தெரூக்ஸ் ரொம்பவும் கிண்டல்காரப் பேர்வழி. அவர் டெல்லி யில் ஜி.டி. எக்ஸ்பிரஸில் ஏறச் சென்ற போது, பிளாட்ஃபாரத்தில் பெரிய பெரிய டிரங்குப் பெட்டிகளாக இருந்ததாம். 'அதனால்தான் க்ராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்போல' என்று எழுதுகிறார்.
ரயில்பற்றி நினைக்கும்போது பழைய காலத்து நிலக்கரி இன்ஜின் ரயில்களின் ஞாபகம் வருவதைத் தவிர்க்கவே முடியாது. அதேபோல் ரயில் சிநேகிதங்கள். இந்தக் காலத்தில் அதற்கெல்லாம் வழியே இல்லை. பிஸ்கட்டில் மயக்க மருந்து கொடுத்து ஆளைக் கவிழ்த்துவிட்டு, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட் களைக் கொள்ளை அடிக்கும் கும்பல் பெருகிவிட்டது. ரயிலில் ஒரு சக பயணியின் மூன்று வயதுக் குழந்தை நமக்கு பிஸ்கட் கொடுத்தால்கூட சந்தேகமாக இருக்கிறது. ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே போகும்போது, அந்த இடத்தில் திருட்டும் கொள்ளையும் அதிகமாகும் என் பது ஒரு சமூக யதார்த்தம்.இதோடு தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். வேறு வழி இல்லை.
இந்த மயக்க பிஸ்கட்டையும் தாண்டி பலருக்கு ரயில் பயணம் பிடித்திருக்கிறது. ஆனால், இந்திய ரயில்கள் அவ்வளவு சௌகர்யமானவை அல்ல என்பது என் அபிப்பிராயம். மேற்கத்திய நாடுகளில் விமானத்தைவிட ரயில் கட்டணம் அதிகம். வசதிகளும் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கும். ரயில் பயணத்தில் இன்னொரு பிரச்னை, காலை நேரத் தில் ஜன்னல் வழியே கிடைக்கும் காட்சி.கிராமப்புற இந்தியர் களுக்கு இன்னமும் ரயில் பாதை தான் டாய்லெட்டாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்களின் மற்றொரு தவிர்க்க முடியாத அம்சம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறும் விதவிதமான பிச்சைக்காரர்கள். எல்லா தேசங்களிலும் பிச்சைக்கா ரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில்தான் அது ஒருமிகப் பெரிய சமூக அவலத்தின் குறியீ டாக இருக்கிறது. டிராஃபிக் சிக் னலில் கைக்குழந்தையோடு பிச்சை எடுக்கும் பெண்களும் சிறுவர்களும் ஓர் உதாரணம். 'நான் கடவுள்', 'ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற படங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகளைத் திருடி பிச்சையெடுக்க அனுப்பும் அவலம் குறைந்ததாகத் தெரியவில்லை!
இயேசு கிறிஸ்து என்ன மொழியில் பேசியிருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அந்த மொழியின் பெயர் அராமிக். தமிழ், ஹீப்ரூ, அரபி, சீனம், சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகளில் ஒன்று அராமிக். ஆனால், அந்த மொழி இன்று உலகில் சில ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படுகிறது. அராமிக் மொழியின் இந்த நிலைமைக்குக் காரணம், அந்த மொழி பேசுபவர்களுக்கு என்று ஒரு தேசம் கிடையாது. ஒரு மொழி ஜீவித்திருப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, அரசு ஆதரவு. மற்றொன்று, மக்களால் பேசப்படுவது. இதில் எந்த ஒன்று இல்லாமல் போனாலும் மொழிக்கு ஆபத்து.
சம்ஸ்கிருத இலக்கியத்தைப் படிக்கும்போது எல்லாம் எனக்கு அராமிக் மொழியின் ஞாபகம் வரும். ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் மக்களின் மொழியாகவும் இருந்தி ருக்க வேண்டும். பிறகு, அரசு ஆதரவு இல்லாததால், அது பண்டிதர்களின் மொழியாகத் தேங்கியிருக்கலாம். சம்ஸ்கிருதம் வழக்கொழிந்துபோனதற்கு வேறு சில அரசியல்,சமூகவியல் காரணங்களும் உள்ளன.
ஆனால், என் கவலை எல்லாம், உலகின் மகத்தான இலக்கியப் பொக்கிஷங்களைக்கொண்டு இருக்கும் சம்ஸ்கிருதம் இப்படி வழக்கொழிந்துபோன தைப் பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்கலாமா என்பதுதான். கடவுளின் அற்புதமான சிருஷ்டி பெண் என்றால், மனிதனின் அற்புதமான சிருஷ்டி மொழி. அப்படிப்பட்ட ஓர் அற்புதத்தை நாம் அழியவிடலாமா? மனித வாழ்வின் வரலாறு மொழியின் மூலமாகவே நம்மை வந்து அடைந்திருக்கிறது. சம்ஸ்கிருதத் துக்கு இணையான தொன்மைகொண்ட தமிழில்கூட, நாவல் என்பது ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு ஆங்கில இலக்கியத்தின் பாதிப்பினால்தான் நிகழ்ந்தது. ஆனால், சம்ஸ்கிருதத்தில் வாசவதத்தா என்ற நாவலை சுமந்து என்பவர் எழுதி யது ஐந்தாம் நூற்றாண்டில். ஆறாவது நூற்றாண்டில் தசகுமார சரிதம் என்ற நாவலை எழுதுகிறார் தண்டி. ஏழாவது நூற்றாண்டில் சம்ஸ்கிருதத்தின் புகழ்பெற்ற நாவலான காதம்பரியை எழுதுகிறார் பாண தத்தர்.
இவர்களில் தண்டி யார் தெரியுமா? நம் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். இவர்களெல்லாம் நம் பொக்கிஷங்கள். இவர்களை நாம் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், மொழிபற்றிய குறுகிய மனோபாவத்தினால் நாம் இவர்களைப் புறக்கணித்துவிட்டோம். ஆனால், வெளிநாட்டுக்காரர்கள் விடவில்லை. இந்த இலக்கியச் செல்வங்களை தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டுவிட்டார்கள். நாமோ நம்முடைய இலக்கியப் பாரம் பரியத்தைப்பற்றிய எந்த விழிப்பு உணர்வும் இல்லாமல் வெளி நாட்டுக்காரர்களின் நுகர்பொருள் கலாசாரத்தை (consumerism) மட்டும் சுவீகரித்துக்கொண்டு இருக்கிறோம்.
சம்ஸ்கிருதம் படிப்பதால் உண்டாகும் நன்மைகளில் ஒன்று இது: கஜூரஹோபற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறோம். அந்தப் பெயர் காஜர் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. உங்கள் காதலி யோடு அல்லது இளம் மனைவி யோடு கஜூரஹோ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவளிடம் கஜூர ஹோவின் பெயர்க் காரணத்தைச் சொல்லி, அவளிடம் இருந்து செல்லமான அடியை வாங்க லாம் அல்லவா? காஜர் என்றால் பேரிச்சை. பேரிச்சை மைதுனத்துக்கு நல்லது. மைதுனத்துக்காகவே கட்டப்பட்ட கோவில் தான் கஜூரஹோ.
காதலுக்கு தாஜ்மஹால். காமத்துக்கு கஜூரஹோ. காதலையும் காமத்தையும் நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியதைப்போல் வேறு எந்த தேசத்திலும் கொண்டாடியது இல்லை. ஆனால், இப்போது?
|