'எந்தத் தொழில்நுட்பக் கருவியும், அது எந்தக் குறிப் பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என்பார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் அது, அவ்வாறான மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. இல்லை என்றால் எதற்காக நான்கு மணி நேரம் தேவைப்படப்போகிறது.
அர்த்தம் இல்லாமல் பேசாதீர்கள். 'செல்போன் எவ்வளவு பயனுள்ள கருவி தெரியுமா? அதனால், எனக்கு எவ்வளவு வேலை நடக்கிறது தெரியுமா?' உண்மைதான். ஆனால், நம்மை அறியாமல் அதில் நமது நேரம் எவ்வளவு விரயமாகிறது என்ற கணக்கீடு பதற்ற மாகவே இருக்கிறது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை ஒரு முறை பார்க்கச் சென்று இருந்தபோது, அவர் கையில் மிகச் சாதாரணமான, நவீன வசதிகள் அதிகம் இல்லாத ஒரு செல்போன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன் 'செல்போன் என்பது பேசுவதற்காக. அதற்கு இந்த மாடலே போதும்!' என்றார்.
சிலர் தனது செல்போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள், அதில் இருக்கிற ஒரு சிறப்பு வசதியைத் திறந்து உள்ளே போய் வருவார்கள். பேன்ட் பாக்கெட்டில் இருந்து சட்டைப் பாக்கெட்டுக்கு மாற்றுவார்கள். கையில் செல்போனை வைத்துக்கொண்டே அதைத் தேடுவார்கள்.
குளிக்கப்போகும்போது, கழிவறைக்குள் செல்லும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் அது தன்னுடனேயே இருக்க வேண்டும்... இருந்தாக வேண்டும். அவசரமாக, அவசியமாக ஓர் அழைப்பை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில், இந்த அணுகுமுறை சரிதான். ஆனால், இதுவே நிரந்தப் பழக்கமாக மாறிப்போவது செல்போன் அடிக்ஷன் என்ற மனோவியல் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அது, செல்போன் இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்ற நிர்ப்பந்த நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது.
முக்கியமான விஷயமாக யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கும்போது என் செல்போன் எங்கே இருக்கிறது? ஏதாவது அழைப்பு வந்து இருக்குமா? யாராவது ஷிவிஷி அனுப்பி இருக்கிறார்களா? என்னாச்சு தெரியலையே என்று மனசுக்குள் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த எண்ண ஓட்டம் இருக்கிறது என்றால், நிச்சயமாக செல்போனிடம் நீங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
தூரங்களைக் குறைக்கவும், செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட ஒரு மிகச் சிறந்த அறிவியல் படைப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை அபகரிக் கிறது என்றால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை.
நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த செல்போன் என்ற கருவி இல்லாமல்தான் நமது வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ஆனால் இன்று, 'இந்திய எல்லையில் இருந்து போருக்கு வரச் சொல்லி எப்போது வேண்டு மானாலும் எனக்கு போன் வரலாம்' என்கிற மாதிரியான படபடப்போடு செல்போனையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற ஒரு நண்பர் சொன்ன பயிற்சி இது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்க ளுக்கு, அன்று காலையில் இருந்து இரவு வரை தொலைபேசி அழைப்புகள் யார், யாரி டம் இருந்து வந்திருக்கின்றன என்று பாருங் கள். அதில் எத்தனை அழைப்புகள் பயன் உள்ளவை? எத்தனை அழைப்புகள் உங்கள் நேரத்தைத் தின்றவை என்று பட்டியலிடுங்கள். அதேபோல் நீங்கள் செய்த போன் கால்களிலும் உபயோகமானவை எத்தனை, அர்த்தம் இல் லாதவை எத்தனை என்று கணக்கிடுங்கள்.
இதெல்லாம் ஒரு வேலையா என்று தோன் றும்... இருந்தாலும், தொடர்ந்து ஒரு வாரம் இதைச் செய்துபாருங்கள். இந்த வேலையைச் செய்யும்போது நமக்கே நாம் அர்த்தமற்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நேர அளவுகள் தெரிய வரும்.
'நான் ஃப்ரீயா இருந்தேன். அதான் போன் செய்தேன்... என்னடா பண்ணிட்டு இருக்கே?', 'சும்மா, ஜஸ்ட் லைக் தட் கால் பண்ணினேன்', 'ஏன்டி இந்த கிரிஜா பொண்ணு ரொம்பதான் பந்தா பண்றா!', 'செம போர் அதான்டி உனக்கு போன் பண்ணினேன்', 'எனக்கு லஞ்ச் டைம் நீ என்ன பண்றேன்னு கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்', 'அந்தப் படம் செம மொக்கையாம்ல' - இப்படித் தினந்தோறும் எத்தனை அழைப்புகள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.
நண்பர்கள் யாராவது சும்மா போன் பண்ணினா பேசுவது இல்லையா? அப்புறம் எதுக்கு செல்போன் என்று தோன்றலாம். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால், 'நான் வெட்டியா இருக்கேன். அதான் உனக்கு போன் பண்ணேன்' என்று சொல் கிறவர்கள் உங்கள் நேரத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 'எனக்குப் பொழுது போகவில்லை என்றால், இவனுக்கு போன் பண்ணலாம்... பொழுதுபோகும்' என்ற எண்ணத்தை எல்லா போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நாமே உருவாக்குகிறோம்.
இந்த ஒரு வாரப் பயிற்சியில் உங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.
|