உடல் சார்ந்த இன்பங்களையும் கொண்டாட வேண்டும் என்பதே இவரது கோட்பாடு. இந்த வகையில், என்னை மிகவும் கவர்ந்த இரண்டு பிரெஞ்சு எழுத்தாளர்கள் மர்க்கி தெ ஸாத் (Marquis de Sade), ழார் பத்தாய் (Georges Bataille). ஆச்சர்யப்படும் வகையில், இந்த இருவரும்தான் தனது ஆதர்சம் என்கிறார் ஜுமானா. அரபி இலக்கியத்துக்கு சிருங்காரம் புதிது அல்ல என்று சொல்லும் இவர், 1,001 அராபிய இரவுகளை உதாரணம் காட்டுகிறார். ஜஸ்ஸத் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார் ஜுமானா. அரபி மொழியில் ஜஸ்ஸத் என்றால் உடல் என்று பொருள். அவருடைய கவிதை ஒன்றை தமிழில் மொழிபெயர்த்தேன்.

'கடலின் அடியாழத்தில் காத்துக்கொண்டு இருக்கும்
ஓர் உடல் எனக்கு இருக்கிறது
எரிமலையைப் போன்ற ஓர் உடல்
எனக்கு இருக்கிறது
காதலுக்கு முன்பே காமத்தைக் கக்கிவிடுமோ என
எரிமலையின் வாயை நக்கிக்கொண்டு இருக்கிறது நீர்
நான் அறிந்திராதது என் உடல்
அது ஒரு மணல் துகளாக இருக்கலாம்
அல்லது ஒரு செம்மீன்
அல்லது ஒரு முத்துச் சிப்பி.
எதுவாகவும் இருக்கலாம்
ஆனால், நான் கண்டுகொள்வேன்
எரியும் என் இரண்டு இதழ்களைக்கொண்டும்
சொர்க்கத்தில் நுழைவதுபோல் சத்தமிடும்
நெருப்புக் குழம்பான என் நாவைக்கொண்டும்.
கடலின் அடி ஆழத்தில்
காமம் கொப்பளிக்க
உனக்காக ஓர் உடலைவைத்திருக்கிறேன்
அதோடு ஒரு மறுநாளையும் நித்தியத்தையும்
வைத்திருக்கிறேன்
அந்த மறுநாளில் நீ என்னை வந்தடையலாம்
அந்த நித்தியத்தில்
நீ சிப்பியை மெதுவாகத் திறக்கலாம்
எவ்வளவு மெதுவாக விழைகிறேனோ
அவ்வளவு மெதுவாக...
உன்னிடம் அந்தத் திறமை இருக்கிறது!'

(சுமாரான மொழிபெயர்ப்பில் ஜுமானா ஹத்தத்கவிதைகள் 'ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு' என்ற தலைப்பில் உயிர்மை வெளியீடாகத் தமிழில் வந்திருக்கிறது).

மனம் கொத்திப் பறவை! - 16

ருநாள் ஒரு வங்கியில் நின்றுகொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்த ஒருவரின் செல்போனில் 'சிங்கிச்சா சிங்கிச்சா சிவப்பு கலரு சிங்கிச்சா' என்ற பாட்டு கேட்டது. மும்முரமான அந்த நேரத்தில், அந்த சத்தம் எத்தனை பேருக்கு முக்கியமாக, பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் கேஷியருக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று அந்த அன்பருக்குத் தெரியவில்லை. ரிங் டோன் அராஜகம் இப்படி என்றால், காலர் டியூன் கொடுமை இதைவிடப் பயங்கரம். ஏதாவது சோக செய்தியைச் சொல்வதற்காகக் கூப்பிட்டால், 'நான் அடிச்சா தாங்க மாட்டே' என்ற பாடல் காலர் டியூனாகக் கேட்கும். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரை நான் தினமும் மூன்று தடவையாவது அழைக்க வேண்டியிருக்கும். அப்போது எல்லாம் பாரதியின் பாடல் ஒரு கொடூரமான குரலில் கேட்கும். பாரதி மகா கவிஞன்தான். ஆனால், அவனது பாடலை ஒழுங்காகப் பாடி இருக்க வேண்டாமா? இன்னொரு நண்பர் 'ராஜாவுக்கு ராஜா நான்தான், எனக்கு மந்திரிங்க யாருமில்லே' என்ற பாடலை காலர் டியூனாகவைத்து இம்சை செய்துகொண்டு இருக்கிறார். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு code இருக்கிறது. இப்படி லட்சக்கணக்கான பாடல்களில் அந்தக் குறிப்பிட்ட 'ராஜா மந்திரி' பாடலின் 'கோட்'ஐக் கண்டுபிடிக்க என் நண்பர் எவ்வளவு தேடி இருக்க வேண்டும்? பேச வேண்டாம் என்றால் நேரடியாகச் சொல்லுங்கள்; அதை விட்டுவிட்டு, ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள்? ஒருவரைத் தேடி அவர் வீட்டுக்குப் போனால், கதவைத் திறந்து நீங்கள் சற்றும் எதிர்பார்க்காமல் ஒரு வாளித் தண்ணீரை உங்கள் முகத்தில் ஊற்றினால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருக்கிறது பல நண்பர்களின் காலர் டியூன். மேலும், உங்களுக்குப் பிடித்த பாட்டை நீங்கள்தானே கேட்க வேண்டும்? அதை மற்றவர்கள் மீது திணிப்பது என்ன நியாயம்?

மெரிக்கா பற்றி எனக்குப் பல சந்தேகங்கள் எழுகின்றன. தொலைக்காட்சி, தினசரி, பத்திரிகை எல்லாவற்றிலும் அங்கே பலவிதமான மருந்துகளுக்கு ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. ஷூ பற்றி ஒரு விளம்பரம் வந்தால், மருந்து பற்றி ஐந்து விளம்பரங்கள் வருகின்றன. இந்தியாவில் ஏன் மருந்துகள்பற்றி அவ்வளவு விளம்பரங்கள் வருவது இல்லை? (ஒரு வேளை இங்கே காலாவதியான மருந்துகளை விற்பதாலா?) சமயங்களில் வேடிக்கையான மருந்து விளம்பரங்களும் வருகின்றன. (உ.ம்) R.L.S என்ற நோய்க்கு உரிய மருந்து. R.L.S என்றால் Restless leg syndrome. சில பேர் எப்போதும் கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பார்களே அதுவா என்று கேட்டேன். இல்லை; கால் மரத்துப் போவதற்கான மருந்து. அதேபோல் இதய நோய் வராமல் தடுக்க நூற்றுக்கணக்கான மருந்துகள்.

மனம் கொத்திப் பறவை! - 16

அமெரிக்காவில் Jason's Deli என்ற பிரபலமான உணவகம் உள்ளது. அங்கு இருந்து நாம் ஒரு பீஃப் சாண்ட்விச் வாங்குகிறோம் என்றுவைத்துக்கொள்ளுங்கள். (வேறு என்ன ரவா தோசையா கிடைக்கும்?) அந்த அயிட்டத்தில் பிங்க் நிறத்தில் ஒரு அரை கிலோ மாட்டுக் கறியை அடைத்துத் தருகிறார்கள். தோசை, இட்லி, சாம்பார் போன்ற மென்பொருள்களுக்கு மட்டுமே பழக்கமான நம் குடல், அதைத் தாங்குமா? அதுவும் அந்தக் கறி சரியாக வெந்தும் இருக்காது. டெக்சாஸில் உப்பு வேறு அதிகம் சேர்க்கிறார்கள். இப்படி எல்லாம் புலம்பிக்கொண்டு இருந்த என் நண்பரிடம் சொன்னேன். டெக்சாஸ் போனால், நமக்கு ஓரளவு ஒத்துவரக்கூடிய உணவு நாச்சோஸ் அண்ட் சல்ஸா. கோதுமை பிரெட், வெங்காயம், தக்காளி, சீஸ் எல்லாம் சேர்த்த ஒரு மெக்ஸிகன் உணவு நாச்சோஸ். சல்ஸா என்பது ஒரு லத்தீன் அமெரிக்க நடனம். நடனத்தை எப்படி நாச்சோஸுக்குத் தொட்டுக்கொள்வது என்று கேட்காதீர்கள். சல்ஸாவுக்கு இன்னோர் அர்த்தமும் உண்டு. பூண்டு, தக்காளி, கொத்துமல்லித் தழை, உப்பு, வெங்காயம், எலுமிச்சை சாறு மற்றும் ஹாலப்பீன்யோ எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்தால், அதுதான் மெக்ஸிகன் சல்ஸா. ஹாலப்பீன்யோ? ஸ்பானிஷில் ஜே, எக்ஸ், ஆகிய எழுத்துக்களை ஹெச் என்ற உச்சரிப்பில்தான் சொல்லுவார்கள். ராஜா என்றால் ராஹா. ஜெனிலியா: ஹெனிலியா. மெக்ஸிகோ: மெஹிகோ. அதேபோல் jalapeno என்பது ஹாலப்பீன்யோ. அர்த்தம்... பச்சை மிளகாய். வேறு ஒன்றும் இல்லை, நம்மூர் தக்காளி சட்னியின் மெக்ஸிகன் வடிவம்தான் சல்ஸா. சல்ஸாவைத் தொட்டுக்கொண்டு நாச்சோஸைச் சாப்பிட்டால் அது ஒரு தனி ருசி. நான் டெக்சாஸ் சென்றது இல்லை. ஆனால், பாரிஸில் உலகின் சகலவிதமான உணவு வகைகளும் கிடைக்கின்றன.

ஆனால், டெக்சாஸ் பற்றி நண்பர் கேட்ட மற்றொரு விஷயம்தான் எனக்கும் புரியவில்லை. அங்கே பெண்களின் குறைந்தபட்ச எடையே 130 கிலோ இருக்கிறது என்றார். இப்படி சீஸும் மாட்டுக் கறியும் சாப்பிட்டு 130 கிலோ இருக்கும் அமெரிக்கர்களுக்கு இதய நோய் வருவது இல்லை. வெறும் சாம்பாரும் மோர்க் குழம்பும் சாப்பிடும் நமக்கு ஏன் வருகிறது? அது மட்டுமல்ல; கூர்க்கில் கவனித்தேன். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் பன்றி வளர்க்கிறார்கள். பன்றிக் கறிதான் கூர்க்கில் விசேஷம். ஆனால், பன்றிக் கறி சாப்பிட்டாலும் ஆண், பெண் எல்லோரும் படுஇளமையாக இருக்கிறார்கள். யாருக்கும் தொப்பை இல்லை. வியாதி இல்லை. ஆனால் ஒன்று, பன்றிக் கறி சாப்பிடுவதாலேயே தங்களை கர்நாடகாவில் கொஞ்சம் தாழ்வாகப் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கம் கூர்க் மக்களுக்கு இருக்கிறது.

உலகில் உள்ள இதய நோயாளிகளில் அதிகம் பேர் இந்தியாவில்தான் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. ஏன் அப்படி? நம்மவர்கள் எப்போதும் எதிலும் டென்ஷனாகவே இருக்கிறார்கள். உல்லா சம், உற்சாகம் என்றால் என்ன விலை என்று கேட்கிறார்கள். மனைவியுடன் எங்காவது இன்பச் சுற்றுலா? ம்ஹூம்... வாய்ப்பே இல்லை. இந்தியாவில் சுற்றிக்கொண்டு இருக்கும் வெள்ளைக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் அவர்களுடைய ஊர்களில் அடிமட்டத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்தான். ஆனாலும், சேமித்த பணத்தில் நகை வாங்காமல் ஜாலியாக ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறார்கள். இதய நோயில் உலகின் முதலிடத்தைப் பெற்றதுபோல் தங்கம் வாங்குவதிலும் இந்தியாதான் முதல். அதிலும் முதலிடம் தமிழ்நாடு. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி ஏன் ஐயா இப்படி வாங்குகிறீர் கள் என்றால், முதலீடு செய்கிறார்களாம். வெளி நாட்டுக்காரர்கள் இதை Fools gold என்கிறார்கள். முட்டாள்களின் தங்கம். எப்படி? 30 ஆண்டுகளுக்கு முன்னால் 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய நிலம், இன்றைக்கு 50 லட்சத்துக்குப் போகிறது. அதே பணத்துக்கு 10 பவுன் வாங்கி இருந்தால் அதன் இன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம். எது புத்தி சாலித்தனம்?

சரி, முதலீடு என்கிறோமே, அந்தத் தங்கத்தை என்றைக்காவது விற்று நம் ஆரோக்கியத்துக்குச் செலவு செய்து இருக்கிறோமா, நம் மனதுக்குப் பிடித்தமான காரியங்களைச் செய்திருக்கிறோமா? (கொன்றே போட்டுவிடுவார்கள் சாமியோவ்!) ஒருவர் தன் ரத்தத்தை சிந்தி வாங்கும் தங்கம் என்றைக்குமே அவருக்குப் பயன்படுவது இல்லை என்பதுதான் நம் தமிழ்க் குடும்பங்களின் யதார்த்தம்.

இன்னொரு பிரச்னை, வறட்டு கௌரவம். ஒரு நடிகரோடு படப்பிடிப்புக்குச் சென்றுகொண்டு இருந்தேன். கேட் மூடியிருந்தது. கேட்டுக்கு உள்ளே வேறொரு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டு இருந்தது. 'இறங்கி நடந்து செல்லுங்கள்' என்றார் பாதுகாவலர். இறங்கி நடந்தால் ஐந்து நிமிடத்தில் எங்கள் தளத்தை அடைந்துவிடலாம். 'இல்லை, நடக்க முடியாது' என்றார் நடிகர். அதனால் நாங்கள் செல்ல வேண்டிய தளத்துக்கு அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு சென்றோம். இடையில் ரயில்வே கிராஸிங் வேறு இருந்ததால் எங்கள் இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆயிற்று. நடை உடல்நலத்துக்கு நல்லதுதானே? அதை விட்டுவிட்டு வறட்டு கௌரவத்துக்காக முக்கால் மணி நேரம் வீண்.

மனம் கொத்திப் பறவை! - 16

இன்னோர் உதாரணம், அவர் முன்பு ஹீரோவாக நடித்தவர். இப்போது வாய்ப்பு இல்லாததால் எப்போதும் டென்ஷனாகவே இருக்கிறார். ஒரு பிரபலமான இயக்குநர் அவரைத் தன் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார். இப்போது எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்து புகைத்துக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருக்கிறார்.

அந்த இயக்குநரின் படத்தில் நடிப்பதே ஒரு கௌரவம். ஆனாலும், ஹீரோ இமேஜ் போய்விடுமே? இதைத்தான் இமேஜ் ட்ராப் (image trap) என்கிறார்கள். நம்முடைய இமேஜ் என்ற பொறியில் நாமே எலியைப்போல் சிக்கிக்கொள்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை, நம்முடைய சந்தோஷத்தையும் துக்கத்தையும் நாமேதான் தேடிக்கொள்கிறோம்!

மனம் கொத்திப் பறவை! - 16
மனம் கொத்திப் பறவை! - 16
(பறக்கும்...)