மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 14

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை! - 14

மனம் கொத்திப் பறவை! - 14
மனம் கொத்திப் பறவை! - 14
மனம் கொத்திப் பறவை! - 14

ங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று மரம், செடி, கொடிகள். ஒவ்வொரு

வீட்டுக்கும் இடையே மூன்று பர்லாங் தூரமாவது இருக்கும். வீட்டுக்கு முன்னே மலர்த் தோட்டம். சுற்றிலும் காடு. 24 மணி நேரமும் சில்வண்டுகளின் ரீங்காரம். மற்றபடி எந்தச் சத்தமும் இல்லை. முக்கியமாக டி.வி சத்தம்... மூச்! இதுபோன்ற கிராமங்களை ஐரோப்பாவிலும் இமாச்சலப்பிரதேசத்திலும்தான் பார்த்திருக்கிறேன். இப்போது கேரளத்தின் காலடி என்ற ஊரில் உள்ள ஒக்கல் என்ற கிராமத்தில் பார்க்கிறேன். ஆதி சங்கரர் பிறந்த மண். இங்கே உள்ள ஆயுர்வேத மையத்துக்கு, பஞ்சகர்மா சிகிச்சைக்காக வந்திருக்கிறேன்.

நம்முடைய அளவு கடந்த வெளிநாட்டு மோகத்தால் கைவிட்ட அற்புதங்களில் ஒன்று ஆயுர்வேதம். புனர்வசு ஆத்ரேயர் என்ற ரிஷியின் சீடரான அக்னிவேசர் எழுதிய 'அக்னிவேச சம்ஹிதை'யே ஆயுர்வேதத்தின் முதல் நூல். சுஷ்ருதர் என்ற ரிஷி இயற்றிய 'சுஷ்ருத சம்ஹிதை'யும் ஆயுர்வேதத்தின் அடிப்படை நூல்களில் ஒன்று. புத்தருக்கும் முற்பட்டவர் சுஷ்ருதர். இப்படி இயேசு பிறப்பதற்கு 4,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பழக்கத்தில் இருந்து வந்த ஆயுர்வேதத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். இப்படிச் சொல்வதால் நான் அலோபதிக்கு எதிரி என்று நினைக்க வேண்டாம். அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவை அலோபதியின் சிறப்புகள். ஆனால், நோயே வராமல் தடுப்பதற்கு அலோபதியில் வழி இல்லை. ஆயுர்வேதம் அதைச் செய்கிறது. தேகத்தை நோயே வராத சமநிலைக்குக் கொண்டுவருகிறது. நோய் வருவதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதை வேரோடு அகற்றுகிறது. மேலும், ஆயுர்வேத மருந்துக்குப் பக்க விளைவுகள் இல்லை.

மனம் கொத்திப் பறவை! - 14

அவசர வாழ்க்கை என்று சொல்லி, நம்முடைய பாரம்பரியத்தைத் தொலைத்துவிட்டோம். எண்ணெய்க் குளியலும் அதில் ஒன்று. வாரம் இரண்டு முறை எண்ணெய்க் குளியல் போட்டால், பல வியாதிகளில் இருந்து தப்பலாம். சின்ன வயதில், என் அம்மாச்சி எனக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவைப்பார். கண்ணிலும் காதிலும் எண்ணெய்விட்டு ஊறவைத்து, சுடச்சுட வெந்நீரில் அம்மாச்சியோ, அம்மாவோ, அல்லது மனைவியோ குளிப்பாட்டிய அனுபவம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பாக்கியசாலிகள். எண்ணெய்க் குளியலை ஆயுர்வேதத்தில் அப்யங்கம் என்பார்கள். இதே ஆயில் மசாஜ் தாய்லாந்திலும் உண்டு. ஆனால், அங்கே அதை வேறுவிதமான பெண்கள் செய்வதால் காரியமே திசை கெட்டு 'வேறு' ரூட்டில் போய்விடுகிறது.

அப்யங்கத்தைத் தொடர்ந்து செய்வது பஞ்சகர்மா. அந்தக் காலத்தில் ராஜாக்கள் செய்துகொண்ட வைத்தியம். நோயாளி என்றில்லை; யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இளமை துள்ளும். எப்படி? நம் உடம்பில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. இந்த நாடிகளைச் சுத்தம் செய்வதே பஞ்ச கர்மா. கசாய வஸ்தி, ஸ்நேக வஸ்தி, வமனம் (வாந்தி எடுக்கவைக்கும் சிகிச்சை), நசியம் (மூக்கு வழியாக மருந்தைச் செலுத்துவது), விரேஜனம் (பேதி) என்பதே பஞ்சகர்மா. வஸ்தி என்றால் எனிமா. வஸ்தி, விரேஜனம் இரண்டும் பேதிதானே... என்ன வித்தியாசம்? வஸ்தி (எனிமா) என்பது 'கீழ்' வழியாக மருந்தைச் செலுத்தி பேதி போகவைப்பது. விரேஜனம், வாய் வழியாக பேதி மருந்தைக் கொடுப்பது.

ஆயுர்வேதத்துக்கு தமிழக அரசு தரும் ஆதரவு பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அதன் பயன் மக்களைப் போய்ச் சேரவில்லை. காரணம், மக்களிடம் அது குறித்த விழிப்பு உணர்வு இல்லை. மற்றும், அதிகாரவர்க்கம். எனக்குத் தெரிந்த ஆயுர்வேத மருத்துவர் சொன்னார், அவருடைய நேரம்எல்லாம் மக்களுக்கு மருத்துவம் செய்வதைவிட பொய்க் கணக்கு எழுதுவதிலேயே போய்விடுகிறது என்று. தினமும் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், 10 பேர்கூட வருவது இல்லை. டாக்டராகப் போய்ப் பார்த்தால், எல்லோரும் பிள்ளை பிடிப்பவனைக் கண்டதுபோல் பயந்து ஓடுகிறார்கள். அதனால், மருத்துவமனைக்கே வராத 40 நோயாளிகளுக்குக் கற்பனையான பெயர், கற்பனையான நோய் எல்லாம் கண்டுபிடித்துப் பதிவேட்டில் எழுத வேண்டும். பிரச்னை அதோடு முடியவில்லை. 40 பேருக்கும் 'கொடுத்த' மருந்தை என்ன செய்வது? மருத்துவமனைக்கு வந்த நிஜமான நோயாளிகளிடமே ஒன்றுக்கு இரண்டாகக் கொடுத்துவிடுவது. இப்படி இருந்தால் உருப்படுமா ஆயுர்வேதம்? இவ்வளவுக்கும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆயுர் வேத மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை; கடை களில்கூட இவ்வளவு தரமாகக் கிடைக்காது!

மனம் கொத்திப் பறவை! - 14

'தேவ்.டி'யின் இசையை மிகவும் அற்புதம், அதிசயம் என்றெல்லாம் குறிப்பிட்டால், அவ்வார்த்தைகள் இந்தப் படத்தின் இசையமைப்பாளரான அமித் திரிவேதிக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்காது. இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத புது வகை இசையை அளித்திருக்கிறார்!' என்று சென்ற ஆண்டு தேவ்.டி வெளிவந்தபோது எழுதி இருந்தேன். இப்போது அந்தப் படத்தின் இசைக்காக அமித் திரிவேதி தேசிய விருது பெற்றிருக்கிறார். இசை மட்டும் அல்ல; இயக்கம், வசனம், நடனம் எல்லா வற்றிலுமே இந்தப் படம் ஒரு புரட்சிதான். இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஒளிப்பதிவை இதுவரை நான் கண்டதில்லை. இந்த இந்திப் படத்தை முழு சாகப் பார்க்க முடியாதவர்கள், யூ ட்யூபில் வரும் 'பர்தேசி' என்ற பாடல் காட்சியை மட்டுமாவது பாருங்கள்.

மனம் கொத்திப் பறவை! - 14

சிறந்த படத்துக்கான விருது வென்றது 'குட்டி ஸ்ராங்க்' மலையாளப் படம். ஒரே படத்துக்கு 5 விருதுகள். இந்தி சினிமாவுக்கு 15, மலையாளத்துக்கு 10 விருதுகள். காரணம்? மலை யாள லாபி. அதோடு, தமிழர் களுக்கு வேறு எதிரியே தேவை இல்லை. இன்னொரு காரணம், நம் படங்களுக்குச் சரியான ஆங்கில சப்-டைட்டில் இருப்பது இல்லை. 'புல் பூண்டு' என்றால் 'grass and garlic'. 'அவ வயித்துல பூச்சியே வைக்கலை! அவள் வயிறு பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கிறது!' 'நம்ம பசங்கதான்டா பழக்கத்துக்காக கொலை பண்ணு வாய்ங்க!' - சுப்ரமணியபுரம் படத்தில் வரும் இந்த வசனத்தில் பழக்கம் என்பது நட்பு. ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பில் 'habit' என்று வந்திருந்ததாம். 'இப்படில்லாம் பண்ணுனா நமக்கு எங்க சார் விருது தரப் போறாய்ங்க?' என்று என்னிடம் முன்பு வருத்தப்பட்ட இயக்குநர் சசிகுமார், 'பசங்க' படத்தில் விழித்துக்கொண்டார். பசங்க வசனத்துக்கு விருது கிடைத்து விட்டது!

கொழுந்துவிட்டு எரியும் காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசு ராணுவத்தால் அடக்கிவிட லாம் என்று நினைக்கிறது. தீவிரவாதிகளை வேண்டுமானால், ராணுவத்தால் அடக்கலாம். தெருவுக்கு வந்து போராடும் மக்களை என்ன செய்ய முடியும்?

நாம் நினைப்பதுபோல், காஷ்மீர்... இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. 1947-ல் இந்தியாவில் ராஜாக்களால் ஆளப்பட்ட பல சமஸ்தானங்கள் இருந்ததுபோல், காஷ்மீரும் ஒரு சமஸ்தானம். ஹைதராபாத் நிஜாம் தன் சமஸ்தானத்தை பாகிஸ்தா னோடு இணைக்க நினைத்தார். நிஜாமை பாகிஸ்தானுக்கு விரட்டிவிட்டு, ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார் பட்டேல். அதேபோல், காஷ்மீரைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள நினைத்த பாகிஸ்தான், அதன் மீது படை எடுத்து வந்தது. ஆனால், அப்போதைய காஷ்மீர் ராஜா இந்துவாக இருந்ததால், பிரதமர் நேருவிடம் உதவி கேட்டார். 'காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ராஜாவுக்கு உதவினார் நேரு. அந்தப் போரில் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தா னுக்குப் போய்விட்டது. இரண்டு ஆண்டுகள் நடந்த போரை நீட்டிக்க விரும்பாத இந்தியா, ஐ.நா. சபையை நாடியது. பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது இந்தியாவின் கோரிக்கை. அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா., பாகிஸ்தானிடம் விலகச் சொல்லிக் கேட்டது. அதே சமயம், காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் வகையில், அங்கே ஒரு வாக்கெடுப்பு (referendum) நடத்த வேண்டும் என்று இந்தியாவைக் கேட்டது. நேரு அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், செய்யவில்லை. பாகிஸ்தானும் அது அபகரித்த காஷ்மீர் பகுதியைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ஆனால், எந்தக் காலத்திலும் காஷ்மீரிகள், பாகிஸ்தா னுடன் இணைய விரும்பியதே இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே விதிவிலக்கு. 'எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம்... பாகிஸ்தானும் வேண்டாம்... அமைதியாக வாழவிடுங்கள்!' என்பதே அவர்கள் கோரிக்கை.

மனம் கொத்திப் பறவை! - 14

இந்தியாவில், கல்விக்கும் மனித மேம்பாட்டுக்கும் செலவழிப்பதைவிடப் பல மடங்கு அதிகமாக ராணுவத்துக்குச் செலவிடப்படுகிறது. எல்லாம் காஷ்மீரை நம்முடன் வைத்திருப்பதற்காக. இதனால் காஷ்மீரிகளுக்கும் எந்தப் பலனும் இல்லை. காஷ்மீரைச் சென்று பார்த்தேன். கம்பளி ஆடைகள் வாங்கக்கூட காசு இல்லாமல், கிழிந்த ஆடைகளுடன் நடுங்கிக்கொண்டு இருக் கிறார்கள். சுடுகாட்டைப்போல் இருக்கிறது காஷ்மீர். ஆண்டு முழுவதுமே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதுபோல் இருக் கிறது. மனித நடமாட்டமே இல்லை. ஒரு சிறுவன் இரவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டுக்கு வெளியே வந்தான். தீவிரவாதி என்று நினைத்து ராணுவம் சுட்டது. மறுநாள் சிறுவனின் சடலத்தைவைத்துப் போராட்டம். துப்பாக்கிச் சூடு. இப்போதைய நிலவரம் இன்னும் மோசம். உலகில் எந்த ராணுவத்துக்குமே இல்லாத ஒரு பிரச்னையை எதிர்கொள்கிறது இந்திய ராணுவம். கற்களை வீசி சண்டையிடும் மக்களை எப்படிச் சமாளிப்பது என்று அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்தது இல்லை. பாகிஸ்தானுக்கு ஆயுத விற்பனை செய்யும் அமெரிக்கா மட்டும்தான் இதனால் பலனடைந்த ஒரே தேசம்!

ருநாள் மிஷ்கினின் உதவியாளரிடம் இருந்து போன். 'யுத்தம் செய்' படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் அமீர், நீத்து சந்திராவோடு நானும் தலைகாட்டியதுபற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். க்ளோஸப் ஷாட் என்றார் உதவியாளர். அடையாறில் இரவு 9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து 11 மணி அளவில் முடிந்தது. அடுத்து பெசன்ட் நகர் பீச்சில் ஷூட்டிங் தொடர்ந்தது. அங்கேதான் எனக்கு க்ளோஸப் ஷாட். 'மதியம் நல்லாத் தூங்கிட்டீங்கல்ல?' என்றார் மிஷ்கின். க்ளோஸப் ஷாட்டுக்கு முகம் நன்கு தெளிவாக இருக்க வேண்டும். ஆனால், எனக்குப் பகலில் தூக்கம் வராது. இருந்தாலும் 'அட்டகாசமான தூக்கம்!' என்று பொய் சொல்லிவிட்டேன். பெசன்ட் நகர் பீச்சில் முதல் ஷாட்டே என் க்ளோஸப்தான். ஹார்மோனியத்தை வாசித்தேன். 'ம்ஹும்... இப்படி வாசிக்கக் கூடாது. விரல்களைச் சரியான 'கீ'யில் வைத்து வாசிக்க வேண்டும்!' என்றார் இசையமைப்பாளர் கே. இஷ்டத்துக்கு விரல்களை 'கீ'யில் வைத்து விளையாடக் கூடாது. இது க்ளோஸப் ஷாட். நான்கு விதமாக நான்கு முறை வாசிக்க வேண்டும். அரை மணி நேரம் சொல்லிக் கொடுத்தார் கே. பிரச்னை என்னவென்றால், ஹார்மோனியத்தின் எடை. ம்ஹும்... எனக்கு விரல் கள் ஒத்துழைக்கவில்லை. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. 'சரி, சாருவின் க்ளோஸப் ஷூட்டை அப்புறம் வைத்துக்கொள்ளலாம்!' என்றார் கேமராமேன் சத்யா. மணி 12. ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் மும்முரமாகச் சென்றுகொண்டு இருந்தது. நேராகப் போய் மணலில் படுத்தேன். எத்தனை பேருக்கு எட்வர்ட் எலியட்ஸ் பீச்சில் நள்ளிரவு ஒரு மணிக்கு அக்கடா என்று படுத்துத் தூங்கக் கொடுப்பினை இருக்கும்? ஆனாலும், எனக்குத் தூக்கம் வரவில்லை. கே. சொல்லிக் கொடுத்தபடி விரல்களை அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தேன். நேரம் போய்க்கொண்டே இருந்தது. பட்ட காலிலேயே படும் என்பார்களே, அதுபோல என் தூக்கத்தைக் கெடுக்க இன்னொரு பிரச்னை, பெண்கள் வடிவத்தில் வந்தது. நடிப்பதற்காக வந்த இரண்டு பெண்கள் நடித்து முடித்துவிட்டோ என்னவோ என் தலைமாட்டில் வந்து படுத்துக்கொண்டார்கள்.

அதிகாலை 4 மணிக்கு சத்யா என்னைக் கூப்பிட்டார். வாக்கிங் செல்ல ஆரம்பித்துவிட்ட பெரியவர்கள் சற்று தூரத்தில் நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். மறுபடியும் விரல்கள் ஒத்துழைக்கவில்லை. ஹார்மோனியத்தின் கனம், தூக்கக் கலக்கம் என்று பல காரணங்கள். மிஷ்கினோ பெர்ஃபக்ஷனிஸ்ட். 'சார், ஷாட் எடுத்துட்டு பிறகு இன்ஸெர்ட் (insert) பண்ணிக்கலாம்!' என்று மிஷ்கினிடம் சொன்னார் அசோசியேட் திவ்யா. 'அட நீ வேற... அவர் இன்சல்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு... நீ என்னமோ இன்ஸெர்ட் பண்ணிக்கலாம்கிற?' என்றார் மிஷ்கின்.

மனம் கொத்திப் பறவை! - 14

எப்படியோ பல டேக்குகள் வாங்கி அந்த க்ளோஸப் காட்சியை நடித்து முடித்தேன். மிஷ்கினும் நானும் 'வா, போ' என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம். அதனால் அவர் என்னிடம், 'சே, இனிமேல் என் படத்தில் ஹார்மோனியமே வராது!' என்றார். உடனே நான் பதிலுக்கு, 'ஹார்மோனியத்தின் மீது எனக்கு அலர்ஜியே வந்துவிட்டது!' என்றேன்.

அப்போதுதான் எனக்கு அந்த முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது. ஐயோ, கன்டினியூட்டி தவறிவிட்டது. முன்பு நடித்தபோது கண்ணாடி போடவில்லை. இப்போது மறந்து கண்ணாடி போட்டு நடித்துவிட்டேன். 'அதனால் பாதகம் இல்லை சாரு... விரல்களுக்குத்தானே க்ளோஸப். முகத்துக்கு இல்லையே!' என்றார் மிஷ்கின்.

அடக் கஷ்ட காலமே!

மனம் கொத்திப் பறவை! - 14
மனம் கொத்திப் பறவை! - 14
(பறக்கும்...)