மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீயும் ... நானும்! - 33

நீயும் நானும்
பிரீமியம் ஸ்டோரி
News
நீயும் நானும் ( கோபிநாத் )

நீயும் ... நானும்! - 33

நீயும் ... நானும்! - 33
நீயும் ... நானும்! - 33
நீயும் ... நானும்! - 33
கோபிநாத்
படங்கள் : 'தேனி' ஈஸ்வர்,எம்.மாதேஸ்வரன்
நீயும் ... நானும்! - 33

டி.வி-யில் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' என்ற பாடலைப் பார்க்கும்போது

எல்லாம் மறைந்த பத்மினி அவர்களைப் பேட்டி கண்ட நிகழ்வு நினைவுக்கு வரும். சில மனிதர்கள் நாமாகக் கற்பனை செய்துவைத்திருக்கும் குணத்துக்கும் பிம்பத்துக்கும் மாறாக வேறு மாதிரி இருப்பார்கள். குறிப்பாக பெரியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் அநேக நேரங்களில் அப்படி இருந்திருக்கிறார்கள்.

மனசில் சின்னப் படபடப்பும், குழப்பமுமாக அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். 'சீக்கிரமாகப் பேட்டியை முடியுங்கள்' என்று ஆரம்பித்து, 'என்ன இது சிறுபிள்ளைத்தனமான கேள்வி?' என்று கோபப்பட்டு, 'எனக்கு நேரம் ஆகிறது' என்று எரிச்சலாகி... இப்படி எல்லாம் அந்தப் பேட்டியின்போது நடக்கலாம் என்பதுதான் எனது அனுமானமாக இருந்தது.

எந்தத் திசையில் இந்தப் பேட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்? பத்மினி அவர்கள் பதில் சொல்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றால், அதைச் சரிக்கட்ட என்ன உத்தியைக் கையாள வேண்டும் என்ற யோசனையோடு படிக்கட்டுகளில் ஏறுகிறேன்...

நீயும் ... நானும்! - 33

"வாங்க வாங்க... மிஸ்டர் கோபிநாத்!" என்று வாய் நிறையப் புன்னகையோடும் கண்கள் நிறைய ஆர்வத்தோடும் வரவேற்றார் பத்மினி. எனக்கு சந்தோஷத்தைவிடப் பதற்றமே அதிகமானது.

என் பதிலுக்கெல்லாம் அவர் காத்திருக்கவில்லை. "உங்களை எப்பவாச்சும் டி.வி-ல பார்க்கும்போது, ஒரு தடவை நேர்ல பார்க்கணும்னு நினைச்சேன்... ஏன்னு சொல்லுங்க?"

இந்த முறையும் அவர் என் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.

"ஏன்னா, என்னோட குரு பேரும் கோபிநாத். அதனால உங்களை எனக்குப் பிடிச்சுப்போச்சு" என்று பேச ஆரம்பித்தவர், ஒரு குழந்தையைப்போல நிறைய விஷயங்கள் பேசினார்.

பழைய போட்டோ ஆல்பங்கள் காட்டினார். சில விருதுகளைக் காட்டி அந்தத் தருணங்களை நினைவு கூர்ந்தார். ஜோக் அடித்தார். எனக்கு ஆச்சர்யமும் சந்தோஷமுமாக இருந்தது. நான் நினைத்தது ஒன்று, நடந்துகொண்டு இருப்பது ஒன்று. இது அந்த நாட்டியத் தாரகை பத்மினிதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை.

பத்மினி அவர்கள்தான் என்று இல்லை, நாம் எதிர்பார்க்க முடியாத அளவுக்குப் பெரியவர்களின் உலகம் வேறாக இருக்கிறது. அந்த உலகத்தின் ஆச்சர்யங்களும், அழகியலும், பண்பாடும், படபடப்பும், புத்தகங்களும், கால ஓட்டம்பற்றிய கணக்குகளும் நிச்சயம் வேறு மாதிரி வாழ்கிறது.

நீயும் ... நானும்! - 33

நாம் சந்திக்கிற, வயதில் பெரிய மனிதர், ஏற்கெனவே உயர்வான இடத்தில் இருந்தால், அவரது பேச்சும் சிந்தனையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. துரதிருஷ்டவசமாக சாதாரண மனிதராக இருந்துவிட்டால், அவரை நாம் பார்க்கும் பார்வையே வேறு மாதிரி அமைகிறது.

பெரியவர்கள் இந்தக் காலத்தின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருவதன் பின்னணியில், அவர்களின் உலகத்தையும் அதன் தன்மைகளையும் அறிந்துகொள்ள நாம் ஆசைப்படுவது இல்லை என்ற காரணமும் நிரம்பிக்கிடக்கிறது. வாழ்க்கை என்பது வேகமான ஒரு ஓட்டம், அதில் தடைகளைத் தாண்டியோ அல்லது தகர்த்துவிட்டோ ஓடுங்கள். முதலில் வருபவருக்குத்தான் பரிசு என்று மாறிப்போய் இருக்கும் வாழ்க்கை முறையில் பெரியவர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி இல்லாத ஓர் இயந்திரம்போல் பார்க்கப்படுகிறார்கள்.

பழைய கம்ப்யூட்டர், பிரின்ட்டர், முதலில் வந்த செல்போன், கறுப்பு-வெள்ளை டி.வி. இதுபோன்ற இன்னும் பல பொருட்கள் எல்லாம் இந்தக் காலத்துக்குப் பொருந்தாத, தேவையற்ற பொருட்களாகப் பார்க்கப்படுவதுபோலவே வயதில் பெரியவர்களும் அணுகப்படுகிறார்கள் என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை.

புரிந்துகொள்ளப்படாத அந்த உலகத்தின் உணர்வுகள், பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட பழைய சிலபஸ் ஆகப் பாவிக்கப்படுகிறது. அந்த உலகத்தின் குரல்கள், அதிர்ந்து ஒலிக்கும் இன்றைய தலைமுறையின் சத்தத்தின் முன்னால் சந்தடி இல்லாமல் ஒடுங்கிப்போகின்றன.

இன்டர்நெட் தெரியாத, கீ-பேடைப் பார்க்காமல் எஸ்.எம்.எஸ். அனுப்பத் தெரியாத, ஏஞ்சலினா ஜோலி தெரியாத, டி.வி. ரிமோட்டில் கலர் சரி செய்யத் தெரியாத, பக்கத்து வீட்டு கிரிஜா அத்தை தருகிற தகவல்களே உலகம் என்று நம்பி வாழுகிற இந்தப் பழைய மனிதர்கள் இன்றைய நவீன உலகில் அவுட்டேட்டட் மனிதர்கள் என்று முடிவு செய்யப்படலாம்.

நீயும் ... நானும்! - 33

ஆனால், இது எதுவுமே தெரியாத இவர்கள்தான் தெரிந்தவர்களைக் கேட்டு, வெட்கம் இல்லாமல் விஷயங்களைப் புரிந்துகொண்டு, ஒரு போனில் இந்தத் தகவலைப் பெற்றுவிட முடியும் என்று தெரியாமல், கொளுத்துகிற வெயிலில் மூன்று பஸ் மாறி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேராகப் போய் என்ன என்னவோ செய்து, நம்மை இந்த அளவுக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் அறிவுக்கும் அனுபவத்துக்கும் எட்டியவரை இந்த உலகத்தையும், அதன் அம்சங்களையும் அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்திவிட்டவர்கள் இந்த மனிதர்கள்தான். முடிந்தவரை தங்கள் தலைமுறையின் உலகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருக்கிறது.

ஆனால், மாறிப்போயிருக்கும் மார்டன் சமூகம் அதற்கு இடம் அளிக்கிறதா? நமது பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், 'பெருசுகளை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள நாம் விரும்புவது இல்லை'. அப்படிச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அறிவிலோ, கலையிலோ தேர்ச்சிபெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது நம் வயதுக்கு இறங்கி வந்து கொண்டாடுகிற மனிதராக இருக்க வேண்டும்.

ஒரே விஷயத்தை நீளமாகப் பேசுகிற, சொன்னதையே திரும்பச் சொல்லுகிற, நவீன உலகின் அடையாளங்கள் தெரியாத மனிதரை நாம் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வது இல்லை.

நீயும் ... நானும்! - 33

காரணம், அந்த உலகத்தோடு நட்பு பாராட்ட நமக்கு விருப்பம் இல்லை. உண்மையில், சாதாரணமான பழைய மனுஷர்களின் நட்பு, உலகை உண்மையாகவும் ஆழமாகவும் பார்க்க உதவி செய்கிறது. அவர்கள் கருவிகளின் துணை இல்லாமல் சவால்களை எதிர்கொண்டவர்கள், ஆயுதங்களின் துணை இல்லாமல் காரியம் சாதித்தவர்கள். நாம் கால்குலேட்டரிலும் கம்ப்யூட்டரிலும் தேடும் விஷயங்களை அனுபவமாகக் கையில் வைத்திருப்பவர்கள்.

'நாம் விரும்புகிற பாணியில் அதை வெல்வதற்கான பழக்கமும் அனுபவமும் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். நாம் எந்த விஷயத்தில் எல்லாம் சிறந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ, அந்த விஷயங்களுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்காமல், சகஜமாக அதை வாழ்வியலில் பயன்படுத்தியவர்கள்.

குறிப்பிட்ட வயது வரை பெரியவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும். பிறகு, நாம் சொல்வதைப் பெரியவர்கள் கேட்க வேண்டும் என்ற 'மடைமாற்று' வேலைதான் இங்கு தொடர்ந்து நடக்கிறது. பெரியவர்கள் உலகத்தோடு நமக்கு நட்பு இல்லை என்பதால், அவர்கள் கருத்தை உள்வாங்கிக்கொள்கிற அளவுக்கு நமக்குப் பொறுமை இல்லை... நேரமும் இல்லை.

ஒரு தனி மனிதனின் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி இவை இரண்டுமே அனுபவ அறிவை, அறிவியல்ரீதியாகச் செயல்படுத்துவதன் மூலமே நடக்கின்றன என்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சொல்கின்றன. இந்த அனுபவ அறிவு சாதாரண மனிதர்களிடம் இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.

ஆழ்ந்து யோசித்துப் பார்க்கலாம். நம்மைவிட வயது முதிர்ந்த எத்தனை சாதாரண மனிதர்களிடம் நமக்கு நட்பு இருக்கிறது. பெரியவர்களோடு நட்பு பாராட்டுவது கஷ்டமாகத் தெரியலாம். ஓர் உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி சில கஷ்டங்களோடு நடந்தால் என்ன?

அப்படி நட்பு பாராட்டி ஆகப்போவது என்ன? நிறைய ஆகும். நீங்கள் யோசித்திராத பல பரிமாணங்கள் அது சொல்லித்தரும். நெருக்கடி நிலைமைகளை நிர்வாகம் செய்துகொள்கிற அறிவைத் தரும். சமூக விழுமியங்களின் உண்மைகளைச் சொல்லும். இதைக் கற்றுத்தருகிற அந்த வயதில் முதிர்ந்த மனிதர் மாபெரும் ஞானியாகவோ, உலகறிந்த ஒருவராகவோதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கணினிக்குள் தலையை நுழைத்துக்கொண்டு உலகத்தைத் தேடுகிற நாம், பெரியவர்களின் நட்பிலும் அதைத் தேடலாம். அது வேறு ஓர் அனுபவம். வாழ்க்கைப் பாடம்... பொசுக்கென்று சோர்ந்துபோகிற மூளைக்கும் மனசுக்கும் ரத்தம் பாய்ச்சுகிற பாடம்.
காலையில் வாக்கிங் போகிறபோது எதிரில் வேட்டியை மடித்துக்கொண்டு, வெள்ளை பனியனோடு நடந்து போகிற அந்தச் சாதாரண பெரிய மனிதரிடம் நட்பாகச் சிரியுங்கள்... அவரை நண்பராக்கிக்கொள்ளுங்கள். பெரியவர்கள் பெரியவர்களோடும் இளைஞர்கள் அதே வயதினரோடும் சேர்ந்து பயணித்தால் மட்டும் அறிவுப் பரிமாற்றம் எப்படி நடக்கும்?

'There must be an expiry date for blaming elders' என்று என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். பெரியவர்களைக் குறை சொல்கிற நேரத்தை, அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்வதற்குச் செலவிட முயற்சிக்கலாம். அது இன்னும் பல வாயில்களைத் திறக்கும்.

பத்மினியம்மாவை டி.வி-யில் பார்க்கும்போது எல்லாம் தோன்றுகிறது 'பெரியவர்களின் உலகம் வேறு' என்று!

நீயும் ... நானும்! - 33
நீயும் ... நானும்! - 33
- ஒரு சிறிய இடைவேளை