மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 31

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 31


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நீயும் ... நானும்! - 31
நீயும் ... நானும்! - 31
நீயும் ... நானும்! - 31
கோபிநாத்,படம்:'தேனி' ஈஸ்வர்
நீயும் ... நானும்! - 31

2011-ம் ஆண்டில் உலக அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களில் ஐந்தில்

ஒருவர் இந்திய இளைஞராக இருப்பார் என்கிறது ஒரு கணக்கு. இப்போதும்கூட செல்போனின் மிகப் பெரிய சந்தையாக விளங்குவது இந்தியாதான். குறிப்பாக, இந்திய இளைஞர்களின் செல் போன் மார்க்கெட் மட்டும் 21 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நம்மைவிட அதிகமான பொருட்களைத் தொடர்ந்து கண்டுபிடிக்கும் சீனாவில், 22 கோடியே 55 லட்சம் இளைஞர்களிடம் செல்போன் இணைப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 28 கோடியே 10 லட்சம் இணைப்புகள் இளைஞர்கள் வசம் உள்ளன. உலகின் மிகப் பெரிய, 'இளைஞர்களுக்கான செல்போன் சந்தை' இந்தியாதான். அடுத்த ஆண்டு இந்திய அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிமாகிவிடும். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை. செல்போன் என்பது இந்திய இளைஞர்களிடம், அவர்கள் உடலின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது.

நீயும் ... நானும்! - 31

ஓர் அத்தியாவசியமான தகவல் தொடர்புச் சாதனம் அதிகமான இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பது தேசம் வளர்ந்து இருப்பதன் அடையாளங்களில் ஒன்றுதான். ஆனால், இந்த செல்போனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஒரு சராசரி இந்திய இளைஞர் ஒரு நாளைக்கு செல்போனில் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அடுத்தவருக்கு போன் செய் வது, தனக்கு வருகிற அழைப்புகளுக்குப் பேசுவது, திவி கேட்பது, ஷிவிஷி செய்வது செல்போனில் கேம்ஸ் விளையாடுவது, அதில் இருக்கும் வசதிகள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அதனை ஆய்வு செய்வது எனப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.

'செல்போன் இல்லைன்னா எனக்குக் கை ஒடிஞ்சதுபோல இருக்கும்!' என்று சொல்வது இப்போது சகஜமான டயலாக். இளைஞர்கள் என்று இல்லை; 'செல்போன் அடிக்ஷன்' என்பது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை நீண்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் செல்போன் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தனக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட வகை செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று அவர் சொன்னதால், பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு செல்போன் ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்டு அவருக்குக் கொடுக் கப்பட்டுள்ளது.

நீயும் ... நானும்! - 31

'எந்தத் தொழில்நுட்பக் கருவியும், அது எந்தக் குறிப் பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என்பார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் அது, அவ்வாறான மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. இல்லை என்றால் எதற்காக நான்கு மணி நேரம் தேவைப்படப்போகிறது.

அர்த்தம் இல்லாமல் பேசாதீர்கள். 'செல்போன் எவ்வளவு பயனுள்ள கருவி தெரியுமா? அதனால், எனக்கு எவ்வளவு வேலை நடக்கிறது தெரியுமா?' உண்மைதான். ஆனால், நம்மை அறியாமல் அதில் நமது நேரம் எவ்வளவு விரயமாகிறது என்ற கணக்கீடு பதற்ற மாகவே இருக்கிறது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை ஒரு முறை பார்க்கச் சென்று இருந்தபோது, அவர் கையில் மிகச் சாதாரணமான, நவீன வசதிகள் அதிகம் இல்லாத ஒரு செல்போன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன் 'செல்போன் என்பது பேசுவதற்காக. அதற்கு இந்த மாடலே போதும்!' என்றார்.

சிலர் தனது செல்போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள், அதில் இருக்கிற ஒரு சிறப்பு வசதியைத் திறந்து உள்ளே போய் வருவார்கள். பேன்ட் பாக்கெட்டில் இருந்து சட்டைப் பாக்கெட்டுக்கு மாற்றுவார்கள். கையில் செல்போனை வைத்துக்கொண்டே அதைத் தேடுவார்கள்.

குளிக்கப்போகும்போது, கழிவறைக்குள் செல்லும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் அது தன்னுடனேயே இருக்க வேண்டும்... இருந்தாக வேண்டும். அவசரமாக, அவசியமாக ஓர் அழைப்பை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில், இந்த அணுகுமுறை சரிதான். ஆனால், இதுவே நிரந்தப் பழக்கமாக மாறிப்போவது செல்போன் அடிக்ஷன் என்ற மனோவியல் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அது, செல்போன் இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்ற நிர்ப்பந்த நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது.

முக்கியமான விஷயமாக யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கும்போது என் செல்போன் எங்கே இருக்கிறது? ஏதாவது அழைப்பு வந்து இருக்குமா? யாராவது ஷிவிஷி அனுப்பி இருக்கிறார்களா? என்னாச்சு தெரியலையே என்று மனசுக்குள் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த எண்ண ஓட்டம் இருக்கிறது என்றால், நிச்சயமாக செல்போனிடம் நீங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

தூரங்களைக் குறைக்கவும், செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட ஒரு மிகச் சிறந்த அறிவியல் படைப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை அபகரிக் கிறது என்றால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை.

நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த செல்போன் என்ற கருவி இல்லாமல்தான் நமது வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ஆனால் இன்று, 'இந்திய எல்லையில் இருந்து போருக்கு வரச் சொல்லி எப்போது வேண்டு மானாலும் எனக்கு போன் வரலாம்' என்கிற மாதிரியான படபடப்போடு செல்போனையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற ஒரு நண்பர் சொன்ன பயிற்சி இது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்க ளுக்கு, அன்று காலையில் இருந்து இரவு வரை தொலைபேசி அழைப்புகள் யார், யாரி டம் இருந்து வந்திருக்கின்றன என்று பாருங் கள். அதில் எத்தனை அழைப்புகள் பயன் உள்ளவை? எத்தனை அழைப்புகள் உங்கள் நேரத்தைத் தின்றவை என்று பட்டியலிடுங்கள். அதேபோல் நீங்கள் செய்த போன் கால்களிலும் உபயோகமானவை எத்தனை, அர்த்தம் இல் லாதவை எத்தனை என்று கணக்கிடுங்கள்.

இதெல்லாம் ஒரு வேலையா என்று தோன் றும்... இருந்தாலும், தொடர்ந்து ஒரு வாரம் இதைச் செய்துபாருங்கள். இந்த வேலையைச் செய்யும்போது நமக்கே நாம் அர்த்தமற்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நேர அளவுகள் தெரிய வரும்.

'நான் ஃப்ரீயா இருந்தேன். அதான் போன் செய்தேன்... என்னடா பண்ணிட்டு இருக்கே?', 'சும்மா, ஜஸ்ட் லைக் தட் கால் பண்ணினேன்', 'ஏன்டி இந்த கிரிஜா பொண்ணு ரொம்பதான் பந்தா பண்றா!', 'செம போர் அதான்டி உனக்கு போன் பண்ணினேன்', 'எனக்கு லஞ்ச் டைம் நீ என்ன பண்றேன்னு கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்', 'அந்தப் படம் செம மொக்கையாம்ல' - இப்படித் தினந்தோறும் எத்தனை அழைப்புகள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.

நண்பர்கள் யாராவது சும்மா போன் பண்ணினா பேசுவது இல்லையா? அப்புறம் எதுக்கு செல்போன் என்று தோன்றலாம். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால், 'நான் வெட்டியா இருக்கேன். அதான் உனக்கு போன் பண்ணேன்' என்று சொல் கிறவர்கள் உங்கள் நேரத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 'எனக்குப் பொழுது போகவில்லை என்றால், இவனுக்கு போன் பண்ணலாம்... பொழுதுபோகும்' என்ற எண்ணத்தை எல்லா போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நாமே உருவாக்குகிறோம்.

இந்த ஒரு வாரப் பயிற்சியில் உங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

நீயும் ... நானும்! - 31

செல்போன் என்ற கருவி உங்கள் வசதிக்கானது. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நேரத்தை விரயம் செய்ய ஒருவரை அனுமதிக்கிறீர்கள் என்பது உங்களை நீங்களே அவமரியாதை செய்துகொள்வதற்குச் சமம்.

இந்த ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு, யார் அழைப்புக்கு எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது விளங்கும். நம்மை அடுத்தவர் எப்படி அணுக வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஏதோ ஒரு வேலையாக இருக்கும்போது வருகிற போன் அழைப்பைத் தேர்வு செய்து எடுப்பதற்கும், தேவையான அளவு மட்டும் பேசுவதற்கும் இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவலாம்.

உங்கள் வேலைக்கு உதவுகிற, வாய்ப்புகளை வழங்குகிற, உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கிற அழைப்புகளைத் தேர்வுசெய்து பேசுங்கள். இல்லை என்றால், நேரத்தைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வாக நீங்கள் மாறிப்போவீர்கள்.

ஒரு கருவியின் நோக்கம் எதுவோ, அந்த நோக்கத்துக்காக மட்டும் அதைப் பயன்படுத்தும் வரை ஆபத்து இல்லை. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பணம் நேரம்தான். அதை 'தேமே' என்று செலவிடுவது நியாயமற்றது.

2011-ல் இந்திய இளைஞர்கள் எல்லார் கையிலும் செல்போன் வரட்டும். அது நம் வளர்ச்சியின் அடையாளம். அதை மிகச் சரியாகக் கையாள்வதற்கான நெறி மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நாம் மென்மேலும் வளரப்போவதற்கான அடையாளம்.

எனக்கு, உங்களுக்கு எல்லோருக்கும் நேரம் முக்கியம். கடந்துபோன நேரத்தை மீட்கும் சக்தி யாருக்கும் இல்லை. இதைப் படித்து முடித்துவிட்டு, 'கோபி இந்த வாரம் விகடன்ல செல்போன்பத்தி ஒரு கட்டுரை எழுதி இருக்காரு பார்த்தியா...' என்று செல் போனில் நீண்ட நேரம் பேசாதீர்கள். ஒரு ஷிவிஷி அனுப்பி ஒரு நிமிடத்தில் வேலையை முடியுங்கள்.

எந்த அறிவியல் படைப்பும்
நம்மை ஆளக் கூடாது...
நாம்தான் அதை ஆள வேண்டும்!

நீயும் ... நானும்! - 31
நீயும் ... நானும்! - 31
- ஒரு சிறிய இடைவேளை