எப்படி புரட்டிப் போட்டாலும் கம்யூனிசம், சோஷலிசம் பேசினாலும், எல்லா மனிதர்களும் சமநிலை வகித்தாலும், இந்த பவர் அணி வரிசை பின்புலத்தில் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். இப்படி இயங்கும் இந்தத் தர வரிசையில் ஒரு பெண், ஆல்ஃபா ஆணைத் தேர்ந்தெடுத்தால்தானே அவனுடைய உச்சகட்ட அந்தஸ்து, வளங்கள் ஆகியவற்றைக்கொண்டு அவள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முடியும்? அப்படியே ஒரு வேலை இந்த ஆல்ஃபா ஆண் தோற்றுப்போனாலும், முன்பு அவன் ஒரு ஆல்ஃபாவாக இருந்ததைவைத்துக் காலத்தை ஓட்டலாம். எதுவுமே இல்லாவிட்டாலும், அவனுடைய மரபணுக்கள் ஆல்ஃபா தனம் ததும்புபவை என்பதால், அவனுக்குப் பிறந்த குழந்தைகள் பிற்காலத்தில் தாமும் ஆல்ஃபா ஆகிவிடலாமே.
ஆனால், ஒமேகா? அவனுடைய மரபணுக்களை உள்வாங்கிக்கொள்வதால், அவள் குழந்தைகளுக்குப் பெரிய ஆதாயமே இல்லையே. இதனால்தான் சமூக அடுக்கு அமைப்பில் வாழும் எல்லா உயிரினப் பெண்களுமே ஆல்ஃபா என்றால், உடனே இசைந்துவிடுகின்றன. ஒமேகாவை ஒரங்கட்டிவிடுகின்றன. தன் எதிரில் இருக்கும் ஆண், ஒரு ஆல்ஃபாவா... இல்லையா என்று கண்டுபிடிக்கும் திறமை பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கிறது. பிரச்னை வரும்போது பயப்படாமல், அசகாயசூரனாக எதிர்த்துப் போராடி ஜெயிக்கிறானா? தன்னைவிட வறியவர் என்றால், உடனே தன் பலத்தைக்கொண்டு ரட்சிக்க முன்வருகிறானா? ஏவல் செய்பவனாக இல்லாமல், தானே சுயமாக யோசித்து கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுகிறானா? அவனுக்கு மேல் தலைவர்கள் யாருமே இல்லை, அவன்தான் எல்லோருக்கும் மேல் என்பதை நிரூபிக்கிறானா? அவ்வளவுதான், பெண்கள் உடனே அவன் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.
இதுவே, சாஸ்திர சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொண்ட அவளுடைய சொந்தக் கணவன், ஆல்ஃபாவாக இல்லை. அட, ஏதோ ஒரு பீட்டா, காமா, டெல்டாவாக இருந்தால்கூட, அவள் பொறுத்துக்கொள்வாள். ஆனால், அவனே ஒரு ஒமேகா என்றால், அவ்வளவுதான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் இந்த ஆண்களைப் புறக்கணித்துவிட்டு, வேறு ஆண்களை நோக்கித் திரும்புகின்றனர். என்னதான் தாலி சென்டிமென்ட், கற்பு சென்டிமென்ட் என்று தடுப்புக்கள் போட்டாலும், இயற்கையின் உந்துதல்களை இவற்றால் தடுக்கவே முடிவது இல்லை. அந்தக் காலத்திலாவது பெண்களின் இந்த வேட்டுவ இயல்பை மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சமூக மரபு, குல வழக்கம், கிராமத்துக் கட்டுப்பாடு என்று பல விதங்களில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இன்று, உலகமே ஒரு சின்ன உருண்டையாகிக்கொண்டு இருக்கும் நிலையில், சுயகட்டுப்பாடு ஒன்றைத் தவிர, பெண்களைக் கட்டுப்படுத்த வேறு எந்த சக்தியும் இல்லை. ஓர் ஆண், தன்மானத்தையும் மரபணுக்களையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், அவன் ஆல்ஃபா தனங்களைக் காட்டிக்கொள்கிறானோ இல்லையோ, கட்டாயமாக ஒமேகா அறிகுறிகளைத் தவிர்த்தே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறான்.
|