மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை! - 06

மனம் கொத்திப் பறவை
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை

மனம் கொத்திப் பறவை! - 06

மனம் கொத்திப் பறவை! - 06
மனம் கொத்திப் பறவை! - 06
மனம் கொத்திப் பறவை! - 06
மனம் கொத்திப் பறவை! - 06

ந்த பூமி மனிதர்கள் வாழக்கூடியதாக இருப்பதற்கு முக்கியமான காரணம்

பறவைகள்தான் என்றால், நம்ப முடியுமா? ஆனால், அதுதான் உண்மை!

பறவைகளின் எச்சம்தான் பெரும் காடுகளுக்கான வித்துக்களைச் சுமக்கின்றன. காடு இல்லையேல், மழை இல்லை. மழை இல்லையேல், உலகில் புல் பூண்டு துவங்கி எல்லா வாழ்வாதாரங்களும் அழிந்துவிடும். ஆர்னிதாலஜி என்று சொல்லப்படும் பறவை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களின் அனுபவங்களைப் படிப்பதில் எனக்கு அப்படித்தான் ஆர்வம் ஏற்பட்டது.

பறவை ஆராய்ச்சியை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் சலிம் அலி. அவர் எழுதிய

மனம் கொத்திப் பறவை! - 06

The Fall of a Sparrow என்ற சுயசரிதை நூல், பறவை ஆய்வாளர்களின் பைபிள் என்று கருதப்படுகிறது. அந்த நூலின் தலைப்பே பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதுதான். மத்தேயு 10-ம் அதிகாரம், 29-ம் வசனம்: 'ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும், உங்கள் பிதா வின் சித்தம் இல்லாமல் அவற்றில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.' (சிட்டுக்குருவியின் மற்றொரு பெயர் அடைக்கலான் குருவி).

நமக்குத் தெரிந்தது எல்லாம் சிட்டுக்குருவி லேகியம்தான். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் பச்சை பச்சையாகப் பேசி எதையோ விற்பதையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதையும் என் பால்ய வயதில் பார்த்திருக்கிறேன். இம்மாதிரி லேகிய விவகாரங் களை ஆங்கிலத்தில் aphrodisiac என்பார்கள்.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு சீனப் படத்தில் வரும் உரையாடலைக் கவனியுங்கள். நாயகன் ஓர் ஓவியன். அவனிடம் காதலி கேட்கிறாள். 'நான் அமெரிக்கா போகிறேன். உனக்கு அங்கே இருந்து ஓவியம் சம்பந்தமாக ஏதாவது தேவையா?'

'அதற்குத் தேவையான எல்லாம் என்னிடம் இருக்கிறது. வேண்டுமானால் வயாகரா மாதிரி ஏதாவது வாங்கி வா. காண்டாமிருகத்தின் கொம்பு நல்ல aphrodisiac என்று தெரிகிறது. அதை வாங்கி வாயேன்' என்கிறான் ஓவியன். அதற்கு அந்தப் பெண் சொல்லும் பதில், சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைவிட செக்ஸி என்பதால் இங்கே வேண்டாம்!

நாயகன் சொல்வது உண்மைதான். உலகில் 10 சிறப்பான வீரிய ஊக்கிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது காண்டாமிருகத்தின் கொம்பு. முதன்மையானது? மரியாதை! ஆம், காதல் ஜோடியில் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மரியாதைதான் காமத்துக்கான முதல் ஈர்ப்பாகச் சொல்லப்படுகிறது.

மனம் கொத்திப் பறவை! - 06

சலிம் அலியின் 'தரையில் விழும் சிட்டுக்குருவி'யில் பல அரிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. ஹெளபாரா என்று ஒரு பறவை, ஒரு காலத்தில் பாகிஸ்தானில் அதிகம் இருந்தது. தமிழ்நாட்டின் வரகுக் கோழி சாதியைச் சேர்ந்தது. இந்த ஹெளபாராவுக்கும் சிட்டுக்குருவியைப்போல் வீரிய சக்தி உண்டு என்று நம்பப்படுவதால், அரபி ஷேக்குகள் பாகிஸ்தானுக்கு வந்து ஹெளபாரா இனம் முழுவதையும் சுட்டுத் தின்றுவிட்டார்கள் என்று எழுதுகிறார் சலிம் அலி. அவர் குறிப்பிடும் ஆண்டு 1945. இப்போது 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெளபாராவின் நிலைமை என்ன? யாளி, டைனோசர் போல் அழிந்துவிட்டதா என்று தெரிந்துகொள்வதற்காக, பறவையியலாளரான தியடோர் பாஸ்கர னைத் தொடர்புகொண்டேன். 'ஹெளபாரா இன்னும் அழிந்துவிடவில்லை' என்றார். குஜராத்தில் கொஞ்சம் இருப்பதாக அறிந்து அங்கே சென்றதாகவும் ஆனால், கடுமையான மழை காரணமாகப் பார்க்க முடியாமல் போனதாகவும் வருத்தத்துடன் சொன்னார். பறவையியலாளர்களுக்கு அரிய வகைப் பறவைகளைப் பார்ப்பது, ஒரு பக்தனுக்கு கடவுளை நேரில் பார்ப்பதுபோல. அவ்வளவு பரவசப்படுவார்கள்.

மனம் கொத்திப் பறவை! - 06

எனக்கு எதற்கெடுத்தாலும் ஷேக்ஸ்பியரிடம் செல்ல வேண்டும். ஹேம்லட்டில் அவர் சிட்டுக்குருவியைப்பற்றி குறிப்பிடுகிறார். லேகிய சிட்டுக்குருவி அல்ல; பைபிளில் வரும் சிட்டுக்குருவி. 'There is special providence in the fall of a sparrow. If it be now it is not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come - the readiness is all.' என்ன ஒரு கவித்துவம்! பொலோனியஸின் மகன் லார்ட்டஸுக்கும் தன் வளர்ப்பு மகனான இளவரசன் ஹேம்லட்டுக்கும் வாள் சண்டைக்கு ஏற்பாடு செய்கிறான் க்ளாடியஸ் அரசன். வாள் சண்டையில் ஹேம் லட் மரணமடைய வேண்டும் என்பது அரசனின் திட்டம். அதற் காக லார்ட்டஸின் வாள் முனையில் கடும் விஷம் தடவப்படுகிறது. அப்படியும் ஹேம்லட் சாகாவிட் டால் என்ன செய்வது என்று போட்டியின் இடையே அவனுக்கு விஷம் கலந்த ஒயினும் கொடுக்க ஏற்பாடு செய்கிறான் அரசன்.

ஏற்கெனவே லார்ட்டஸின் தந்தையான பொலோனியஸைக் கொன்றவன் ஹேம்லட்; மேலும், லார்ட்டஸின் சகோதரி ஒஃபிலியாவுக்குப் பைத்தியம் பிடித்து அவள் தற்கொலை செய்துகொள்வதற்கும் காரணமாக இருந்தவன் ஹேம்லட். இப்படி தன் தந்தை, சகோதரி ஆகிய இருவரின் மரணங்களுக்கும் காரணமான ஹேம்லட்டைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறான் லார்ட்டஸ். இந்தச் சதியை யூகித்துவிட்ட ஹேம்லட்டின் நண்பன் ஒராஷியோ, 'இந்த வாள் சண்டையில் கலந்துகொள்ளாதே' என்று ஹேம்லட்டைத் தடுக்கிறான். அப்போது ஹேம்லட் சொல்லும் வாசகமே இது. என்ன அர்த்தம்? 'இப்போது நடக்கும் என்றால், அது நடக்காமல் போகலாம்; நடக்காது என்றால், நடந்தாலும் நடந்துவிடலாம்; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும் எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது. எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது!'

மனம் கொத்திப் பறவை! - 06

அந்தச் சண்டையில் விஷம் தோய்ந்த வாள் பட்டதால் லார்ட்டஸும் சாகிறான். சாவதற்கு முன்னால் க்ளாடியஸ் அரசனின் சதிபற்றி ஹேம்லட்டிடம் சொல்லிவிடுவதால், அதே விஷ வாளி னால் க்ளாடியஸைக் குத்தி, அவன் ஏற்பாடு செய்திருந்த விஷ ஒயினையும் அவனையே அருந்தச் செய்கிறான் ஹேம்லட். சோக காவியம் என்பதால் முடிவில் எல்லோரும் இறந்துவிடுகிறார்கள்.

பறவையியலில் இருந்து இலக்கியத்துக்கு வந்துவிட்டோம். அதேபோல் உயிரியலை ஆழ்ந்து படிக்கும்போது, அது தத்துவத்தின் பக்கம் நம்மை அழைத்துச் செல்கிறது. எந்தத் துறையை எடுத்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அது பல்வேறு அறிவுத் துறைகளோடு இணைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.

மனம் கொத்திப் பறவை! - 06

சுவர்க்கோழி என்று சொல்லப்படும் கிரிக்கெட் பூச்சியைப்பற்றி ஆராய்ச்சி செய்வதால் காது கேளாதோருக்கு என்ன நன்மை? எல்லோரையும்போல் அவர்களுக்கும் முழுமையாகக் காது கேட்கும் வாய்ப்பு இருக்கிறது. எப்படி? (இங்கே ஓர் இடைச்செருகல். இதை நான் கர்நாடகாவில் உள்ள கூர்க் என்ற இடத்தில் இருந்து என் மடிக்கணினியில் தட்டுகிறேன். டாடாவின் காப்பித் தோட்டத்தில் உள்ள பிரிட்டிஷ் காலத்திய ஹெரிடேஜ் பங்களா இது. சுற்றிலும் தேவதாரு மரங்கள் நிறைந்த வனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கிரிக்கெட் பூச்சிகள் ரீங்காரம் இடுகின்றன. நான் அவற்றைப்பற்றித்தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று அவை அறியுமா?)

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், கரப்பானும் கிரிக்கெட் பூச்சிகளும்தான் மிகக் குறைந்த சக்தியைச் செலவழித்து, அதிகபட்ச உணர்ச்சிஉடைய உணரிகளைக்கொண்டு உள்ளன. உணரி என்பது Sensor. கிரிக்கெட் பூச்சியின் அடிவயிற்றில் இருந்து தொடங்கும் இரு கூம்பு வடிவ உறுப்புக்களில் (cerci) ஆயிரக்கணக்கான நுண் மயிர்கள் உள்ளன. இவையே இயற்கையின் ஆகச் சிறந்த சென்ஸார்கள். எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இனப்பெருக்கத்துக்கும் பறப்பதற்கும் இவை உதவுகின்றன. இந்த சென்ஸார்களை முன்மாதிரியாகக்கொண்டால் நம்மால் செயற்கையான சென்ஸார்களை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கினால், உலகில் இனிமேல் காது கேளாதோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அநேகமாக இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசுகூடக் கிடைக்கலாம். எனவே, உங்கள் குழந்தைகள் யாரும் பயாலஜி படித்தால்... இனிமேல் திட்டாதீர்கள். (சுவர்க்கோழி, சில்வண்டு என்ற தமிழ் வார்த்தைகளை விட்டுவிட்டு, கிரிக்கெட் பூச்சி என்று எழுதியதற்குக் காரணம், தமிழ் அகராதியில் cricket,cicada என்ற இரண்டு பூச்சிகளுக்குமே சில்வண்டு என்றுதான் போட்டிருக்கிறது; ஆனால், இரண்டும் வெவ்வேறு பூச்சிகள்!)

மனம் கொத்திப் பறவை! - 06

'என்ன அது?' என்ற குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். ஐந்து நிமிடங்களில் நம்மால் மறக்கவே முடியாத ஓர் அனுபவத்தைத் தருகிறார் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த இளம் இயக்குநர் கான்ஸ்டான்டின் பிலாவியஸ் (Constantin Pilavios). ஒரு பெரிய வீட்டின் முன்னே ஒரு தோட்டம். பெஞ்ச்சில் வயோதிகரும் இளைஞனும் அமர்ந்திருக்கிறார்கள். சிட்டுக்குருவியின் சத்தம் கேட்கிறது. 'என்ன அது?' என்று கேட்கிறார் முதியவர். பேப்பர் படித்துக்கொண்டு இருக்கும் இளைஞன், 'சிட்டுக்குருவி' என்கிறான். மீண்டும் குருவியின் சத்தம். மீண்டும் 'என்ன அது?' என்று கேட்கிறார் முதியவர். 'சிட்டுக்குருவி அப்பா' என்று எரிச்சலுடன் சொல்கிறான் இளைஞன். மூன்றாவது முறையும் அவர் அதே கேள்வியைக் கேட்கும்போது இளைஞன் கடும் கோபமாகி, 'எத்தனை தடவை உங்களுக்குச் சொல்வது அது சிட்டுக்குருவி என்று?' என்று கத்திவிட்டு, கையில் இருக்கும் பேப்பரை வீசித் தரையில் எறிகிறான். அமைதியாக எழுந்து செல்லும் அப்பாவைப் பார்த்து 'எங்கே போகிறீர்கள்?' என்கிறான். அவர், 'பொறு' என்று சைகையில் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் போய் ஒரு பழைய டைரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட பக்கத்தைக் காண்பித்துப் படிக்கச் சொல்கிறார். அவன் படிக்கும்போது 'சத்தமாகப் படி' என்கிறார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் குறிப்பை வாய்விட்டுப் படிக்கிறான் இளைஞன். 'இன்று என்னுடைய மூன்று வயது மகனுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு சிட்டுக்குருவியைப் பார்த்து 'என்ன அது?' என்று கேட்டான். சிட்டுக்குருவி என்றேன். ஆனால் விடாமல், 21 முறை 'என்ன அது... என்ன அது?' என்று கேட்டான். நானும் பொறுமை இழக்காமல் ஒவ்வொரு முறை அவன் கேட்கும்போதும் அவனை அணைத்து சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி என்று சொல்லிக்கொண்டு இருந்தேன்.'

படித்துவிட்டுத் தன் தந்தையை அணைத்துக்கொண்டு விம்மி அழுகிறான் மகன். படம் முடிகிறது. வெறும் ஐந்தே நிமிடங்களில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு சில ஆயிரம் ரூபாய்தான் செலவாகி இருக்கும். ஏன் இப்படிப்பட்ட குறும்படங்களை நம்மால் எடுக்க முடியவில்லை? உலகம் முழுவதும் குறும்படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இருக்கிறது.

பெற்றோரைக் கைவிடும் குழந்தைகள் இந்திய நகரங்களில் அதிகமாகிவிட்டனர். நியூக்ளியர் ஃபேமிலி என்ற மேற்கத்திய பாணிக் குடும்பங்கள் இந்தியாவில் அதிகரித்துவிட்டதால்கூட இந்தப் பிரச்னை உருவாகி இருக்கலாம். ஐரோப்பியப் பூங்காக்களில் 80 வயதுக்கு மேற்பட்ட பல முதிய வர்கள் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அவர்களின் கண்களில் தென்படும் சூன்யம், ஐரோப்பியக் குளிரைவிட நம் குருத்து எலும்புகளுக்குள் ஊடுருவக்கூடியது.

மனம் கொத்திப் பறவை! - 06

இந்தியாவில் குழந்தைகள் பெரியவர்களாகி தங்களுக்குத் திருமணம் ஆனதும் வீட்டில் இருக்கும் வயதான பெற்றோரைத் தங்களுக்குச் சுமையாகக் கருதுகிறார்கள். இதற்கு அந்தக் குழந்தைகளை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது; விவரம் தெரியும் வயதில் இருந்தே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சுயநலம் என்ற ஒரே விஷயத்தைத்தானே கற்றுக்கொடுக்கிறார்கள்? போட்டி மனப்பான்மை என்பது வேறு. சுயநலம் வேறு. அடுத்தவரை முந்திச் செல்வது போட்டி. அடுத்தவர் தடுமாறிக் கீழே விழுந்துகிடக்கும்போது 'எப்படியாவது ஒழிந்து போ' என்று நம் பாட்டுக்கு ஓடிக்கொண்டு இருப்பது சுயநலம். இதில் சிலர் அடுத்தவர் காலைத் தட்டிவிட்டும் ஓடுகிறார்கள். வினை விதைத்தால் வினைதான் விளையும். எப்போது நாம் அறிவை (knowledge)விட ஞானத்துக்கு (wisdom) முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்குகிறோமோ, அப்போதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். அதுவரை 90 மதிப்பெண் எடுத்துவிட்டு அதுவும் போதாமல் போலி மார்க்‌ஷீட் கொடுத்து ஜெயிலுக்குப் போகும் மாணவர்கள்பற்றிய செய்தியைத்தான் நாம் படித்துக்கொண்டு இருப்போம்.

ஒரு சந்தேகம்: நடிகர் விசுதான் எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று சமீபத்தில் படித்தேன். அப்படியானால், நான் நடிகர் சங்கத் தலைவராக ஆகலாமா?

மனம் கொத்திப் பறவை! - 06
மனம் கொத்திப் பறவை! - 06
(பறக்கும்...)