மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் நானும்! - 41

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் நானும்! - 41


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் நானும்! - 41
நீயும் நானும்! - 41
நீயும் நானும்! - 41
நீயும் நானும்! - 41
கோபிநாத், படங்கள்:'தேனி' ஈஸ்வர்
நீயும் நானும்! - 41

வர் ஒரு தொழிலதிபர். தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி குவித்து வரும் ஒரு

சாம்ராஜ்யத்தின் அதிபதி. 'பழைய காலத்தோடு ஒப்பிடுகிறபோது, இன்றைக்கு வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்போடு செயல்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'இது மகிழ்ச்சிக்குஉரிய வளர்ச்சி. ஆனா, நீங்க எல்லாரும் ஜெயிக்கிறதில் குறியா இருக்கிற அளவுக்கு, தொடர்ந்து வெற்றி பெறுவதில் திடமாக இல்லையே!' என்றார்.

ஒரு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொன்ன விஷயம், 'ஜெயிப்பது எளிது... தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதுதான் சவால்!' இன்றைக்கு எல்லாருடைய இலக்கும் 'வெற்றி பெறுதல்'தான். புத்தக அறிவு, இணைய ஞானம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற பாடங்கள், பேச்சாற்றல், உலக ஞானம், கேள்வி ஞானம் இப்படிப் பலவற்றையும்வைத்து நாம் செய்ய முயற்சிக்கிற வித்தை... 'வெற்றி!'

எடுத்துக்கொண்ட காரியத்தில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று கடுமையாக யோசிக்கிற நாம், அதன் அடுத்த கட்டம்பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. ஏதாவது சொல்லி, எதிராளியை உங்கள் பேச்சால் அசரவைத்து, தகவல்கள் தந்து, அடேயப்பா என்று அதிசயிக்கவைத்து, கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டால், வெற்றிபெற்று விட்டதாக நாமே முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

நீயும் நானும்! - 41

இந்த அறிவாற்றல், பேச்சுத் திறன்... இவை எல்லாம் 'இன்ஸ்டன்ட் வெற்றி' அடைய மட்டுமே பயன்படும் என்ற கவனிப்பு இல்லாமல்தான் நம் பணிகள் நடக்கின்றன. ஒரு சுற்றுலாப் பகுதியில் ரோட்டோரக் கடை போட்டு இருக்கிற வியாபாரியின் மனசுதான் இப்போது இருக்கிற வியாபாரப் புத்திசாலித்தனத்திலும் தெரிகிறது.

வருடத்துக்கு ஒரு முறை வரப்போகிற அந்த சுற்றுலாப் பயணி, அடுத்த வருடம் வரை தன்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப் போவது இல்லை என்ற நம்பிக்கையில், என்னென்னவோ சொல்லிப் பொருளை விற்கிற அந்தக் கடைக்காரர், இந்த ஆள் திரும்பவும் என் கடைக்கு வர வேண்டுமே என்ற கவலையே இல்லாமல் கடை நடத்துகிறார்.

நீயும் நானும்! - 41

ஏறக்குறைய இந்த மனோநிலைதான் இப்போது அநேக வர்த்தகப் பரிவர்த்தனைகளில் நடக்கிறது. கிரெடிட் கார்டு விற்பதில், இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு ஆள் பிடிப்பதில், சிம்கார்டு விற்பதில், புதிது புதிதாக வரும் நிதி தொடர்பான முதலீடுகளில் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் இன்னும் பல துறைகளில் அப்போதைய வெற்றி மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் நிர்ணயிக்கப்படுகிற டார்கெட், டெட்லைன் நெருக்கடியும், இதில் பணி செய்யும் இளைஞர்களை இப்போதைக்கு ஜெயிக்க வேண்டும் என்று தூண்டுகிறதேஅன்றி, எப்போதும் ஜெயிப்பது எப்படி என்று சொல்லித் தருவது இல்லை. நிறுவனங்களுக்கு தனி நபர் குறித்து அப்படியான கவலை இருக்க வேண்டும் என்று இன்றைய கார்ப்பரேட் காலத்தில் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், அதில் ஈடுபடுகிற இளைஞர்கள் தங்கள் தொடர் வெற்றி குறித்துக் கட்டாயம் கவலைப்பட்டாக வேண்டும். பேச்சுத் திறனைவைத்து இப்போது ஜெயிக்கிற நாம்... தொடர்ந்து ஜெயிக்க முடியாமல் போகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனமே நம்மை அனுப்பிவிட்டு, அடுத்த ஆளை அந்த இடத்துக்குக் கொண்டுவரும்.

இன்றைக்கு இருக்கிற நெருக்கடியில், எதையாவது சொல்லித்தான் விற்க வேண்டும். தொடர் வெற்றி குறித்து யோசித்துக்கொண்டு இருந்தால், வியாபாரம் கைவிட்டுப் போய்விடும் என்று மனதுக்குள் இருக்கும் அழுத்தமான எண்ணத்தில் இருந்து முதலில் வெளியே வருவோம்.

இந்த எண்ணம்தான், விற்கிற பொருளைப்பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதைவிட, வாடிக்கையாள ரைக் கவரும்படியாகப் பேசுவதில் மட்டும் குறியாக இருக்கச் சொல்கிறது. இந்த எண்ணம்தான், தான் இருக்கிற துறை சார்ந்த அறிவையும் உண்மைகளையும் தேடித் தெரிந்துகொள்வதைவிட, யாரிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும் என்ற குருட்டு யோசனைக்குள் தள்ளி விடுகிறது. இந்த எண்ணம்தான், இப்போதைக்குக் கிடைக்கிற வெற்றி நிரந்தரமானது என்று நம்பவைக்கிறது. இந்த எண்ணம்தான், எதிரில் இருப்பவரின் அறிவு என்ன, தான் பேசுகிற விஷயம் குறித்து அவருக்கு இருக்கிற ஞானம் என்ன என்பதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், வேலையை முடித்தால் போதும் என்ற நோக்கில் வார்த்தைகளைக் குறைத்துவிடுகிறது. இப்படியான இன்ஸ்டன்ட் வெற்றிகள் நீண்ட நாளைக்கு நிலைக்காது என்ற நினைப்பைக்கூட இந்த எண்ணம் தடுத்துவிடுகிறது.

போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், அப்புறம் எப்படித்தான் வேலையை முடிப்பது?

விற்பனை, சந்தைப்படுத்துதல் இந்த இரண்டு மட்டுமே அல்ல... எந்த ஒரு பணியும் நம்பிக்கை என்கிற ஆதாரத்தின் மீது கட்டப்படும்போதுதான் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். உண்மையை அழகுறச் சொல்லுதல் என்று ஒரு கலை உண்டு. அதுதான் நம்பிக்கையை வளர்த்து எடுக்கிறது. இந்த மனிதர் அல்லது இந்த நிறுவனம் நம்பிக்கைக்கு உரியது, என்ற எண்ணம்தான் அதன் தொடர் வெற்றியைத் தீர்மானிக்கிறது!

எப்படிப் பேசினால் வேலை நடக்கும் என்று யோசிக்க நேரம் செலவிடுவதைவிட, நீங்கள் செய்கிற பணி சார்ந்த அர்த்தமுள்ள தகவல்களைச் சேகரிக்க நேரம் செலவிடலாம். அந்தத் தகவல்களும், பணி செய்யும் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப உங்களை நீங்கள் தரமேற்றிக்கொள்ளும் பாங்கும், உங்களை, உங்கள் பேச்சை இயல்பாகவே வசீகரமானதாக மாற்றும்.

நீயும் நானும்! - 41

உங்கள் பேச்சுத் திறனை, உண்மைத் தகவல்களை அழகாகவும் எதிரில் இருப்பவர் புரிந்துகொள்ளும்படியாகவும் பகிர்தலுக்குப் பயன்படுத்துங்கள். இப்படிச் செய்தால் வேலை நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள். ஆரம்ப நிலையில் கொஞ்சம் தேக்கம் இருந்தாலும், உங்கள் 'உண்மைத்தனம்' தொடர் வெற்றிகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

'ஆகிற கதையைப் பேசுங்க!' என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். உண்மையை அழகுறச் சொல்வதால் உருவாக்கப்படும் நம்பிக்கைதான், தொடர்ந்து வெற்றிகரமாக இயங்க வழி வகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்த நிறுவனங்களும், தனி மனிதர்களும்தான் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை வர்த்தக ஏடுகளும் ஆய்வுகளும் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

வெறும் பேச்சு சாதுர்யத்தால் ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு முறை வெற்றிகரமாக வியாபாரம் நடத்தலாம்... விற்பனை செய்யலாம். ஆனால், அவரின் நம்பிக்கைக்குரிய மனிதராக நாம் மாறும் பட்சத்தில் அந்த வாடிக்கையாளர் உங்கள் வெற்றியில் தொடர்ந்து துணை நிற்பார்.

உங்கள் வாடிக்கையாளர், அறிவாளியோ, முட்டாளோ என்று அவரது தகுதிபற்றி கவலைப்படாமல், உண்மைகளை அழகாக அவரிடம் விளக்கிச் சொல்லுங்கள். 'இவன் முட்டாள்... இவனுக்கு இது போதும்', 'இவன் அறிவாளி... இவனிடம் கவர்ச்சி கரமாகப் பேச வேண்டும்' என்று கணக்கு வைத்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் கணக்குப்படி பார்த்தாலும், வாடிக்கையாளர் அறிவாளியாக இருந்தால் உங்கள் வெற்றுப் பேச்சு சாதுர்யம் எடுபடப்போவது இல்லை. அவர் பொய்களை நம்பப்போவது இல்லை. விவரம் இல்லாதவராக இருந்தால், உங்கள் பேச்சு அவரைப் பயமுறுத்தும். வாடிக்கையாளரின் தகுதிபற்றி கவலைப்படாமல், உங்கள் பொருள்பற்றிய உண்மையை அழகாக எடுத்துச் சொல்லுங் கள். உங்கள் துறை சார்ந்து, நீங்கள் தேடி வைத்து இருக்கும் அறிவைக்கொண்டு, உங்கள் பேச்சின் மதிப்பைக் கூட்டுங்கள்.

கார்ப்பரேட் உலகம் பல நேரங்களில் தன் பணியாட்களை வெறும் கருவியாகவே பார்க்கிறது. அந்தக் கருவி தொடர்ந்து இயங்கினால், வெற்றிகரமாக இயங்கினால், அதற்கு அந்த அலுவலகத்தில் இடம் உண்டு. இல்லை என்றால், வேறு ஒரு கருவி வாங்கப்படும்.

பேச்சு சாதுர்ய வித்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு வியாபாரம் மட்டுமே செய்ய முடியும். அப்படி எத்தனை பேரைத் தேடுவீர்கள். ஒருநாள் தேட ஆள் இருக்காது. அலுவலகத்தில் இடமும் இருக்காது.

நம்பிக்கையோடு பயணியுங்கள். நீங்கள் விதைக்கிற நம்பிக்கைதான், உங்களைத் தொடர்ந்து வெற்றியாளனாக நடைபோட வைக்கும்.

கேட்பதற்குப் பழைய பஞ்சாங்கம் மாதிரி இருந்தாலும் உண்மை இதுதான். காலம் மாறிவிட்டது என்பதற்காக அம்மாவை, அத்தை என்று நாம் அழைப்பது இல்லை.

உண்மை... உண்மைதான்!

நீயும் நானும்! - 41
நீயும் நானும்! - 41
- ஒரு சிறிய இடைவேளை